Monday, January 18, 2021

05.01 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

05.01 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)


2014-11-03

பாண்டிக்கொடுமுடி (இக்காலத்தில் 'கொடுமுடி' )

--------------------------------

(கட்டளைக் கலித்துறை) (தேவாரத்தில் "திருவிருத்தம்" என்ற அமைப்பு);

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்")


1)

அம்பெய்த மன்மதன் ஆகம் அழிய அனல்விழித்த

நம்பன் மலைமகள் நாதன் சடைமிசை நச்சரவம்

வம்பவிழ் கொன்றை மலர்புனை மைந்தன் மகிழுமிடம்

பைம்பொழி லிற்குயில் பண்பயில் பாண்டிக் கொடுமுடியே.


அம்பு எய்த மன்மதன் ஆகம் அழிய அனல்விழித்த நம்பன் - அம்பை எய்த காமனுடைய உடல் அழியும்படி நெற்றிக்கண்ணால் நோக்கிய சிவன்; (நம்பன் - விரும்பத் தக்கவன் - சிவன்);

மலைமகள் நாதன் - உமைகோன்;

சடைமிசை நச்சரவம் வம்பு அவிழ் கொன்றைமலர் புனை மைந்தன் மகிழும் இடம் - சடைமேல் விடநாகம், மணம் பரப்பும் கொன்றைமலர் இவற்றை அணிந்த அழகன் விரும்பி உறையும் தலம்; (மைந்தன் - அழகன்; வீரன்);

பைம்பொழிலில் குயில் பண் பயில் பாண்டிக் கொடுமுடியே - அழகிய சோலையில் குயில்கள் இசை பாடும் பாண்டிக் கொடுமுடி;


2)

கசிமனத் தப்பர்க்கு ஞீலி வழிதனிற் காத்திருந்து

பசியற அன்னமும் நீரும் அளித்த பரிவுடையான்

நிசியினிற் கானில் நிருத்தம் புரியும் நிமலனிடம்

பசிய வயல்கள் புடைசூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே.


* முதல் ஈரடிகள் சுட்டும் நிகழ்ச்சி: திருநாவுக்கரசர் திருப்பைஞ்ஞீலி செல்லும்போது வழிநடை வருத்தமும் பசியும் தீர இறைவன் பொதிசோறு அளித்ததும், திருப்பைஞ்ஞீலி வரை அழைத்துச் சென்று மறைந்ததும் வரலாறு. பெரியபுராணத்திற் காண்க.


கசி மனத்து அப்பர்க்கு ஞீலி வழிதனிற் காத்திருந்து பசி அற அன்னமும் நீரும் அளித்த பரிவு உடையான் - கசிந்து உருகும் மனத்தை உடைய திருநாவுக்கரசருக்குத் திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் பொதிசோறும் நீரும் அளித்துப் பசிவருத்தத்தைத் தீர்த்த அன்புடையவன்;

நிசியினில் கானில் நிருத்தம் புரியும் நிமலன் இடம் - இருளில் சுடுகாட்டில் திருநடம் செய்யும் தூயன் உறையும் தலம்;

பசிய வயல்கள் புடைசூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே - பசுமையான வயல்கள் சூழ்ந்த பாண்டிக் கொடுமுடி;


3)

பொங்கர வம்புனல் பொன்திகழ் கொன்றை புனைமுடியான்

மங்கையைப் பங்கில் மகிழ்கின்ற மைந்தன் மணமலரால்

ஐங்கரன் வேலவன் அன்பொடு போற்றிடும் அப்பனிடம்

பைங்கிளி கள்பயில் காவணி பாண்டிக் கொடுமுடியே.


பொங்கு அரவம், புனல், பொன் திகழ் கொன்றை புனை முடியான் - சீறும் பாம்பையும் கங்கையையும் பொன்னிறம் உடைய கொன்றைப்பூவையும் தலையிற் சூடும் பெருமான்;

மங்கையைப் பங்கில் மகிழ்கின்ற மைந்தன் - அர்த்தநாரீஸ்வரன்;

மணமலரால் ஐங்கரன் வேலவன் அன்பொடு போற்றிடும் அப்பன் இடம் - வாசமலர்களால் கணபதியும் முருகனும் போற்றும் தந்தை உறையும் தலம்;

பைங்கிளிகள் பயில் கா அணி பாண்டிக் கொடுமுடியே - அழகிய கிளிகள் ஒலிக்கும்/தங்கும் சோலைகள் சூழ்ந்த திருப்பாண்டிக்கொடுமுடி;


4)

வேய்புரை தோளியை மேனியில் பாதி விரும்புமரன்

ஆய்மலர் தூவி அடியிணை போற்றும் அடியவர்மேல்

பாய்நமன் மார்பில் பதமலர் வீசு பரமனிடம்

பாய்புனற் காவிரிப் பாங்கரிற் பாண்டிக் கொடுமுடியே.


வேய் புரை தோளியை மேனியில் பாதி விரும்பும் அரன் - மூங்கில் போன்ற புஜம் உடைய பார்வதியை ஒரு பாகமாக உடைய ஹரன்;

ஆய்மலர் தூவி அடியிணை போற்றும் அடியவர்மேல் பாய் நமன் மார்பில் பதமலர் வீசு பரமன் இடம் - ஆய்ந்து எடுத்த சிறந்த பூக்களைத் தூவி இருதிருவடிகளை வழிபடும் அடியார்மேல் பாய்ந்த காலனது மார்பில் கழலை வீசி உதைத்த ப்ரமன் உறையும் தலம்;

பாய்புனற் காவிரிப் பாங்கரில் பாண்டிக் கொடுமுடியே - பாய்கின்ற காவிரியின் பக்கத்தில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி;


5)

நடித்திடும் பாதன் நதிபுனை நாதன் நரைவிடையான்

அடித்தலம் பற்றி அமரர் இறைஞ்ச அருவிடத்தை

மடுத்து மிடற்றினில் வைத்தருள் ஈசன் மகிழுமிடம்

படித்துறை ஆர்பொன்னிப் பாங்கரிற் பாண்டிக் கொடுமுடியே.


நடித்தல் - ஆடுதல்;

நரைவிடை - வெண்ணிற எருது;

மடுத்தல் - உண்ணுதல்;

மிடறு - கண்டம்;


6)

நீரொளி வேணியன் நெற்றியிற் கண்ணன் நிழல்மழுவன்

பேரொளி மேனியிற் பெண்ணொரு கூறெனப் பேணியவன்

காரொளிர் கண்டன் கதிர்மதித் துண்டன் கருதுமிடம்

பாரொடு விண்ணும் பணிந்தேத்தும் பாண்டிக் கொடுமுடியே.


நீரொளி வேணியன் - நீரை ஒளித்த வேணியன் - கங்கையைச் சடையிற் கரந்தவன்; (ஒளி வேணியன் = ஒளியுடைய சடையை உடையவன் என்றுகொண்டும் பொருள்கொள்ளல் ஆம்; உதாரணம்: சம்பந்தர் தேவரம் - 2.85.3 - “உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து” --- ஒளி நீறு = ஒளி பொருந்திய திருவெண்ணீறு);

நிழல் மழுவன் - ஒளி வீசும் மழுவை ஏந்தியவன்;

கார் ஒளிர் கண்டன் - கருமை ஒளிர்கின்ற கண்டத்தை உடையவன்;

கதிர்மதித் துண்டன் - கதிர் வீசும் பிறைச்சந்திரனைச் சூடியவன்;


7)

மத்திடு வாரியில் மாவிடம் தோன்ற மனங்கலங்கி

உத்தம னேயருள் ஓலமென் றும்பர்கள் ஓடிவர

அத்துயர் தீர்த்துநஞ் சார்ந்திருள் கண்டன் அமருமிடம்

பத்தர் குழாங்கள் பணிந்தேத்தும் பாண்டிக் கொடுமுடியே.


மத்திடு வாரியில் மா விடம் தோன்ற - கடைந்த கடலில் பெரிய நஞ்சு எழவும்; (மத்திடுதல் - கடைதல்); (வாரி - கடல்);

உம்பர்கள் - தேவர்கள்;

அத்துயர் தீர்த்து நஞ்சு ஆர்ந்து இருள் கண்டன் அமரும் இடம் - அத்துன்பத்தைப் போக்கி, அவ்விடத்தை உண்டு, அதனால் கருமை தோன்றும் கண்டத்தை உடையவன் விரும்பி உறையும் தலம்; (ஆர்தல் - உண்ணுதல்); (அமர்தல் - விரும்புதல்);

பத்தர் குழாங்கள் - பக்தர் கணங்கள்; அன்பர் திருக்கூட்டங்கள்;


8)

துணிந்து திருமலை தூக்கிய வன்றன் சுடர்மணிகள்

அணிந்த முடிபத் தடர்த்துப் பெயரும் அருள்புரிந்தார்

மணந்த மடந்தையை வாமம் மகிழண்ட வாணரிடம்

பணிந்தவர் பாவங்கள் பாற்றிடும் பாண்டிக் கொடுமுடியே.


துணிந்து திருமலை தூக்கியவன்தன் - துணிச்சலோடு கயிலை௳லையைப் பெயர்க்கமுயன்ற இலங்கை மன்னனுடைய;

சுடர்மணிகள் அணிந்த முடி பத்து அடர்த்துப் - ஒளிவீசும் மணிகள் பதித்த கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையும் நசுக்கி;

பெயரும் அருள்புரிந்தார் - பின் அவன் அழுது இசைபாடித் தொழக் கேட்டு இரங்கி அவனுக்குப் பெயரும் அருளியவர்; ("இராவணன் - அழுதவன்" என்ற பெயரைத் தசக்கிரீவனுக்கு அருளினார்);

மணந்த மடந்தையை வாமம் மகிழ் அண்டவாணர் இடம் - உமையம்மையை இடப்பக்கம் உடையவர்; அண்டம் முழுவதும் வாழும் அவர் உறையும் தலம்;

பணிந்தவர் பாவங்கள் பாற்றிடும் பாண்டிக் கொடுமுடியே - தொழும் பக்தர்களது பாவங்களைப் போக்கும் திருப்பாண்டிக்கொடுமுடி.


* தசமுகனுக்கு இராவணன் (அழுதவன்) என்ற பெயரைக் கொடுத்தவன் சிவபெருமான்.

(சுந்தரர் தேவாரம் - 7.68.9

இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை

எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்

துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள்

இருப துந்நெரித் தின்னிசை கேட்டு

வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த

வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல்

நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே);


9)

மண்ணகழ் கேழலும் வானுயர் அன்னமும் வாடிநிற்க

விண்ணுயர் சோதியன் வெண்பொடி மேனியன் வெள்விடையன்

கண்ணமர் நெற்றியன் கங்கைச் சடையன் கருதுமிடம்

பண்ணொலி வண்டுசெய் பைம்பொழிற் பாண்டிக் கொடுமுடியே.


மண் அகழ் கேழலும் வான் உயர் அன்னமும் வாடிநிற்க விண் உயர் சோதியன் - பன்றி உருவில் மண்ணை அகழ்ந்து தேடிய திருமாலும் அன்னமாகி வானில் உயர்ந்து பறந்து தேடிய பிரமனும் வாடும்படி விண்ணில் எல்லையின்றி நீண்ட சோதி வடிவினன்; (கேழல் - பன்றி);

வெண்பொடி மேனியன் - திருமேனியில் திருநீற்றைப் பூசியவன்;

பண்ணொலி வண்டுசெய் பைம்பொழில் பாண்டிக் கொடுமுடியே - வண்டுகள் பல பண்களில் ரீங்காரம் செய்யும் அழகிய சோலைகள் சூழந்த திருப்பாண்டிக்கொடுமுடி;


10)

மாம்பழம் உண்ண மறுத்தொரு வேம்பினை வாய்மடுக்கும்

தீம்பர்கள் சொல்லும் சிறுநெறி துன்பத்தில் சேர்த்திடுமால்

ஓம்பிடு வார்க்கின்பம் நல்குமுக் கண்ணன் உறையுமிடம்

பாம்பணை யான்பிர மன்பணி பாண்டிக் கொடுமுடியே.


வேம்பு - வேப்பங்காய்;

மடுத்தல் - உண்ணுதல்; (வாய்மடுத்தல் - To put into one's mouth; வாயினுட்கொள்ளுதல்.);

தீம்பர் - கீழோர்; துஷ்டர்;

சேர்த்திடுமால் - சேர்க்கும்; (ஆல் - அசைச்சொல்);

ஓம்பிடுவார்க்கு இன்பம் நல்கும் முக்கண்ணன் உறையும் இடம் - போற்றும் பக்தர்களுக்கு இன்பம் அருளும் நெற்றிக்கண்ணன் உறையும் தலம்; (ஓம்புதல் - பேணுதல்; போற்றுதல்);

பாம்பணையான் பிரமன் பணி பாண்டிக் கொடுமுடியே - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பிரமனு வழிபாடு செய்யும் திருப்பாண்டிக்கொடுமுடி; (சுந்தரர் தேவாரம் - 7.48.9 - "நாரணன் பிரமன் தொழுங் கறையூரிற் பாண்டிக் கொடுமுடிக் காரணா");


11)

வார்சடை அண்ணலை வாழ்த்து விசயன் மகிழ்ந்திடவே

ஓர்படை நல்கிடப் பன்றிப்பின் சென்றவர் உண்பலிக்கா

ஊர்விடை ஏறி உடைதலை ஏந்தும் ஒருவரிடம்

பார்படை நான்முகன் மால்பணி பாண்டிக் கொடுமுடியே.


வார்சடை அண்ணலை வாழ்த்து விசயன் மகிழ்ந்திடவே ஓர் படை நல்கிடப் பன்றிப்பின் சென்றவர் - நீள்சடையை உடைய ஈசனை வழிபட்ட அருச்சுனன் மகிழுமாறு ஒப்பற்ற பாசுபதாஸ்திரத்தை அவனுக்கு அருள ஒரு பன்றியின்பின் வேடனாகச் சென்றவர்; (ஓர் படை - ஓர் ஆயுதம்; ஒப்பற்ற ஆயுதம் - பாசுபதாஸ்திரம்); (உண்பலிக்கா - உண்பலிக்காக என்பது கடைக்குறையாக வந்தது - பிச்சைக்காக);

உண்பலிக்கா ஊர்விடை ஏறி உடைதலை ஏந்தும் ஒருவர் இடம் - பிச்சைக்காக இடபவாகனத்தில் ஏறி பிரமனது மண்டையோட்டை ஏந்துகின்ற ஒப்பற்றவர் உறையும் தலம்; (ஊர்விடை - வாகனமாக ஊர்கின்ற இடபம்); (உடைதலை - உடைந்த தலை - பிரமனின் மண்டையோடு);

பார் படை நான்முகன் மால் பணி பாண்டிக் கொடுமுடியே - உலகைப் படைக்கும் பிரமனும் திருமாலும் வணங்கும் திருப்பாண்டிக்கொடுமுடி;


அன்போடு,

வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :

1) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - மகுடேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=64

2) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) தலக்குறிப்பு: http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=806

'திருமுறைத் தலங்கள்' என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது:

ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று, ஐந்து மணிகளாக உடைப்பட்டுச் சிதறியது.

அவற்றுள் சிவப்புமணி திருவண்ணாமலையாகவும், மரகதம் ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் திருவாட்போக்கியாகவும், நீலம் பொதிகையாகவும், வைரம் கொடுமுடியாகவும் ஆயின என்பது தலபுராணம்.

மேருமலையின் ஒரு கொடுமுடி (சிகரம்) இங்கு வீழ்ந்தமையால் இப்பெயர் வந்தது என்பது வரலாறு. அதுவே சிவலிங்கமாக உள்ளது. சிவலிங்கம் மிகவும் குட்டையானது. சிகர வடிவில் உள்ளது. அகத்தியர் தழுவிய விரல் தழும்பு மேலே உள்ளது. சதுரபீடம். ‘பாண்டிய மன்னனின் விரல் வளர்ந்து குறை தீர்ந்த தலமாதலின் ‘பாண்டிக் கொடுமுடி’ என்றாயிற்று (அங்கவர்த்தனபுரம்) பரத்வாசர், அகத்தியர் வழிபட்ட தலம்.

-------------- --------------


No comments:

Post a Comment