Monday, May 6, 2024

07.39 - வான்மியூர் - (திருவான்மியூர்) - வெள்ளை ஏற்றினன்

07.39 - வான்மியூர் - (திருவான்மியூர்) - வெள்ளை ஏற்றினன்

2016-04-29

07.39 - வான்மியூர் (திருவான்மியூர்)

---------------------------------

(கட்டளைக் கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.82.9 - "ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்")


1)

வெள்ளை ஏற்றினன் வேணியில் கங்கையின்

வெள்ளம் தாங்கு விகிர்தன் விடமுண்ட

வள்ளல் வான்மியூர்ப் பால்வணன் வார்கழல்

உள்கு வார்க்கிடர் ஒன்றிலை உண்மையே.


வெள்ளை ஏற்றினன் - வெண்ணிற எருதை வாகனமாக உடையவன்;

வேணியில் கங்கையின் வெள்ளம் தாங்கு விகிர்தன் - சடையில் கங்கையைத் தாங்கிய விகிர்தன்; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - சிவன் திருநாமம்);

விடம் உண்ட வள்ளல் - விடத்தை உண்டு அமுதை வழங்கிய வள்ளல்;

வான்மியூர்ப் பால்வணன் வார்-கழல் உள்குவார்க்கு இடர் ஒன்றிலை உண்மையே - திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ண நாதனது நீண்ட திருவடியைத் தியானிப்பார்களுக்கு ஒரு துன்பமும் இல்லை, உண்மையே; (* பால்வண்ண நாதன் - திருவான்மியூர் ஈசன் திருநாமம்);


2)

வெங்க ளிற்றுரி போர்த்தவன் திங்களும்

பொங்க ராவும் புனைபுன் சடையினன்

மங்கை பங்கினன் வான்மியூர்ப் பால்வணன்

துங்கத் தாள்தொழு தொண்டருக் கின்பமே.


வெங்-களிற்று-ரி போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்த்தவன்;

திங்களும் பொங்கு-அராவும் புனை- புன்சடையினன் - சந்திரனையும் சீறும் பாம்பையும் செஞ்சடையில் அணிந்தவன்;

மங்கை பங்கினன் - உமைபங்கன்;

வான்மியூர்ப் பால்வணன் - திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ண நாதனது;

துங்கத் தாள் தொழு தொண்டருக்கு இன்பமே - தூய திருவடியைத் தொழும் தொண்டர்களுக்கு என்றும் இன்பமே;


3)

பாசம் வீசு பரிவிலாக் கூற்றுதை

ஈசன் நஞ்சம் இலங்கு மிடற்றினன்

மாசி லாதவன் வான்மியூர்ப் பால்வணன்

வாசம் ஆர்கழல் வாழ்த்து மடநெஞ்சே.


பாசம் வீசு பரிவு இலாக் கூற்று உதை ஈசன் - பாசத்தை வீசிய இரக்கமில்லாத கூற்றுவனை உதைத்த ஈசன்;

நஞ்சம் இலங்கு மிடற்றினன் - கண்டத்தில் நஞ்சை அணிந்தவன்;

மாசு இலாதவன் - தூயன்;

வான்மியூர்ப் பால்வணன் - திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ண நாதனது;

வாசம் ஆர் கழல் வாழ்த்து மடநெஞ்சே - வாசம் மிக்க திருவடியைப், பேதைமனமே, வாழ்த்து;;


4)

மாத யைக்கட லேயென்று வான்தொழ

ஓத நஞ்சினை உண்டருள் செய்தவர்

வாதை தீர்த்தவன் வான்மியூர்ப் பால்வணன்

பாதம் ஏத்திடு பத்தருக் கின்பமே.


"மா தயைக்கடலே" என்று வான் தொழ - "பெரும் கருணைக் கடலே" என்று தேவர்கள் வணங்கவும்; (வான் - தேவர்கள்):

ஓத நஞ்சினை உண்டு அருள்செய்து, அவர் வாதை தீர்த்தவன் - கடல்-விடத்தை உண்டு அருள்புரிந்து அவர்களுடைய துன்பத்தைத் தீர்த்தவன்;

வான்மியூர்ப் பால்வணன் பாதம் ஏத்திடு பத்தருக்கு இன்பமே - திருவான்மியூரில் உறையும் பால்வண்ணனின் திருவடியைப் போற்றும் பக்தர்களுக்கு இன்பமே;


5)

காமன் தன்னைக் கனலெழப் பார்த்தவன்

மாமன் வேள்வி தகர்த்தவன் மங்கையை

வாமம் ஏற்றவன் வான்மியூர்ப் பால்வணன்

நாமம் ஓதிட நம்வினை நாசமே.


கனல் - தீ;

மாமன் - தக்கன்;

வாமம் - இடப்பக்கம்;


6)

முழவம் ஆர்க்க நடம்புரி முக்கணன்

உழுவைத் தோலை உடுத்தவன் கையினில்

மழுவை ஏந்திய வான்மியூர்ப் பால்வணன்

தொழுத பத்தர் துயரம் துடைப்பனே.


முழவம் - முழவு என்ற வாத்தியம்;

ஆர்த்தல் - ஒலித்தல்;

உழுவை - புலி;

துடைப்பன் - துடைப்பான் - போக்குவான்; (துடைத்தல் - நீக்குதல்);


7)

பறையொ லித்திட நட்டம் பயில்பவன்

கறைவி ளங்கிய கண்டன்கல் லாலின்கீழ்

மறைவி ரித்தவன் வான்மியூர்ப் பால்வணன்

நறைம லர்க்கழல் நச்சினார்க் கின்பமே.


பறை ஒலித்திட நட்டம் பயில்பவன் - பறைகள் ஒலிக்க நடம் செய்பவன்;

கறை விளங்கிய கண்டன் - நீலகண்டன்;

கல்லாலின்கீழ் மறை விரித்தவன் - கல்லால மரத்தின்கீழ் வேதப்பொருளை விளக்கியவன்;

வான்மியூர்ப் பால்வணன் நறைமலர்க்கழல் நச்சினார்க்கு இன்பமே - திருவான்மியூர்ப் பால்வண்ணநாதனின் தேன்மலர் போன்ற திருவடியை விரும்பியவர்களுக்கு இன்பமே; (நச்சுதல் - விரும்புதல்);


8)

உர(ம்)நி னைத்துயர் வெற்பை இடந்தவன்

சிர(ம்)நெ ரித்தவர் முப்புரம் தீப்புக

வரைவ ளைத்தவர் வான்மியூர்ப் பால்வணர்

உரைசெய் அன்பர்க் குறுதுணை ஆவரே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

உரம் நினைத்து உயர் வெற்பை இடந்தவன் சிரம் நெரித்தவர் - தன் வலிமையை எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத்தலைகளை நசுக்கியவர்; (உரம் - வலிமை); (வெற்பு - மலை);

முப்புரம் தீப் புக வரை வளைத்தவர் - முப்புரங்களும் தீப்பற்றி அழிய மேருமலையை வில்லாக வளைத்தவர்; (வரை - மலை);

வான்மியூர்ப் பால்வணர் உரைசெய் அன்பர்க்கு உறுதுணை ஆவரே - துதித்து வணங்கும் அடியவர்களுக்குத் திருவான்மியூர்ப் பால்வண்ணநாதர் உறுதுணை ஆவார்;


9)

கார்வ ணன்பிர மன்கழல் கைதொழ

ஓர்த ழற்பிழம் பாகி உயர்ந்தவர்

மார்பில் நூலினர் வான்மியூர்ப் பால்வணர்

சீர்பு கன்றவர் தீவினை தீருமே.


கார்வணன் பிரமன் கழல் கைதொழ - கரிய நிறம் உடைய திருமால் பிரமன் என்ற இருவரும் திருவடியை வணங்குமாறு;

ஓர் தழற்பிழம்பு ஆகி உயர்ந்தவர் - ஒப்பற்ற சோதியாகி உயர்ந்தவர்;

மார்பில் நூலினர் - திருமார்பில் பூணூல் அணிந்தவர்;

வான்மியூர்ப் பால்வணர் சீர் புகன்றவர் தீவினை தீருமே - திருவான்மியூர்ப் பால்வண்ணநாதருடைய பெருமைகளைப் பேசும் அடியவர்களுடைய பாவங்கள் திரும்;


10)

நித்தம் வீதியில் நின்றுபொய் விற்றிடும்

எத்தர் புன்னெறி நீங்குமின் எம்பிரான்

மத்தம் சூடிய வான்மியூர்ப் பால்வணன்

பத்தர் தம்வினை தீர்க்கும் பரமனே.


நித்தம் - நாள்தோறும்; தினமும்;

எத்தர் - வஞ்சகர்;

புன்னெறி - சிறுநெறி;

நீங்குமின் - நீங்குங்கள்;

மத்தம் - ஊமத்த மலர்;


11)

பணியும் ஆறு(ம்) மதியும் படர்சடை

அணியும் அண்ணல் அமரர் வணங்கிடு(ம்)

மணிமி டற்றினன் வான்மியூர்ப் பால்வணன்

பணியும் அன்பரைப் பாலிக்கும் பண்பனே.


பணியும் ஆறும் மதியும் படர்சடை அணியும் அண்ணல் - பாம்பையும் கங்கையையும் திங்களையும் படர்ந்த சடையில் அணிகின்ற தலைவன்;

அமரர் வணங்கிடும் மணிமிடற்றினன் - தேவர்கள் வழிபடும் நீலகண்டன்;

வான்மியூர்ப் பால்வணன் - திருவான்மியூரில் உறையும் பால்வண்ணநாதன்;

பணியும் அன்பரைப் பாலிக்கும் பண்பனே - அப்பெருமான் தன்னைத் தொழும் பக்தர்களைக் காக்கும் பண்பு உடையவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------


No comments:

Post a Comment