Friday, June 27, 2025

T.202 - கோடிகா - (திருக்கோடிக்காவல்) - தேன் நிலாவும்

2017-10-18

T.202 - கோடிகா - (திருக்கோடிக்காவல்) - தேன் நிலாவும்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தானனா தந்தனந் தானனா தந்தனந்

தானனா தந்தனந் .. தனதான )

(காலனார் வெங்கொடுந் தூதர் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


தேனிலா வும்பெரும் பாவினால் உன்பரஞ்

.. .. சீரையே சந்ததம் .. பகர்வேனே

.. தீயவே தந்திடும் பாவமே மண்டிடுந்

.. .. தீனனேன் உய்ந்திடும் .. படியீயாய்

கானிலார் குஞ்சரஞ் சீறியே வந்ததுங்

.. .. காதினாய் அன்றடைந் .. துனையோது

.. காதலார் அன்பரின் காவலா கொன்றிடுங்

.. .. காலனே அஞ்சிடுங் .. கழலானே

ஆனிலோர் அஞ்சுகந் தாடினாய் அண்டரஞ்

.. .. சாலமே உண்டவெங் .. களநேயா

.. ஆகமோர் பங்கணங் காயினாய் வண்டலம்

.. .. பாரமோ டென்பையும் .. புனைவோனே

கூனிலா வும்பணங் காணரா வுஞ்சலங்

.. .. கூடவே ஒன்றிடுஞ் .. சடையானே

.. கோலமா ருங்கருஞ் சோலைசூ ழுந்தலங்

.. .. கோடிகா நின்றவெம் .. பெருமானே.


பதம் பிரித்து:

தேன் நிலாவும் பெரும் பாவினால் உன் பரஞ்

.. .. சீரையே சந்ததம் .. பகர்வேனே;

.. தீயவே தந்திடும் பாவமே மண்டிடும்

.. .. தீனனேன் உய்ந்திடும்படி ஈயாய்;

கானில் ஆர் குஞ்சரம் சீறியே வந்ததும்

.. .. காதினாய் அன்று; அடைந்(து) உனை ஓது

.. காதல் ஆர் அன்பரின் காவலா; கொன்றிடும்

.. .. காலனே அஞ்சிடும் .. கழலானே;

ஆனில் ஓர் அஞ்(சு) உகந்(து) ஆடினாய்; அண்டர் அஞ்(சு)

.. .. ஆலமே உண்ட வெங்-கள நேயா;

.. ஆகம் ஓர் பங்(கு) அணங்(கு) ஆயினாய்; வண்டு அலம்(பு)

.. .. ஆரமோ(டு) என்பையும் .. புனைவோனே;

கூன்-நிலாவும், பணம் காண் அராவும், சலம்

.. .. கூடவே ஒன்றிடும் .. சடையானே;

.. கோலம் ஆரும் கருஞ்சோலை சூழும் தலம்

.. .. கோடிகா நின்ற எம் .. பெருமானே.


தேன் நிலாவும் பெரும்-பாவினால் உன் பரம் சீரையே சந்ததம் பகர்வேனே - இனிய சிறந்த பாமாலைகளால் உன் மேலான புகழையே என்றும் சொல்வேன்; (சந்ததம் - எப்பொழுதும்);

தீயவே தந்திடும் பாவமே மண்டிடும் தீனனேன் உய்ந்திடும்படி ஈயாய் - தீயவற்றையே தரும் பாவங்களே மிக்கவனும் கதியற்றவனுமான நான் உய்யும்படி நீ அருள்புரிவாயாக; (மண்டுதல் - மிகுதல்); (தீனன் - வறியவன்); (ஈதல் - கொடுத்தல்);


கானில் ஆர் குஞ்சரம் சீறியே வந்ததும் காதினாய் - காட்டில் வாழும் ஆனை சீறி வந்தபோது அதனைக் கொன்றவனே; (குஞ்சரம் - ஆனை); (காதுதல் - கொல்லுதல்);

அன்று அடைந்து உனை ஓது, காதல் ஆர் அன்பரின் காவலா - முன்னர் உன்னைச் சரணடைந்து வழிபட்ட பெரும்-பக்தரான மார்க்கண்டேயரைக் காத்தவனே; (காதல் - பக்தி; அன்பு);

கொன்றிடும் காலனே அஞ்சிடும் கழலானே - எல்லா உயிர்களையும் கொல்லும் கூற்றுவனே அஞ்சும்படி அவனைக் கழல் அணிந்த திருவடியால் உதைத்தவனே;


ஆனில் ஓர் அஞ்சு உகந்து ஆடினாய் - பசுவினிடத்து உண்டாகிய பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் உடையவனே; (பஞ்சகவ்வியம் - பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம் என்னும் ஐந்து); (ஆன் - பசு); (ஓர் - அசை); (ஆடுதல் - நீராடுதல்); (அப்பர் தேவாரம் – 6.92.1 - "ஆவினிலைந் துகந்தானை");

அண்டர் அஞ்சு ஆலமே உண்ட வெங்-கள நேயா - தேவர்கள் அஞ்சிய ஆலகாலத்தை உண்ட விரும்பத்தக்க கண்டத்தை உடையவனே; அன்புடையவனே; (அண்டர் - தேவர்); (வெம்மை - விருப்பம்); (களம் - கண்டம்); (நேயம் - அன்பு);

ஆகம் ஓர் பங்கு அணங்கு ஆயினாய் - உன் திருமேனியில் உமையை ஒரு பங்காக உடையவனே; (ஆகம் - உடல்); (அணங்கு - அழகிய பெண்);

வண்டு அலம்பு ஆரமோடு என்பையும் புனைவோனே - வண்டுகள் ஒலிக்கின்ற மலர்மாலையையும் எலும்புமாலையும் அணிபவனே; (அலம்புதல் - ஒலித்தல்); (ஆரம் - மாலை); (என்பு - எலும்பு); (சம்பந்தர் தேவாரம் - 2.95.4 - "அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே");


கூன்-நிலாவும், பணம் காண் அராவும், சலம் கூடவே ஒன்றிடும் சடையானே - வளைந்த சந்திரனும், படம் உடைய பாம்பும், கங்கையோடு ஒன்றுகின்ற சடையை உடையவனே; (கூன் - வளைவு); (பணம் - பாம்பின் படம்); (அரா - பாம்பு); (சலம் - ஜலம் - கங்கை);

கோலம் ஆரும் கருஞ்-சோலை சூழும் தலம் கோடிகா நின்ற எம் பெருமானே - அழகு மிக்க பெரிய கரிய சோலைகள் சூழ்ந்த தலமான திருக்கோடிகாவில் உறைகின்ற எம்பெருமானே; (கோலம் - அழகு); (கருமை - கறுப்பு; பெருமை); (சம்பந்தர் தேவாரம் - 2.47.10 - "கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தான்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.409 - வாஞ்சியம் - நார்மலி நெஞ்சொடு

2017-10-12

P.409 - வாஞ்சியம்

---------------------------------

(எழுசீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தானன தானன தானன தானன தானதனா)

(சுந்தரர் தேவாரம் - 7.10.1 - "தேனெய் புரிந்துழல்")

முற்குறிப்புகள் - படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. புணர்ச்சியோடு நோக்கில் சந்தம் கெடாமையைக் காண்க.

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

நார்மலி நெஞ்சொடு நற்கழல் ஏத்திய நம்பியு யிர்க்கொரு நற்றுணைவன்

கார்மலி மேதிய தேறிய காலனை அன்றுதை கண்ணுதல் எம்பெருமான்

கூர்மலி மூவிலை வேலினன் ஓர்விடை யான்சுடு காடுறை கொள்கையினான்

வார்சடை மேல்இள மாமதி சூடிய வன்பதி வாஞ்சிய நன்னகரே.


பதம் பிரித்து:

நார் மலி நெஞ்சொடு நற்கழல் ஏத்திய நம்பி உயிர்க்கு ஒரு நற்றுணைவன்;

கார் மலி மேதிஅது ஏறிய காலனை அன்று உதை கண்ணுதல் எம்பெருமான்;

கூர் மலி மூவிலை வேலினன்; ஓர் விடையான்; சுடுகாடு உறை கொள்கையினான்;

வார்-சடைமேல் இள மா மதி சூடியவன் பதி வாஞ்சிய நன்னகரே.


நார் மலி நெஞ்சொடு நற்கழல் ஏத்திய நம்பி உயிர்க்கு ஒரு நற்றுணைவன் - மனத்தில் அன்போடு நல்ல திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரது உயிர்க்குச் சிறந்த பாதுகாவல்; (நார் - அன்பு); (நம்பி - ஆண்களிற் சிறந்தவன் - இங்கே மார்க்கண்டேயர்);

கார் மலி மேதிஅது ஏறிய காலனை அன்று உதை கண்ணுதல் எம்பெருமான் - கரிய எருமையின்மீது ஏறி வரும் நமனை முன்னம் உதைத்தவனும் நெற்றிக்கண்ணனும் ஆன எம் பெருமான்; (மேதி - எருமை; அது - பகுதிப்பொருள்விகுதி);

கூர் மலி மூவிலை வேலினன் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்தியவன்;

ர் விடையான் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவன்; (ஓர் - ஒப்பற்ற);

சுடுகாடு உறை கொள்கையினான் - சுடுகாடே இடமாக உடையவன்;

வார்-சடைமேல் இள-மா-மதி சூடியவன் பதி வாஞ்சிய நன்னகரே - நீள்சடையின்மீது அழகிய இளம்பிறையைச் சூடிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம்;


2)

துன்னிய வல்வினை தீர்த்தரு ளாயென நெக்குரு கித்துதி சொன்னபடி

சென்னியில் அஞ்சலி கூப்பிய சீலரு யிர்த்துணை ஆகிய செல்வனவன்

முன்னிய மன்தொழு தேத்திய முக்கணன் ஒள்ளெரி முப்புர(ம்) மூட்டியவன்

வன்னியு(ம்) மத்தமு(ம்) மன்னிய வார்சடை யான்பதி வாஞ்சிய நன்னகரே.


பதம் பிரித்து:

"துன்னிய வல்வினை தீர்த்து அருளாய்" என நெக்குருகித் துதி சொன்னபடி

சென்னியில் அஞ்சலி கூப்பிய சீலர் உயிர்த்துணை ஆகிய செல்வன்அவன்;

முன் இயமன் தொழுது ஏத்திய முக்கணன்; ஒள் எரி முப்புரம் மூட்டியவன்;

வன்னியும் மத்தமும் மன்னிய வார் சடையான் பதி வாஞ்சிய நன்னகரே.


"துன்னிய வல்வினை தீர்த்து அருளாய்" என நெக்குருகித் துதி சொன்னபடி சென்னியில் அஞ்சலி கூப்பிய சீலர் உயிர்த்துணை ஆகிய செல்வன்அவன் - "நெருங்கிச் சூழும் வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக" என்று மனம் உருகித் துதித்துத் தலைமேல் கைகளைக் கூப்பி வழிபட்ட சீலரான மார்க்கண்டேயர் உயிருக்குக் காவல் ஆன செல்வன்; (துன்னுதல் - பொருந்துதல்; செறிதல்; அணுகுதல்);

முன் இயமன் தொழுது ஏத்திய முக்கணன் - முன்பு காலன் வழிபாடு செய்த முக்கண்ணன்; (* இயமன் ஈசனை வழிபாடு செய்த தலம் திருவாஞ்சியம் - தலபுராணச்செய்தி);

ஒள்-எரி முப்புரம் மூட்டியவன் - முப்புரங்களில் தீ மூட்டியவன்; (ஒள்ளெரி - ஒளி பொருந்திய தீ);

வன்னியும் மத்தமும் மன்னிய வார்சடையான் பதி வாஞ்சிய நன்னகரே - நீள்சடையில் வன்னி-இலையையும் ஊமத்த-மலரையும் சூடிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம்;


3)

தாளகி லேம்தழ லின்சுடு நஞ்சிது தன்னையெ னச்சுரர் அஞ்சியழக்

காளவி டந்தனை உண்டுக றுத்தொளி வீசிடும் ஓர்மணி கண்டமுளான்

வேளல ரம்பினை ஏவவும் ஓர்நொடி யிற்பொடி யாகவி ழித்தபிரான்

வாளர வம்பிறை சூடிய வார்சடை யான்பதி வாஞ்சிய நன்னகரே.


பதம் பிரித்து:

"தாளகிலேம் தழலின் சுடு நஞ்சுஇது-தன்னை" எனச் சுரர் அஞ்சி அழக்,

காள-விடம்தனை உண்டு, கறுத்து, ஒளி வீசிடும் ஓர் மணி கண்டம் உளான்;

வேள் அலர்-அம்பினை ஏவவும், ஓர் நொடியில் பொடி ஆக விழித்த பிரான்;

வாள்-அரவம் பிறை சூடிய வார்-சடையான் பதி வாஞ்சிய நன்னகரே.


"தாளகிலேம் தழலின் சுடு நஞ்சு-இதுதன்னை" எனச் சுரர் அஞ்சி அழக் - "தீயினும் சுடுகின்ற இந்த விடத்தை நாங்கள் தாங்கமாட்டோம்" என்று தேவர்கள் அச்சத்தோடு வந்து துதிக்கவும்; (தாள்தல் - பொறுத்தல்); (கிற்றல் - ஆற்றல்கொள்ளுதல்); (ஏம் - தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி);

காள-விடம்தனை உண்டு, கறுத்து, ளி வீசிடும் ஓர் மணி கண்டம் உளான் - அவர்களுக்கு இரங்கி அந்தக் கரிய விடத்தை உண்டு, கருமை அடைந்து, ஒளி வீசும் ஒப்பற்ற நீலமணிகண்டம் உள்ளவன்; (காளம் - கருமை);

வேள் அலர்-அம்பினை ஏவவும், ஓர் நொடியில் பொடி ஆக விழித்த பிரான் - மன்மதன் மலர்க்கணையை ஏவியபோது அவன் ஒரு நொடியளவில் சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் அவனைப் பார்த்த தலைவன்;

வாள்-அரவம் பிறை சூடிய வார்-சடையான் பதி வாஞ்சிய நன்னகரே - நீள்சடையில் கொடிய பாம்பையும் பிறைச்சந்திரனையும் சூடிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம்;


4)

நாளைநி னைந்தடை கூற்றுவ னுக்கொரு கூற்றென ஆகிய நற்கமலத்

தாளைவ ணங்கிய மாமணி வாசக ருக்கரு ளும்தயை யார்தலைவன்

ஊளையி டுந்நரி யைப்பரி ஆக்கிய வல்லவன் ஓர்மழு வாளனிடம்

வாளையி னங்களு லாம்புன லார்குள மார்பதி வாஞ்சிய நன்னகரே.


பதம் பிரித்து:

நாளை நினைந்து அடை கூற்றுவனுக்கு ஒரு கூற்று என ஆகிய நற்கமலத்

தாளை வணங்கிய மா மணிவாசகருக்கு அருளும் தயை ஆர் தலைவன்;

ஊளையிடும் நரியைப் பரி ஆக்கிய வல்லவன்; ஓர் மழுவாளன் இடம்,

வாளை-இனங்கள் உலாம் புனல் ஆர் குளம் ஆர் பதி வாஞ்சிய நன்னகரே.


நாளை நினைந்து அடை கூற்றுவனுக்கு ஒரு கூற்று என ஆகிய நற்கமலத் தாளை வணங்கிய மா-மணிவாசகருக்கு அருளும் தயை ஆர் தலைவன் - நம் ஆயுள் என்று முடியும் என்று எண்ணி அடைகின்ற காலனுக்கே காலன் ஆகிய அழகிய தாமரைமலர் போன்ற திருவடியை வணங்கிய மாணிக்கவாசகருக்கு அருள்புரிந்தவன், கருணை மிக்க தலைவன்; (ஆர்தல் - மிகுதல்);

ஊளையிடும் நரியைப் பரி ஆக்கிய வல்லவன் - ஊளையிடும் நரிகளைக் குதிரைகள் ஆக்கிய வல்லவன்; (பரி - குதிரை); (ஊளையிடுந்நரியை - சந்தம் கருதி, நகர-ஒற்று விரித்தல் விகாரம்);

ஓர் மழுவாளன் இடம், வாளை-இனங்கள் உலாம் புனல் ஆர் குளம் ஆர் பதி வாஞ்சிய நன்னகரே - மழுவை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம், வாளை-மீன்கள் உலவுகின்ற நீர் நிறைந்த குளங்கள் பொருந்திய திருவாஞ்சியம்;


5)

வெஞ்சின வெள்விடை ஏறிய வேதியன் ஆதியன் நீறணி மேனியினான்

அஞ்சிய விண்ணவர் உய்ந்திட ஆழ்கடல் நஞ்சினை ஆர்ந்தணி ஆக்கியவன்

அஞ்சன வேல்விழி கிஞ்சுக மென்மொழி மாதொரு பாகன மர்ந்தவிடம்

மஞ்சண வும்பொழி லில்மது உண்டளி பண்ணிசை வாஞ்சிய நன்னகரே.


வெஞ்சின வெள்விடை ஏறிய வேதியன் - மிகவும் சினம் உடைய வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவன், வேதம் ஓதியவன்;

ஆதியன் - எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளவன்;

நீறு அணி மேனியினான் - திருநீற்றை மேனியில் பூசியவன்;

அஞ்சிய விண்ணவர் உய்ந்திட ஆழ்கடல் நஞ்சினை ஆர்ந்து அணி ஆக்கியவன் - அஞ்சி வந்தடைந்த தேவர்கள் உய்யும்படி, பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு கண்டத்தில் அதனை அழகிய ஆபரணம் ஆக்கியவன்; (ஆர்தல் - உண்ணுதல்); (அணி - 1. ஒப்பனை. 2. அழகு. 3. ஆபரணம்);

அஞ்சன வேல்விழி கிஞ்சுக மென்மொழி மாது ஒரு பாகன் அமர்ந்த இடம் - மை திகழும் வேல் போன்ற கண்களையும் கிளி போன்ற மென்மையான மொழியையும் உடைய உமையை ஒரு பாகமாக உடையவன் விரும்பி உறையும் தலம்; (அஞ்சனம் - மை); (கிஞ்சுகம் - கிளி); (அமர்தல் - விரும்புதல்);

மஞ்சு அணவும் பொழிலில் மது உண்டு அளி பண் இசை வாஞ்சிய நன்னகரே - மேகம் வந்து பொருந்தும் சோலைகளில் பூக்களில் மதுவை உண்டு வண்டுகள் பண்களைப் பாடுகின்ற திருவாஞ்சியம்; (மஞ்சு - மேகம்); (அணவுதல் - அணுகுதல்; தழுவுதல்); (அளி - வண்டு);


6)

பாமல ராற்பணி பத்தரின் நெஞ்சிலி ருப்பவன் ஆயிழை பங்குடையான்

தூமதி வானதி கூவிளம் மத்தம ராவிவை சூடிய தொல்புகழான்

ஆமையின் ஓட்டையும் ஏனம ருப்பையு(ம்) நல்லணி யாமகிழ் அண்ணலிடம்

மாமல ரார்பொழி லிற்சிறை வண்டறை யுந்திரு வாஞ்சிய நன்னகரே.


பாமலரால் பணி பத்தரின் நெஞ்சில் இருப்பவன் - பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களின் நெஞ்சில் திகழ்பவன்;

ஆயிழை பங்கு உடையான் - உமையை ஒரு பங்கில் உடையவன்; (ஆயிழை - பெண்);

தூ மதி, வான்நதி, கூவிளம், மத்தம், அரா இவை சூடிய தொல்-புகழான் - தூய திங்களையும் கங்கையையும் வில்வத்தையும் ஊமத்த-மலரையும் பாம்பையும் முடிமேல் சூடியவன், மிகப் பழமையானவன், புகழ் உடையவன்;

ஆமையின் ஓட்டையும் ஏன மருப்பையும் நல் அணியா மகிழ் அண்ணல் இடம் - ஆமையின் ஓடு, பன்றியின் கொம்பு இவற்றை விரும்பி அணிகின்ற தலைவன் உறையும் தலம்; (ஏனம் - பன்றி); (மருப்பு - விலங்கின் கொம்பு; யானைத் தந்தம்); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "முற்றலாமை இள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு")

மா மலர் ஆர் பொழிலில் சிறை வண்டு அறையும் திரு வாஞ்சிய நன்னகரே - அழகிய மலர்கள் நிறைந்த சோலையில் சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற திருவாஞ்சியம்;


7)

சீரணி செந்தமி ழால்தினம் ஏத்திடு வார்பழ வல்வினை தீர்க்குமரன்

வாரணம் ஒன்றினை அன்றுரி செய்தவன் நஞ்சினை நுங்கிய மாமிடறன்

ஆரணம் ஓதிய நாவினன் ஆறணி வேணியன் ஐம்மலர் அம்புதொடு

மாரனை அங்கமி லானென ஆக்கிய வன்பதி வாஞ்சிய நன்னகரே.


சீர் அணி செந்தமிழால் தினம் ஏத்திடுவார் பழ-வல்வினை தீர்க்கும் அரன் - பெருமையும் அழகும் திகழும் தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளால் நாள்தோறும் துதிக்கும் பக்தர்களது பழைய வலிய வினைகளையெல்லாம் தீர்க்கும் ஹரன்;

வாரணம் ஒன்றினை அன்று உரி செய்தவன் - முன்னர் ஓர் ஆனையின் தோலை உரித்தவன்;

நஞ்சினை நுங்கிய மா-மிடறன் - ஆலகாலத்தை உண்ட அழகிய கண்டத்தை உடையவன்; (நுங்குதல் - விழுங்குதல்);

ஆரணம் ஓதிய நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

ஆறு அணி வேணியன் - சடையில் கங்கையை அணிந்தவன்;

ஐம்மலர் அம்பு தொடு மாரனை அங்கம் இலான் என ஆக்கியவன் பதி வாஞ்சிய நன்னகரே - ஐந்து மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை அனங்கன் ஆக்கிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம்;


8)

கல்லையி டந்தவி லங்கைய ரக்கனை ஓர்விர லால்நெரி கண்ணுதலான்

மெல்லிய லாரிடும் உண்பலி ஏற்றிட வெண்டலை ஏந்திய வேந்தனவன்

வில்லென வெற்பைவ ளைத்தொரு நாணென மாசுணம் ஆர்த்தரு வெங்கணையால்

வல்லர ணஞ்சுட வல்லபி ரான்மகி ழும்பதி வாஞ்சிய நன்னகரே.


கல்லை டந்த லங்கை ரக்கனை ஓர் விரலால் நெரி கண்ணுதலான் - கயிலைமலையைப் பெயர்த்த அரக்கனும் இலங்கைமன்னனுமான இராவணனை ஒரு விரலை ஊன்றி நசுக்கியவன், நெற்றிக்கண்ணன்; (கல் - மலை); (நெரித்தல் - நசுக்குதல்); (நுதல் - நெற்றி);

மெல்லியலார் இடும் உண்பலி ஏற்றிட வெண்தலை ஏந்திய வேந்தன்அவன் - பெண்கள் இடும் பிச்சையை ஏற்பதற்குப் பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திய அரசன்;

வில் என வெற்பை வளைத்து ஒரு நாண் என மாசுணம் ஆர்த்து அரு-வெங்கணையால் வல்-அரணம் சுட-வல்ல பிரான் மகிழும் பதி வாஞ்சிய நன்னகரே - மேருமலையை வில்லாக வளைத்து அதனில் ஒரு நாணாக வாசுகி என்ற பாம்பைக் கட்டி, அரிய கொடிய கணையால் வலிமைமிக்க புரங்கள் மூன்றையும் எரித்த தலைவனான சிவபெருமான் விரும்பி உறையும் தலம் திருவாஞ்சியம்; (மாசுணம் - பாம்பு); (அரணம் - கோட்டை);


9)

பங்கய மாமல ரான்திரு மாலறி யாவெரி யாம்பர மாபரமன்

பொங்கிடும் அன்பொடு போற்றிடு வார்க்கெளி யன்புர(ம்) மூன்றெரி புன்னகையான்

அங்கியை ஏந்திந டிப்பவன் ஏர்மலி கச்சென நச்சர வார்த்தபிரான்

மங்கையை வாம(ம்)ம கிழ்ந்தவன் நின்றரு ளும்பதி வாஞ்சிய நன்னகரே.


பங்கய மாமலரான் திருமால் அறியா எரி ஆம் பரமாபரமன் - தாமரைமேல் உறையும் பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாத ஜோதி ஆன பரமன்; (பரமா பரமன் - மேலான பொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.61.1 - "பாதியொர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்");

பொங்கிடும் அன்பொடு போற்றிடுவார்க்கு எளியன் - பொங்கியெழும் பக்தியோடு வழிபடும் தொண்டர்களால் எளிதில் அடையப்படுபவன்;

புரம் மூன்று ரி புன்னகையான் - முப்புரங்களைச் சிரித்து எரித்தவன்;

அங்கியை ஏந்தி நடிப்பவன் - கையில் தீயை ஏந்திக் கூத்தாடுபவன்; (அங்கி - அக்கினி; நெருப்பு); (நடித்தல் - கூத்தாடுதல்);

ஏர் மலி கச்சு என நச்சரவு ஆர்த்த பிரான் - அழகிய அரைக்கச்சாக விஷப்பாம்பைக் கட்டிய தலைவன்; (ஏர் - அழகு); (ஆர்த்தல் - கட்டுதல்);

மங்கையை வாமம் மகிழ்ந்தவன் நின்று அருளும் பதி வாஞ்சிய நன்னகரே - உமையை இடப்பக்கம் ஒரு கூறாக விரும்பிய பெருமான் நீங்காமல் உறையும் தலம் திருவாஞ்சியம்;


10)

மேன்மையி லாமொழி பேசியு ழன்றிடு வீணரு ரைப்பன விட்டொழிமின்

தேன்மலர் இட்டடி வாழ்த்திடு சிந்தையி னார்க்கரு ளைப்பொழி செல்வனவன்

நான்மறை நல்லறம் ஓதிட ஆலதன் நீழல மர்ந்தவன் நம்பெருமான்

மான்மறி ஒண்மழு ஏந்திய வன்மகி ழும்பதி வாஞ்சிய நன்னகரே.


மேன்மை இலா மொழி பேசி உழன்றிடு வீணர் உரைப்பன விட்டு-ஒழிமின் - தகாத புன்மொழிகளே பேசித் திரியும் வீணர்கள் சொல்வனவற்றை மதிக்கவேண்டா;

தேன்மலர் இட்டு அடி வாழ்த்திடு சிந்தையினார்க்கு அருளைப் பொழி செல்வன்அவன் - வாசமலர்களைத் தூவித் திருவடியைப் போற்றும் பக்தர்களுக்குப் பேரருள் செய்யும் செல்வன்;

நான்மறை நல்-அறம் ஓதிட ஆல்-அதன் நீழல் அமர்ந்தவன் நம் பெருமான் - நால்வேதங்களின் நல்ல அறங்களையெல்லாம் சனகாதியர்களுக்கு விளக்குவதற்குக் கல்லால-மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருப்பவன் நம் பெருமான்;

மான்மறி ஒண்மழு ஏந்தியவன் மகிழும் பதி வாஞ்சிய நன்னகரே - மான்கன்றையும் ஒளியுடைய மழுவையும் தாங்கியவன் விரும்பி உறையும் தலம் திருவாஞ்சியம்;


11)

பண்டிகழ் தக்கனி யற்றிய வேள்வித கர்த்தவன் நீறணி பான்மையினான்

வெண்டிரை வேலைவி டந்தனை உண்டமி டற்றினன் ஏறணி வெல்கொடியான்

அண்டிய அன்பரின் அச்சம ழித்தவர் இன்புற நல்கிடும் அண்ணலிடம்

வண்டினம் இன்னிசை ஆர்த்தடை சோலைசு லாவிய வாஞ்சிய நன்னகரே.


பண்டு இகழ் தக்கன் இயற்றிய வேள்வி தகர்த்தவன் - முன்பு ஈசனை இகழ்ந்து தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்; (இலக்கணக் குறிப்பு : பண்டிகடக்கன் - பண்டு இகழ் தக்கன்; "ழ்+= " என்று புணரும்; "திகடசக்கர = திகழ் தசக்கர" – கந்தபுராணம்; சம்பந்தர் தேவாரம் - 3.86.10 - "முகிடரு மிளமதி யரவொடு மழகுற முதுநதி திகடரு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே" - முகிழ் + தரு = முகிடரு. திகழ் + தரு = திகடரு);

நீறு அணி பான்மையினான் - திருநீற்றைப் பூசும் பெருமை உடையவன்; (பான்மை - குணம்; பெருமை);

வெண்-திரை வேலை விடந்தனை உண்ட மிடற்றினன் - வெண்ணிற அலைகளை உடைய பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்ட நீலகண்டன்; (திரை - அலை); (வேலை - கடல்); (மிடறு - கண்டம்);

ஏறு அணி வெல் கொடியான் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடையவன்;

அண்டிய அன்பரின் அச்சம் அழித்து, அவர் இன்புற நல்கிடும் அண்ணல் இடம் - சரணடைந்த பக்தர்களது அச்சத்தைத் தீர்த்து, அவர்கள் இன்புறுமாறு வரங்களை வழங்கும் தலைவனான சிவபெருமான் உறையும் தலம்;

வண்டு-இனம் இன்னிசை ஆர்த்து அடை சோலை சுலாவிய வாஞ்சிய நன்னகரே - வண்டுகள் இனிய இசையை ஒலித்து அடைகின்ற சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம்; (சுலாவுதல் - சுலவுதல் - சூழ்தல்);


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

  • எழுசீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தானன தானன தானன தானன தானதனா;

  • சுந்தரர் தேவாரம் - 7.10.1 - "தேனெய் புரிந்துழல்" - பதிகப் பாடல் அமைப்பை ஒத்தது;

  • "அயிகிரி நந்தினி" என்று தொடங்கும் மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திர அமைப்பை ஒத்தது. ஆனால் அதன் அடிகள் "தனதன" என்ற சந்தத்தில் தொடங்கும். இப்பதிகப் பாடல்கள் "தானன" என்ற சந்தத்தில் தொடங்குகின்றன;

  • "மங்கள துங்க நிரந்தர சந்த்ர துரந்தர ப்ருந்த தராதிபதே" - மாதவ பஞ்சகம் - ஊத்துக்காடு வேங்கட கவி - அதுவும் இதே சந்தம். ஆனால் அதனில் இடையே வரும் சில சீர்கள் தனதன என்றோ தனனா என்றோ 4 மாத்திரைச் சீர்களாக அமைந்தும் வரக் காணலாம்;

O.S.Arun singing: https://www.youtube.com/watch?v=YvUTQHHSFR4

Sridevi Nrithyalaya - Bharatanatyam Dance: https://www.youtube.com/watch?v=ohevdr9DgpY


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.408 - புகலூர் - நள்ளார் முப்புரங்கள்

2017-10-05

P.408 - புகலூர்

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானா தானதனா தன தானன தானதனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய்")

(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே")


1)

நள்ளார் முப்புரங்கள் நகை செய்தெரி செய்தவனே

கள்ளார் மாமலரால் கழல் போற்றிடு வார்க்கருளும்

வள்ளால் உன்னடியேன் மயல் ஆனவை தீர்த்தருளாய்

புள்ளார் பூம்பொழில்சூழ் புக லூருறை புண்ணியனே.


நள்ளார் முப்புரங்கள் நகை-செய்து எரி-செய்தவனே - பகைவர்களான அசுரர்களது முப்புரங்களைச் சிரித்து எரித்தவனே; (நள்ளார் - பகைவர்);

கள் ஆர் மா-மலரால் கழல் போற்றிடுவார்க்கு அருளும் வள்ளால் - தேன் நிறைந்த அழகிய பூக்களால் திருவடியை வழிபடும் அன்பர்களுக்கு அருள்புரியும் வள்ளலே; (வள்ளால் - வள்ளலே);

உன் அடியேன் மயல் ஆனவை தீர்த்து அருளாய் - உன் அடியேனது மயக்கங்களைத் தீர்த்து அருள்வாயாக;

புள் ஆர் பூம்பொழில் சூழ் புகலூர் உறை புண்ணியனே - பறவைகள் ஒலிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (புள் - பறவை); (ஆர்த்தல் - ஒலித்தல்);


2)

செயலால் சிந்தையினால் திரு ஓங்கிய செந்தமிழின்

இயலால் இன்னிசையால் இரு தாள்தொழு வார்துணைவா

கயலார் கண்ணிபங்கா மயல் ஆனவை தீர்த்தருளாய்

புயலார் பூம்பொழில்சூழ் புக லூருறை புண்ணியனே.


செயலால், சிந்தையினால், திரு ஓங்கிய செந்தமிழின் இயலால், இன்னிசையால் இருதாள் தொழுவார் துணைவா - மனம், வாக்கு, காயம் என்ற இம்மூன்றாலும் உன் புகழைப் போற்றி, நன்மைமிக்க செந்தமிழ் பாடிப், பணிசெய்து, உன் இரு-திருவடிகளை வழிபடும் பக்தர்களுக்குத் துணைவனே;

கயல் ஆர் கண்ணி பங்கா - கயல்மீன் போன்ற கண்களையுடைய உமையை ஒரு பங்காக உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);

மயல் ஆனவை தீர்த்தருளாய் - உன் அடியேனது மயக்கங்களைத் தீர்த்து அருள்வாயாக;

புயல் ஆர் பூம்பொழில் சூழ் புகலூர் உறை புண்ணியனே - மேகம் பொருந்துகின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (புயல் - மேகம்); (ஆர்தல் - பொருந்துதல்);


3)

கனலார் கண்ணுதலாய் கணை எய்ம்மத னைச்சினந்தாய்

அனலார் அங்கையினாய் அர வம்புனை மார்பினனே

மினலார் செஞ்சடையாய் வினை ஆனவை தீர்த்தருளாய்

புனலார் வாவிசுலாம் புக லூருறை புண்ணியனே.


கனல் ஆர் கண்ணுதலாய் - நெற்றிக்கண்ணில் தீயை உடையவனே; (ஆர்தல் - பொருந்துதல்);

கணை எய்ம் மதனைச் சினந்தாய் - மலரம்பை எய்த மன்மதனைக் கோபித்து எரித்தவனே;

அனல் ஆர் அங்கையினாய் - கையில் நெருப்பை ஏந்தியவனே;

அரவம் புனை மார்பினனே - மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனே;

மினல் ஆர் செஞ்சடையாய் - மின்னல் போல் ஒளிரும் சிவந்த சடையை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);

வினை ஆனவை தீர்த்தருளாய் - உன் அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

புனல் ஆர் வாவி சுலாம் புகலூர் உறை புண்ணியனே - நீர் நிறைந்த குளம் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (வாவி - நீர்நிலை); (சுலாம் - சுலாவும்; சுலாவுதல் - சுலவுதல் - சூழ்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.97.5 - "சோலை சுலாவும் புறவம்மே");


4)

குன்றோர் திண்சிலையாக் குனி வித்தர வம்பிணித்தே

அன்றோர் வெங்கணையால் அரண் மூன்றையும் எய்தவனே

நன்றே செய்பவனே நலி தீவினை தீர்த்தருளாய்

பொன்றா நாயகனே புக லூருறை புண்ணியனே.


குன்று ஓர் திண் சிலையாக் குனிவித்து அரவம் பிணித்தே அன்று ஓர் வெங்கணையால் அரண் மூன்றையும் எய்தவனே - முன்னம் மேருமலையை ஒரு வலிய வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, ஒரு சுட்டெரிக்கும் அம்பால் முப்புரங்களையும் எய்தவனே; (சிலை - வில்); (குனிவித்தல் - வளைத்தல்); (பிணித்தல் - கட்டுதல்); (அரண் - கோட்டை);

நன்றே செய்பவனே - நன்மையையே செய்பவனே; (சங்கரன்);

நலி தீவினை தீர்த்தருளாய் - என்னை வருத்தும் தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

பொன்றா நாயகனே - என்றும் இறவாத தலைவனே; (பொன்றுதல் - அழிதல்; சாதல்);

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே);


5)

மையார் மாமிடறா மலை மாதொரு கூறுடையாய்

செய்யா சேவுகந்தாய் திரை பாய்தரு செஞ்சடையாய்

ஐயா அங்கணனே அடி யேனிடர் தீர்த்தருளாய்

பொய்யா நான்மறையாய் புக லூருறை புண்ணியனே.


மை ஆர் மா-மிடறா - கருமை பொருந்திய அழகிய கண்டம் உடையவனே;

மலைமாது ஒரு கூறு உடையாய் - மலையான்-மகளான உமையை ஒரு பாகமாக உடையவனே;

செய்யா - செம்மேனியனே; (செய் - செம்மை; சிவப்பு நிறம்); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.11 - "ஆரழல்போற் செய்யா");

சே உகந்தாய் - இடப-வாகனனே; (சே - எருது);

திரை பாய்தரு செஞ்சடையாய் - கங்கை பாயும் செஞ்சடை உடையவனே;

ஐயா அங்கணனே - தலைவா, அருட்கண் உடையவனே;

அடியேன் இடர் தீர்த்து அருளாய் - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;

பொய்யா நான்மறையாய் - பொய்யாத நால்வேதத்தின் பொருள் ஆனவனே; வேதத்தை ஓதியவனே;

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே);


6)

மூவா முக்கணனே முறை யால்தொழு மாணியென்றும்

சாவா துய்ந்திடவே தயை செய்த மலர்க்கழலாய்

சேவார் வெல்கொடியாய் சிவ னேவினை தீர்த்தருளாய்

பூவார் சோலைகள்சூழ் புக லூருறை புண்ணியனே.


மூவா முக்கணனே - என்றும் இளமையோடு திகழும், முக்கட் பெருமானே;

முறையால் தொழு மாணி என்றும் சாவாது உய்ந்திடவே தயை செய்த மலர்க்கழலாய் - முறைப்படி உன்னை வழிபட்ட மார்க்கண்டேயர் என்றும் உயிரோடு இருக்க இரங்கி அருள்செய்த, கழல் அணிந்த மலர்ப்பாதனே; (மாணி - அந்தணச் சிறுவன்);

சே ஆர் வெல்கொடியாய் - இடபச்-சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடையவனே; (சே - இடபம்);

சிவனே வினை தீர்த்து அருளாய் - சிவபெருமானே, அடியேன் வினையைத் தீர்த்து அருள்வாயாக;

பூ ஆர் சோலைகள் சூழ் புகலூர் உறை புண்ணியனே - பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே);


7)

தாதாய் தாழ்சடையாய் தலை யிற்பலி தேர்ந்துழல்வாய்

காதார் வெண்குழையாய் கரி கானிடை ஆடுகின்ற

நாதா நாரிபங்கா நலி தீவினை தீர்த்தருளாய்

போதார் சோலைகள்சூழ் புக லூருறை புண்ணியனே.


தாதாய் - தந்தையே;

தாழ்சடையாய் - தாழும் சடையை உடையவனே;

தலையில் பலி தேர்ந்து உழல்வாய் - பிரமன் மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனே;

காது ஆர் வெண்குழையாய் - காதில் வெண்குழையை அணிந்தவனே;

கரிகானிடை ஆடுகின்ற நாதா - சுடுகாட்டில் கூத்தாடும் தலைவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.7.2 - "கரிகானிடை மாநட மாடுவர்");

நாரிபங்கா - உமைபங்கனே;

நலி தீவினை தீர்த்தருளாய் - என்னை வருத்தும் தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

போது ஆர் சோலைகள் சூழ் புகலூர் உறை புண்ணியனே - பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (போது - பூ);


8)

தலையோர் பத்துடையான் தக வென்பது சற்றுமிலான்

வலியால் வெற்பிடந்தான் மணி ஆர்முடி தோள்நெரித்தாய்

அலையார் செஞ்சடையாய் அடி யேனிடர் தீர்த்தருளாய்

பொலிவார் சோலைகள்சூழ் புக லூருறை புண்ணியனே.


தலை ஓர் பத்து உடையான் - பத்துத்தலைகள் உடையவன்;

தகவு என்பது சற்றும் இலான் - கொஞ்சமும் நற்குணம் இல்லாதவன்; (தகவு - தகுதி; குணம்; அறிவு; நல்லொழுக்கம்);

வலியால் வெற்பு இடந்தான் மணி ஆர் முடி தோள் நெரித்தாய் - அந்த இராவணன் தன் பலத்தால் கயிலைமலையைப் பெயர்த்த போது, அவனது கிரீடம் அணிந்த தலைகளையும் தோள்களையும் நசுக்கியவனே;

அலை ஆர் செஞ்சடையாய் - கங்கை பொருந்திய சிவந்த சடையை உடையவனே;

அடியேன் இடர் தீர்த்து அருளாய் - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;

பொலிவு ஆர் சோலைகள் சூழ் புகலூர் உறை புண்ணியனே - அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (பொலிவு - அழகு; செழிப்பு );


9)

கரியான் மாமலரான் கழல் நேடி வழுத்திடவோர்

எரியாய் நின்றவனே இலை ஆர்நுனை வேலுடையாய்

பரியாய் பாசுபதா பழ வல்வினை தீர்த்தருளாய்

புரியார் புன்சடையாய் புக லூருறை புண்ணியனே.


கரியான் மாமலரான் கழல் நேடி வழுத்திட ஓர் எரியாய் நின்றவனே - திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் உன் அடிமுடியைத் தேடிக் காணார் ஆகி உன்னைத் துதிக்கும்படி ஓர் எல்லையற்ற ஜோதி உருவில் நினறவனே;

இலை ஆர் நுனை வேல் உடையாய் - இலை போன்ற நுனிகளையுடைய சூலத்தை ஏந்தியவனே;

பரியாய் பாசுபதா - பாசுபதனே, இரங்குவாயாக;

பழ-வல்வினை தீர்த்து அருளாய் - என் பழைய வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

புரி ஆர் புன்சடையாய் - முறுக்கிய செஞ்சடையை உடையவனே; (புரி - முறுக்கு; சுருள்);

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே);


10)

வீணார் வெற்றுரையே மிக வும்பகர் வஞ்சகர்சொல்

பேணார் நல்லவர்கள் பிடி போல்நடை மங்கைபங்கா

கோணார் வெண்பிறையாய் குழ காவென இன்பருள்வான்

பூணா அக்கணிந்தான் புக லூருறை புண்ணியனே.


வீண் ஆர் வெற்றுரையே மிகவும் பகர் வஞ்சகர் சொல் பேணார் நல்லவர்கள் - பயனற்ற பொருளற்ற பேச்சே பேசுகின்ற பொய்யர்களது பேச்சை மதிக்கமாட்டார் நல்லவர்கள்; (வீண் - பயனின்மை); (ஆர்தல் - பொருந்துதல்); (வீணார் - வீணர் என்பது எதுகை நோக்கி நீட்டல் விகாரம் பெற்றது என்றும் கொள்ளல் ஆம்); ("நல்லவர்கள்" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

"பிடி போல் நடை மங்கை பங்கா - "பெண்யானையைப் போன்ற நடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே; (பிடி - பெண்யானை);

கோண் ஆர் வெண்-பிறையாய் குழகா" என இன்பு அருள்வான் - வளைந்த வெண் திங்களை அணிந்தவனே; அழகனே" என்று வாழ்த்த, இன்பம் அருள்பவன்; (கோண் - வளைவு);

பூணா அக்கு அணிந்தான் - ஆபரணமாக எலும்பை அணிந்தவன்; (பூண் - அணி; ஆபரணம்); (அக்கு - எலும்பு); (பூணா - பூணாக; "பூணாத" என்று கொண்டு, "யாரும் அணியாத எலும்புமாலையை அணிந்தவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினன் (புண்ணியமூர்த்தி);


11)

துடியார் மெல்லிடையாள் துணை வன்படர் செஞ்சடைமேல்

கடியார் கொன்றையினான் கண நாதனு ளங்கசியும்

அடியார் இன்புறவே அவர் வல்வினை தீர்த்தருள்வான்

பொடியார் மேனியினான் புக லூருறை புண்ணியனே.


துடி ஆர் மெல்-இடையாள் துணைவன் - உடுக்கு ஒத்த சிற்றிடையை உடைய உமைக்குக் கணவன்; (துடி - உடுக்கு);

படர்-செஞ்சடைமேல் கடி ஆர் கொன்றையினான் - படரும் சிவந்த சடையின்மேல் மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவன்; (கடி - வாசனை);

கணநாதன் - பூதகணங்களுக்குத் தலைவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.8.1 - "கணநாதன் காண் அவனென் கண்ணுளானே");

உளம் கசியும் அடியார் இன்புறவே அவர் வல்வினை தீர்த்து அருள்வான் - உள்ளம் உருகும் அடியவர்கள் மகிழும்படி அவர்களது வலிய வினையைத் தீர்த்து அருள்பவன்;

பொடி ஆர் மேனியினான் - திருநீற்றைப் பூசிய திருமேனி உடையவன்;

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினன் (புண்ணியமூர்த்தி);


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

சந்த விருத்தம் - "தானா தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்.

இச்சந்தத்தைத் "தானா தானதனா தனதானன தானதனா" என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.

  • அடிகளின் முதற்சீர் - தானா - இது "தனனா" என்றும் வரலாம்;

  • அடிகளின் முதற்சீர் - நெடிலில் முடியும்;

  • "தானன" என்ற 4-ஆம் சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், 5-ஆம் சீர் "தனாதனனா" என்று அமைந்து அடியின் சந்தம் கெடாது வரும்.

(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து")

(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே")


வி. சுப்பிரமணியன்

----------- --------------