Tuesday, May 4, 2021

05.07 – ஒற்றியூர் - (திருவொற்றியூர்)

 05.07 – ஒற்றியூர் - (திருவொற்றியூர்)


2014-12-07

ஒற்றியூர் - (திருவொற்றியூர்)

-----------------------

(எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு. திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)

(அப்பர் தேவாரம் - 6.1.1 - அரியானை அந்தணர்தம் சிந்தை யானை)


1)

ஊர்வதற்கு வெள்விடையொன் றுடையான் தன்னை

.. உலகத்தை நோக்கிமிக விரைந்தி ழிந்த

நீர்வதியும் சடையானை நெற்றி மீது

.. நேத்திரனை ஒருகையில் நெருப்பி னானைக்

கூர்வதியும் மூவிலைவேல் ஏந்து கின்ற

.. கோமானைக் கோலமயில் போன்றி லங்கு

பார்வதியோர் பங்கினனை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


* படம்பக்க நாதர் - திருவொற்றியூரில் இறைவன் திருநாமம்;


ஊர்வதற்கு வெள்விடை ஒன்று உடையான் தன்னை - வெண்ணீற இடபத்தை வாகனமாக உடையவனை;

உலகத்தை நோக்கி மிக விரைந்து இழிந்த நீர் வதியும் சடையானை - பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்த கங்கை தங்கும் சடையானை; (வதிதல் - தங்குதல்);

நெற்றி மீது நேத்திரனை - நெற்றிக்கண்ணனை;

ஒரு கையில் நெருப்பினானைக் - கையில் நெருப்பை ஏந்தியவனை;

கூர் வதியும் மூவிலைவேல் ஏந்துகின்ற கோமானைக் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்திய தலைவனை; (கூர் - கூர்மை);

கோலமயில் போன்று இலங்கு பார்வதி ஓர் பங்கினனை - அழகிய மயில் போன்ற உமையை ஒரு பங்கில் உடையவனை;

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்க நாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


2)

தாய்வடிவும் தாங்குகின்ற கோனை நெஞ்சில்

.. தாங்கியவர் வினைதீர்த்துத் தாங்கு வானைத்

தேய்வடிவம் கண்டஞ்சித் திங்கள் போற்றச்

.. செஞ்சடைமேல் ஏற்றானை விரும்பிப் பெற்ற

பேய்வடிவம் உடையவரை ஆலங் காட்டிற்

.. பெருநடனம் காணவருள் பெம்மான் தன்னைப்

பாய்விடைமேல் வருவானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


பேய்வடிவம் உடையவரை ஆலங்காட்டில் பெருநடனம் காண அருள் பெம்மான்தன்னைப் - காரைக்கால் அம்மையாருக்குத் திருவாலங்காட்டில் தன் திருக்கூத்தை காண அருள்செய்த பெருமானை;

பாய்விடைமேல் வருவானை - பாய்ந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனை;


3)

கத்து கடலிடையே மலையை நட்டுக்

.. கடைந்தபொழு தெழுந்தவிடம் கண்டு தேவர்

அத்த அபயமருள் என்றி றைஞ்ச

.. அவர்க்கிரங்கி அதனையுண்ட கண்டன் தன்னைக்

கொத்து மலர்க்குழலி கூறா னானைக்

.. கோதில்லா அமுதத்தைக் கும்பிட் டேத்திப்

பத்தர் குழாம்கெழுமும் ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


கொத்து மலர்க்குழலி கூறு ஆனானைக் - மலர்க்கொத்துகளை அணிந்த உமையை ஒரு கூறாக உடையவனை;

கோது இல்லா அமுதத்தைக் - குற்றமற்ற அமுதம் போன்றவனை;

கும்பிட்டு ஏத்திப் பத்தர் குழாம் கெழுமும் ஒற்றியூரில் - வணங்கித் துதித்து அடியார் கூட்டம் நிறைகிண்ற திருவொற்றியூரில்; (கெழுமுதல் - நிறைதல்);


4)

மழவிடையை ஊர்தியென மகிழும் கோனை

.. வடிவுடைய மங்கையொரு பங்கி னானைத்

தழலனைய மேனியனை வானி ழிந்த

.. தண்ணதியைச் சடையிடையே தாங்கி னானை

அழவினைகள் எத்தனையோ ஆற்றி னாரும்

.. அஞ்செழுத்தை ஓதியடி போற்று வாரேல்

பழவினைகள் தீர்ப்பவனை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


* வடிவுடைய மங்கை - திருவொற்றியூரில் அம்பிகை திருநாமம்;


மழவிடை - இளமையுடைய இடபம்;

தழல் அனைய மேனியனை - தீப்போல் செம்மேனியனை;

வான் இழிந்த தண் நதியைச் சடையிடையே தாங்கினானை - வானிலிருந்து இறங்கிய குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவனை; (அப்பர் தேவாரம் - 6.90.6 - “வான் இழிந்த கங்கை சேடெறிந்த சடையானைத்”);

அழ வினைகள் எத்தனையோ ஆற்றினாரும் - தம்மை வருத்தும்படி வினைப்பயன் தரும் பல பாவங்கள் செய்தவரும்;

அஞ்செழுத்தை ஓதி அடி போற்றுவாரேல் பழவினைகள் தீர்ப்பவனை - திருவைந்தெழுத்தை ஓதித் திருவடியைப் போற்றினால் அவர்களது பழவினையைத் தீர்ப்பவனை;


5)

அரவணியா மகிழ்வானை அரையில் வேங்கை

.. அதளாடை உடையானை அடலேற் றானைத்

தரையிலொரு சக்கரத்தைத் தாளாற் கீறிச்

.. சலந்தரனைத் தடிந்தானைச் சலமேற் றானைக்

கரவடையா மனத்தோடு கைகள் கூப்பிக்

.. கடிமலர்கள் பலதூவிக் கசிந்து பாடிப்

பரவியவர்க் கினியானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


அரவு அணியா மகிழ்வானை - பாம்பை ஆபரணமாக விரும்பியவனை;

அரையில் வேங்கை அதள் ஆடை உடையானை - இடுப்பில் புலித்தோலைக் கட்டியவனை;

அடல் ஏற்றானைத் - வலிய இடபத்தை வாகனமாக உடையவனை;

தரையில் ஒரு சக்கரத்தைத் தாளால் கீறிச் சலந்தரனைத் தடிந்தானைச் - தரைமேல் ஒரு சக்கரத்தை வரைந்து அதைக்கொண்டு சலந்தராசுரனை அழித்தவனை;

சலம் ஏற்றானைக் - கங்கையைச் சடையில் ஏற்றவனை;

கரவு அடையா மனத்தோடு கைகள் கூப்பிக் கடிமலர்கள் பல தூவிக் கசிந்து பாடிப் பரவியவர்க்கு இனியானை - வஞ்சம் இல்லா மனத்தோடு கரங்குவித்து வாசமலர்கள் பல தூவி உள்ளம் கசிந்து பாடிப் போற்றும் பக்தர்களுக்கு இனியவனை;

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே.


6)

தோலாடை தரித்தானைத் தூவெண் ணீறு

.. துதைந்திலங்கு மேனியனைச் சூலத் தானை

மேலாடு வெண்மதியைச் சென்னி மீது

.. விளங்கவைத்த விகிர்தனை மின்னல் போல

நூலாடு மார்பினனைத் திருநா மங்கள்

.. நூறுபத் துடையபெரு மானை ஆவின்

பாலாடல் மகிழ்ந்தானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


விகிர்தன் - மாறுபட்ட செயலினன்;

திருநாமங்கள் நூறுபத்து - சஹஸ்ரநாமம்;

ஆவின் பால் ஆடல் மகிழ்ந்தானை - பால் அபிஷேகத்தை விரும்பியவனை;


7)

துற்றகடல் நஞ்சத்தைக் கண்டம் இட்ட

.. துணைவனையோர் துணையிலியைச் சுற்றி ஆர்த்த

புற்றரவக் கச்சினனைப் பொருப்பு வில்லிற்

.. புரமூன்றை எரிகணையைப் பூட்டி னானை

நெற்றியிலோர் கண்ணுடைய நிமலன் தன்னை

.. நீரொடுபூக் கொண்டேத்து நேயர் தங்கள்

பற்றறுக்கும் பரம்பரனை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


துற்ற கடல் நஞ்சத்தைக் - உண்ட கடல் விடத்தை;

துணையிலியை - ஒப்பற்றவனை;

சுற்றி ஆர்த்த புற்றரவக் கச்சினனை - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவனை;

பொருப்பு வில்லிற் புரம் மூன்றை எரிகணையைப் பூட்டினானை - மேருமலை வில்லில் முப்புரங்களை எரிக்கும் கணையைத் தொடுத்தவனை;

நெற்றியிலோர் கண்ணுடைய நிமலன் தன்னை - நெற்றிக்கண் உடைய தூயனை;

நீரொடு பூக் கொண்டு ஏத்து நேயர் தங்கள் பற்று அறுக்கும் பரம்பரனை - நீரும் பூவும் கொண்டு வழிபடும் பக்தர்களது பந்தங்களை நீக்கும் பராபரனை;


8)

வலியேன் எனவெண்ணி மலைய சைத்த

.. வாளரக்கன் அலறவிரல் வைத்தான் தன்னை

ஒலியார் நதியுலவு சடையி னானை

.. ஓதவிடம் உண்டவனை உள்க சிந்து

கலிதீர் கதிர்மதியாய் என்றி றைஞ்சிக்

.. கைதொழுவார்க் கருந்துணையைக் கலனொன் றேந்திப்

பலிதேர்ந் துழல்வானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


வலியேன் என எண்ணி மலை அசைத்த வாள்அரக்கன் அலற விரல் வைத்தான் தன்னை - "நான் வலிமை உடையவன்" என்று எண்ணிக் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற கொடிய அரக்கனான இராவணன் அலறும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கியவனை;

ஒலி ஆர் நதி உலவு சடையினானை - அலை ஒலிக்கின்ற கங்கை சஞ்சரிக்கும் சடையானை;

ஓத விடம் உண்டவனை - கடல் நஞ்சை உண்டவனை;

உள் கசிந்து "கலி தீர் கதிர்மதியாய்" என்று இறைஞ்சிக் கைதொழுவார்க்கு அரும் துணையைக் - மனம் உருகி, "எம் துன்பத்தைத் தீர்த்து அருள்க ஒளியுடைய சந்திரனை அணிந்தவனே" என்று கைகூப்பி வணங்கும் அடியவர்களுக்கு அருளும் ஒப்பற்ற துணைவனை; (கலி - துன்பம்);

பலிதேர்ந்து உழல்வானை - பிச்சை ஏற்றுத் திரிபவனை; (பலி - பிச்சை);


9)

பணிமீது துயில்மாலும் அயனும் அன்று

.. பன்றிபுள்ளாய் நேடியவோர் நெருப்பைக் காரார்

மணியாகக் கடல்நஞ்சைக் கண்டம் தன்னில்

.. வைத்தவனை மூவிலைய சூலத் தானை

அணியாக அரவங்கள் ஏறு கின்ற

.. ஆகமுடை அற்புதனை ஆரா அன்பால்

பணிவார்கட் கணியானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


பணிமீது துயில் மாலும் அயனும் அன்று பன்றி புள்ளாய் நேடிய ஓர் நெருப்பைக் - பாம்பின்மேல் துயிலும் திருமாலும் பிரமனும் முன்பு பன்றி அன்னம் என்ற வடிவங்களில் தேடிய ஒப்பற்ற சோதியை; (பணி - நாகப்பாம்பு); (நேடிய - தேடிய);

கார் ஆர் மணியாகக் கடல்நஞ்சைக் கண்டம் தன்னில் வைத்தவனை - கரிய மணியாகக் கடல்விடத்தைக் கண்டத்தில் இட்டவனை;

மூவிலைய சூலத்தானை - மூன்று இலை போன்ற நுனிகளை உடைய சூலத்தை ஏந்தியவனை; (அப்பர் தேவரம் - 6.24.9 - "மூவிலைய சூலத் தான்காண்");

அணியாக அரவங்கள் ஏறுகின்ற ஆகமுடை அற்புதனை - ஆபரணமாகப் பாம்புகள் ஏறுகின்ற திருமேனியை உடைய அற்புதனை; (ஆகம் - மேனி);

ஆரா அன்பால் பணிவார்கட்கு அணியானை - பேரன்பால் வழிபடும் பக்தர்களுக்குப் பக்கத்தில் இருந்து அருள்பவனை;

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்க நாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


10)

பொன்னாரும் அடிபோற்றாப் புல்லர்க் கென்றும்

.. புரியாத தத்துவனைப் புனலை ஏற்ற

மின்னாரும் சடையானை வெண்ணீற் றானை

.. வேதியனை வேழத்தின் உரிவை யானைத்

தன்னாகம் தனில்நாரி தங்கப் பாதி

.. தந்தவனைத் தன்னேரில் தலைவன் தன்னைப்

பன்னாகம் பூண்டானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


பொன் ஆரும் அடி போற்றாப் புல்லர்க்கு என்றும் புரியாத தத்துவனை - பொன்னடியை வழிபாடு செய்யாத கீழோர்களால் அறிய இயலாத மெய்ப்பொருளை; வழிபாடு செய்யாத கீழோர்க்கு அருள் இல்லாத மெய்ப்பொருளை; (ஆர்தல் - ஒத்தல்);

புனலை ஏற்ற மின் ஆரும் சடையானை - ஒளி மிக்க சடையில் கங்கையை ஏற்றவனை;

வெண்ணீற்றானை - வெண் திருநீற்றைப் பூசியவனை;

வேதியனை - வேதம் ஓதியவனை;

வேழத்தின் உரிவையானைத் - யானைத்தோலைப் போர்த்தவனை; (உரிவை - தோல்);

தன் ஆகம் தனில் நாரி தங்கப் பாதி தந்தவனைத் - உமைக்குத் தன் திருமேனியில் பாதியைத் தந்தவனை;

தன் நேர் இல் தலைவன் தன்னை - தனக்கு ஓர் ஒப்பு இல்லாத தலைவனை;

பன்னாகம் பூண்டானை - பல் நாகம் பூண்டானை - பல பாம்புகளை அணிந்தவனை; (திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.17 - “இலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ”);

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்க நாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


11)

கொலவடைந்த கூற்றுவனைக் கொன்று மாணி

.. குறைவின்றி வாழவருள் செய்த கோனை

அலைமலிந்த ஆறுலவும் சடையி னானை

.. அழியாத புகழானை அளவில் லானைத்

தலைமலிந்த மாலையினைத் தலைக்க ணிந்த

.. சங்கரனைத் தாள்பரவும் பத்தர்க் காகப்

பலவடிவும் ஏற்றானை ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


கொல அடைந்த கூற்றுவனைக் கொன்று மாணி குறைவின்றி வாழ அருள் செய்த கோனை - ;

அலை மலிந்த ஆறு உலவும் சடையினானை - கொல்ல வந்தடைந்த காலனை அழித்து மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக வாழ அருளிய தலைவனை; (மாணி - மார்க்கண்டேயர்);

அழியாத புகழானை - நிலைத்த புகழ் உடையவனை;

அளவு இல்லானைத் - எல்லை இல்லாதவனை;

தலை மலிந்த மாலையினைத் தலைக்கு அணிந்த சங்கரனைத் - தலைக்குத் தலைமாலை அணிந்த சங்கரனை;

தாள் பரவும் பத்தர்க்காகப் பல வடிவும் ஏற்றானை - திருவடியைத் துதிக்கும் பக்தர்களுக்காகப் பல வடிவங்களை ஏற்று அருள்பவனை;

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்க நாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1. யாப்புக்குறிப்பு :

எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு.

திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு. காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

------- ---------

No comments:

Post a Comment