Tuesday, July 15, 2025

P.422 - மாடம்பாக்கம் - தாமரை மலர்தனை

2018-02-25

P.422 - மாடம்பாக்கம்

(தாம்பரம் அருகுள்ள தலம்)

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

1)

தாமரை மலர்தனைச் சரமெ னத்தொடு

காமனைக் கண்ணுதல் காட்டிக் காய்ந்தவன்

தூமதிக் கண்ணியைச் சூடி மேயது

மாமதில் சூழ்தரு மாடம் பாக்கமே.


தாமரைமலர்தனைச் சரம் எனத் தொடு காமனைக் கண்ணுதல் காட்டிக் காய்ந்தவன் - தாமரை முதலிய ஐந்து மலர்களை அம்பாகத் தொடுக்கின்ற மன்மதனை நெற்றிக்கண்ணைக் காட்டி எரித்தவன்;

தூ-மதிக்-கண்ணியைச் சூடி மேயது - தூய வெண்திங்களைக் கண்ணி (தலையில் அணியும் மாலை) போலச் சூடியவன் விரும்பி உறையும் தலம்;

மா-மதில் சூழ்தரு மாடம்பாக்கமே - அழகிய மதில் சூழ்ந்த மாடம்பாக்கம் ஆகும்; (தருதல் - ஒரு துணைவினை);


2)

திண்புயம் எட்டுடைச் செய்ய மேனியன்

தண்புனற் கங்கையைத் தாங்கு வேணிமேல்

வெண்பிறை சூடிய வேந்தன் மேயது

வண்புனற் கயமணி மாடம் பாக்கமே.


திண்-புயம் எட்டுடைச் செய்ய மேனியன் - வலிய எட்டுப் புஜங்களுடைய செம்மேனியன்;

தண்-புனல் கங்கையைத் தாங்கு வேணிமேல் - குளிர்ந்த நீருடைய கங்கையைத் தாங்கிய சடையின்மேல்;

வெண்பிறை சூடிய வேந்தன் மேயது - வெண்திங்களைச் சூடிய தலைவன் விரும்பி உறையும் தலம்;

வண்-புனற்-கயம் அணி மாடம்பாக்கமே - வளம் மிக்க நீர் நிறைந்த குளம் திகழும் மாடம்பாக்கம் ஆகும்;


3)

அண்டிய அன்பருக் கருளும் அங்கணன்

பண்டெயில் மூன்றெரி பற்ற எய்தவன்

தெண்டிரைச் செஞ்சடைச் செல்வன் மேயது

வண்டறை பொழிலணி மாடம் பாக்கமே.


அண்டிய அன்பருக்கு அருளும் அங்கணன் - சரண்புக்க பக்தர்களுக்கு அருளும் அருட்கண் உடையவன்;

பண்டு எயில்-மூன்று எரி பற்ற எய்தவன் - முன்பு முப்புரங்கள் தீப்பற்றி எரியக் கணை தொடுத்தவன்;

தெண்-திரைச் செஞ்சடைச் செல்வன் மேயது - தெளிந்த கங்கையைச் சடையில் உடைய செல்வன் விரும்பி உறையும் தலம்;

வண்டு அறை பொழில் அணி மாடம்பாக்கமே - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த மாடம்பாக்கம் ஆகும்;


4)

கண(ம்)முழ வார்த்திடக் கானில் ஆடுவான்

பணமரை ஆர்த்திடும் பரமன் செந்தழல்

வணன்நரை விடையமர் மன்னன் மேயது

மணமலர்ப் பொழிலணி மாடம் பாக்கமே.


கணம் முழவு ஆர்த்திடக் கானில் ஆடுவான் - பூதகணங்கள் முழவுகளை ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்து ஆடுபவன்; (ஆர்த்தல் - ஒலித்தல்);

பணம் அரை ஆர்த்திடும் பரமன் - பாம்பை அரையில் கட்டிய பரமன்; (பணம் - பாம்பின் படம்; பாம்பு); (ஆர்த்தல் - கட்டுதல்);

செந்தழல்-வணன் - தீப் போல் செம்மேனியன்; (வணன் - வண்ணன்);

நரை-விடை அமர் மன்னன் மேயது - வெள்ளை-இடபத்தை ஊர்தியாக விரும்பிய மன்னன் விரும்பி உறையும் தலம்;

மணமலர்ப்-பொழில் அணி மாடம்பாக்கமே - வாசம் மிக்க பூக்கள் திகழும் சோலை சூழ்ந்த மாடம்பாக்கம் ஆகும்;


5)

பொதுவினில் அருநடம் புரியும் பொற்பினன்

முதுமையும் அந்தமும் முதலும் அற்றவன்

மதிலொரு மூன்றெரி மைந்தன் மேயது

மதுமலர்ப் பொழிலணி மாடம் பாக்கமே.


பொதுவினில் அருநடம் புரியும் பொற்பினன் - அம்பலத்தில் அரிய கூத்தினை ஆடும் இயல்பினன்;

முதுமையும் அந்தமும் முதலும் அற்றவன் - பிறப்பு, முதுமை, இறப்பு இவை இல்லாதவன்; (யாப்பு நோக்கி வரிசை மாறி வந்தன);

மதில் ஒரு மூன்று எரி மைந்தன் மேயது - மூன்று கோட்டைகளை எரித்த வீரன் விரும்பி உறையும் தலம்;

மதுமலர்ப்-பொழில் அணி மாடம்பாக்கமே - தேன் நிறைந்த பூக்கள் திகழும் சோலை சூழ்ந்த மாடம்பாக்கம் ஆகும்;


6)

போர்விடை ஊர்தியன் போற்றி வான்தொழக்

கார்விடம் உண்டிருள் கண்டத் தெம்மிறை

கூர்மலி மழுவினன் கூவி ளம்புனை

வார்சடை யானிடம் மாடம் பாக்கமே.


போர்-விடை ஊர்தியன் - போர் செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவன்;

போற்றி வான் தொழக் கார்-விடம் உண்டு இருள் கண்டத்து எம் இறை - தேவர்கள் போற்றி வழிபடவும், இரங்கிக் கரிய நஞ்சை உண்டு கறுத்த கண்டம் உடைய எம் இறைவன்; (இருள்தல் - கறுப்பாதல்);

கூர் மலி மழுவினன் - கூர்மை மிகுந்த மழுவை ஏந்தியவன்;

கூவிளம் புனை வார்-சடையான் இடம் மாடம்பாக்கமே - வில்வத்தை அணிந்த நீள்சடையை உடைய பெருமான் உறையும் தலம் மாடம்பாக்கம்; (கூவிளம் - வில்வம்);


7)

நறைகமழ் கொன்றையன் நாகக் கச்சினன்

கறைமிட றுடையவன் காலன் மாய்ந்திட

அறைகழல் வீசிய அண்ணல் ஆல்நிழல்

மறைவிரித் தானிடம் மாடம் பாக்கமே.


நறை கமழ் கொன்றையன் - மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவன்;

நாகக்-கச்சினன் - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவன்;

கறை-மிடறு உடையவன் - நீலகண்டன்;

காலன் மாய்ந்திட அறைகழல் வீசிய அண்ணல் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை இறக்கும்படி உதைத்த தலைவன்;

ஆல்நிழல் மறை விரித்தான் இடம் மாடம்பாக்கமே - கல்லால-மரத்தின்கீழ்ச் சனகாதியருக்கு வேதங்களை உபதேசித்தவன் உறையும் தலம் மாடம்பாக்கம்; (ஆல் - ஆலமரம்); (நிழல் - ஸ்தானம்; இடம்);


8)

மால்கொடு மலையெறி வாள ரக்கனைக்

கால்விரல் வைத்தடர் கருணை மிக்கவன்

சேல்விழித் தேனுகை சேர்ந்த மேனியன்

வால்விடை யானிடம் மாடம் பாக்கமே.


மால்கொடு மலை எறி வாள்-அரக்கனைக் கால்விரல் வைத்து அடர் கருணை மிக்கவன் - ஆணவத்தால் கயிலைமலையைப் பெயர்த்து வீச முயன்ற கொடிய அரக்கனான இராவணனைக் கால்விரலை ஊன்றி நசுக்கிய பெருங்கருணையாளன்; (அடர்த்தல் - நசுக்குதல்);

சேல்விழித் தேனுகை சேர்ந்த மேனியன் - சேல்மீன் போன்ற கண்களை உடைய தேனுகாம்பாள் ஒரு பாகம் ஆன திருமேனி உடையவன்; (* தேனுகாம்பாள் - மாடம்பாக்கத்தில் இறைவி திருநாமம்);

வால்விடையான் இடம் மாடம்பாக்கமே - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன் உறையும் தலம் மாடம்பாக்கம்; (வால் - வெண்மை);


9)

செழுமல ரானரி தேடி வாடிட

அழலென ஓங்கிய அண்ணல் வண்டமர்

குழலுமை பங்கினன் கொன்றைத் தாரினன்

மழவிடை யானிடம் மாடம் பாக்கமே.


செழுமலரான் அரி தேடி வாடிட அழல் என ஓங்கிய அண்ணல் - தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி வாடும்படி ஜோதி ஆகி உயர்ந்த பெருமான்;

வண்டு அமர் குழல் உமை பங்கினன் - வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (அமர்தல் - விரும்புதல்);

கொன்றைத்-தாரினன் - கொன்றைமாலையை அணிந்தவன்;

மழவிடையான் இடம் மாடம்பாக்கமே - இள-ஏற்றினை வாகனமாக உடையவன் உறையும் தலம் மாடம்பாக்கம்;


10)

பலபல பொய்யுரை பதகர் சொல்கொளேல்

இலைமலர் கொடுதொழ இன்பம் நல்குவான்

அலைகடல் உமிழ்விடம் அமுது செய்தவன்

மலைமகள் கோனிடம் மாடம் பாக்கமே.


பலபல பொய் உரை பதகர் சொல் கொளேல் - பற்பல பொய்களைச் சொல்லும் கீழோர்களது பேச்சை மதிக்கவேண்டா; (பதகன் - பாவி; கீழோன்);

இலை மலர்கொடு தொழ இன்பம் நல்குவான் - இலைகளாலும் பூக்களாலும் வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவன்;

அலைகடல் உமிழ் விடம் அமுது செய்தவன் - பாற்கடல் உமிழ்ந்த நஞ்சை உண்டவன்;

மலைமகள்கோன் இடம் மாடம்பாக்கமே - உமைக்குக் கணவன் உறையும் தலம் மாடம்பாக்கம்;


11)

நித(ம்)மன மகிழ்வொடு நெற்றி நீற்றராய்ப்

பதமலர் போற்றிடு பத்தர்க் கன்பினன்

மதகரி உரிசெய வல்ல மைந்தனூர்

மதுகரம் அறைபொழில் மாடம் பாக்கமே.


நிதம் மன-மகிழ்வொடு நெற்றி நீற்றராய்ப் பதமலர் போற்றிடு பத்தர்க்கு அன்பினன் - தினமும் மனம் மகிழ்ந்து நெற்றியில் திருநீற்றைப் பூசித் திருவடிகளை வணங்கும் பக்தர்களுக்கு அன்புடைய பெருமான்;

மதகரி உரிசெய வல்ல மைந்தன் ஊர் - மதயானையின் தோலை உரித்த வீரன் உறையும் தலம்; (மதகரி - ஆண்யானை);

மதுகரம் அறை பொழில் மாடம்பாக்கமே - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த மாடம்பாக்கம்; (மதுகரம் - தேனீ; வண்டு);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment