Tuesday, July 8, 2025

P.420 - இராமேச்சுரம் (ராமேஸ்வரம்) - பார்த்தன் தவம்நோக்கி

2017-12-25

P.420 - இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)

---------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

1)

பார்த்தன் தவ(ம்)நோக்கிப் பாசு பதமீந்தாய்

தீர்த்தங் களிலாடித் திருவார் தமிழ்பாடி

ஏத்தி அடியார்சேர் இராமேச் சுர(ம்)மேயாய்

ஆர்த்த வினைநீக்கி அடியேற் கருளாயே.


பார்த்தன் தவம் நோக்கிப் பாசுபதம் ஈந்தாய் - அர்ஜுனன் செய்த தவம் கண்டு அவனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அளித்தவனே;

தீர்த்தங்களில் ஆடித் திரு ஆர் தமிழ் பாடி ஏத்தி அடியார் சேர் இராமேச்சுர(ம்) மேயாய் - பல தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து தேவாரம் திருவாசகம் பாடி அடியவர்கள் வழிபடும் ராமேஸ்வரத்தில் உறைகின்ற பெருமானே;

ஆர்த்த வினை நீக்கி அடியேற்கு அருளாயே - என்னைப் பிணித்துள்ள வினைகளைத் தீர்த்து அடியேனுக்கு அருள்வாயாக; (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்);


2)

முடியா முதலானாய் முக்கட் பெருமானே

கொடிபோல் இடையாளைக் கூறா மகிழ்வோனே

இடியார் குரலேற்றாய் இராமேச் சுர(ம்)மேய

அடிகேள் திரிசூலா அடியேற் கருளாயே.


முடியா முதல் ஆனாய் - அழிவற்ற ஆதியே;

முக்கட் பெருமானே - முக்கண்ணனே;

கொடி போல் இடையாளைக் கூறா மகிழ்வோனே - கொடியிடை உமையை ஒரு கூறாக உடையவனே;

இடி ஆர் குரல் ஏற்றாய் - இடி போல் குரலுடைய எருதை வாகனமாக உடையவனே;

இராமேச்சுர(ம்) மேய அடிகேள் - ராமேஸ்வரத்தில் உறைகின்ற கடவுளே;

திரிசூலா அடியேற்கு அருளாயே - திரிசூலத்தை ஏந்தியவனே, அடியேனுக்கு அருள்வாயாக;


3)

பண்ணார் மொழிமாதோர் பாகம் உடையானே

கண்ணார் நுதலானே கையிற் சிலையேந்தி

எண்ணார் புரமெய்தாய் இராமேச் சுர(ம்)மேய

அண்ணா அழல்வண்ணா அடியேற் கருளாயே.


பண் ஆர் மொழி மாது ஓர் பாகம் உடையானே - இன்மொழி பேசும் உமையை ஒரு பாகத்தில் உடையவனே;

கண் ஆர் நுதலானே - நெற்றிக்கண்ணனே;

கையில் சிலை ஏந்தி எண்ணார் புரம் எய்தாய் - கையில் வில்லைத் தாங்கிப் பகைவர்களது முப்புரங்களை எரித்தவனே; (சிலை - வில்); (எண்ணார் - பகைவர்);

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறைகின்ற;

அண்ணா அழல் வண்ணா - அண்ணலே, தீப்போல் செம்மேனியனே;

அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;


4)

பொறிகள் திகழ்நாகம் பூண்ட திருமார்பா

மறியைக் கரமேந்தீ மலைமா தொருபங்கா

எறியும் திரைசூழ்ந்த இராமேச் சுர(ம்)மேய

அறிவின் வடிவோனே அடியேற் கருளாயே.


பொறிகள் திகழ் நாகம் பூண்ட திருமார்பா - புள்ளிகள் திகழும் பாம்பை மார்பில் அணிந்தவனே;

மறியைக் கரம் ஏந்தீ - மான்கன்றைக் கையில் ஏந்தியவனே;

மலைமாது ஒரு பங்கா - உமைபங்கனே;

எறியும் திரை சூழ்ந்த – அலைமோதும் கடலால் சூழப்பெற்ற;

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறைகின்ற;

அறிவின் வடிவோனே - ஞானமூர்த்தியே;

அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;


5)

போற்றற் குரியானே பூதப் படையானே

கூற்றைக் குமைகாலா கோல உமைபங்கா

ஏற்றுக் கொடியானே இராமேச் சுர(ம்)மேய

ஆற்றுச் சடையானே அடியேற் கருளாயே.


போற்றற்கு உரியானே - வணக்கத்திற்கு உரியவனே;

பூதப்படையானே - பூதகணப்படை உடையவனே;

கூற்றைக் குமை காலா - கூற்றை அழித்த காலனே; (குமைத்தல் - கொல்தல்);

கோல-உமைபங்கா - அழகிய உமையைப் பங்கில் உடையவனே;

ஏற்றுக்-கொடியானே - இடபக்கொடி உடையவனே;

ஆற்றுச்-சடையானே - கங்கையைச் சடையில் அடைத்தவனே;


6)

பரவை உமிழ்நஞ்சைப் பழம்போல் அமுதுண்டாய்

கரவில் அருளாளா கையில் தலையேந்தி

இரவைப் புரிவோனே இராமேச் சுர(ம்)மேய

அரவச் சடையானே அடியேற் கருளாயே.


பரவை உமிழ் நஞ்சைப் பழம் போல் அமுது உண்டாய் - கடல் கக்கிய விஷத்தை நாவற்பழம் போல எடுத்து உண்டவனே; (பரவை - கடல்);

கரவு இல் அருளாளா - ஒளித்தல் இன்றி வழங்கும் அருள்பவனே;

கையில் தலை ஏந்தி இரவைப் புரிவோனே - கையில் மண்டையோட்டை ஏந்திப் பிச்சையெடுப்பவனே; (தலை - மண்டையோடு); (இரவு - யாசித்தல்);

அரவச்-சடையானே - சடையில் பாம்பை அணிந்தவனே;


7)

சீரார் கழல்போற்றித் தேவர் தொழுதேவா

நீரார் சடைமீது நிலவைப் புனைவோனே

ஏரார் மதில்சூழ்ந்த இராமேச் சுர(ம்)மேய

ஆரா அமுதானாய் அடியேற் கருளாயே.


சீர் ஆர் கழல் போற்றித் தேவர் தொழு தேவா - நன்மை மிக்க திருவடியைப் போற்றித் தேவர்கள் தொழும் தேவனே;

நீர் ஆர் சடைமீது நிலவைப் புனைவோனே - கங்கையையும் சந்திரனையும் சடையில் அணிந்தவனே;

ஏர் ஆர் மதில் சூழ்ந்த இராமேச்சுர(ம்) மேய – அழகிய மதிலால் சூழப்பெற்ற ராமேஸ்வரத்தில் உறைகின்ற;

ஆரா அமுது ஆனாய் - தெவிட்டா இன்னமுதம் ஆனவனே; (அப்பர் தேவாரம் - 6.44.2 - "சார்ந்தார்க்கு இன்னமுது ஆனானே");

அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;


8)

எங்கும் செருவில்லா இலங்கைக் கிறைகோபம்

பொங்கி மலைபேர்த்தான் புயங்கள் நெரிசெய்தாய்

எங்கள் பெருமானே இராமேச் சுர(ம்)மேய

அங்கம் மறையோதீ அடியேற் கருளாயே.


எங்கும் செருல்லா இலங்கைக்கு இறை - எவ்விடத்திலும் (எதிர்த்துப் போரிட எவரும் அஞ்சியதால்) போர் இல்லாத இலங்கை மன்னனும்; (செரு - போர்); (இறை - அரசன்); (சம்பந்தர் தேவாரம் - 1.116.8 - "செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே");

கோபம் பொங்கி மலை பேர்த்தான் புயங்கள் நெரிசெய்தாய் – மிகுந்த கோபத்தால் கயிலையைப் பெயர்த்து எறிய முயன்றவனுமான இராவணனது தோள்களை நசுக்கியவனே; (புயங்கள் - புஜங்கள்);

எங்கள் பெருமானே - எம்பெருமானே;

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறையும்;

அங்கம் மறை ஓதீ - நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதியருளியவனே ; (அங்கம் - வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், முதலியன);

அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;


9)

மலையோர் குடையான மாலு(ம்) மலரானும்

தலைவா எனவேத்தத் தழலாய் உயர்வோனே

இலையார் திரிசூலா இராமேச் சுர(ம்)மேய

அலையார் சடையானே அடியேற் கருளாயே.


மலை ஓர் குடையான மாலும் மலரானும் - மலையைக் குடையாக ஏந்திய திருமாலும் பிரமனும்;

தலைவா என ஏத்தத் தழலாய் உயர்வோனே - "தலைவா" என்று போற்றுமாறு ஜோதியாகி நீண்டவனே;

இலை ஆர் திரிசூலா - இலை போன்ற நுனிகளை உடைய திரிசூலத்தை ஏந்தியவனே;

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறையும்;

அலை ஆர் சடையானே - கங்கையைச் சடையில் உடையவனே; (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);


10)

பண்டை நெறிதன்னைப் பழித்துப் பலபொய்சொல்

மிண்டர் அறியாத மெய்யே சடையின்மேல்

இண்டை மதிசூடீ இராமேச் சுர(ம்)மேய

அண்டர் பெருமானே அடியேற் கருளாயே.


பண்டை நெறிதன்னை பழித்துப் பலபொய் சொல் மிண்டர் அறியாத மெய்யே - தொன்மையான வேதநெறியை எப்பொழுதும் இகழ்ந்து பேசும் கல்நெஞ்சர்களால் அறியப்படாத மெய்ப்பொருளே; (மிண்டர் - கல்நெஞ்சர்);

இண்டை மதிசூடீ - இண்டைமாலை போல் திங்களைச் சூடியவனே; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறையும்;

அண்டர் பெருமானே - தேவதேவனே;


11)

கல்லால் நிழலண்ணல் கரியை உரிசெய்த

வல்லான் மதில்மூன்றை மாய்த்த மலைவில்லான்

எல்லாம் உடையெம்மான் இராமேச் சுர(ம்)மேயான்

சொல்லார் தமிழ்பாடித் தொழுவார் துணைதானே.


கல்லால்-நிழல் அண்ணல் - கல்லால-மரத்தடியில் வீற்றிருக்கும் ஐயன்;

கரியை உரிசெய்த வல்லான் - யானையின் தோலை உரித்த வல்லவன்;

மதில் மூன்றை மாய்த்த மலைவில்லான் - முப்புரங்களை அழித்த மேருவில் ஏந்தியவன்;

எல்லாம் உடை-எம்மான் - எல்லா உலகங்களையும் உடைய எம்பெருமான்;

இராமேச்சுரம் மேயான் - ராமேஸ்வரத்தில் உறைகின்றவன்;

சொல் ஆர் தமிழ் பாடித் தொழுவார் துணைதானே - தேவாரம் திருவாசகம் பாடி வழிபடும் பக்தர்களுக்கு அப்பெருமான் துணை ஆவான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment