2017-11-18
P.411 - ஆரூர் (திருவாரூர்)
---------------------------------
(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")
1)
பிணிநீள் புரிபற்றிப் பணிசெய் தண்டிக்குக்
கணிலே ஒளிதந்த கண்ணார் நுதலானை
அணியார் மதில்சூழ்ந்த ஆரூர் மேயானை
மணியார் மிடறானை மறவேல் மடநெஞ்சே.
பிணி-நீள்-புரி பற்றிப் பணிசெய் தண்டிக்குக் கணிலே ஒளி தந்த கண் ஆர் நுதலானை - கட்டிய நீண்ட கயிற்றைப் பற்றி நடந்து திருக்குளத் தொண்டு செய்த தண்டியடிகளுக்குக் கண்ணில் பார்வையைக் கொடுத்த நெற்றிக்கண்ணனை; (பிணித்தல் - கட்டுதல்); (புரி - கயிறு); (கணிலே - கண்ணிலே - இடைக்குறையாக வந்தது);
அணி ஆர் மதில் சூழ்ந்த ஆரூர் மேயானை - அழகிய மதில் சூழ்ந்த திருவாரூரில் உறைகின்றவனை;
மணி ஆர் மிடறானை மறவேல் மடநெஞ்சே - நீலமணி திகழும் கண்டனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மிடறானை - மிடற்றானை; இடைக்குறை விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.19.2 - "மணிபடு கறைமிடறனை"); (ஏல் - எதிர்மறை ஏவல்-ஒருமை விகுதி);
2)
துளக்கில் நமிநந்தி தூய புனலூற்று
விளக்கில் ஒளிநின்று வீச அருள்வானை
அளப்பில் புகழானை ஆரூர் மேயானை
வளத்தைத் தருவானை மறவேல் மடநெஞ்சே.
துளக்கு இல் நமிநந்தி தூய புனல் ஊற்று விளக்கில் ஒளி நின்று வீச அருள்வானை - அசையாத திட-பக்தி உடைய ( / வருத்தம் தீர்ந்த) நமிநந்தி அடிகள் (கமலாலயக் குளத்தின்) தூய நீரை ஊற்றி எரித்த விளக்கில் நீடு ஒளிவீசும்படி அருளியவனை; (துளக்கு - அசைவு; வருத்தம்);
அளப்பு இல் புகழானை - அளவற்ற புகழ் உடையவனை; (அளப்பு - அளத்தல்; எல்லை);
ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;
வளத்தைத் தருவானை மறவேல் மடநெஞ்சே - எல்லா நலங்களையும் தருபவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக;
3)
மகனைத் தேரூர்ந்த மனுவுக் கருள்வானைக்
குகனைத் தருவானைக் கொடிய அரவத்தை
அகலத் தணிவானை ஆரூர் மேயானை
மகரக் குழையானை மறவேல் மடநெஞ்சே.
மகனைத் தேர் ஊர்ந்த மனுவுக்கு அருள்வானை - கன்றை இழந்து வருந்திய பசுவைக் கண்டு தன் மகன் மீது தேரை ஓட்டி நீதியை நிலைநிறுத்திய மனுநீதிச் சோழனுக்கு அருளியவனை;
குகனைத் தருவானைக் - முருகனைத் தந்தவனை;
கொடிய அரவத்தை அகலத்து அணிவானை - கொடிய பாம்பை மார்பில் அணிபவனை; (அகலம் - மார்பு);
ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;
மகரக்-குழையானை மறவேல் மடநெஞ்சே - மகரமீன் போன்ற குழையை அணிந்த பெருமானை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.84.9 - "தாழ்மகரக்குழையுந் தோடும் அணிந்த திருக்காதனை");
4)
ஓடு தனையேந்தி ஊணுக் குழல்வானைப்
பாடு வன்றொண்டர் தேடு பொன்னீந்த
ஆடும் பெருமானை ஆரூர் மேயானை
மாடும் தருவானை மறவேல் மடநெஞ்சே.
ஓடுதனை ஏந்தி ஊணுக்கு உழல்வானைப் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரிபவனை; (ஓடு - கபாலம்); (ஊண் - உணவு);
பாடு வன்தொண்டர் தேடு பொன் ஈந்த ஆடும் பெருமானை - புகழ்பாடி இறைஞ்சிய சுந்தரருக்குக் குளத்தில் அவர் தேடிய பொன்னைத் தந்த கூத்தனை; (சுந்தரர் தேவாரம் - 7.25.9 - "கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளங் கெடவே");
ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;
மாடும் தருவானை மறவேல் மடநெஞ்சே - வீடு (முக்தி) அருள்வதோடு இம்மையில் செல்வமும் தருபவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மாடு - செல்வம்; உம் - எச்சவும்மை);
5)
கண்டங் கரியானைக் கங்கைச் சடையானைத்
தொண்டர் அவர்வேண்டத் தூது சென்றானை
அண்டர் பெருமானை ஆரூர் மேயானை
மண்டன் புடையானை மறவேல் மடநெஞ்சே.
கண்டம் கரியானைக் - நீலகண்டனை;
கங்கைச் சடையானைத் - கங்காதரனை;
தொண்டர்-அவர் வேண்டத் தூது சென்றானை - சுந்தரர் வேண்டியவாறே பரவை மனைக்குத் தூது நடந்தவனை; (தொண்டர் - இங்கே வன்தொண்டர் - ஏகதேசமாக வந்ததாகக் கொள்ளல் ஆம்);
அண்டர் பெருமானை - தேவர்கள் பெருமானை;
ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;
மண்டு அன்பு உடையானை மறவேல் மடநெஞ்சே - (அடியவர்களுக்கு) மிகுந்த அன்பு உடையவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மண்டுதல் - அதிகமாதல்);
6)
எழுது மறையான இனிய தமிழ்பாடித்
தொழுத அடியார்க்குத் துணையாய் வருவானை
அழிவில் பெருமானை ஆரூர் மேயானை
மழவெள் விடையானை மறவேல் மடநெஞ்சே.
எழுது மறையான இனிய தமிழ் பாடித் தொழுத அடியார்க்குத் துணையாய் வருவானை - எழுதப்படும் வேதமான இனிய தேவாரத்தைப் பாடி வழிபடும் பக்தர்களுக்குக் காவலாகி வருபவனை;
அழிவு இல் பெருமானை - என்றும் அழிவில்லாத பெருமானை;
ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;
மழ-வெள்-விடையானை மறவேல் மடநெஞ்சே - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மழ - இளமை);
7)
திங்கள் இளநாகம் சேர்ந்து நிலையாகத்
தங்கும் சடையானைச் சங்கக் குழையானை
அங்கை அழலானை ஆரூர் மேயானை
மங்கை பிரியானை மறவேல் மடநெஞ்சே.
திங்கள் இளநாகம் சேர்ந்து நிலையாகத் தங்கும் சடையானைச் - பிறையும் இளம்-பாம்பும் ஒன்றாக என்றும் திகழும் சடையை உடையவனை;
சங்கக்-குழையானை - சங்கினால் ஆன குழையை அணிந்தவனை; (அப்பர் தேவாரம் - 6.98.9 - "சங்கக் குழையோர் காதன்");
அங்கை அழலானை - கையில் நெருப்பை ஏந்தியவனை;
ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;
மங்கை பிரியானை மறவேல் மடநெஞ்சே - உமைபங்கனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக;
8)
இலங்கைக் கிறைதன்னை இறையே விரலூன்றி
மலங்க வைத்தானை வாசம் கமழ்கொன்றை
அலங்கல் அணிவானை ஆரூர் மேயானை
வலங்கொள் விடையானை மறவேல் மடநெஞ்சே.
இலங்கைக்கு இறைதன்னை இறையே விரல் ஊன்றி மலங்க வைத்தானை - இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலைமேல் விரலைச் சிறிதளவே ஊன்றிக் கலங்கவைத்தவனை; (இறை - 1 அரசன்; 2; சிறிதளவு); (மலங்குதல் - மனங்கலங்குதல்);
வாசம் கமழ் கொன்றை-அலங்கல் அணிவானை - மணம் கமழும் கொன்றைமாலையை அணிந்தவனை; (அலங்கல் - பூமாலை);
ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;
வலங்கொள் விடையானை மறவேல் மடநெஞ்சே - வெற்றியுடைய இடப-வாகனனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (வலம் - வலிமை; வெற்றி);
9)
மடலார் மலரான்மால் மண்விண் மிகநேடச்
சுடராய் எழுவானைத் தொண்டர்க் கெளியானை
அடலே றுடையானை ஆரூர் மேயானை
வடவால் நிழலானை மறவேல் மடநெஞ்சே.
மடல் ஆர் மலரான் மால் மண் விண் மிக நேடச் சுடராய் எழுவானைத் - இதழ்கள் மிக்க தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் விண்ணில் பறந்து சென்றும் மண்ணை அகழ்ந்து சென்றும் தேடும்படி எல்லையில்லாத ஜோதியாகி உயர்ந்தவனை; (மடல் - பூவிதழ்); (நேடுதல் - தேடுதல்); (மலரான் மால் - மண் விண் - எதிர்நிரல்நிறையாக வந்தன);
தொண்டர்க்கு எளியானை - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவனை;
அடல்-ஏறு உடையானை - வலிமைமிக்க எருதை வாகனமாக உடையவனை; (அடல் - வலிமை; போர்; வெற்றி);
ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;
வடவால் நிழலானை மறவேல் மடநெஞ்சே - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (வடவால் - கல்லாலமரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");
10)
நிழலார் மழுவாளன் நீற்றைப் புனையாதார்
பிழையே புரிகேடர் பேச்சை மதியாதீர்
அழலார் சடையானை ஆரூர் மேயானை
மழையார் மிடறானை வாழ்த்த வருமின்பே.
நிழல் ஆர் மழுவாளன் நீற்றைப் புனையாதார் பிழையே புரி கேடர் பேச்சை மதியாதீர் - ஒளி பொருந்திய மழுவை ஏந்திய சிவபெருமானது திருநீற்றைப் பூசாதவர்களும் குற்றமே செய்யும் கேடர்களும் சொல்லும் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (நிழல் - ஒளி);
அழல் ஆர் சடையானை - தீப் போன்ற செஞ்சடையை உடையவனை; (அழல் - நெருப்பு); (ஆர்தல் - ஒத்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.94.1 - "அழல்நீர் ஒழுகி யனைய சடையும்");
ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;
மழை ஆர் மிடறானை வாழ்த்த வரும் இன்பே - மேகம் ஒத்த நீலநிறம் பொருந்திய கண்டனை வாழ்த்தினால் இன்பமே வந்தடையும்; (மழை - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்); (மிடறு - கண்டம்); (மிடறானை - மிடற்றானை - இடைக்குறையாக வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா");
11)
ஊழி பலகண்ட ஒப்பில் பெருமானை
ஆழி உமிழ்நஞ்சை அமுதா உண்டானை
ஆழித் தேரூரும் ஆரூர் மேயானை
வாழி எனநாளும் வாழ்த்த வருமின்பே.
ஊழி பல கண்ட ஒப்பு இல் பெருமானை - பல ஊழிக்காலங்களைக் கண்டவனும் ஒப்பற்றவனுமான பெருமானை; (ஊழி - உலகம் தோன்றி ஒடுங்கும் காலஅளவு ); (அப்பர் தேவாரம் - 6.28.10 - "ஊழி பலகண் டிருந்தார் போலும்");
ஆழி உமிழ் நஞ்சை அமுதா உண்டானை - கடல் கக்கிய ஆலகாலத்தை அமுதம்போல் உண்டவனை; (ஆழி - கடல்); (அமுதா - அமுதாக; கடைக்குறை விகாரம்);
ஆழித்தேர் ஊரும் ஆரூர் மேயானை - "ஆழித்தேர்" என்ற தேர் ஓடுகின்ற திருவாரூரில் உறைகின்றவனை; (ஆழித்தேர் - திருவாரூர்த் தேரின் பெயர்); (ஊர்தல் - செல்லுதல்; ஏறுதல்); (அப்பர் தேவாரம் - 4.19.7 - "ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே");
வாழி என நாளும் வாழ்த்த வரும் இன்பே - "வாழ்க" என்று தினந்தோறும் பக்தியோடு வாழ்த்தினால் இன்பமே வந்தடையும்; (வாழி - வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோட்சொல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment