Saturday, July 5, 2025

P.418 - உத்தரகோசமங்கை - செயசெய என்று

2017-12-17

P.418 - உத்தரகோசமங்கை

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")


1)

செயசெய என்று வாழ்த்து .. சிறுவரைக் கொல்ல வந்த

இயமனைச் செற்ற பாதன் .. ஏறுகந் தேறு நாதன்

உயர்பொழில் அணிசெய் கின்ற .. உத்தர கோச மங்கைக்

கயலன கண்ணி பங்கன் .. கழலிணை கருது நெஞ்சே.


"செயசெய" என்று வாழ்த்து சிறுவரைக் கொல்ல வந்த இயமனைச் செற்ற பாதன் - ஜயஜய என்று ஈசனை வாழ்த்திய மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த கூற்றுவனை உதைத்து அழித்தவன்;

ஏறு உகந்து ஏறு நாதன் - இடபவாகனத்தை விரும்பிய தலைவன்;

உயர்-பொழில் அணி-செய்கின்ற உத்தரகோசமங்கைக் - ஓங்கிய சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில்;

கயல் அன கண்ணி பங்கன் கழலிணை கருது நெஞ்சே - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பங்கில் உடைய சிவபெருமானது இரு-திருவடிகளை, நெஞ்சே நீ எண்ணுவாயாக;


2)

எண்மலர் தூவி அன்பர் .. ஏத்திடும் முக்கண் நம்பன்

பெண்மயில் அன்ன சாயல் .. பேதையைக் கூறு கந்தான்

ஒண்மலர்ச் சோலை சூழ்ந்த .. உத்தர கோச மங்கைத்

திண்மலி எண்டோள் ஈசன் .. சேவடி எண்ணு நெஞ்சே.


எண்மலர் - அஷ்டபுஷ்பங்கள்;

நம்பன் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; விரும்பத்தக்கவன்;

பெண்மயில் அன்ன சாயல் பேதையைக் கூறு உகந்தான் - பெண்மயிலைப் போன்ற அழகிய சாயல் உடைய உமையை ஒரு கூறாக விரும்பியவன்;

ஒண்-மலர்ச்-சோலை - அழகிய பூஞ்சோலை;

திண்-மலி எண்-தோள் ஈசன் - வலிய எட்டுப் புஜங்களை உடைய ஈசன்;


3)

மூங்கரைப் பாடச் செய்வான் .. முடவரை ஓடச் செய்வான்

வேங்கையின் தோலை வீக்கி .. வெள்விடை ஏறு வேந்தன்

ஓங்கிய மதிலி லங்கும் .. உத்தர கோச மங்கைக்

கோங்கணி சடையி னான்றன் .. குரைகழல் எண்ணு நெஞ்சே.


மூங்கர் - ஊமையர்;

முடவன் - நொண்டி;

வேங்கை - புலி;

வீக்குதல் - கட்டுதல்;

ஓங்கிய மதில் இலங்கும் - உயர்ந்த மதில் திகழும்;

கோங்கு அணி சடையினான்தன் குரைகழல் எண்ணு நெஞ்சே - கோங்கமலரைச் சடையில் அணிந்த சிவபெருமானது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை, நெஞ்சே நீ எண்ணுவாயாக; (கோங்கு - கோங்கமலர்);

(* பகவத் கீதை - தியான சுலோகம் - மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் - मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम् - Divine grace makes the Dumb speak with Eloquence and the Lame cross high Mountains)


4)

நலிவுறு திங்கள் வந்து .. நற்கழல் தொழவி ரங்கிப்

பொலிவுறச் சடைமேல் வைத்தான் .. பொடியணி மேனி அத்தன்

ஒலியளி நாடு சோலை .. உத்தர கோச மங்கைப்

புலியதள் ஆடை யான்றன் .. பொன்னடி போற்று நெஞ்சே.


நலிவுறு திங்கள் வந்து நற்கழல் தொழ, இரங்கிப் பொலிவுறச் சடைமேல் வைத்தான் - சாபத்தால் தேய்ந்து வாடிய சந்திரன் வந்து நன்மைமிக்க திருவடியை வணங்கவும், இரங்கி அச்சந்திரன் திகழும்படி அதனைத் திருமுடிமேல் சூடியவன்;

பொடி அணி மேனி அத்தன் - திருநீற்றை மேனிமேல் பூசிய தந்தை;

ஒலி-அளி நாடு சோலை உத்தரகோசமங்கைப் - ஒலிக்கின்ற வண்டுகள் அடையும் சோலை திகழும் திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற; (அளி - வண்டு);

புலிஅதள் ஆடையான்தன் பொன்னடி போற்று நெஞ்சே - புலித்தோலை ஆடையாக உடைய சிவபெருமானது பொன் போன்ற திருவடிகளை, நெஞ்சே நீ போற்றுவாயாக; (அதள் - தோல்);


5)

தகுமலர் கொண்டு தேவர் .. தாள்தொழ அரண்கள் தீயிற்

புகுதர எய்த வில்லி .. போர்விடைப் பாகன் தேனை

உகுமலர் மலிந்த சோலை .. உத்தர கோச மங்கை

நகுதலை மாலை சூடி .. நற்கழல் நாடு நெஞ்சே.


தகுமலர் கொண்டு தேவர் தாள் தொழ, அரண்கள் தீயில் புகுதர எய்த வில்லி - தக்க மலர்களால் தேவர்கள் தன் திருவடியைத் தொழவும், அவர்களுக்கு இரங்கி, வில் ஏந்தி முப்புரங்கள் தீப் புக எய்தவன்; (புகுதர = புக); (தருதல் - ஒரு துணைவினை);

போர்விடைப் பாகன் - போர் செய்யவல்ல இடபத்தை ஊர்தியாக உடையவன்;

தேனை உகு-மலர் மலிந்த சோலை உத்தரகோசமங்கை - தேனைச் சொரியும் பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற;

நகுதலை மாலை சூடி நற்கழல் நாடு நெஞ்சே - ஒளிவீசும் மண்டையோடுகளால் ஆன மாலையைச் சூடிய பெருமானது நல்ல திருவடியை, நெஞ்சே நீ விரும்புவாயாக; (நகுதல் - பிரகாசித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.41.5 - "நதியதனயலே நகுதலைமாலை நாண்மதிசடைமிசை யணிந்து");


6)

அஞ்சனக் கண்ணி அஞ்ச .. ஆனையை உரித்த அண்ணல்

அஞ்செழுத் தோது மாணி .. அளவிலா ஆயுள் எய்தி

உஞ்சிட வீசு பாதன் .. உத்தர கோச மங்கை

நஞ்சினை மணிசெய் கண்டன் .. நற்கழல் நாடு நெஞ்சே.


அஞ்சனக் கண்ணி அஞ்ச ஆனையை உரித்த அண்ணல் - மை அணிந்த கண்களையுடைய உமை அஞ்சும்படி யானையின் தோலை உரித்த தலைவன்;

அஞ்செழுத்து ஓது மாணி அளவு இலா ஆயுள் எய்தி உஞ்சிட வீசு பாதன் - திருவைந்தெழுத்தை ஓதிய மார்க்கண்டேயர் என்றும் சாவாது வாழும்படி திருப்பாதத்தை வீசி நமனை உதைத்தவன்; (உஞ்சிட - உய்ந்திட);

உத்தரகோசமங்கை - திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற;

ஞ்சினை மணிசெய் கண்டன் நற்கழல் நாடு நெஞ்சே - ஆலகாலத்தை அழகிய நீலமணி போல அணிந்த கண்டம் உடைய பெருமானது நல்ல திருவடியை, நெஞ்சே நீ விரும்புவாயாக;


7)

மண்புனல் நெருப்பு காற்று .. மாவிசும் பெல்லாம் ஆய

பண்பினன் பன்றிப் பின்போய்ப் .. பார்த்தனுக்(கு) அருள்செய் வேடன்

ஒண்பிறைக் கண்ணி சூடி .. உத்தர கோச மங்கைக்

கண்புனை நெற்றி ஈசன் .. கழலடி கருது நெஞ்சே.


மண் புனல் நெருப்பு காற்று மா-விசும்பு எல்லாம் ஆய பண்பினன் - ஐம்பூதங்கள் ஆனவன்; (விசும்பு - ஆகாயம்);

பன்றிப்பின் போய்ப் பார்த்தனுக்கு அருள்செய் வேடன் - வேடனாகி ஒரு பன்றியைத் துரத்திச் சென்று அர்ஜுனனுக்கு அருள்புரிந்தவன்;

ஒண்-பிறைக் கண்ணி சூடி - ஒளியுடைய பிறையைக் கண்ணிமாலையாகத் திருமுடிமேல் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

உத்தரகோசமங்கைக் - திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற;

கண் புனை நெற்றி ஈசன் கழலடி கருது நெஞ்சே - நெற்றிக்கண் திகழும் ஈசனது கழல் அணிந்த திருவடியை, நெஞ்சே நீ எண்ணுவாயாக;


8)

மலையெறி இலங்கைக் கோன்றன் .. மணிமுடி பத்த டர்த்தான்

அலைமலி ஆறு பாயும் .. அவிர்சடை அண்ணல் தும்பி

உலவிடு சோலை சூழ்ந்த .. உத்தர கோச மங்கை

நிலையென நின்ற ஈசன் .. நீள்கழல் நினையென் நெஞ்சே.


மலை எறி இலங்கைக்கோன்தன் மணிமுடி பத்து அடர்த்தான் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனது கிரீடம் அணிந்த பத்துத்-தலைகளையும் நசுக்கியவன்; (அடர்த்தல் - நசுக்குதல்);

அலை மலி ஆறு பாயும் அவிர்-சடை அண்ணல் - கங்கைநதி பாயும் ஒளிவீசும் சடையை உடைய ஐயன்; (அவிர்தல் - ஒளிவீசுதல்); (அப்பர் தேவாரம் - 4.72.5 - "அவிர்சடை உடையர் போலும்");

தும்பி உலவிடு சோலை சூழ்ந்த உத்தரகோசமங்கை நிலையென நின்ற ஈசன் - வண்டுகள் உலவும் சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில் நீங்காது உறைகின்ற ஈசன்;

நீள்கழல் நினை என் நெஞ்சே - அப்பெருமானது நீண்ட திருவடிகளை, என் நெஞ்சே நீ நினைவாயாக;


9)

தவ(ம்)மலி நால்வர் கேட்கச் .. சதுர்மறைப் பொருள்வி ரித்தான்

குவலயம் உண்ட மாலும் .. குளிர்மல ரானும் காணா

உவமையி லாத தேசன் .. உத்தர கோச மங்கைச்

சிவபெரு மான்றன் செய்ய .. திருவடி சிந்தி நெஞ்சே.


தவ(ம்)மலி நால்வர் கேட்கச் சதுர்மறைப் பொருள் விரித்தான் - தவம் மிகுந்த சனகாதியருக்கு வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (விரித்தல் - விளக்கியுரைத்தல்; உபதேசித்தல்);

குவலயம் உண்ட மாலும் குளிர்-மலரானும் காணா உவமை இலாத தேசன் - மண்ணை உண்ட திருமாலாலும் குளிர்ந்த தாமரைப்பூமேல் இருக்கும் பிரமனாலும் காண ஒண்ணாத ஒப்பற்ற ஒளியுருவன்; (தேசன் - தேஜஸ் என்ற சொல்லின் அடிப்படையில் வரும் சொல்);

உத்தரகோசமங்கைச் சிவபெருமான்தன் செய்ய திருவடி சிந்தி நெஞ்சே - திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற சிவபெருமானது சிவந்த திருவடியை, நெஞ்சே நீ சிந்திப்பாயாக; (செய்ய - சிவந்த);


10)

அடைநெறி அறிய மாட்டார் .. அவமொழி பேசு கையர்

மடமையார் வார்த்தை தன்னை .. மதித்திட வேண்டா; எல்லாம்

உடையவன் உம்பர் தங்கோன் .. உத்தர கோச மங்கை

விடையவன் தொழுத அன்பர் .. வேண்டின ஈவான் தானே.


அடைநெறி அறிய மாட்டார், அவமொழி பேசு கையர், மடமைர் வார்த்தை-தன்னை மதித்திட வேண்டா - உய்யும் நெறியை அறியாதவர்களும், இழிந்த மொழிகளைப் பேசும் கீழோர்களும் சொல்லும் அறிவற்ற வார்த்தைகளை நீங்கள் மதிக்கவேண்டா; (கையர் - கீழோர்);

உம்பர்தம் கோன் - தேவர்கள் தலைவன்;

உத்தர கோச மங்கை விடையவன் - திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற இடபவாகனன்;

தொழுத அன்பர் வேண்டி ஈவான்-தானே - வழிபாடு செய்யும் பக்தர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் கொடுப்பவன்;


11)

மணமலர்க் கொன்றை யானை .. மங்கள நாய கிக்குக்

கணவனைச் சுரர்க்கி ரங்கிக் .. கரியவி டத்தை நல்ல

உணவென உண்ட கோனை .. உத்தர கோச மங்கைத்

துணைவனை அரனை நாளும் .. தொழுதெழ இன்பம் ஆமே.


* மங்கள நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்;

சுரர்க்கு இரங்கி - தேவர்களுக்கு இரங்கி;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.417 - ஆடானை - குறையொன்றிலன் உலகைச்சுடு

2017-12-16

P.417 - ஆடானை - (திருவாடானை)

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


1)

குறையொன்றிலன் உலகைச்சுடு கொடுநஞ்சினை உண்டு

கறையொன்றிய கண்டத்தினன் கடியார்மலர் நாடி

அறைவண்டினம் அடையும்பொழில் ஆடானையில் உறையும்

இறைவன்கழல் தொழுவார்துயர் இலராவது திடனே.


குறை ஒன்று இலன் - பூரணன்;

உலகைச் சுடு கொடுநஞ்சினை உண்டு கறை ஒன்றிய கண்டத்தினன் - உலகங்களையெல்லாம் சுட்டெரித்த கொடிய ஆலகாலத்தை உண்டு கறை பொருந்திய மிடற்றை உடையவன்;

கடி ஆர் மலர் நாடி அறை வண்டினம் அடையும் பொழில் ஆடானையில் உறையும் - மணமலர்களை நாடி ஒலிக்கின்ற வண்டுகள் அடைகின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற; (கடி - வாசனை);

இறைவன் கழல் தொழுவார் துயர் இலர் ஆவது திடனே - சிவபெருமான் திருவடியை வணங்கும் அன்பர்களது துயரம் நீங்குவது உறுதி;


2)

முடைவெண்டலை ஏந்தித்திரி முதல்வன்சுரர் அசுரர்

கடையுங்கடல் உமிழ்நஞ்சடை கண்டன்மழை மேகம்

அடையும்மதில் சூழுந்திரு ஆடானையில் மழுவாட்

படையும்தரி பரமன்கழல் பணிவார்வினை படுமே.


முடை-வெண்-தலை ஏந்தித் திரி முதல்வன் - முடைநாற்றம் உடைய பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சையேற்றுத் திரியும் முதல்வன்;

சுரர் அசுரர் கடையும் கடல் உமிழ் நஞ்சு அடை கண்டன் - தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடல் உமிழ்ந்த விஷத்தைக் கண்டத்தில் அடைத்தவன்;

மழைமேகம் அடையும் மதில் சூழும் திருஆடானையில் - மழைமுகில் அடைகின்ற உயர்ந்த மதில் சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற;

மழுவாள்-படையும் தரி பரமன் கழல் பணிவார் வினை படுமே - (சூலம், மான், இவற்றோடு) மழுவாளையும் ஏந்திய பரமனது திருவடியைப் பணியும் பக்தர்களது வினை அழியும்;


3)

அஞ்சைக்களம் முண்டீச்சரம் அண்ணாமலை மேயான்

வஞ்சிக்கொடி போல்மெல்லிடை மலைமாதொரு பாகன்

அஞ்சொற்கிளி பயிலும்பொழில் ஆடானையில் உறையும்

நஞ்சைக்களம் அணிவான்கழல் நம்பித்தொழ நலமே.


அஞ்சைக்களம் முண்டீச்சரம் அண்ணாமலை மேயான் - திருவஞ்சைக்களம், திருமுண்டீச்சரம், திருவண்ணாமலை முதலிய தலங்களில் உறைபவன்;

வஞ்சிக்கொடி போல் மெல்லிடை மலைமாது ஒரு பாகன் - வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிடையை உடைய மலைமங்கையை ஒரு பாகமாக உடையவன்;

அஞ்சொற்கிளி பயிலும் பொழில் ஆடானையில் உறையும் - அழகிய சொற்களைப் பேசும் கிளிகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறையும்;

நஞ்சைக் களம் அணிவான் கழல் நம்பித் தொழ நலமே - விஷத்தைக் கண்டத்தில் அணிந்த பெருமானது திருவடியை விரும்பித் தொழும் அன்பர்களுக்கு என்றும் நன்மையே; (களம் - கண்டம்);


4)

பாலுந்தயிர் ஆடும்பரன் பாலற்குயிர் தந்து

காலன்றனைக் காலாலுதை கடவுள்கறை மிடறன்

ஆலுங்குயில் அடையும்பொழில் ஆடானையில் உறையும்

சூலன்கழல் தனையன்பொடு தொழுவார்வினை தொலைவே.


பாலும் தயிர் ஆடும் பரன் - பாலாலும் தயிராலும் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;

பாலற்கு உயிர் தந்து காலன்தனைக் காலால் உதை கடவுள் - பாலகனுக்கு (மார்க்கண்டேயருக்கு) உயிர் கொடுத்துக் கூற்றுவனைக் காலால் உதைத்த கடவுள்; (பாலற்கு = பாலன்+கு = பாலனுக்கு);

கறை மிடறன் - நீலகண்டன்;

ஆலும் குயில் அடையும் பொழில் ஆடானையில் உறையும் - ஒலிக்கின்ற குயில்கள் அடைகின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற;

சூலன் கழல்தனை அன்பொடு தொழுவார் வினை தொலைவே - சூலபாணியின் திருவடியை அன்போடு தொழும் பக்தர்களது வினை அழியும்; (தொலைவு - அழிவு);


5)

மின்போலொளிர் சடையின்மிசை வெண்திங்களை வைத்தான்

இன்பேவுரு ஆனானவன் எல்லாம்செய வல்லான்

அன்பாயியை அகலாதவன் ஆடானையில் உறையும்

நம்பானடி தொழுதார்களை நலியாவினை தானே.


மின் போல் ஒளிர் சடையின்மிசை வெண்-திங்களை வைத்தான் - மின்னலைப் போல ஒளி வீசும் சடையின்மேல் வெண்பிறையைச் சூடியவன்;

இன்பே உரு ஆனான் அவன் - ஆனந்த வடிவினன்;

எல்லாம் செய-வல்லான் - சர்வ-வல்லமை உடையவன்; (செய - செய்ய);

அன்பாயியை அகலாதவன் - அன்பாயி என்ற திருநாமம் உடைய உமையைப் பிரியாதவன்; (* அன்பாயி - திருவாடானை இறைவி திருநாமம்);

ஆடானையில் உறையும் - திருவாடானையில் உறைகின்ற;

நம்பான் அடி தொழுதார்களை நலியா வினை தானே - சிவபெருமான் திருவடியைத் தொழுதவர்களை வினைகள் வருத்தமாட்டா; (நம்பான் / நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - உயிர்களால் விரும்பப்படுபவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.11.7 - "காழிநகர் மேய நம்பானை நண்ணவல்லார் வினை நாசமே");


6)

எழுதாமறை ஒதும்பொருள் இலைமாமலர் தூவித்

தொழுவாருணி துயர்தீர்த்தவன் தோடோர்செவி உடையான்

அழகார்பொழில் புடைசூழ்தரும் ஆடானையில் உறையும்

மழுவாளினன் அடியைத்தொழ மருவாவினை தானே.


எழுதாமறை ஒதும் பொருள் - வேதங்களை ஓதிய மெய்ப்பொருள்; வேதங்கள் பாடுகின்ற பொருள் ஆனவன்;

இலை மாமலர் தூவித் தொழு வாருணி துயர் தீர்த்தவன் - வில்வம் முதலிய இலைகளையும் சிறந்த மலர்களையும் தூவி வழிபட்ட வாருணிக்குச் சாபவிமோசனம் அளித்தவன்; (வாருணி - வருணன் மகன்); (* வாருணியின் சாபவிமோசனத்தைத் திருவாடானைத் தலவரலாற்றில் காண்க);

தோடு ஓர் செவி உடையான் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;

அழகு ஆர் பொழில் புடை சூழ்தரும் ஆடானையில் உறையும் - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற;

மழுவாளினன் அடியைத் தொழ மருவா வினை தானே - மழுவாள் ஏந்தும் சிவபெருமான் திருவடியை வணங்கினால் வினைகள் அடையமாட்டா;


7)

ஓர்வெண்டலை கலனாகிட ஊரூர்பலி திரிவான்

நீர்மண்டிய சடையின்மிசை நிலவைப்புனை நிமலன்

ஆர்வண்டினம் அடையும்பொழில் ஆடானையில் உறையும்

கூர்வெண்மழு உடையான்பெயர் கூறக்கெடும் வினையே.


ஓர் வெண்-தலை கலன் ஆகிட ஊர்-ஊர் பலி திரிவான் - ஒரு வெள்ளை மண்டையோடே பிச்சைப் பாத்திரம் ஆகப், பல்லூர்களில் பிச்சைக்கு உழல்பவன்; (பலி - பிச்சை);

நீர் மண்டிய சடையின்மிசை நிலவைப் புனை நிமலன் - கங்கை தங்கிய சடையின்மேல் சந்திரனை அணிந்த தூயன்;

ஆர் வண்டு-இனம் அடையும் பொழில் ஆடானையில் உறையும் - ஒலிக்கின்ற வண்டுகள் அடையும் சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற; (ஆர்த்தல் - ஒலித்தல்);

கூர்-வெண்-மழு உடையான் பெயர் கூறக் கெடும் வினையே - கூர்மையான ஒளி வீசும் மழுவை ஏந்திய சிவபெருமானது திருப்பெயரைச் சொன்னால் வினை அழியும்;


8)

மலைபோற்புயம் நாலஞ்சினன் வாய்பத்தழு மாறே

மலரார்கழல் விரலூன்றிய வரதன்மழு வாளன்

அலையார்நதி அடைவேணியன் ஆடானையில் என்றும்

நிலையாகிய தலைவன்பெயர் நினைவார்துயர் கெடுமே.


மலைபோல் புயம் நாலஞ்சினன் வாய் பத்து அழுமாறே - மலைபோல் இருபது புஜங்களை உடைய இராவணனது பத்துவாய்களும் அழும்படி; (நாலஞ்சு = 4 x 5 = 20);

மலர் ஆர் கழல் விரல் ஊன்றிய வரதன் - தாமரைமலர் போன்ற திருவடியின் விரலைக் கயிலைமலைமேல் ஊன்றிய வரதன்; (வரதன் - வரம் தருபவன்);

மழுவாளன் - மழுவை ஏந்தியவன்;

அலை ஆர் நதி அடை வேணியன் - அலை மிக்க கங்கையைச் சடையில் அடைத்தவன்; (வேணி - சடை);

ஆடானையில் என்றும் நிலையாகிய தலைவன் பெயர் நினைவார் துயர் கெடுமே - திருவாடானையில் நீங்காது உறைகின்ற தலைவனான சிவபெருமானது திருப்பெயரை நினைக்கின்றவர்களது துயர் நீங்கும்;


9)

தக்கன்றலை துண்டித்தவன் சங்கேந்தியும் அயனும்

வெட்கும்படி உயர்சோதியன் வெண்ணூல்திகழ் மார்பன்

அக்கும்புனை அழகன்திரு ஆடானையில் உறையும்

முக்கண்திகழ் முதல்வன்புகழ் மொழிவார்துயர் கெடுமே.


தக்கன்-லை துண்டித்தவன் - தக்கனது வேள்வியை அழித்து அவனது தலையை வெட்டிய பெருமான்;

சங்கு-ஏந்தியும் அயனும் வெட்கும்படி உயர் சோதியன் - சங்கினை ஏந்தும் திருமாலும் பிரமனும் (அடிமுடி தேடிக் காணாராய்) நாணும்படி உயர்ந்த ஜோதிப்பிழம்பு; (வெட்குதல் - நாணப்படுதல்; அஞ்சுதல்);

வெண்ணூல் திகழ் மார்பன் - திருமார்பில் வெண்ணூல் அணிந்தவன்;

அக்கும் புனை அழகன் - எலும்பையும் அணியும் அழகன்; (அக்கு - எலும்பு);

திருஆடானையில் உறையும் முக்கண் திகழ் முதல்வன் புகழ் மொழிவார் துயர் கெடுமே - திருவாடானையில் உறைகின்ற முக்கண்ணனது திருப்புகழைப் பேசும் (/பாடும்) அன்பர்களது துயர் நீங்கும்;


10)

கறையேமலி நெஞ்சத்தினர் பறைபொய்களை மதியேல்

பிறையோடிள நாகம்புனை பெருமான்சிறை வண்டின்

அறையார்பொழில் திகழும்திரு ஆடானையில் உறையும்

மறையோதியின் அடிவாழ்த்திட மறவார்மகிழ் வாரே.


கறையே மலி நெஞ்சத்தினர் பறை பொய்களை மதியேல் - குற்றமே மிகுந்த வஞ்சநெஞ்சர்கள் சொல்கின்ற பொய்களை மதிக்கவேண்டா;

பிறையோடு இளநாகம் புனை பெருமான் - பிறையையும் இளநாகத்தையும் அணிந்த பெருமான்;

சிறை-வண்டின் அறை ஆர் பொழில் திகழும் திருஆடானையில் உறையும் - சிறகுகளை உடைய வண்டுகளின் ஒலி மிக்க சோலை திகழும் திருவாடானையில் உறைகின்ற; (சிறை - சிறகு); (அறை - ஓசை); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்; நிறைதல்);

மறை-தியின் அடி வாழ்த்திட மறவார் மகிழ்வாரே - மறைகளைப் பாடியருளிய சிவபெருமானது திருவடியை மறவாமல் வாழ்த்தும் அன்பர்கள் இன்பம் எய்துவார்கள்;


11)

மாலிந்திரன் மலர்மேலயன் வழிபாடுசெய் ஒருவன்

கோலந்திகழ் மதியந்தனைக் குஞ்சிப்புனை கூத்தன்

ஆலின்புடை மறைசொன்னவன் ஆடானையில் உறையும்

நீலந்திகழ் கண்டன்கழல் நினைவார்மகிழ் வாரே.


மால் இந்திரன் மலர்மேல்-அயன் வழிபாடுசெய் ஒருவன் - திருமாலாலும் இந்திரனாலும் தாமரைமேல் உறையும் பிரமனாலும் வழிபடப்படும் ஒப்பற்றவன்;

கோலம் திகழ் மதியம்தனைக் குஞ்சிப் புனை கூத்தன் - அழகிய சந்திரனைத் திருமுடிமேல் அணிந்த கூத்தன்; (குஞ்சி - தலை);

ஆலின்புடை மறை சொன்னவன் - கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (சம்பந்தர் தேவாரம் - 1.48.1 - "ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே");

ஆடானையில் உறையும் நீலம் திகழ் கண்டன் கழல் நினைவார் மகிழ்வாரே - திருவாடானையில் உறைகின்ற நீலகண்டனது திருவடியை எண்ணி வழிபடும் அன்பர்கள் இன்புறுவார்கள்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.416 - ஆடானை - மானையொரு கையேந்து

2017-12-15

P.416 - ஆடானை - (திருவாடானை)

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

மானையொரு கையேந்தெம் மானையரு நடஞ்செய்யக்

கானையுகந் தானைமதிக் கண்ணியணி சடையானை

ஆனையுரி போர்த்தானை ஆடானை மேயானைக்

கோனையலர் கொண்டுதொழக் கொடுவினைநோய் குறுகாவே.


மானை ஒரு கை ஏந்து எம்மானை - மான்கன்றை ஒரு கையில் ஏந்துகின்ற எம்பெருமானை;

அருநடம் செய்யக் கானை உகந்தானை - அரிய கூத்து ஆடச் சுடுகாட்டை விரும்பியவனை; (கான் - சுடுகாடு);

மதிக்கண்ணி அணி சடையானை - சந்திரனைக் கண்ணிமாலை போல அணிந்த சடையானை; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

ஆனை-உரி போர்த்தானை - யானைத்தோல் போர்த்தவனை; (உரி - தோல்);

ஆடானை மேயானைக் - திருவாடானையில் உறைகின்றவனை;

கோனை அலர்கொண்டு தொழக் கொடுவினைநோய் குறுகாவே - தலைவனைப் பூக்கள் தூவி வழிபட்டால் கொடியவினை நோய் அடையா; (வினைநோய் - வினைகளும் நோய்களும்; வினையாகிய நோய்);


2)

வனமேந்து முலைமாதை வாமத்தில் மகிழ்ந்தானைக்

கனலேந்து கண்ணுதலாற் காமனுடல் காய்ந்தானை

அனலேந்து கையானை ஆடானை மேயானைப்

புனலேந்து கண்ணினராய்ப் போற்றிடுவார் வினைபோமே.


வனம் ஏந்து முலை மாதை வாமத்தில் மகிழ்ந்தானைக் - அழகிய முலைகளையுடைய உமையை இடப்பக்கம் கூறாக விரும்பியவனை; (வனம் - அழகு); (வாமம் - இடப்பக்கம்);

கனல் ஏந்து கண்ணுதலால் காமன் உடல் காய்ந்தானை - தீயைத் தாங்கும் நெற்றிக்கண்ணால் மன்மதனது உடலை எரித்தவனை; (நுதல் - நெற்றி);

அனல் ஏந்து கையானை - கையில் தீயை ஏந்தியவனை;

ஆடானை மேயானைப் - திருவாடானையில் உறைகின்றவனை;

புனல் ஏந்து கண்ணினராய்ப் போற்றிடுவார் வினை போமே - நீரைத் தாங்கிய கண்ணர்களாகி வழிபடுவார்தம் வினை தீரும்;


3)

சிரமேந்தி உண்பலிக்குத் திரிவானை அடிபணிந்து

சுரர்வேண்ட அமுதீந்து சுடுநஞ்சை உண்டானை

அரண்மூன்றை எய்தானை ஆடானை மேயானைச்

சரண்நீயென் றடைந்தாரைச் சாராவல் வினைதானே.


சிரம் ஏந்தி உண்பலிக்குத் திரிவானை - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்கு உழல்பவனை; (பலி - பிச்சை);

அடிபணிந்து சுரர் வேண்ட அமுது ஈந்து சுடுநஞ்சை உண்டானை - திருவடியில் விழுந்து தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு அமுதத்தை அளித்துக், கொடிய சுட்டெரிக்கும் ஆலகாலத்தை உண்டவனை;

அரண் மூன்றை எய்தானை - முப்புரங்களை எய்தவனை;

ஆடானை மேயானைச் - திருவாடானையில் உறைகின்றவனை;

சரண் நீ என்று அடைந்தாரைச் சாரா வல்வினைதானே - "நீயே கதி" என்று அடைக்கலம் அடைந்தவர்களை வலிய வினைகள் நெருங்கா;


4)

பணிவானத்(து) இளமதியைப் படர்சடைமேல் ஒளிவீச

அணிவானை அருச்சுனனுக்(கு) அரும்படையை அளித்தானை

அணியாரும் பொழில்சூழ்ந்த ஆடானை மேயானை

மணியாரும் மிடற்றானை வாழ்த்தவினை மருவாவே.


பணி வானத்து இளமதியைப் படர்சடைமேல் ஒளிவீச அணிவானை - வணங்கிய பிறையைப் படர்ந்த சடைமேல் சூடியவனை;

அருச்சுனனுக்கு அரும்-படையை அளித்தானை - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவனை;

அணி ஆரும் பொழில் சூழ்ந்த ஆடானை மேயானை - அழகிய சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்றவனை;

மணி ஆரும் மிடற்றானை வாழ்த்த வினை மருவாவே - நீலமணியைக் கண்டத்தில் உடையவனை வாழ்த்தினால் வினைகள் நெருங்கா; (மிடறு - கண்டம்);


5)

குழையாரும் செவியானைக் கூவிளஞ்சேர் முடியானை

உழையாரும் கையானை உமையொருபால் உடையானை

அழகாரும் பொழில்சூழ்ந்த ஆடானை மேயானை

இழையாரும் மார்பினனை ஏத்தவினை எய்தாவே.


குழை ஆரும் செவியானைக் - காதில் குழையை அணிந்தவனை;

கூவிளம் சேர் முடியானை - திருமுடிமேல் வில்வத்தை அணிந்தவனை; (கூவிளம் - வில்வம்);

உழை ஆரும் கையானை - கையில் மானை ஏந்தியவனை; (உழை - மான்);

உமை ஒருபால் உடையானை - உமையை ஒரு கூறாக உடையவனை; (பால் - பகுதி; பக்கம்);

அழகு ஆரும் பொழில் சூழ்ந்த ஆடானை மேயானை - அழகிய சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்றவனை;

இழை ஆரும் மார்பினனை ஏத்த வினை எய்தாவே - மார்பில் பூணூல் அணிந்த பெருமானைத் துதித்தால் வினைகள் அடையா; (இழை - நூல்; இங்கே பூணூல்);


6)

குரவைத்தூ வெண்மதியைக் குஞ்சிமிசைப் புனைந்தானைப்

பரவைக்கார் நஞ்சுண்டு பாலித்த பெருமானை

அரவத்தார் பூண்டானை ஆடானை மேயானைப்

பரவித்தாள் பணிவாரைப் பழவினைநோய் பற்றாவே.


குரவைத் தூ-வெண்மதியைக் குஞ்சிமிசைப் புனைந்தானைப் - குராமலரையும் தூய வெண்திங்களையும் தலைமேல் சூடியவனை; (குரவு - குராமலர்); (குஞ்சி - தலை);

பரவைக் கார்-நஞ்சு உண்டு பாலித்த பெருமானை - கடலில் தோன்றிய கரிய விடத்தை உண்டு காத்த பெருமானை; (பரவை - கடல்); (கார் - கருமை); (பாலித்தல் - காத்தல்);

அரவத்-தார் பூண்டானை - பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவனை; (தார் - மாலை);

ஆடானை மேயானைப் பரவித் தாள் பணிவாரைப் பழவினைநோய் பற்றாவே - திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானைப் போற்றித் திருவடியை வணங்குபவர்களைப் பழவினைகளும் நோய்களும் பிடித்து வருத்தமாட்டா (அவை நீங்கும்);


7)

குளிராற்றுச் சடைமீது கொன்றைமலர் புனைந்தானைத்

தெளியார்க்குத் தெரியாத செஞ்சுடரைத் தேன்மாந்தி

அளியார்க்கும் பொழில்சூழ்ந்த ஆடானை மேயானை

ஒளிநீற்றை அணிந்தானை ஓம்பவினை ஒழிவாமே.


குளிர்-ஆற்றுச் சடைமீது கொன்றைமலர் புனைந்தானைத் - குளிர்ந்த கங்கை இருக்கும் சடையின்மேல் கொன்றைமலரைச் சூடியவனை;

தெளியார்க்குத் தெரியாத செஞ்சுடரைத் - தெளிவற்ற அறிவினர்களால் அறியப்படாத சிவந்த ஜோதியை;

தேன் மாந்தி அளி ஆர்க்கும் பொழில் சூழ்ந்த ஆடானை மேயானை - தேனை உண்டு வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்றவனை; (மாந்துதல் - உண்தல்); (அளி - வண்டு);

ஒளி-நீற்றை அணிந்தானை ஓம்ப வினை ஒழிவு ஆமே - ஒளிவீசும் திருநீற்றைப் பூசிய பெருமானைப் போற்றினால் வினைகள் தீரும்;


8)

வெஞ்சினத்த இராவணனை விரலூன்றி அடர்த்தானை

அஞ்சியவன் அழுதேத்த அருள்செய்த அம்மானை

அஞ்சுரும்பார் பொழில்சூழ்ந்த ஆடானை மேயானை

நெஞ்சுருகி நாடோறும் நினைவார்தம் வினைவீடே.


வெஞ்சினத்த இராவணனை விரல் ஊன்றி அடர்த்தானை - கடுங்கோபம் உடைய இராவணனைக் கயிலைமேல் ஒரு திருப்பாத-விரலை ஊன்றி நசுக்கியவனை; (அப்பர் தேவாரம் - 6.59.8 - "வெஞ்சினத்த வேழமது உரிசெய்தாரும்");

அஞ்சி அவன் அழுது ஏத்த அருள்செய்த அம்மானை - பின், இராவணன் மிகவும் அஞ்சி நெடுங்காலம் அழுது தொழவும் அவனுக்கு அருள்புரிந்த தலைவனை;

அம்-சுரும்பு ஆர் பொழில் சூழ்ந்த ஆடானை மேயானை - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானை; (அம் - அழகு); (ஆர்த்தல் - ஒலித்தல்);

நெஞ்சு உருகி நாள்தோறும் நினைவார்தம் வினை வீடே - மனம் கசிந்து தினமும் எண்ணி வழிபடும் அன்பர்களது வினைகள் நீங்கும்;


9)

முன்பேனம் அன்னமடி முடியறியாச் சோதியனை

இன்பால்நெய் தயிராடும் இறையவனை மறையவனை

அன்பாயி பிரியானை ஆடானை மேயானைப்

பொன்போலும் மேனியனைப் போற்றவினை போயறுமே.


முன்பு ஏனம் அன்னம் அடிமுடி அறியாச் சோதியனை - முன்னர்ப் பன்றி வடிவு ஏற்ற திருமாலாலும் அன்னப்பறவை உருக்கொண்ட பிரமனாலும் அடியையும் முடியையும் அறிய ஒண்ணாத ஜோதியை; (ஏனம் - பன்றி);

இன்-பால் நெய் தயிர் ஆடும் இறையவனை - இனிய பால், நெய், தயிர் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் இறைவனை;

மறையவனை - வேதியனை;

அன்பாயி பிரியானை - அன்பாயி என்ற திருநாமம் உடைய உமை பிரியாதவனை; (* அன்பாயி - இத்தலத்து இறைவி திருநாமம்);

ஆடானை மேயானை - திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானை;

பொன் போலும் மேனியனைப் போற்ற வினை போய்-அறுமே - பொன்னார் மேனியனை வழிபட்டால் வினைகள் நீங்கும்;


10)

சீலமிலார் செப்புகின்ற சிறுநெறிகள் பேணாமல்

கோலமென நீறணியும் கொள்கையினார்க்(கு) அன்பினனை

ஆலநிழல் அமர்ந்தானை ஆடானை மேயானைச்

சூல(ம்)மழு ஏந்திதனைத் தொழவென்றும் சுகந்தானே.


சீலம் இலார் செப்புகின்ற சிறுநெறிகள் பேணாமல் கோலம் என நீறு அணியும் கொள்கையினார்க்கு அன்பினனை - குணமற்றவர்கள் சொல்லும் தீநெறிகளைப் பேணாமல் திருநீற்றைப் பூசும் கொள்கை உடைய பக்தர்களுக்கு அன்பு உடையவனை;

ஆலநிழல் அமர்ந்தானை - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை;

ஆடானை மேயானைச் - திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானை;

சூலம் மழு ஏந்திதனைத் தொழ என்றும் சுகம்தானே - சூலத்தையும் மழுவையும் ஏந்தியவனைத் தொழுதால் என்றும் இன்பமே;


11)

சிலந்திதனை அரசாளச் செய்தானைச் சக்கரத்தால்

சலந்தரனைத் தடிந்தானைச் சங்கரனைச் சடையிடையே

அலம்புநதி உடையானை ஆடானை மேயானை

வலந்திகழும் விடையானை வாழ்த்தியவர் வாழ்வாரே.


சிலந்திதனை அரசாளச் செய்தானைச் - சிலந்தியைச் செங்கட்சோழன் ஆக்கியவனை; (இது திருவானைக்கா வரலாறு);

சக்கரத்தால் சலந்தரனைத் தடிந்தானைச் - ஜலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித்தவனை; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);

சங்கரனைச் - நன்மை செய்பவனை;

சடையிடையே அலம்பு-நதி உடையானை - சடையில் ஒலிக்கின்ற கங்கையை உடையவனை; (அலம்புதல் - ஒலித்தல்);

ஆடானை மேயானை - திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானை;

வலம் திகழும் விடையானை வாழ்த்தியவர் வாழ்வாரே - வெற்றியுடைய இடபவாகனம் உடையவனை வாழ்த்தும் அடியவர்கள் வாழ்வார்கள்; (வலம் - வலிமை; வெற்றி);


வி. சுப்பிரமணியன்

----------- --------------