2017-04-01
V.040 - மாடு ஆர்வத்தோடு - தனிப்பாடல்
---------------------------------
(அறுசீர் விருத்தம் - மா மா தேமா - அரையடி வாய்பாடு)
மாடார் வத்தோ டுற்று .. வள்ளால் என்றி ரந்தும்
போடார் கையைப் பார்த்துப் .. பொருமும் நிலையை நீங்கி
வாடா மலரால் உன்றன் .. மலர்த்தாள் வாழ்த்தி வாழச்
சேடார் கயிலை வெற்பாய் .. சிறியேற் கருள்செய் யாயே.
மாடு ஆர்வத்தோடு உற்று, "வள்ளால்" என்று இரந்தும் - (ஒருவர் பொருள் தருவார் என்று எண்ணி) ஆவலோடு அவரிடம் சென்று, "வள்ளலே" என்று விளித்து யாசித்தும்; (மாடு - பக்கம்; ஏழாம்வேற்றுமை உருபு); (ஆர்வம் - விருப்பம்); (உறுதல் - சென்றடைதல்); (வள்ளால் - வள்ளலே);
போடார் கையைப் பார்த்துப் பொருமும் நிலையை நீங்கி - (இரப்பவர்க்கு ஒன்றும்) கொடாதவர்கள் கையை நோக்கி வருந்துகின்ற நிலையை விட்டு; (பொருமுதல் - துன்புறுதல்);
வாடா மலரால் உன்றன் மலர்த்தாள் வாழ்த்தி வாழச் - என்றும் வாடாது இருக்கும் பாமாலைகளால் உன் திருவடியை வழிபட்டு உய்ய;
சேடு ஆர் கயிலை-வெற்பாய், சிறியேற்கு அருள்செய்யாயே - உயர்ந்த கயிலைமலையானே, சிறியேனாகிய எனக்கு அருள்புரிவாயாக; (சேடு - பெருமை; உயரம்); (வெற்பு - மலை);
(சுந்தரர் தேவாரம் - 7.34.8 -
எள் விழுந்திடம் பார்க்குமாகிலும் .. ஈக்கும் ஈகிலனாகிலும்
வள்ளலே எங்கள் மைந்தனே என்று .. வாழ்த்தினும் கொடுப்பாரிலை
புள்ளெலாம் சென்று சேரும் பூம்புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
அள்ளற்பட்டு அழுந்தாது போவதற்கு .. யாதும் ஐயுறவு இல்லையே)
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment