Saturday, April 12, 2025

P.386 - தென்காசி - வென்றிக் கொடிமீது

2017-04-08

P.386 - தென்காசி

---------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

வென்றிக் கொடிமீது விடையை உடையானைக்

கொன்றைச் சடையானைக் கோலப் பிறையானைத்

தென்றல் மணம்வீசத் திகழும் தென்காசி

நின்ற பெருமானை நினைய நலமாமே.


வென்றிக் கொடிமீது விடையை உடையானைக் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடையவனை;

கொன்றைச் சடையானைக் - கொன்றைமலரைச் சடைமேல் அணிந்தவனை;

கோலப் பிறையானைத் - அழகிய பிறைச்சந்திரனை அணிந்தவனை;

தென்றல் மணம்வீசத் திகழும் தென்காசி - தென்றலில் மணம் கமழ விளங்குகின்ற தென்காசியில்;

நின்ற பெருமானை நினைய நலமாமே - நிலைத்து உறைகின்ற பெருமானை நினைந்தால் நன்மை உண்டாகும்;


2)

எருக்கோ டிளநாகம் ஏறும் முடியானைச்

சுருக்கோ டடைகூற்றைத் தொலைய உதைகோனைத்

திருக்கோ புரமோங்கித் திகழும் தென்காசி

இருக்கோ திறையானை எண்ண நலமாமே.


எருக்கோடு இளநாகம் ஏறும் முடியானைச் - திருமுடிமேல் எருக்கமலரையும் இளம்பாம்பையும் அணிந்தவனை; (சம்பந்தர் தேவாரம் - கோளறு பதிகம் - 2.85.9 - சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து");

சுருக்கோடு அடை கூற்றைத் தொலைய உதை கோனைத் - கையில் சுருக்குக்கயிற்றை ஏந்தி அடைந்த காலனை அழியும்படி உதைத்த தலைவனை; (கூற்று - நமன்); (தொலைதல் - அழிதல்);

திருக்கோபுரம் ஓங்கித் திகழும் தென்காசி - மிக உயர்ந்த கோபுரம் திகழும் தென்காசிக் கோயிலில் உறைகின்ற;

இருக்கு ஓது இறையானை எண்ண நலம் ஆமே - வேதம் ஓதும் இறைவனை எண்ணினால் நன்மை உண்டாகும்; (இருக்கு - வேதம்);


3)

ஊனார் தலையேந்தி ஊணுக் குழல்வானை

மானார் விழிமாதை வாமம் மகிழ்வானைத்

தேனார் பொழில்சூழ்ந்து திகழும் தென்காசி

வானோர் பெருமானை வாழ்த்த நலமாமே.


ஊன் ஆர் தலை ஏந்தி ஊணுக்கு உழல்வானை - மாமிசம் பொருந்திய பிரமனது மண்டையோட்டைக் கையில் தாங்கிப் பிச்சைக்குத் திரிபவனை; (ஊன் - மாமிசம்); (ஆர்தல் - பொருந்துதல்); (ஊண் - உணவு);

மான் ஆர் விழி மாதை வாமம் மகிழ்வானைத் - மான் போன்ற விழியை உடைய உமையை இடப்பக்கம் விரும்பியவனை; (ஆர்தல் - ஒத்தல்); (வாமம் - இடப்பக்கம்);

தேன் ஆர் பொழில் சூழ்ந்து திகழும் தென்காசி - வண்டுகள் ஒலிக்கின்ற தேன்மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்து விளங்கும் தென்காசிக் கோயிலில் உறைகின்ற; (தேன் - மது; வண்டு); (ஆர்தல் - நிறைதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

வானோர் பெருமானை வாழ்த்த நலம் ஆமே - தேவர்கள் தலைவனை வாழ்த்தினால் நன்மை உண்டாகும்;


4)

தக்கன் அவன்வேள்வி தகர்த்த பெரியானைத்

திக்கெட் டுடையானைச் செங்கண் விடையானைச்

செக்கர்ச் சடையானைத் திகழும் தென்காசி

முக்கட் பெருமானை முன்ன நலமாமே.


தக்கன்-அவன் வேள்வி தகர்த்த பெரியானைத் - தக்கன் செய்த வேள்வியை அழித்த பெரியவனை; (தக்கனவன் - தக்கன்; அவன் - பகுதிப்பொருள்விகுதி);

திக்கு எட்டு உடையானைச் - எட்டுத்-திக்கிற்கும் தலைவனை (விசுவநாதனை); எட்டுத் திசைகளே உடை ஆனவனை (திகம்பரனை); (திகம்பரன் - திசைகளை ஆடையாக உடையவன்; திக்கு - திசை; அம்பரம் - ஆடை);

செங்கண் விடையானைச் - சினக்கின்ற இடபத்தை ஊர்தியாக உடையவனை;

செக்கர்ச் சடையானைத் - செஞ்சடை உடையவனை; (செக்கர் - சிவப்பு);

திகழும் தென்காசி - விளங்கும் தென்காசிக் கோயிலில் உறைகின்ற;

முக்கட் பெருமானை முன்ன நலமாமே - நெற்றிக்கண்ணனை நினைந்தால் நன்மை உண்டாகும்; (முன்னுதல் - கருதுதல்; நினைதல்);


5)

ஆவின் தயிர்பால்நெய் ஆடி மகிழ்வானை

ஏவைந் துடைவேளை எரித்த நுதலானைச்

சேவொன் றுடையானைத் திகழும் தென்காசித்

தூவெண் பிறையானைச் சொல்ல நலமாமே.


ஆவின் தயிர் பால் நெய் ஆடி மகிழ்வானை - பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவனை;

ஏ ஐந்துடை வேளை எரித்த நுதலானைச் - ஐந்து (மலர்)அம்புகளை உடைய மன்மதனை எரித்த நெற்றியனை (நெற்றிக்கண்ணனை); (ஏவைந்து = + ஐந்து; - அம்பு); (வேள் - காமன்);

சே ஒன்று உடையானைத் - எருது ஒன்றை வாகனமாக உடையவனை;

திகழும் தென்காசித் - விளங்கும் தென்காசிக் கோயிலில் உறைகின்ற;

தூ-வெண் பிறையானைச் சொல்ல நலம் ஆமே - தூய வெண்பிறையை அணிந்த பெருமானைத் துதித்தால் நன்மை உண்டாகும்;


6)

ஓத்தின் பொருளானை உரகம் கயிறாகக்

கோத்த தலைமாலை குலவும் முடியானைத்

தீர்த்தச் சடையானைத் திகழும் தென்காசிக்

கூத்தப் பெருமானைக் கூற நலமாமே.


ஓத்தின் பொருளானை - வேதத்தின் பொருளாக உள்ளவனை; (ஓத்து - வேதம்);

உரகம் கயிறாகக் கோத்த தலைமாலை குலவும் முடியானைத் - பாம்பையே கயிறாகக்கொண்டு கோத்த மண்டையோட்டுமாலையைத் திருமுடியில் அணிந்தவனை; (உரகம் - பாம்பு); (குலவுதல் - விளங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.107.7 - "பணிகயிறா உடைதலை கோத்துழல் மேனியன்");

தீர்த்தச் சடையானைத் - கங்கைச்சடையானை; (தமிழ்ச்சொல்போல் இங்கே ச் மிக்குப் புணர்ந்தது);

திகழும் தென்காசிக் - விளங்கும் தென்காசிக் கோயிலில் உறைகின்ற;

கூத்தப் பெருமானைக் கூற நலம் ஆமே - கூத்தாடும் பெருமானைப் போற்றினால் நன்மை உண்டாகும்;


7)

நறைமென் மலரோதி நங்கை உலகம்மை

இறைவன் தனைஎன்றும் இறவாப் புகழானைச்

சிறைவண் டறைசோலை திகழும் தென்காசி

உறையும் பெருமானை உன்ன நலமாமே.


நறை மென்-மலர் ஓதி நங்கை உலகம்மை இறைவன்தனை - வாசனை மிக்க மென்மையான மலர்க்கூந்தலை உடையவளும் உலகம்மை என்ற திருநாமத்தை உடையவளுமான உமைக்குத் தலைவனை; (நறை - வாசனை); (ஓதி - கூந்தல்); (சம்பந்தர் தேவரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின"); (* உலகம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);

என்றும் இறவாப் புகழானைச் - என்றும் அழியாத புகழ் உடையவனை; (இறத்தல் - சாதல்);

சிறைவண்டு அறை சோலை திகழும் தென்காசி உறையும் பெருமானை உன்ன நலம் ஆமே - சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை விளங்கும் தென்காசிக் கோயிலில் உறைகின்ற பெருமானை எண்ணினால் நன்மை உண்டாகும்; (சிறை -சிறகு); (அறைதல் - ஒலித்தல்); (உன்னுதல் - எண்ணுதல்; நினைதல்);


8)

ஒருத்தன் உறைவெற்பை உன்னா தெறிமூடன்

செருக்கை விரலூன்றிச் செற்ற கழலானைத்

திருத்தச் சடையானைத் திகழும் தென்காசி

நிருத்தப் பெருமானை நினைய நலமாமே.


ஒருத்தன் உறை வெற்பை உன்னாது எறி மூடன் செருக்கை - ஒப்பற்ற சிவபெருமான் உறைகின்ற கயிலைமலையைச் சிறிதும் யோசியாமல் பெயர்த்து எறிய முயன்ற அறிவிலியான இராவணனது ஆணவத்தை; (ஒருத்தன் - ஒப்பற்றவன்); (வெற்பு - மலை); (உன்னுதல் - நினைதல்);

விரல் ஊன்றிச் செற்ற கழலானைத் - ஒரு விரலைக் கயிலைமலைமேல் ஊன்றி அழித்த திருப்பாதனை; (அப்பர் தேவாரம் - 6.84.10 - "அரக்கன்முடி இடியச் செற்ற சீரரவக் கழலானை");

திருத்தச் சடையானைத் - அழகிய சடையில் கங்கையை உடையவனை; (திருத்தம் - தீர்த்தம்; அழகு; தீர்த்தம் - பரிசுத்தம்; புண்ணியநீர்);

திகழும் தென்காசி - விளங்கும் தென்காசிக் கோயிலில் உறைகின்ற;

நிருத்தப் பெருமானை நினைய நலமாமே - நடராஜப் பெருமானை எண்ணினால் நன்மை உண்டாகும்; (நிருத்தம் - கூத்து; நடனம்);


9)

அரிக்கும் அயனுக்கும் அறிதற் கரியானை

எரிக்கும் நுதலானை எண்ணார் புரமூன்றைச்

சிரித்துச் சுடுவானைத் திகழும் தென்காசி

விரித்த சடையானை வேண்ட நலமாமே.


அரிக்கும் அயனுக்கும் அறிதற்கு அரியானை - திருமால் பிரமன் இவர்களால் அறியப்படாதவனை;

எரிக்கும் நுதலானை - (தீயை உமிழ்ந்து) எரிக்கும் நெற்றிக்கண்ணனை; (நுதல் - நெற்றி);

எண்ணார் புரம் மூன்றைச் சிரித்துச் சுடுவானைத் - பகைவர்களது முப்புரங்களைச் சிரித்து எரித்தவனை; (எண்ணார் - பகைவர்);

திகழும் தென்காசி - விளங்கும் தென்காசிக் கோயிலில் உறைகின்ற;

விரித்த சடையானை வேண்ட நலம் ஆமே - விரிசடை அண்ணலை வழிபட்டால் நன்மை உண்டாகும்;


10)

பாரோர் நெறிமாற்றப் பலபொய் பகர்வஞ்சர்

தீரார் வினைநோயே திங்கட் சடையானைச்

சீரார் கழலானைத் திகழும் தென்காசி

ஊரா உடையானை ஓத நலமாமே.


பாரோர் நெறி மாற்றப் பல பொய் பகர் வஞ்சர் தீரார் வினைநோயே - உலக மக்களின் வழியை மாற்றுவதற்காகப் பல பொய்களைச் சொல்லும் வஞ்சகர்கள் பிறவிப்பிணியிலிருந்து விடுபடார்;

திங்கட் சடையானைச் - சடைமேல் சந்திரனை அணிந்தவனை;

சீர் ஆர் கழலானைத் - புகழ் மிக்க திருவடியை உடையவனை;

திகழும் தென்காசி ஊரா உடையானை ஓத நலம் ஆமே - விளங்கும் தென்காசியே ஊராக அங்கு என்றும் நீங்காது உறைகின்ற சிவபெருமானைப் போற்றிப் பாடினால் நன்மை உண்டாகும்; (ஊரா - ஊராக; கடைக்குறை விகாரம்);


11)

அணியும் தாராக அரவம் பூண்டானைப்

பணியும் சுரர்வாழப் பரிந்து புரமெய்த

திணிய சிலையானைத் திகழும் தென்காசி

மணியை மறவாமல் வாழ்த்த நலமாமே.


அணியும் தாராக அரவம் பூண்டானைப் - அணிகின்ற மாலை போலப் பாம்பை அணிந்தவனை; (தார் - மாலை);

பணியும் சுரர் வாழப் பரிந்து - வணங்கிய தேவர்கள் வருத்தம் தீரும்படி அவர்களுக்கு இரங்கி;

புரம் எய்த திணிய சிலையானைத் - முப்புரங்களை ஒரு கணை ஏவி எரித்த உறுதியான மேருமலையால் ஆன வில்லை ஏந்தியவனை; (திணிய - திண்ணிய - உறுதியான; திண்மை - வலிமை; உறுதி); (சிலை - வில்; மலை); (அப்பர் தேவாரம் - 6.54.8 - "திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட போரானை");

திகழும் தென்காசி மணியை மறவாமல் வாழ்த்த நலம் ஆமே - விளங்கும் தென்காசியில் உறைகின்ற மணி போன்ற சிவபெருமானைப் போற்றிப் பாடினால் நன்மை உண்டாகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment