2017-06-03
N.045 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2017
----------------
(ஷட்பதி அமைப்பு -
விளம் மா விளம் மா
விளம் மா விளம் மா
விளம் மா விளம் மா விளம் மாங்காய்)
கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும்
படகென ஆகப் பரிவொடு பதிகத்
தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவுள்ளார்
உடலது தேய்ந்தும் உடையவன் வெற்பை
அடையமு யன்ற திடமனத் தொண்டர்
மடலவிழ் மலரின் மணமிகு வாக்கின் மன்னவர் கழல்போற்றி.
கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும் படகு என ஆகப் - கடலில் ஆழ்த்துவதற்காகப் பிணித்த அந்தக் கல்லே படகு போல ஆகும்படி;
பரிவொடு பதிகத்தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவு உள்ளார் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானது திருநாமத்தைப் பக்தியோடு பதிகப் பாமாலையில் சொன்ன துணிவு உடையவர்; (பரிவு - அன்பு; பக்தி); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே");
உடல்அது தேய்ந்தும் உடையவன் வெற்பை அடைய முயன்ற திட-மனத் தொண்டர் - தமது உடல் தேய்ந்தாலும் ஈசன் உறையும் கயிலைமலையைச் சென்றடைய முயன்ற மன-உறுதி மிக்க தொண்டர் அவர்; (பெரியபுராணம் - "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்");
மடல் அவிழ் மலரின் மணம் மிகு வாக்கின்-மன்னவர் கழல் போற்றி - இதழ்கள் விரியும் பூவினும் மணம் மிக்கவான, திருநாவுக்கரசரது திருவடிகளுக்கு வணக்கம். (மடல் - பூவின் இதழ்); (வாக்கின் மன்னவர் - திருநாவுக்கரசர்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment