Saturday, April 19, 2025

P.389 - வேதிகுடி - நரி அன்று நல்ல பரி

2017-04-20

P.389 - வேதிகுடி

(திருவையாறு அருகே உள்ள தலம்)

---------------------------------

(எழுசீர்ச் சந்தவிருத்தம் - தனதான தான, தனதான தான, தனதான தான தனனா - சந்தம்; முதற்சீர் "தானான" என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")


1)

நரியன்று நல்ல பரியென்று கூடல் நகரத்தில் ஆடல் புரிவான்

எரிகின்ற தீயின் நிறமேறு கின்ற எழில்மேனி காட்டும் இறைவன்

பரிகின்ற தாயின் மிகநல்லன் உம்பர் பணிகின்ற நம்பன் இடமாம்

விரிகின்ற பூவின் விரைநாறு சோலை புடைசூழ்ந்த வேதி குடியே.


நரி அன்று நல்ல பரி என்று கூடல் நகரத்தில் ஆடல் புரிவான் - முன்னர் நரிகளைக் குதிரைகள் ஆக்கி மதுரையில் திருவிளையாடல் புரிந்தவன்; (பரி - குதிரை); (கூடல் நகரம் - மதுரை);

எரிகின்ற தீயின் நிறம் ஏறுகின்ற எழில் மேனி காட்டும் இறைவன் - எரியும் தீப் போன்ற செந்நிறம் திகழும் அழகிய திருமேனியை உடைய இறைவன்;

பரிகின்ற தாயின் மிக நல்லன் - தாயைவிட மிகவும் இரக்கம் உடைய நல்லவன்;

உம்பர் பணிகின்ற நம்பன் இடம் ஆம் - தேவர்களால் வழிபடப்படுபவனும் நம்பன் (விரும்பத்தக்கவன்) என்ற திருநாமம் உடையவனும் ஆன சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

விரிகின்ற பூவின் விரை நாறு சோலை புடை சூழ்ந்த வேதிகுடியே - மலர்கின்ற பூக்களின் வாசனை கமழும் பொழில்களால் சூழப்பெற்ற திருவேதிகுடி ஆகும்;


2)

அடியென்றும் ஓதும் அருமாணி வாழ அபயங்கொ டுத்த கழலான்

முடிவென்றும் இல்லி முதலில்லி வேதம் மொழிகின்ற நாவன் உமைகோன்

துடியொன்றை ஏந்தி நடமாடும் எந்தை சுடர்திங்கள் சூடி இடமாம்

விடிகின்ற வேளை குயில்கோழி வாழ்த்தும் விளிகேட்கும் வேதி குடியே.


அடி என்றும் ஓதும் அரு-மாணி வாழ அபயம் கொடுத்த கழலான் - திருவடியை என்றும் மறவாமல் வழிபடும் அரிய மறைச்சிறுவரான மார்க்கண்டேயர் வாழும்படி அவருக்கு அபயம் அளித்த கழல் அணிந்த திருவடியினன்;

முடிவு என்றும் இல்லி - இறப்பு இல்லாதவன்;

முதல் இல்லி - பிறப்பு இல்லாதவன்;

வேதம் மொழிகின்ற நாவன், உமைகோன் - நான்மறையைப் பாடியருளியவன்; உமைக்குக் கணவன்;

துடி ஒன்றை ஏந்தி நடமாடும் எந்தை - உடுக்கையைக் கையில் ஏந்தித் திருநடம் செய்கின்ற எம் தந்தை;

சுடர்-திங்கள் சூடி இடம் ஆம் - ஒளிவீசும் சந்திரனைச் சூடிய சிவபெருமான் உறையும் தலம் ஆவது; (சுடர்தல் - ஒளிவிடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.105.5 - "துன்று வார்சடைச் சுடர்மதி");

விடிகின்ற வேளை குயில் கோழி வாழ்த்தும் விளி கேட்கும் வேதிகுடியே - காலையில் குயில்களும் கோழிகளும் வாழ்த்துகின்ற ஒலி கேட்கின்ற திருவேதிகுடி ஆகும்;


3)

வரையீன்ற மங்கை மலரோதி முல்லை நகையாளை வாம(ம்) மகிழ்வான்

நரையார்ந்த ஏற்றன் நரையென்றும் இல்லி நதிசூடு கின்ற தலைவன்

திரையார்ந்த வேலை உமிழ்நஞ்சை உண்ட திருநீல கண்டன் இடமாம்

விரையார்ந்த காவில் முரல்வண்டி னங்கள் விளையாடு வேதி குடியே.


வரை ஈன்ற மங்கை, மலர்-ஓதி, முல்லை-நகையாளை வாமம் மகிழ்வான் - மலைக்கு மகளும், மலர்க்கூந்தலை உடையவளும், முல்லையரும்பு போன்ற பற்களை உடையவளுமான உமையை இடப்பக்கம் விரும்பியவன்; (வரை - மலை); (ஓதி - கூந்தல்); (நகை - பல்); (வாமம் - இடப்பக்கம்);

நரை ஆர்ந்த ஏற்றன் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவன்; (நரை - வெண்மை); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்);

நரை என்றும் இல்லி - என்றும் இளமையோடு இருப்பவன்; (நரை - மூப்பு; வெளுத்தமயிர்)

நதி சூடுகின்ற தலைவன் - கங்காதரன்;

திரை ஆர்ந்த வேலை உமிழ் நஞ்சை உண்ட திருநீலகண்டன் இடம் ஆம் - அலைகள் மிக்க பாற்கடல் உமிழ்ந்த விடத்தை உண்ட நீலகண்டனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது; (திரை - அலை); (வேலை - கடல்);

விரை ஆர்ந்த காவில் முரல் வண்டு-இனங்கள் விளையாடு வேதிகுடியே - மணம் மிக்க சோலைகளில் முரல்கின்ற வண்டுகள் விளையாடுகின்ற திருவேதிகுடி ஆகும்; (விரை - வாசனை); (கா - சோலை); (முரல்தல் - வண்டுகள் ஒலிசெய்தல்);


4)

அங்கங்கள் பூண்டு சுடுகானில் ஆடும் அரனால நஞ்சை அமுதா

நுங்குங்க ளத்தன் நுனைமூன்றி லங்கு வடிவேலை ஏந்தி சடைமேல்

அங்குள்ள நாக(ம்) மதியோடு லாவ அணிகின்ற அண்ணல் இடமாம்

வெங்கள்ளை உண்ட வரிவண்டின் ஆர்ப்பு மிகுகின்ற வேதி குடியே.


அங்கங்கள் பூண்டு சுடுகானில் ஆடும் அரன் - எலும்புகளை அணிந்து சுடுகாட்டில் ஆடும் ஹரன்; (அங்கம் - எலும்பு);

ஆல-நஞ்சை அமுதா நுங்கும் களத்தன் - ஆலகால விடத்தை அமுதமாக விழுங்கிய கண்டத்தை உடையவன்; (நுங்குதல் - விழுங்குதல்); (அமுதா - அமுதாக; கடைக்குறை விகாரம்); (களம் - கண்டம்); (அப்பர் தேவாரம் - 5.72.4 - "ஆலநஞ்சுண்ட கண்டத்தமர் நீலன்");

நுனை மூன்று இலங்கு வடி-வேலை ஏந்தி - மூன்று நுனிகளை உடைய சூலத்தை ஏந்தியவன்; (நுனை - முனை; நுனி); (வடி - கூர்மை);

சடைமேல் அங்கு உள்ள நாகம் மதியோடு உலாவ அணிகின்ற அண்ணல் இடம் ஆம் - சடையின்மேல் உள்ள பாம்பு சந்திரனோடு நெருங்கி இருக்கும்படி அணியும் தலைவனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

வெங்கள்ளை உண்ட வரிவண்டின் ஆர்ப்பு மிகுகின்ற வேதிகுடியே - விரும்பத்தக்க மதுவை உண்ட வரிவண்டுகளின் ஒலி மிகுந்திருக்கும் திருவேதிகுடி ஆகும்; (வெங்கள் - விரும்பத்தக்க தேன்); (ஆர்ப்பு - ஒலி); (சம்பந்தர் தேவாரம் - 1.26.1 - "வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை"); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.12 - "அணிகுழல்மேல் வண்டார்ப்ப");


5)

அறிவார்ந்த நால்வர் அவர்கேட்க ஆலின் அடிவீற்றி ருந்த அறவன்

பொறியார்ந்த நாக அரைநாணன் வெந்த பொடியாடும் எந்தை புனிதன்

மறியேந்து கையன் மணமார்ந்த கொன்றை மலர்மாலை மார்பன் இடமாம்

வெறியார்ந்த காவில் நறையுண்ட வண்டின் அறைமல்கு வேதி குடியே.


அறிவு ஆர்ந்த நால்வர் அவர் கேட்க ஆலின் அடி வீற்றிருந்த அறவன் - அறிவிற் சிறந்த சனகாதியர்கள் நால்வர்க்கும் அறம் உரைப்பதற்குக் கல்லால-மரத்தின்கீழே குருவான அறவடிவினன்; (அறவன் - அற-வடிவினன்);

பொறி ஆர்ந்த நாக-அரைநாணன் - புள்ளிகள் பொருந்திய நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (பொறி - புள்ளி - பாம்பின் படத்தில் உள்ள புள்ளிகள்);

வெந்த பொடி ஆடும் எந்தை புனிதன் - திருநீற்றால் அபிஷேகம் செய்யப்பெறுகின்ற எம் தந்தை, தூயவன்;

மறி ஏந்து கையன் - மான்கன்றைக் கையில் ஏந்தியவன்; (மறி - மான் முதலியவற்றின் கன்று);

மணம் ஆர்ந்த கொன்றை மலர்மாலை மார்பன் இடம் ஆம் - வாசனை மிக்க கொன்றைமலர் மாலையை மார்பில் அணிந்த சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

வெறி ஆர்ந்த காவில் நறை உண்ட வண்டின் அறை மல்கு வேதிகுடியே - மணம் மிக்க சோலையில் மதுவை உண்ட வண்டின் ஓசை மிகுகின்ற திருவேதிகுடி ஆகும்; (வெறி - வாசனை); (நறை - தேன்); (அறை - ஓசை);


6)

முடிமீது நீரன் முடிவற்ற மூர்த்தி மறையங்கம் ஆறு மொழிவான்

கொடிபோல்ம ருங்குல் உமைகூறன் உம்பர் குறைதீர்த்த நீல மிடறன்

பொடியேறு மேனி மிசைநாகம் ஏற்ற புனிதன்பு ராணன் இடமாம்

மிடிதீர வேண்டி அடியார்கள் கூடி அடிபோற்று வேதி குடியே.


முடிமீது நீரன் - கங்காதரன்;

முடிவற்ற மூர்த்தி - அழிவற்றவன்;

மறை அங்கம் ஆறு மொழிவான் - நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் மொழிந்தவன்;

கொடிபோல் மருங்குல் உமை கூறன் - கொடி போன்ற சிற்றிடை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்; (மருங்குல் - இடை);

உம்பர் குறை தீர்த்த நீல மிடறன் - தேவர்களது குறையைத் தீர்த்த நீலகண்டன்; (உம்பர் - தேவர்); (மிடறு - கண்டம்);

பொடி ஏறு மேனிமிசை நாகம் ஏற்ற புனிதன் புராணன் இடம் ஆம் - திருநீற்றைப் பூசிய மேனியின்மேல் பாம்பை அணிந்த தூயவனும் பழையவனும் ஆன சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

மிடி தீர வேண்டி அடியார்கள் கூடி அடிபோற்று வேதிகுடியே - வறுமையும் துன்பமும் தீர்வதற்காகப் பக்தர்கள் திரண்டு திருவடியை வழிபடும் திருவேதிகுடி ஆகும்; (மிடி - வறுமை; துன்பம்);


7)

அழையாது தக்கன் அவவேள்வி செய்ய அதுகண்ட ழித்த பெருமான்

மழையார்மி டற்றன் வரைவில்லை ஏந்தி மதில்மூன்றெ ரித்த ஒருவன்

குழையொன்றி லங்கு செவியன்கு னிந்த குளிர்திங்கள் சூடி இடமாம்

விழைகின்ற வாழ்வு பெறவேண்டி அன்பர் தொழுகின்ற வேதி குடியே.


அழையாது தக்கன் அவவேள்வி செய்ய அது கண்டு அழித்த பெருமான் - ஈசனை அவமதித்துத் தக்கன் வேள்வி செய்ததைக் கண்டு அதனை அழித்த பெருமான்;

மழை ஆர் மிடற்றன் - மேகம் போல் கரிய கண்டத்தை உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);

வரை-வில்லை ஏந்தி மதில் மூன்று எரித்த ஒருவன் - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்த ஒப்பற்றவன்; (வரை - மலை); (மதில் - கோட்டை);

குழை ஒன்று இலங்கு செவியன் - ஒரு காதில் குழையை அணிந்தவன்; (அர்த்தநாரீஸ்வரன்);

குனிந்த குளிர்-திங்கள் சூடி இடம் ஆம் - வணங்கிய, வளைந்த, குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த சிவபெருமான் உறையும் தலம் ஆவது; (குனிதல் - வளைதல்; வணங்கி வழிபடுதல்);

விழைகின்ற வாழ்வு பெறவேண்டி அன்பர் தொழுகின்ற வேதிகுடியே - விரும்பிய வாழ்வைப் பெறுவதற்காகப் பக்தர்கள் வந்து வழிபடுகின்ற திருவேதிகுடி ஆகும்; (விழைதல் - விரும்புதல்);


8)

பொல்லாவ ரக்கன் மலைபேர்த்த போது புயவன்மை செற்ற விரலன்

கல்லாலின் நீழல் அறமோதி ஓடு கலனாக ஏந்தி உழல்வான்

நில்லாத கங்கை நிலையாக நின்ற சடையான்ம கிழ்ந்த இடமாம்

மெல்லோதி யார்கள் மலர்தூவி இன்பம் மிகவெய்து வேதி குடியே.


பொல்லா அரக்கன் மலை பேர்த்த போது புய-வன்மை செற்ற விரலன் - பொல்லாத அரக்கனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தபொழுது, அவன் புஜங்களின் வலிமையை ஒரு விரலை ஊன்றி அழித்தவன்; (வன்மை - வலிமை); (செறுதல் - அழித்தல்);

கல்லாலின் நீழல் அறம் ஓதி - கல்லால-மரத்தின்கீழ் அறம் உரைத்தவன்;

ஓடு கலனாக ஏந்தி உழல்வான் - பிரமன் மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாக ஏந்தித் திரிகின்றவன்;

நில்லாத கங்கை நிலையாக நின்ற சடையான் மகிழ்ந்த இடம் ஆம் - மிக விரைந்து பாய்ந்த கங்கையைச் சடையில் நிற்கவைத்தவனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

மெல்-ஓதியார்கள் மலர் தூவி இன்பம் மிக எய்து வேதிகுடியே - மென்மையான கூந்தலை உடைய பெண்கள் பூக்களால் வழிபாடு செய்து மிகுந்த இன்பத்தை அடைகின்ற திருவேதிகுடி ஆகும்; (ஓதி - கூந்தல்);


9)

மாலாகி மாலு(ம்) மலரோனு(ம்) நேட வளர்சோதி ஆன பரமன்

நாலான வேத இசைபாடு நாவன் நரையேற்றன் உம்பர் பரவ

ஆலாலம் உண்ட அருளாளன் அங்கை மழுவாளன் நின்ற இடமாம்

மேலான வாழ்வு பெறவேண்டி அன்பர் மிடைகின்ற வேதி குடியே.


மால் ஆகி மாலும் மலரோனும் நேட வளர் சோதி ஆன பரமன் - யார் பரம் என்று அறியாமல் திருமாலும் பிரமனும் தேடுமாறு எல்லையின்றி வளர்ந்த ஜோதி ஆன பரமன்; (மால் - 1. அறியாமை; 2. திருமால்);

நாலு ஆன வேத இசை பாடு நாவன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.111.6 - "அருமறை இசைபாடிச் சூடிள மதியினர்");

நரை-ஏற்றன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

உம்பர் பரவ ஆலாலம் உண்ட அருளாளன் - தேவர்கள் துதிக்க ஆலகாலத்தை உண்டு அருளியவன்;

அங்கை மழுவாளன் நின்ற இடம் ஆம் - கையில் மழுவை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

மேலான வாழ்வு பெறவேண்டி அன்பர் மிடைகின்ற வேதிகுடியே - சிறந்த வாழ்வைப் பெறுவதற்காகப் பக்தர்கள் நிறைகின்ற திருவேதிகுடி ஆகும்; (மிடைதல் - நிறைதல்; செறிதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.11.3 - "வேதியர் ஓதி மிடைகாழி இருந்தானை ஏத்துமின்");


10)

தகவின்றி நாளும் அவமேபு ரிந்து தடுமாறு வார்சொல் மதியேல்

திகழ்கின்ற திங்கள் அணிகொன்றை யோடு திரையார்ந்த கங்கை புனைவான்

நிகரொன்றும் இல்லி நகர்மூன்றெ ரித்த ஒருகுன்ற வில்லி இடமாம்

மிகுகின்ற அன்பில் நெகுநெஞ்சர் வாழ்த்தி மிடிநீங்கு வேதி குடியே.


தகவு இன்றி நாளும் அவமே புரிந்து தடுமாறுவார் சொல் மதியேல் - நன்மையை அறியாமல் நாள்தோறும் இழிந்த செயல்களே செய்து நெறிதவறி தடுமாறுகின்றவர்கள் சொல்லும் பேச்சை மதியாதே (மதிக்கவேண்டா); (தகவு - நற்குணம்; நடுவுநிலை; தெளிவு);

திகழ்கின்ற திங்கள், அணி கொன்றையோடு, திரை ஆர்ந்த கங்கை புனைவான் - ஒளிவீசும் சந்திரனையும், அழகிய கொன்றைமலரையும், அலை மிக்க கங்கை-ஆற்றையும் அணிந்தவன்; (திரை - அலை);

நிகர் ஒன்றும் இல்லி - எவ்வொப்பும் இல்லாதவன்;

நகர் மூன்று எரித்த, ஒரு குன்ற-வில்லி இடம் ஆம் - ஒரு மலையை வில்லாக ஏந்தி முப்புரங்களையும் எரித்த சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

மிகுகின்ற அன்பில் நெகு-நெஞ்சர் வாழ்த்தி மிடி நீங்கு வேதிகுடியே - பொங்கும் அன்பில் உருகுகின்ற மனத்தினரான பக்தர்கள் ஈசனை வாழ்த்தித் தங்கள் வறுமையையும் துன்பத்தையும் நீங்குகின்ற திருவேதிகுடி ஆகும்; (நெகுதல் - உருகுதல்; கரைதல்); (மிடி - வறுமை; துன்பம்);


11)

எண்ணாமல் அம்பு தொடுகாமன் ஆகம் இலனாக நோக்கு நுதலான்

விண்ணோர்கள் நாதன் விரையார்ந்த பாதன் விடையேறு போதன் ஒருபால்

பெண்ணான நேசன் அளவற்ற தேசன் அனைவர்க்கும் ஈசன் இடமாம்

வெண்ணீறு பூசி அடிவாழ்த்தும் அன்பர் வினைதீர்க்கும் வேதி குடியே.


எண்ணாமல் அம்பு தொடு காமன் ஆகம் இலன் ஆக நோக்கு நுதலான் - சிறிதும் எண்ணிப் பாராமல் ஈசன்மேல் மலர்க்கணையை ஏவிய மன்மதனை அனங்கன் ஆக்கிய நெற்றிக்கண்ணன்; (தொடுத்தல் - எய்தல்); (ஆகம் - உடல்); (நுதல் - நெற்றி);

விண்ணோர்கள் நாதன் - தேவதேவன்;

விரை ஆர்ந்த பாதன் - வாசம் கமழும் மலர்ப்பாதன்; (விரை - வாசனை);

விடை ஏறு போதன் - இடப-வாகனம் உடையவன்; ஞானவடிவினன்;

ஒருபால் பெண் ஆன நேசன் - திருமேனியில் ஒரு பக்கம் உமையை ஏற்ற அன்பன்;

அளவு அற்ற தேசன் - அளவில்லாத ஒளி உருவினன்; (தேசம் - தேசு - தேஜஸ் - ஒளி);

அனைவர்க்கும் ஈசன் இடம் ஆம் - எல்லார்க்கும் ஈசனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

வெண்ணீறு பூசி அடி வாழ்த்தும் அன்பர் வினை தீர்க்கும் வேதிகுடியே - திருநீற்றைப் பூசித் திருவடியை வழிபடும் பக்தர்களின் வினையைத் தீர்க்கின்ற திருவேதிகுடி ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment