Sunday, April 20, 2025

P.394 - திருமங்கலம் - நாறணி சொன்மலரால்

2017-05-09

P.394 - திருமங்கலம்

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானதனா தனதானன தானதனா;

"தானதனா" என்பது "தானதான" என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.57.1 - "விடையவன் விண்ணுமண்ணும்")

(சுந்தரர் தேவாரம் - 7.100.1 - "தானெனை முன்படைத்தான்")

(லால்குடி அருகே உள்ள தலம்)


1)

நாறணி சொன்மலரால் நலம்ஆர்கழல் போற்றிநின்றேன்

ஏறணி வெல்கொடியாய் இமையோர்தனி நாயகனே

சேறணி செய்புடைசூழ் திருமங்கல நன்னகரில்

ஆறணி செஞ்சடையாய் அடியேனிடர் தீர்த்தருளே.


நாறு அணி சொல்மலரால் நலம் ஆர் கழல் போற்றி-நின்றேன் - மணம் கமழும் அழகிய பாமாலைகளால் நன்மை பொருந்திய திருவடியை நான் போற்றுகின்றேன்; (நாறுதல் - மணத்தல்); (அணி - அழகு); (நிற்றல் - தொடர்ந்துசெய்தல்);

ஏறு அணி வெல்கொடியாய் - வெற்றியுடைய இடபக்கொடியை உடையவனே; (ஏறு - எருது);

இமையோர் தனி நாயகனே - தேவர்களுக்கெல்லாம் தலைவனே; ஒப்பற்றவனே; (தனி - ஒப்பற்ற);

சேறு அணி செய் புடைசூழ் திருமங்கல நன்னகரில் - சேறு திகழும் வயல் சூழ்ந்த திருமங்கல நகரில் உறைகின்ற; (செய் - வயல்);

ஆறு அணி செஞ்சடையாய் - சிவந்த சடையில் கங்கையை அணிந்தவனே;

அடியேன் இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


2)

பங்கமில் இன்-தமிழால் பலநாளும் உனைப்பணிந்தேன்

திங்களை அஞ்சடைமேல் திகழப்புனை அங்கணனே

செங்கயல் பாய்வயல்சூழ் திருமங்கல நன்னகரில்

தங்கிய சங்கரனே தமியேனிடர் தீர்த்தருளே.


பங்கம் இல் இன்-தமிழால் பல நாளும் உனைப் பணிந்தேன் - குற்றமற்ற இனிய தமிழ்ப் பாமாலைகளால் பல நாளும் உன்னை வழிபடுகின்றேன்; (பங்கம் - குற்றம்);

திங்களை அஞ்சடைமேல் திகழப் புனை அங்கணனே - சந்திரனை அழகிய சடையின்மேல் ஒளிவீசுமாறு அணிந்த அருளாளனே; (அம் - அழகு);

செங்கயல் பாய் வயல் சூழ் திருமங்கல நன்னகரில் தங்கிய சங்கரனே - செங்கயல்-மீன்கள் பாயும் வளமிக்க வயல் சூழ்ந்த திருமங்கல நகரில் உறைகின்ற சங்கரனே;

தமியேன் இடர் தீர்த்து அருளே - தனித்து வாடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (தமியேன் - தனித்திருக்கும் நான்); (இடர் - துன்பம்);


3)

பண்பயில் நற்றமிழால் பலவாறுனை ஏத்திநின்றேன்

கண்புனை நெற்றியனே கறைஆர்ந்த மிடற்றினனே

தெண்புனல் பாய்வயல்சூழ் திருமங்கல நன்னகரில்

தண்புனல் ஆர்சடையாய் தமியேனிடர் தீர்த்தருளே.


பண் பயில் நற்றமிழால் பலவாறு உனை ஏத்தி-நின்றேன் - இசை பொருந்திய தேவாரம் முதலிய பாமாலைகள் பாடிப் பலவிதமாக உன்னைத் துதித்தேன்;

கண் புனை நெற்றியனே - நெற்றிக்கண்ணனே;

கறை ஆர்ந்த மிடற்றினனே - நீலகண்டனே; (ஆர்தல் - பொருந்துதல்); (மிடறு - கண்டம்);

தெண்-புனல் பாய் வயல் சூழ் திருமங்கல நன்னகரில் - தெளிந்த நீர் பாயும் வளமிக்க வயல் சூழ்ந்த திருமங்கல நகரில் உறைகின்ற;

தண்-புனல் ஆர் சடையாய் - குளிர்ந்த கங்கையைச் சடையில் உடையவனே;

தமியேன் இடர் தீர்த்து அருளே - தனித்து வாடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


4)

விழுமிய சொன்மலரால் விரைஆர்கழல் போற்றிநின்றேன்

மழுவமர் கையினனே மறைபாடிய நாவினனே

செழுமலர் ஆர்பொழில்சூழ் திருமங்கல நன்னகரில்

தழுவுமை நாயகனே தமியேனிடர் தீர்த்தருளே.


விழுமிய சொல்மலரால் விரை ஆர் கழல் போற்றி-நின்றேன் - சிறந்த பாமாலைகளால் மணம் மிக்க திருவடியைப் போற்றுகின்றேன்; (விரை - வாசனை); (ஆர்தல் - நிறைதல்);

மழு அமர் கையினனே - மழுவைக் கையில் ஏந்தியவனே; (அப்பர் தேவாரம் - 4.56.4 - "மழுவமர் கையர் போலும்");

மறை பாடிய நாவினனே - வேதங்களைப் பாடி அருளியவனே;

செழுமலர் ஆர் பொழில் சூழ் திருமங்கல நன்னகரில் - செழுமையான பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமங்கல நகரில் உறைகின்ற;

தழுவு-உமை நாயகனே - தழுவும் உமைக்குக் கணவனே;

தமியேன் இடர் தீர்த்து அருளே - தனித்து வாடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


5)

ஞானியர் சொல்தமிழால் நலம்ஆர்கழல் வாழ்த்திநின்றேன்

கூனியல் ஒண்பிறையும் குரவும்பொலி வேணியனே

தேனிய லும்பொழில்சூழ் திருமங்கல நன்னகரில்

மீனியல் கண்ணிபங்கா வினையேனிடர் தீர்த்தருளே.


ஞானியர் சொல்-தமிழால் நலம் ஆர் கழல் வாழ்த்தி-நின்றேன் - ஞானம் மிக்க பெரியோர் பாடியருளிய தமிழ்ப் பாமாலைகளால் நலம் மிக்க உன் திருவடியை வாழ்த்துகின்றேன்;

கூன் இயல் ஒண்-பிறையும் குரவும் பொலி வேணியனே - வளைந்த, ஒளிவீசும் சந்திரனையும் குராமலரையும் சடையில் அணிந்தவனே; (கூன் - வளைவு); (இயல்தல் - பொருந்துதல்); (குரவு - குராமலர்); (வேணி - சடை);

தேன் இயலும் பொழில் சூழ் திருமங்கல நன்னகரில் - வண்டுகள் தங்கும் சோலை சூழ்ந்த திருமங்கல நகரில் உறைகின்ற; (இயல்தல் - தங்குதல்);

மீன் இயல் கண்ணி பங்கா - மீன் போல் கண்ணை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே; (இயல்தல் - ஒத்தல்);

வினையேன் இடர் தீர்த்து அருளே - மிக்க வினைகள் உடையவனான என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


6)

குறையறு செந்தமிழால் குரைஆர்கழல் கூறிநின்றேன்

பிறையணி பிஞ்ஞகனே பிடிபோல்நடை மங்கைபங்கா

சிறையளி ஆர்பொழில்சூழ் திருமங்கல நன்னகரில்

உறைதரு சாமவேதா உலவாவிடர் தீர்த்தருளே.


குறை அறு செந்தமிழால் குரை ஆர் கழல் கூறி-நின்றேன் - குற்றமற்ற ( / குறைகளைத் தீர்க்கும்) செந்தமிழான தேவாரம் திருவாசகம் முதலியன பாடி, ஒலிக்கும் கழல் அணிந்த உன் திருவடியைப் புகழ்ந்து போற்றினேன்; (அறுதல் - இல்லாமற் போதல்; அறுத்தல் - இல்லாமற் செய்தல்); (குரைத்தல் - ஒலித்தல்); (கூறுதல் - சொல்லுதல்);

பிறை அணி பிஞ்ஞகனே - சந்திரனை அணிந்தவனே; பிஞ்ஞகன் (தலைக்கோலம் அணிந்தவன்) என்ற நாமம் உடையவனே;

பிடி போல் நடை மங்கை பங்கா - பெண்யானை போல் அழகிய நடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே; (பிடி - பெண்யானை);

சிறை-அளி ஆர் பொழில் சூழ் திருமங்கல நன்னகரில் உறைதரு சாம வேதா - (அழகிய / மென்மையான) சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருமங்கல நகரில் உறைகின்ற சாமவேதனே; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (தருதல் - ஒரு துணைவினை); (* சாமவேதீஸ்வரர் - திருமங்கலத்தில் இறைவன் திருநாமம்);

உலவா இடர் தீர்த்து அருளே - தீராத துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (உலத்தல் - அழிதல்; நீங்குதல்);


7)

பொய்யறு வண்தமிழால் புகழ்ஆர்கழல் போற்றிநின்றேன்

கையினில் மூவிலைவேல் கனல்ஏந்திய கண்ணுதலே

செய்யினில் நெல்மலிந்த திருமங்கல நன்னகரில்

தையலொர் கூறுடையாய் தமியேனிடர் தீர்த்தருளே.


பொய் அறு வண்-தமிழால் புகழ் ஆர் கழல் போற்றி-நின்றேன் - பொய் அற்றதும் (= மெய்ம்மொழி ஆனதும்), பொய்யை நீக்கும் வளம் மிக்கதும் ஆன தேவாரம் பாடி உன் புகழ் மிக்க திருவடியை வழிபட்டேன்; (அறுதல் - இல்லாமற் போதல்; அறுத்தல் - இல்லாமற் செய்தல்); (வண்டமிழ் - வண் தமிழ்; வண்மை - வளம்);

கையினில் மூவிலை-வேல், கனல் ஏந்திய கண்ணுதலே - கையில் திரிசூலத்தையும் தீயையும் ஏந்திய நெற்றிக்கண்ணனே;

செய்யினில் நெல் மலிந்த திருமங்கல நன்னகரில் - வயலில் நெற்பயிர் மிகுந்த திருமங்கல நகரில் உறைகின்ற; (செய் - வயல்);

தையல் ஒர் கூறு உடையாய் - உமையை ஒரு கூறாக உடையவனே; (தையல் - பெண்); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

தமியேன் இடர் தீர்த்து அருளே - தனித்து வாடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


8)

அறிவிலன் ஐயிருவாய் அழஓர்விரல் வைத்தவனே

பொறியர வார்த்தவனே புரிநூலணி மார்பினனே

செறிபொழில் சூழ்ந்தழகார் திருமங்கல நன்னகரில்

வெறிகமழ் கொன்றையினாய் வினையேனிடர் தீர்த்தருளே.


அறிவு இலன் ஐயிரு-வாய் அழ ஓர் விரல் வைத்தவனே - அறிவில்லாத இராவணனது பத்து-வாய்களும் அழும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவனே; (ஐயிரு = 5x2 = 10);

பொறி-அரவு ஆர்த்தவனே - புள்ளிகளை உடைய நாகத்தை அரைநாணாகக் கட்டியவனே; (பொறி - புள்ளி); (ஆர்த்தல் - கட்டுதல்);

புரி-நூல் அணி மார்பினனே - பூணூலை மார்பில் அணிந்தவனே;

செறி-பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருமங்கல நன்னகரில் - அடர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருமங்கல நகரில் உறைகின்ற; (செறிதல் - அடர்தல்);

வெறி கமழ் கொன்றையினாய் - மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே; (வெறி - வாசனை);

வினையேன் இடர் தீர்த்து அருளே - மிக்க வினைகள் உடையவனான என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


9)

மாலய னார்க்கரிய வளர்சோதிய தாயவனே

காலனை மார்பிலுதை கழலாய்சுடு காடமர்ந்தாய்

சேலுகள் செய்யணிந்த திருமங்கல நன்னகரில்

ஆலம துண்டவனே அடியேனிடர் தீர்த்தருளே.


மால் அயனார்க்கு அரிய வளர் சோதிஅது ஆயவனே - திருமாலுக்கும் பிரமனுக்கும் காணற்கு அரிய எல்லையற்ற ஜோதி ஆனவனே; (சோதியது - ஜோதி; அது - பகுதிப்பொருள்விகுதி);

காலனை மார்பில் உதை கழலாய் - கழல் அணிந்த திருவடியால் நமனை மார்பில் உதைத்தவனே;

சுடுகாடு அமர்ந்தாய் - சுடுகாட்டை விரும்பியவனே; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

சேல் உகள் செய் அணிந்த திருமங்கல நன்னகரில் - சேல்மீன்கள் பாயும் வயல் சூழ்ந்த திருமங்கல நகரில் உறைகின்ற; (உகள்தல் - தாவுதல்); (செய் - வயல்);

ஆலம்அது உண்டவனே - விடம் உண்டவனே (= நீலகண்டனே);

அடியேன் இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


10)

தீம்பர்கள் நீறணியாச் சிறியோர்அறி யாதவனே

பாம்பணி மேனியினாய் படருஞ்சடை மேற்பிறையாய்

தேம்பொழில் சூழ்ந்தழகார் திருமங்கல நன்னகரில்

ஓம்பிடு வார்துணைவா ஒழியாவிடர் தீர்த்தருளே.


தீம்பர்கள் நீறு அணியாச் சிறியோர் அறியாதவனே - திருநீற்றைப் பூசமாட்டாத துஷ்டர்களாலும் கீழோர்களாலும் அறியப்படாதவனே; (தீம்பர் - துஷ்டர்); (சிறியோர் - அற்பர்); (அப்பர் தேவாரம் - 6.95.6 - "அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்");

பாம்பு அணி மேனியினாய் - பாம்புகளைத் திருமேனிமேல் அணிந்தவனே;

படரும் சடைமேல் பிறையாய் - படர்ந்த சடையின்மேல் சந்திரனைச் சூடியவனே;

தேம்-பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருமங்கல நன்னகரில் - தேன் (/வாசனை) நிறைந்த சோலை சூழ்ந்த அழகிய திருமங்கல நகரில் உறைகின்ற; (தேம் - தேன்; வாசனை);

ஓம்பிடுவார் துணைவா - வழிபடும் பக்தர்களின் துணைவனே;

ஒழியா இடர் தீர்த்து அருளே - தீராத துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (ஒழிதல் - தீர்தல்; அழிதல்; நீங்குதல்);


11)

பூவிடு வானவர்கள் புகல்நீயென மாலெரிகால்

ஏவினை எய்தரண்கள் எரிசெய்த மலைச்சிலையாய்

தேவியொர் பங்குடையாய் திருமங்கல நன்னகரில்

மேவிய வேதியனே வினையேனிடர் தீர்த்தருளே.


பூ இடு வானவர்கள் "புகல் நீ" என - பூக்களைத் தூவி வழிபட்ட தேவர்களெல்லாம், "நீயே எம் புகல்" என்று இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி; (புகல் - துணை; சரண்; பற்றுக்கோடு);

மால் எரி கால் ஏவினை எய்து அரண்கள் எரி செய்த மலைச்சிலையாய் - திருமால், தீ, வாயு இம்மூவரும் சேர்ந்து அமைந்த ஓர் அம்பினை எய்து முப்புரங்களை எரித்த மேருவில்லை ஏந்தியவனே; (எரி - நெருப்பு); (கால் - காற்று); (- அம்பு ); (சிலை - வில்);

தேவி ஒர் பங்கு உடையாய் - உமையை ஒரு பங்கில் உடையவனே; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

திருமங்கல நன்னகரில் மேவிய வேதியனே - திருமங்கல நகரில் உறைகின்ற வேதப்பொருளே / வேதம் பாடியவனே; (வேதியன் - வேதத்தால் புகழப்படுபவன்; வேதநாயகன்; வேதத்தை ஓதுபவன்);

வினையேன் இடர் தீர்த்து அருளே - மிக்க வினைகள் உடையவனான என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment