2017-04-01
P.385 - பொது - "வாடா மலர்"
---------------------------------
(இப்பதிகத்தில் எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி; ஒரே எதுகை)
(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப்")
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி");
முற்குறிப்பு: முதற்பாடலில் உள்ள "கருதித் தேர்ந்த தமிழென்ற" என்ற சொற்றொடரை இப்பதிகத்தின் மற்றப் பாடல்களிலும் அவ்வாறே இயைத்துக்கொள்க.
(ஒரு கவியரங்கத்தின் தலைப்பு "வாடா மலர்". அச்சமயத்தில் இயற்றிய பதிகம் இது)
1)
சூடா மணிபோல் மதிசூடீ .. தொழுத தேவர் துயர்தீர்க்கக்
கூடார் புரமூன் றெரிசெய்யக் .. குன்ற வில்லிற் கணைகோத்தாய்
காடா டிடமா உடையானே .. கருதித் தேர்ந்த தமிழென்ற
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
சூடாமணிபோல் மதிசூடீ - முடிமணி போலச் சந்திரனை அணிந்தவனே;
தொழுத தேவர் துயர் தீர்க்கக் கூடார் புரம் மூன்று எரிசெய்யக் குன்றவில்லில் கணை கோத்தாய் - வழிபட்ட தேவர்களது துன்பம் தீரும்படி, பகைவர்களான அசுரர்களின் முப்புரங்களையும் எரிக்க மேருமலையால் ஆன வில்லில் ஒரு கணையைக் கோத்தவனே; (கூடார் - பகைவர்);
காடு ஆடு-இடமா உடையானே - சுடுகாடே நடம் செய்யும் இடமாக உடையவனே;
கருதித் தேர்ந்த தமிழ் என்ற வாடா-மலரால் வழிபட்டேன் - தேர்ந்தெடுத்த தமிழ்ச்சொற்கள் என்ற வாடாத மலர்களால் விரும்பி வழிபட்டேன்; (கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்);
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
2)
கூடா கியவிவ் வுடம்புள்ளும் .. குடிகொண் டாயென் றுரைசெய்தார்
வீடா ராயும் பெரியோர்கள் .. வேதம் நாலும் மிகவேத்தும்
சேடா முந்நூல் திகழ்மார்பா .. செக்கர்ச் சடையாய் விடையேறீ
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
கூடு ஆகிய இவ்வுடம்புள்ளும் குடிகொண்டாய் என்று உரைசெய்தார் வீடு ஆராயும் பெரியோர்கள் - முக்திநெறியை ஆயும் பெரியவர்கள், "நீ இந்த ஊனுடம்பிலும் குடிகொண்டவன்" என்று சொல்வார்கள்;
வேதம் நாலும் மிக ஏத்தும் சேடா - நான்கு வேதங்களும் மிகவும் போற்றும் பெரியோனே; (சேடன் - உயர்ந்தவன்; "சேடன்" - "யாவும் ஒடுங்கிய பின், எஞ்சியிருப்பவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
முந்நூல் திகழ் மார்பா - மார்பில் பூணூல் அணிந்தவனே;
செக்கர்ச் சடையாய் - சிவந்த சடையை உடையவனே;
விடையேறீ - இடப-வாகனனே;
வாடா-மலரால் வழிபட்டேன் - உன்னைத் தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்;
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
3)
ஓடோர் கலனாக் கையேந்தி .. உண்ப லிக்குத் திரிவோனே
கோடா மனத்திற் குடிகொள்வாய் .. குளிர்ந்த கங்கை தனையென்றும்
வீடாச் சடையாய் கல்லால்கீழ் .. வேதம் விரித்த பெருமானே
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
ஓடு ஓர் கலனாக் கை ஏந்தி உண்பலிக்குத் திரிவோனே - பிரமன் மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாகக் கையில் ஏந்திப் பிச்சைக்கு உழல்பவனே;
கோடா-மனத்தில் குடிகொள்வாய் - அறத்தினின்றும் பிறழாதவர் மனத்தில் உறைபவனே; (கோடுதல் - வளைதல்; நெறிதவறுதல்);
குளிர்ந்த கங்கைதனை என்றும் வீடாச் சடையாய் - கங்கையைச் சடையில் நிரந்தரமாக அடைத்தவனே; (வீடுதல் - விடுதல்);
கல்லால்கீழ் வேதம் விரித்த பெருமானே - கல்லால-மரத்தின்கீழ் மறைப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தியே;
வாடா-மலரால் வழிபட்டேன் - உன்னைத் தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்;
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
4)
ஆடா மனத்தால் தவஞ்செய்த .. அருச்சு னற்குப் படையீந்த
வேடா வேலை விடமுண்ட .. விகிர்தா அடியார்க் கொருவைப்பு
மாடாய் நின்ற மாதேவா .. மலையான் மங்கை மணவாளா
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
ஆடா-மனத்தால் தவம் செய்த அருச்சுனற்குப் படை ஈந்த வேடா - அசையாத மனத்தால் தவம் செய்த அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைக் கொடுத்த வேடனே;
வேலை-விடம் உண்ட விகிர்தா - கடல்-விஷத்தை உண்டவனே; விகிர்தன் என்ற நாமம் உடையவனே;
அடியார்க்கு ஒரு வைப்புமாடாய் நின்ற மாதேவா - பக்தர்களுக்குச் சேமநிதியாகி நின்று காக்கும் மகாதேவனே; (வைப்பு மாடு - சேம வைப்பாக வைத்த செல்வம்); (திருவாசகம் - அதிசயப்பத்து - 8.26.1 - "வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று மனத்திடை உருகாதே");
மலையான் மங்கை மணவாளா - மலைமகளுக்குக் கணவனே;
வாடா-மலரால் வழிபட்டேன் - உன்னைத் தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்;
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
5)
பூடாய்ப் புல்லாய் மரமாகிப் .. புழுவாய்ப் பறக்கும் புள்ளாகி
ஆடாய் இன்னும் பலவாகி .. அளவில் பிறவி அவையெல்லாம்
கூடா வண்ணம் காப்பவனே .. கொன்றைச் சடையாய் குழைக்காதா
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
பூடாய்ப் புல்லாய் மரமாகிப் புழுவாய்ப் பறக்கும் புள்ளாகி ஆடாய் இன்னும் பலவாகி - சிறுசெடி,புல், மரம், புழு, பறவை, ஆடு, இன்னும் பற்பல ஆகி; (பூடு - சிறுசெடி); (புள் - பறவை); (திருவாசகம் - சிவபுராணம் - "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் ..... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்");
அளவு இல் பிறவி அவையெல்லாம் கூடா-வண்ணம் காப்பவனே - (அப்படி) எண்ணற்ற பிறவிகள் எல்லாம் அடையாதபடி அடியாரைக் காப்பவனே; (கூடுதல் - நேரிடுதல்);
கொன்றைச் சடையாய் குழைக்காதா - கொன்றைமலரைச் சடையில் அணிந்தவனே; காதில் குழையை அணிந்தவனே; (சுந்தரர் தேவாரம் - 7.89.1 - "குழைவிரவு வடிகாதா");
வாடா-மலரால் வழிபட்டேன் - உன்னைத் தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்;
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
6)
ஈடா எவரும் இல்லாத .. எந்தாய் உன்பொற் கழலல்லால்
நாடா மனத்திற் குடிகொள்ளும் .. நம்பா ஆவின் நறுநெய்பால்
ஆடா மகிழும் பெருமானே .. அரவத் தாராய் அவிர்சடையாய்
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
ஈடா எவரும் இல்லாத எந்தாய் - உனக்கு ஒப்பாக எவரும் இல்லாத எம் தந்தையே; (ஈடு - ஒப்பு);
உன் பொற்கழல் அல்லால் நாடா மனத்திற் குடிகொள்ளும் நம்பா - உன் பொன்னடியைத் தவிர வேறு எதனையும் விரும்பாத மனத்தில் கோயில்கொள்ளும் நம்பனே; (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - விரும்பத்தக்கவன்);
ஆவின் நறுநெய் பால் ஆடா மகிழும் பெருமானே - பசுவிடமிருந்து பெறப்படும் மணம் மிகுந்த நெய், பால் இவற்றினால் அபிஷேகத்தை விரும்பும் பெருமானே; (ஆடா - ஆடி; செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);
அரவத்-தாராய் - பாம்பை மாலையாக அணிந்தவனே;
அவிர்-சடையாய் - ஒளிவீசும் சடையை உடையவனே; (அவிர்தல் - பிரகாசித்தல்);
வாடா-மலரால் வழிபட்டேன் - உன்னைத் தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்;
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
7)
பாடா தவரும் உளரோநீ .. பாடப் பணித்தால் மும்மலங்கள்
மூடா முதல்வா அஞ்செழுத்தை .. மொழிவார் தம்மைக் கரைசேர்ப்பாய்
வீடா தவனே பிறப்பில்லாய் .. விடையைக் கொடிமேல் உடையானே
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
பாடாதவரும் உளரோ நீ பாடப் பணித்தால் - நீ பாடவைத்தால் பாடாதவர்களும் உண்டோ? (பணித்தல் - ஆணையிடுதல்); (அப்பர் தேவாரம் - 6.95.3 - "பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே")
மும்மலங்கள் மூடா-முதல்வா - இயற்கையிலே பாசங்கள் இல்லாத முதல்வனே;
அஞ்செழுத்தை மொழிவார்-தம்மைக் கரைசேர்ப்பாய் - பஞ்சாட்சரத்தைச் செபிக்கும் அன்பர்களைப் பிறவிக்கடல் கடப்பிக்கின்றவனே;
வீடாதவனே பிறப்பு இல்லாய் - இறப்பும் பிறப்பும் இல்லாதவனே; (வீடுதல் - சாதல்);
விடையைக் கொடிமேல் உடையானே - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனே;
வாடா-மலரால் வழிபட்டேன் - உன்னைத் தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்;
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
8)
ஓடாத் தேர்கண் டரக்கன்போய் .. உயர்வெற் பிடக்க முயலுங்கால்
பீடார் பாத விரலூன்றிப் .. பெரிதும் அவனை அழவைத்தாய்
பாடா உருகா அவன்வாழ்த்தப் .. படையும் ஈந்தாய் உனைநாளும்
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
ஓடாத் தேர் கண்டு அரக்கன் போய் உயர் வெற்பு இடக்க முயலுங்கால் - (வானிற் செல்லும்) தேர் ஓடாது கீழே இறங்கி நிற்கக் கண்டு, இராவணன் ஓடிச்சென்று கயிலைமலையைப் பெயர்க்க முயன்றபோது;
பீடு ஆர் பாத-விரல் ஊன்றிப் பெரிதும் அவனை அழவைத்தாய் - பெருமைமிக்க பாதவிரல் ஒன்றை மலைமேல் ஊன்றி அவனை நசுக்கி மிகவும் அழவைத்தவனே; (பீடு - பெருமை)
பாடா உருகா அவன் வாழ்த்தப் படையும் ஈந்தாய் - பாடி, உருகி அவன் உன்னைப் போற்றவும் இரங்கி அவனுக்கு வாளும் அளித்தவனே; (பாடா, உருகா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் - பாடி, உருகி); (படை - ஆயுதம்; உம் - எச்சவும்மை; - தசமுகனுக்குப் பெயர் ஆயுள் முதலியன அளித்ததையும் குறிப்பால் சுட்டியது);
உனை நாளும் வாடா-மலரால் வழிபட்டேன் - உன்னைத் தினமும் தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்;
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
9)
ஏடார் மலர்மேல் உறைவேதன் .. இருடீ கேசன் இவரெங்கும்
நேடா வாடா அடிபோற்ற .. நெருப்பாய் நின்ற பெருமானே
தோடார் செவியாய் சுடுநீற்றாய் .. சுருதிப் பொருளே உனையன்பால்
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
ஏடு ஆர் மலர்மேல் உறை வேதன் இருடீகேசன் இவர் - இதழ்கள் நிறைந்த தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால் என்ற இருவரும்; (வேதன் - பிரமன்); (இருடீகேசன் - ஹ்ருஷீகேசன் - திருமால்);
எங்கும் நேடா வாடா அடிபோற்ற நெருப்பாய் நின்ற பெருமானே - எவ்விடமும் தேடி, வாடி, உன் திருவடியை வாழ்த்தும்படி எல்லையற்ற ஜோதி உருவில் நின்றவனே; (நேடுதல் - தேடுதல்); (நேடா, வாடா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் - நேடி, வாடி);
தோடு ஆர் செவியாய் - (ஒரு காதில்) தோடு அணிந்தவனே;
சுடுநீற்றாய் - திருநீற்றைப் பூசியவனே;
சுருதிப் பொருளே - வேதப்பொருள் ஆனவனே; (சுருதி - வேதம்);
உனை அன்பால் வாடா-மலரால் வழிபட்டேன் - உன்னைப் பக்தியோடு தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்;
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
10)
கேடார் நெஞ்சர் தவமாகக் .. கிறிகள் பேசும் கீழோர்கள்
நாடா முக்கட் பெருமானே .. நரிகள் திரியும் சுடுகாட்டில்
ஆடா மகிழும் அரனேநின் .. அடியை அன்பால் அடியேனும்
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
கேடு ஆர் நெஞ்சர், தவமாகக் கிறிகள் பேசும் கீழோர்கள் நாடா முக்கட்-பெருமானே - குற்றம் நிறைந்த மனத்தினர், செய்கின்ற தவமாகப் பொய்களே பேசும் கீழோர்கள் அடையாத நெற்றிக்கண்ணனே; (கிறி - பொய்);
நரிகள் திரியும் சுடுகாட்டில் ஆடா மகிழும் அரனே - நரிகள் உலவும் சுடுகாட்டில் ஆடி மகிழும் ஹரனே; (ஆடா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் - ஆடி);
நின் அடியை அன்பால் அடியேனும் வாடா மலரால் வழிபட்டேன் - உன் திருவடியை அடியேனும் அன்பால் தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்;
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
11)
நீடா லயங்கள் பலகண்டு .. நின்னைப் பரவும் வழிசொன்னார்
நாடாள் மன்னற் கஞ்சாத .. நாவுக் கரசர் திருவாலங்
காடா கடம்பந் துறையானே .. கானூர் மேயாய் அவ்வண்ணம்
வாடா மலரால் வழிபட்டேன் .. வலிய வினைதீர்த் தருளாயே.
நீடு ஆலயங்கள் பல கண்டு நின்னைப் பரவும் வழி சொன்னார் - பெரிய உயர்ந்த கோயில்கள் பலவற்றைத் தரிசித்து, உன்னைப் போற்றும் நெறியை எடுத்துச் சொன்னார்;
நாடு ஆள் மன்னற்கு அஞ்சாத நாவுக்கரசர் - பல்லவ மன்னனுக்கும் அஞ்சாத திருநாவுக்கரசர்; (அப்பர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்");
திரு-ஆலங்காடா, கடம்பந்துறையானே, கானூர் மேயாய் - திருவாலங்காட்டில் உறைபவனே; திருக்கடம்பந்துறையில் (குளித்தலையில் கடம்பர் கோயில்) உறைபவனே; திருக்கானூரில் உறைபவனே; (அப்பர் தேவாரத்தில் பாடல் கிடைக்கப்பெற்றுள்ள தலங்களுள் சில இவை);
அவ்வண்ணம் வாடா-மலரால் வழிபட்டேன் - அவர் சொன்னபடி நானும் உன்னைத் தமிழ்ப்பாமாலைகளால் வழிபட்டேன்; (அப்பர் தேவாரம் - 6.54.3 - "பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை"); (அப்பர் தேவாரம் - 4.15.11 - "சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிச்சேர்த்தி எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவநாசமே.");
வலிய வினை தீர்த்து அருளாயே - என் வல்வினையை அழித்து அருள்வாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment