2017-05-25
P.399 - வான்மியூர்
---------------------------------
(எண்சீர் விருத்தம் - விளம் விளம் விளம் மா - அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.76.1 - "மலையினார் பருப்பதம்"); (சுந்தரர் தேவாரம் - 7.58.1 - "சாதலும் பிறத்தலும்"); (திருப்பள்ளியெழுச்சி - 8.20.1 - "போற்றிஎன் வாழ்முதல்")
1)
தேனிறை பொழிலணி திருப்பெரும் புலியூர் .. திருந்துநெய்த் தானமும் பழனமும் மேயார்
ஊனினை உருக்கிடும் வாசகம் ஓதும் .. உத்தமர் நெஞ்சினில் உகந்துறை ஒருவர்
மீனிகர் கண்ணியை மேனியிற் பாகம் .. விரும்பிய பெருமையர் வெண்பிறை முடியர்
வானினை முட்டிடக் கட்டடம் ஓங்கும் .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
தேன் நிறை பொழில் அணி திருப்பெரும்புலியூர், திருந்து நெய்த்தானமும், பழனமும் மேயார் - வண்டுகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருப்பெரும்புலியூரிலும், அழகிய திருநெய்த்தானத்திலும், திருப்பழனத்திலும் உறைகின்ற பெருமானார்;
ஊனினை உருக்கிடும் வாசகம் ஓதும் உத்தமர் நெஞ்சினில் உகந்து உறை ஒருவர் - ஊனையும் உருக்கும் திருவாசகத்தை ஓதும் தூய அன்பர்களது மனத்தில் விரும்பி உறையும் ஒப்பற்றவர்;
மீன் நிகர் கண்ணியை மேனியில் பாகம் விரும்பிய பெருமையர் - மீன் போன்ற கண்ணை உடைய உமையைத் திருமேனியில் ஒரு பங்காக விரும்பிய புகழ் உடையவர்;
வெண்பிறை முடியர் - திருமுடிமேல் வெண்திங்களைச் சூடியவர்;
வானினை முட்டிடக் கட்டடம் ஓங்கும் வான்மியூர் மேவிய பால்வணனாரே - வானளாவிய கட்டடங்கள் இருக்கின்ற திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்; (முட்டுதல் - மோதுதல்); (* பால்வணனார் - பால்வண்ணநாதர் - திருவான்மியூரில் ஈசன் திருநாமம்);
2)
கண்டியூர் கொள்ளிடக் கரைதனிற் கானூர் .. கடிமலர்ப் பொழிலணி கழுமலம் மேயார்
பண்டிகழ் தக்கனின் வேள்வியைச் செற்றுப் .. பகலவன் பல்லினை உகுத்தருள் பரமர்
பெண்டிகழ் மேனியர் எரிகணை ஒன்றால் .. பேரெயில் மூன்றையும் எய்தருள் இறைவர்
வண்டிரை வந்தெறி கடலதன் அயலே .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
கண்டியூர், கொள்ளிடக் கரைதனில் கானூர், கடி-மலர்ப்-பொழில் அணி கழுமலம் மேயார் - திருக்கண்டியூர், கொள்ளிடநதிக்கரையில் உள்ள திருக்கானூர், வாசமலர் மிக்க சோலை சூழ்ந்த திருக்கழுமலம் (சீகாழி) முதலிய தலங்களில் உறைகின்ற பெருமானார்;
பண்டு இகழ் தக்கனின் வேள்வியைச் செற்றுப், பகலவன் பல்லினை உகுத்து அருள் பரமர் - முன்பு, ஈசனை இகழ்ந்து வேள்வி செய்த தக்கனின் யாகத்தை அழித்து, அவ்வேள்வியில் பங்கேற்ற சூரியர்களில் ஒருவனது பல்லை உதிர்த்த பரமனார்;
பெண் திகழ் மேனியர் - உமைபங்கர்;
எரி-கணை ஒன்றால் பேர்-எயில் மூன்றையும் எய்து அருள் இறைவர் - எரிக்கின்ற அம்பு ஒன்றால் பெரிய, நகர்கின்ற முப்புரங்களையும் எய்த இறைவனார்; (எயில் - மதில்);
வண்-திரை வந்து எறி கடல் அதன் அயலே வான்மியூர் மேவிய பால்வணனாரே - வளம் மிக்க அலைகளை வந்து வீசுகின்ற கடலின் அருகே, திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்;
3)
நாகமொண் கழல்தொழு பாம்பணி நாலூர் .. நன்னிலம் வாஞ்சிய நன்னகர் மேயார்
சாகர நஞ்சினைப் போனகம் செய்து .. தனிக்கரு மணியெனத் தாங்கிய கண்டர்
ஆகமம் ஓதினார் அரவரை நாணர் .. அருமறைப் பொருள்விரி ஆலமர் செல்வர்
மாகடல் அலையெறி கரையதன் அயலே .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
நாகம் ஒண்-கழல் தொழு பாம்பணி, நாலூர், நன்னிலம், வாஞ்சிய நன்னகர் மேயார் - நாகம் (ஆதிசேஷன் / தனஞ்சயன்) திருவடியை வழிபட்ட பாம்பணி (திருப்பாதாளீச்சரம்), நாலூர், நன்னிலம், திருவாஞ்சியம் முதலிய தலங்களில் உறைகின்ற பெருமானார்;
சாகர-நஞ்சினைப் போனகம் செய்து தனிக் கருமணி எனத் தாங்கிய கண்டர் - கடல்-விஷத்தை உண்டு, ஒப்பற்ற நீலமணியைக் கண்டத்தில் தாங்கியவர்; (சாகரம் - கடல்); (போனகம் - உணவு);
ஆகமம் ஓதினார் - ஆகமங்களை ஓதி அருளியவர்;
அரவரை நாணர் - பாம்பை அரைநாணாகக் கட்டியவர்;
அருமறைப் பொருள் விரி ஆல் அமர் செல்வர் - கல்லால-மரத்தின்கீழ் அரிய வேதப்பொருளை உபதேசித்தவர்;
மா-கடல் அலை எறி கரை அதன் அயலே வான்மியூர் மேவிய பால்வணனாரே - அலைகளை வீசுகின்ற பெரிய கடலின் கரை அருகே, திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்;
4)
திங்களூர் கொட்டையூர் தென்குடித் திட்டை .. திருந்துதே வன்குடி சிவபுரம் மேயார்
அங்கமும் வேதமும் ஓதிய நாவர் .. ஐந்தலைப் பாம்பினைக் கச்சென ஆர்த்தார்
திங்களும் கங்கையும் திகழ்திரு முடிமேல் .. சிர(ம்)மலி மாலையும் சூடிய தலைவர்
வங்கமார் வார்கடற் கரையதன் அயலே .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
திங்களூர், கொட்டையூர், தென்குடித் திட்டை, திருந்து-தேவன்குடி, சிவபுரம் மேயார் - திங்களூர், கொட்டையூர், தென்குடித் திட்டை, திருந்து-தேவன்குடி, சிவபுரம் முதலிய தலங்களில் உறைகின்ற பெருமானார்;
அங்கமும் வேதமும் ஓதிய நாவர் - நால்வேதங்களையும் ஆறு-அங்கங்களையும் திருநாவால் ஓதியவர்;
ஐந்தலைப் பாம்பினைக் கச்சென ஆர்த்தார் - ஐந்து தலைகளையுடைய நாகத்தை அரையில் கச்சாகக் கட்டியவர்;
திங்களும் கங்கையும் திகழ்திரு முடிமேல் சிரம் மலி மாலையும் சூடிய தலைவர் - சந்திரனும் கங்கையும் திகழ்கின்ற திருமுடிமேல் மண்டையோட்டு மாலையையும் அணிந்த தலைவர்;
வங்கம் ஆர் வார் கடல் கரை அதன் அயலே வான்மியூர் மேவிய பால்வணனாரே - அலை மிக்க (/ மரக்கலங்கள் நிறைந்த) பெரிய கடலின் கரை அருகே, திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்; (வங்கம் - அலை; மரக்கலம்);
5)
செறிபொழிற் புறம்பயம் திருக்கரு காவூர் .. சேறைநீ லக்குடி கருக்குடி மேயார்
பொறிதிகழ் பாம்பினைத் தாரெனப் பூண்டு .. பூவையர் இடுபலி ஏற்றுழல் புனிதர்
வெறிகமழ் கூவிளம் வெண்பிறை அணியும் .. விரிசடை வித்தகர் மூவிலை வேலர்
மறிகடல் ஒலியெனக் கலிமலி வீதி .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
செறி-பொழில் புறம்பயம், திருக்கருகாவூர், சேறை, நீலக்குடி, கருக்குடி மேயார் - அடர்ந்த சோலை சூழ்ந்த திருப்புறம்பயம், திருக்கருகாவூர், திருச்சேறை, திருநீலக்குடி, திருக்கருக்குடி முதலிய தலங்களில் உறைகின்ற பெருமானார்;
பொறி திகழ் பாம்பினைத் தாரெனப் பூண்டு - புள்ளிகள் திகழும் நாகத்தை மாலையாக அணிந்து; (தார் - மாலை);
பூவையர் இடு பலி ஏற்று உழல் புனிதர் - பெண்கள் இடும் பிச்சையை ஏற்றுத் திரிகின்ற தூயவர்; (பூவை - பெண்);
வெறி கமழ் கூவிளம், வெண்பிறை அணியும் விரிசடை வித்தகர் - மணம் வீசும் வில்வத்தையும், வெண்திங்களையும் விரிசடைமேல் அணிந்த, வல்லவர்; (வித்தகன் - பேரறிவாளன்; வல்லவன்);
மூவிலை வேலர் - திரிசூலத்தை ஏந்தியவர்;
மறி-கடல் ஒலி எனக் கலி மலி வீதி வான்மியூர் மேவிய பால்வணனாரே - அலை பொங்கும் கடலின் ஒலி போலச் சத்தம் மிக்க வீதிகள் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்; (மறிதல் - கிளர்தல்); (கலி - ஒலி; சத்தம்); (மலிதல் - மிகுதல்);
6)
வாதவூர் ஆலவாய் திருப்புன வாயில் .. வண்திருப் பெருந்துறை மகிழ்ந்துறை வரதர்
போதணி சடையினர் பொடியணி மார்பர் .. பொருமத கரியுரி போர்த்திடு மைந்தர்
காதலி தனையொரு பங்கென உடையார் .. கண(ம்)முழ வார்த்திடத் திருநடம் இடுவார்
மாதவர் அகத்தியர் வந்தடி போற்ற .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
வாதவூர், ஆலவாய், திருப்புனவாயில், வண்-திருப்பெருந்துறை மகிழ்ந்து உறை வரதர் - திருவாதவூர், திருவாலவாய், திருப்புனவாயில், வளம் மிக்க திருப்பெருந்துறை முதலிய தலங்களில் உறைகின்றவர், வரங்கள் அருள்கின்ற பெருமானார்;
போது அணி சடையினர் - பூக்களைச் சடையில் அணிந்தவர்;
பொடி அணி மார்பர் - மார்பில் திருநீற்றைப் பூசியவர்;
பொரு மதகரி உரி போர்த்திடு மைந்தர் - போர் செய்த மதயானையின் தோலைப் போர்வையாகப் போர்த்த வீரர்; (பொருதல் - போர்செய்தல்); (உரி - தோல்);
காதலிதனை ஒரு பங்கு என உடையார் - உமையை ஒரு பாகமாக உடையவர்;
கணம் முழவு ஆர்த்திடத் திருநடம் இடுவார் - பூதகணங்கள் முழவுகளை ஒலிக்கத் திருக்கூத்து ஆடுபவர்;
மாதவர் அகத்தியர் வந்து அடி போற்ற வான்மியூர் மேவிய பால்வணனாரே - பெரும்-தவசியான அகஸ்தியர் வந்து வழிபட்ட, திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்; (* அகஸ்தியர் இங்கே வழிபாடு செய்தது - தலபுராணச் செய்தி);
7)
நெல்வயல் சூழ்திரு நின்றியூர் நல்லம் .. நெடுங்களம் மாந்துறை மகிழ்ந்துறை நிமலர்
கொல்விடம் உண்டொரு மணியணி கண்டர் .. குஞ்சிமேற் கூவிளம் கொக்கிற கணிவார்
வெல்விடை ஊர்தியர் பல்பெயர் உடையார் .. மென்மலர்க் கழலிணை வாழ்த்திடும் அடியார்
வல்வினை நோய்க்கொரு மருந்தென நின்றார் .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
நெல்வயல் சூழ் திரு-நின்றியூர், நல்லம், நெடுங்களம், மாந்துறை மகிழ்ந்து உறை நிமலர் - நெல் விளையும் வயல் சூழ்ந்த திருநின்றியூர், திருநல்லம், திருநெடுங்களம், மாந்துறை முதலிய தலங்களில் உறைகின்ற தூயர்;
கொல்-விடம் உண்டு ஒரு மணி அணி கண்டர் - கொல்லும் விஷத்தை உண்டு ஒப்பற்ற நீலமணியைக் கண்டத்தில் அணிந்தவர்; (ஒரு - ஒப்பற்ற);
குஞ்சிமேல் கூவிளம் கொக்கிறகு அணிவார் - தலைமேல் வில்வத்தையும் கொக்கிறகையும் அணிபவர்; (குஞ்சி - ஆண்களின் தலைமயிர்; தலை); (கூவிளம் - வில்வம்); (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);
வெல்-விடை ஊர்தியர் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவர்;
பல்-பெயர் உடையார் - பல திருநாமங்களை உடையவர்;
மென்-மலர்க்-கழலிணை வாழ்த்திடும் அடியார் வல்வினை நோய்க்கு ஒரு மருந்து என நின்றார் - மென்மையான மலர் போன்ற இரு-திருவடிகளைப் போற்றும் பக்தர்களது வலிய வினை என்ற நோய்க்கு ஒப்பற்ற மருந்து ஆனவர்; (* மருந்தீசர் - திருவான்மியூர் ஈசன் திருநாமங்களில் ஒன்று);
வான்மியூர் மேவிய பால்வணனாரே - அப்பெருமானார் திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்;
8)
தேரினைச் செலுத்திடச் சினந்துவெற் பெடுத்தான் .. சிரமொரு பத்தையும் நசுக்கிய விரலார்
சீரினைப் பாடிடக் கேட்டருள் செய்தார் .. சேவுகந் தேறிய தேவர்கள் தேவர்
நீரினைத் தேக்கிய நீள்சடை நிமலர் .. நிச்சயம் வீழ்த்திடும் எனக்கணை எய்த
மாரனைப் பொடிபட நோக்கிய கண்ணர் .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
தேரினைச் செலுத்திடச் சினந்து வெற்பு எடுத்தான் சிரம் ஒரு பத்தையும் நசுக்கிய விரலார் - வானில் செல்லும் தன் தேர் ஓடாமல் கீழே இறங்கியது கண்டு கோபித்துக் கயிலைமலையைப் பேர்த்துத் தூக்கிய இராவணனின் பத்துத்-தலைகளையும் ஒரு விரலை ஊன்றி நசுக்கியவர்;
சீரினைப் பாடிடக் கேட்டு அருள் செய்தார் - பின் அவன் ஈசனார் புகழைப் பாடக் கேட்டு அவனுக்கு இரங்கியவர்;
சே உகந்து ஏறிய, தேவர்கள் தேவர் - இடபத்தை வாகனமாக விரும்பியவர், தேவர்க்கெல்லாம் தேவர்; (சே - எருது);
நீரினைத் தேக்கிய நீள்சடை நிமலர் - சடையில் கங்கையைத் தடுத்தவர், தூயர்;
நிச்சயம் வீழ்த்திடும் எனக் கணை எய்த மாரனைப் பொடிபட நோக்கிய கண்ணர் - வெல்வது நிச்சயம் என்று எண்ணி மலர்க்கணை எய்த மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணர்; (மாரன் - காமன்);
வான்மியூர் மேவிய பால்வணனாரே - அப்பெருமானார் திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்;
9)
நான்முகன் நாரணன் அடிமுடி தேடி .. நண்ணுதற் கரியவர் அடியவர்க் கெளியர்
மான்மறி மாமழு ஏந்திய கையர் .. மார்பினில் நூலினர் மங்கையொர் பங்கர்
கூன்மதி கூவிளம் சூடிய குழகர் .. கூளிகள் சூழ்ந்திடக் கூத்திடும் அடிகள்
வான்முகில் தடவிய கட்டடம் மல்கும் .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
நான்முகன் நாரணன் அடிமுடி தேடி நண்ணுதற்கு அரியவர் - பிரமன் திருமால் இருவராலும் அடிமுடி தேடி அடைய இயலாதவர்;
அடியவர்க்கு எளியர் - அன்பர்களால் எளிதில் அடையப்பெறுபவர்;
மான்மறி, மா-மழு ஏந்திய கையர் - மான்கன்றையும், பெரிய மழுவையும் கையில் ஏந்தியவர்;
மார்பினில் நூலினர் - முப்புரிநூல் அணிந்த மார்பர்;
மங்கை ஒர் பங்கர் - உமைபங்கர்;
கூன்-மதி, கூவிளம் சூடிய குழகர் - வளைந்த திங்களையும் வில்வத்தையும் சூடிய இளைஞர்/அழகர்; (குழகன் - இளையோன் / அழகன்);
கூளிகள் சூழ்ந்திடக் கூத்திடும் அடிகள் - பூதகணம் சூழக் கூத்தாடும் இறைவர்; (கூளி - பூதம்); (அடிகள் - சுவாமி);
வான்-முகில் தடவிய கட்டடம் மல்கும் வான்மியூர் மேவிய பால்வணனாரே - வானிற் செல்லும் மேகத்தை வருடுமளவு உயர்ந்த கட்டடங்கள் நிறைந்த திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்;
10)
நாவினைப் பெற்றதன் பயன்-தனை அறியார் .. நாள்தொறும் நவின்றிடும் பொய்ம்மொழி நயவேல்
சேவினை ஊர்தியா விரும்பிய சிவனார் .. திருப்பெயர் சிந்தனை செய்ம்மறைச் சிறுவர்
சாவினை வென்றிடத் தாளினை வீசு .. சங்கரர் அங்கணர் தொண்டுசெய் அடியார்
மாவினை நோய்க்கொரு மருந்தென நின்றார் .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
நாவினைப் பெற்றதன் பயன்-தனை அறியார் நாள்தொறும் நவின்றிடும் பொய்ம்மொழி நயவேல் - நாக்கைப் பெற்றதன் பயனை அறியாதவர்கள் ஓயாமல் சொல்லும் பொய்யுரைகளை மதிக்கவேண்டா; (நயத்தல் - விரும்புதல்; மதித்தல்);
சேவினை ஊர்தியா விரும்பிய சிவனார் திருப்பெயர் சிந்தனை செய்ம் மறைச்-சிறுவர் சாவினை வென்றிடத் தாளினை வீசு சங்கரர் அங்கணர் - இடபத்தை வாகனமாக விரும்பும் சிவபெருமானாரின் திருநாமத்தை ஜபம் செய்த மார்க்கண்டேயர் இறவாமல் வாழும்படி நமனைக் காலால் உதைத்த சங்கரனார், அருட்கண் உடையவர்;
தொண்டுசெய் அடியார் மா-வினை-நோய்க்கு ஒரு மருந்து என நின்றார் - திருத்தொண்டு செய்யும் அடியார்களது கொடிய வினை என்ற நோய்க்கு (= பிறவிப்பிணிக்கு) ஒப்பற்ற மருந்து ஆனவர்; (மா வினை - பெரிய கொடிய வினை); (மருந்து - ஔஷதம்);
வான்மியூர் மேவிய பால்வணனாரே - திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்;
11)
விளமரும் சிக்கலும் சாட்டியக் குடியும் .. விரிபொழில் சூழ்தரு மருகலு(ம்) மேயார்
இளமதிக் கண்ணியர் எரிநுதற் கண்ணர் .. இருவரைச் சிலைகொடு முப்புரம் எய்தார்
உள(ம்)மிகக் கசிவுற உயர்திரு நாமம் .. உரைசெயு(ம்) நாவினர் உறுதுயர் தீர்த்து
வள(ம்)மலி வாழ்வினை வழங்கிடும் வள்ளல் .. வான்மியூர் மேவிய பால்வண னாரே.
விளமரும், சிக்கலும், சாட்டியக்குடியும், விரி-பொழில் சூழ்தரு மருகலும் மேயார் - விளமர், சிக்கல், சாட்டியக்குடி, விரிந்த சோலை சூழ்ந்த மருகல் முதலிய தலங்களில் உறைகின்றவர்; (தருதல் - ஒரு துணைவினை);
இள-மதிக் கண்ணியர் - இளந்திங்களைக் கண்ணி போலத் திருமுடியில் அணிந்தவர்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);
எரி நுதற்-கண்ணர் - எரிக்கும் நெற்றிக்கண் உடையவர்; (நுதல் - நெற்றி);
இரு-வரைச் சிலைகொடு முப்புரம் எய்தார் - பெரிய மேருமலையை வில்லாக ஏந்திக் கணை எய்து முப்புரங்களை அழித்தவர்; (இருமை - பெருமை); (வரை - மலை); (சிலை - வில்);
உளம் மிகக் கசிவு உற உயர் திருநாமம் உரைசெயும் நாவினர் உறுதுயர் தீர்த்து வளம் மலி வாழ்வினை வழங்கிடும் வள்ளல் - மேன்மையுடைய திருநாமத்தை உள்ளம் மிகவும் நெகிழ்ந்து நாவினால் சொல்லும் அடியவர்களது துன்பத்தையெல்லாம் தீர்த்து, அவர்களுக்கு வளம் மிகுந்த வாழ்வைத் தரும் வள்ளல்;
வான்மியூர் மேவிய பால்வணனாரே - திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ணநாதர்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment