2017-04-23
P.390 - வேதிகுடி
(திருவையாறு அருகே உள்ள தலம்)
---------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(12 பாடல்கள்)
(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - "கள்ளார்ந்த பூங்கொன்றை")
1)
பறையொலிக்கப் பாரிடங்கள் பலசூழ ஆடுமிறை
மறைதுதிசெய் மாதேவன் மங்கையர்க் கரசியொடும்
உறைபதியாம் மாமலர்கள் உகுதேனை உண்டுமகிழ்
சிறையளிகள் அறைபொழில்சூழ் திருவேதி குடிதானே.
பறை ஒலிக்கப் பாரிடங்கள் பல சூழ ஆடும் இறை - பறைகள் ஒலிக்கப், பல பூதங்கள் சூழத் திருநடம் ஆடும் இறைவன்; (பாரிடம் - பூதம்);
மறை துதிசெய் மாதேவன் மங்கையர்க்கு-அரசியொடும் உறை பதி ஆம் - வேதங்கள் போற்றும் மகாதேவன் உமாதேவியோடு உறைகின்ற தலம் ஆவது; (* மங்கையர்க்கரசி - திருவேதிகுடியில் இறைவி திருநாமம்);
மா-மலர்கள் உகு தேனை உண்டு மகிழ் சிறை-அளிகள் அறை பொழில் சூழ் திருவேதிகுடி தானே - சிறந்த பூக்கள் சொரிகின்ற தேனை உண்டு மகிழும் அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை சூழ்ந்த திருவேதிகுடி; (சிறை - சிறகு); (அளி - வண்டு);
2)
வானேத்தப் பன்னிருகை மைந்தனைத்தான் அருள்செய்தான்
மானேற்ற கையினன்வெண் மழுவாளன் மழவெள்ளை
ஆனேற்றன் மங்கையர்க் கரசியொடும் அமருமிடம்
தேனார்க்கும் பொழில்சூழ்ந்த திருவேதி குடிதானே.
வான் ஏத்தப் பன்னிரு-கை மைந்தனைத் தான் அருள்செய்தான் - தேவர்கள் வேண்டவும் இரங்கி ஆறுமுகனைத் தந்தவன்;
மான் ஏற்ற கையினன் - ஒரு கையில் மானை ஏந்தியவன்;
வெண்-மழுவாளன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;
மழ-வெள்ளை ஆனேற்றன் - இளைய, வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்; (ஆனேறு - எருது);
மங்கையர்க்கரசியொடும் அமரும் இடம் - அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி உறையும் தலம்;
தேன் ஆர்க்கும் பொழில் சூழ்ந்த திருவேதிகுடி தானே - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவேதிகுடி;
3)
மின்னல்போற் சடையுடையாய் மிகுபூதப் படையுடையாய்
இன்னல்கள் தீர்ப்பவனே என்பாரைக் காக்கின்ற
மன்னன்மா மங்கையர்க் கரசியொடும் மகிழுமிடம்
செந்நெல்லார் வயல்சூழ்ந்த திருவேதி குடிதானே.
"மின்னல்போல் சடை உடையாய் - "மின்னல்போல் பிரகாசிக்கும் சடையை உடையவனே;
மிகு பூதப்-படை உடையாய் - பல பூதப்படையை உடையவனே;
இன்னல்கள் தீர்ப்பவனே" என்பாரைக் காக்கின்ற மன்னன் - என் துன்பத்தைத் தீர்ப்பவனே" என்று போற்றும் பக்தர்களைக் காக்கின்ற தலைவன்;
மா மங்கையர்க்கு-அரசியொடும் மகிழும் இடம் - அப்பெருமான் அழகிய உமாதேவியோடு விரும்பி உறையும் தலம்; (மா - அழகு);
செந்நெல் ஆர் வயல் சூழ்ந்த திருவேதிகுடிதானே - சிறந்த நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவேதிகுடி;
4)
ஏவுகணை ஒன்றால்மூ வெயில்சுட்டான் இளமதியும்
பூவுமணி பொற்சடையன் பொடிபூசி பொரவந்த
மாவுரித்துப் போர்த்துகந்தான் மங்கையர்க் கரசியொடும்
மேவுமிடம் விரிபொழில்சூழ் வேதிகுடி அதுதானே.
ஏவு கணை ஒன்றால் மூ-எயில் சுட்டான் - ஏவிய கணை ஒன்றால் முப்புரங்களை எரித்தவன்;
இளமதியும் பூவும் அணி பொற்சடையன், பொடி-பூசி - இளம்-திங்களையும் மலர்களையும் சூடிய பொன் போன்ற சடையை உடையவன், திருநீற்றைப் பூசியவன்;
பொர வந்த மா உரித்துப் போர்த்து உகந்தான் - போர் செய்ய வந்த யானையை உரித்துப் போர்வையாக அணிந்தவன்; (பொருதல் - போர்செய்தல்); (மா - யானை);
மங்கையர்க்கு-அரசியொடும் மேவும் இடம் - அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி உறையும் தலம்;
விரி பொழில் சூழ் வேதிகுடி அதுதானே - விரிந்த சோலைகள் சூழ்ந்த திருவேதிகுடி;
5)
பெரும்பிறவிப் பிணிதீர்க்கும் பிரானேஎன் றடிபோற்றிக்
கரும்புநிகர் தமிழ்பாடிக் கைதொழுவார்க் கருந்துணையாய்
வரும்புனிதன் மலர்க்குழலி மங்கையர்க் கரசியொடும்
விரும்புமிடம் விரிபொழில்சூழ் வேதிகுடி அதுதானே.
"பெரும் பிறவிப்பிணி தீர்க்கும் பிரானே" என்று அடி போற்றிக் - "பெரிய பிறவிநோயைத் தீர்க்கும் தலைவனே" என்று திருவடியை வாழ்த்தி;
கரும்பு நிகர் தமிழ் பாடிக் கைதொழுவார்க்கு - கரும்பு போல் இனிக்கும் தேவாரத்தைப் பாடிக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு;
அரும்-துணையாய் வரும் புனிதன் - அரிய துணை ஆகி வந்து காக்கும் தூயன்;
மலர்க்குழலி மங்கையர்க்கு-அரசியொடும் விரும்பும் இடம் - அப்பெருமான் மலர் அணிந்த கூந்தலை உடைய உமாதேவியோடு விரும்பி உறையும் தலம்;
விரி பொழில் சூழ் வேதிகுடி அதுதானே - விரிந்த சோலைகள் சூழ்ந்த திருவேதிகுடி;
6)
நரைவிடையான் நாமமுரை நாவுடைய மாணிக்காக்
குரைகழலால் கூற்றுவனைக் குமைத்தவரன் கோளரவ
அரைநாணன் மங்கையர்க் கரசியொடும் அமருமிடம்
விரைநாறு பொழில்சூழ்ந்த வேதிகுடி அதுதானே.
நரை-விடையான் நாமம் உரை நா உடைய மாணிக்கா - வெள்ளை ஏற்றை வாகனமாக உடையவன் திருநாமமான ஐந்தெழுத்தை நாவால் உரைக்கும் மார்க்கண்டேயருக்காக; (மாணிக்கா - மாணிக்காக; கடைக்குறை விகாரம்);
குரைகழலால் கூற்றுவனைக் குமைத்த அரன் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியால் நமனை உதைத்து அழித்த ஹரன்;
கோள்-அரவ அரைநாணன் - கொடிய பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;
மங்கையர்க்கு-அரசியொடும் அமரும் இடம் - அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி உறையும் தலம்;
விரை நாறு பொழில் சூழ்ந்த வேதிகுடி அதுதானே - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருவேதிகுடி;
7)
இந்திரனும் மாலயனும் ஏத்துமரன் ஆதியிலான்
அந்தமிலான் மங்கையர்க் கரசியொடும் அமருமிடம்
கந்தமலி குழல்மாதர் காளையர்கள் கைதொழுது
செந்தமிழால் துதிக்கின்ற திருவேதி குடிதானே.
இந்திரனும் மால் அயனும் ஏத்தும் அரன் - இந்திரன், திருமால், பிரமன் முதலிய தேவர்களால் தொழப்பெறும் ஹரன்;
ஆதி இலான், அந்தம் இலான் - முதலும் முடிவும் இல்லாதவன்;
மங்கையர்க்கரசியொடும் அமரும் இடம் - அப்பெருமான் மங்கையர்க்கரசியோடும் விரும்பி உறையும் தலம் ஆவது;
கந்தம் மலி குழல் மாதர் காளையர்கள் கைதொழுது - மணம் கமழும் கூந்தலை உடைய பெண்களும் ஆடவர்களும் கைகூப்பி;
செந்தமிழால் துதிக்கின்ற திருவேதிகுடி தானே - செந்தமிழான தேவாரத்தைப் பாடி வழிபடும் திருவேதிகுடி;
8)
தொழுமலையை இடந்தான்றன் தோளைந்நான் கடர்த்தபிரான்
அழுதுமிகத் துதிசெய்த அரக்கனுக்குப் பெயரீந்தான்
மழுவுடையான் மங்கையர்க் கரசியொடும் மகிழுமிடம்
செழுமலரார் பொழில்சூழ்ந்த திருவேதி குடிதானே.
தொழுமலையை இடந்தான்தன் தோள் ஐந்நான்கு அடர்த்த பிரான் - எல்லாரும் தொழும் கயிலைமலையைப் பெயர்த்த தசமுகனது இருபது புஜங்களையும் நசுக்கிய தலைவன்;
அழுது மிகத் துதிசெய்த அரக்கனுக்குப் பெயர் ஈந்தான் - பின், அந்த அரக்கன் அழுது இசைபாடவும் (அதனைக் கேட்டு இரங்கி அருள்புரிந்து) அவனுக்கு இராவணன் என்ற பெயரையும் கொடுத்தான்;
மழு உடையான் மங்கையர்க்கரசியொடும் மகிழும் இடம் - மழுவை ஏந்திய சிவபெருமான் மங்கையர்க்கரசியோடும் விரும்பி உறையும் தலம் ஆவது;
செழு-மலர் ஆர் பொழில் சூழ்ந்த திருவேதிகுடி தானே - செழுமையான பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவேதிகுடி;
9)
பங்கயன் அரியிவர்கள் பாத(ம்)முடி அறியாத
பொங்கழல் உருவானான் புரிசடையிற் புனலுடையான்
மங்கையர்க் கரசியொடும் மகிழுமிடம் வயல்களிலே
செங்கயல் பாய்கின்ற திருவேதி குடிதானே.
பங்கயன் அரி இவர்கள் பாதம் முடி அறியாத பொங்கு அழல் உரு ஆனான் - தாமரையில் உறையும் பிரமன், திருமால் இவர்களால் அடியும் முடியும் அறிய முடியாத ஜோதியாகி உயர்ந்தவன்;
புரி-சடையில் புனல் உடையான் - முறுக்குக்கொண்ட சடையில் கங்கையை உடையவன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);
மங்கையர்க்கரசியொடும் மகிழும் இடம் - அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி உறையும் தலம்;
வயல்களிலே செங்கயல் பாய்கின்ற திருவேதிகுடி தானே - வயலில் செங்கயல்-மீன்கள் பாயும் திருவேதிகுடி;
10)
புன்மொழியே பேசியுழல் புரட்டர்க்குப் புரியாதான்
மன்மதனை எரித்தபிரான் மங்கையர்க் கரசியொடும்
நன்மையருள் கின்றவிடம் நம்பியடி தொழுவார்க்குத்
தென்மலரார் பொழில்சூழ்ந்த திருவேதி குடிதானே.
புன்மொழியே பேசி உழல் புரட்டர்க்குப் புரியாதான் - வேதநெறியைப் பழித்துப் பேசித் திரிகின்ற வஞ்சகர்களுக்கு அருளாதவன்; அவர்களால் அறியப்படாதவன்; (புரிதல் - கொடுத்தல்; பொருள்விளங்குதல்);
மன்மதனை எரித்த பிரான் மங்கையர்க்கரசியொடும் - காமனை எரித்த சிவபெருமான் உமாதேவியோடு;
நன்மை அருள்கின்ற இடம், நம்பி அடி தொழுவார்க்கு - பக்தியோடு விரும்பித் திருவடியை வழிபடுபவர்களுக்கு வரங்கள் அருள்கின்ற தலம் ஆவது;
தென்-மலர் ஆர் பொழில் சூழ்ந்த திருவேதிகுடி தானே - அழகிய பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவேதிகுடி. (தென் - அழகு; இனிமை; தேன் என்பதன் குறுக்கல் விகாரமாகவும் கொள்ளலாம்);
11)
வெந்தபொடி மேனியினான் வேத(ம்)மகிழ் விநாயகனின்
தந்தையொரு சக்கரத்தால் சலந்தரன்றன் உடல்தடிந்த
மைந்தனவன் மங்கையர்க் கரசியொடும் மகிழ்பதிதேன்
சிந்துமலர் மலிபொழில்சூழ் திருவேதி குடிதானே.
வெந்தபொடி மேனியினான் - சுட்ட திருநீற்றை மேனியில் பூசியவன்;
வேதம் மகிழ் விநாயகனின் தந்தை - வேதத்தை விரும்பிக் கேட்கும் மூத்த பிள்ளையாருக்குத் தந்தை; (* வேதவிநாயகர் - திருவேதிகுடியில் விநாயகர் திருநாமம்; இறைவன் அருளிச்செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில் காட்சியளிக்கின்றார்);
ஒரு சக்கரத்தால் சலந்தரன்தன் உடல் தடிந்த மைந்தனவன் - தரையில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனைக்கொண்டு ஜலந்தராசுரனது உடலை வெட்டி அவனை அழித்த வீரன்; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்); (மைந்தன் - வீரன்); (திருவாசகம் - திருச்சாழல் - 8.12.18 - "சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி");
மங்கையர்க்கரசியொடும் மகிழ் பதி - அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி உறையும் இடம்;
தேன் சிந்து மலர் மலி பொழில்சூழ் திருவேதிகுடி தானே - தேன் சொரியும் பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவேதிகுடி; (சிந்துதல் - சொட்டியொழுகுதல்);
12)
சினவிடையான் கூவிளஞ்சேர் செஞ்சடையான் மழுப்படையான்
வனமுலையாள் மங்கையர்க் கரசியொடும் மகிழுமிடம்
மன(ம்)மகிழும் வண(ம்)நல்ல மணவாழ்வு பெறவேண்டித்
தின(ம்)மடவார் வந்தேத்தும் திருவேதி குடிதானே.
சின-விடையான் - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவன்;
கூவிளம் சேர் செஞ்சடையான் - செஞ்சடைமேல் வில்வத்தை அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);
மழுப்-படையான் - மழுவாயுதத்தை ஏந்தியவன்;
வன-முலையாள் மங்கையர்க்கு-அரசியொடும் மகிழும் இடம் - அழகிய ஸ்தனங்களை உடையவளும் மங்கையர்க்கு-அரசி என்ற திருநாமம் உடையவளுமான உமாதேவியோடு விரும்பி உறையும் தலம் ஆவது;
மனம் மகிழும்-வணம் நல்ல மணவாழ்வு பெறவேண்டித் - தங்கள் மனம் மகிழும்படி நல்ல திருமணவாழ்வு அமையவேண்டி; (வணம் - வண்ணம் - இடைக்குறையாக வந்தது);
தினம் மடவார் வந்து ஏத்தும் திருவேதிகுடி தானே - தினமும் இளம்பெண்கள் வந்து வழிபடும் திருவேதிகுடி;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment