Saturday, April 12, 2025

P.388 - நெய்த்தானம் - சுழல்மலிந்த கங்கைதனை

2017-04-15

P.388 - நெய்த்தானம் (தில்லைஸ்தானம்)

(திருவையாறு அருகே உள்ள தலம்)

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.40.1 - "எம்பிரான் எனக்கமுதம்");

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

சுழல்மலிந்த கங்கைதனைச் சுடர்ச்சடையுள் அடைத்தவனே

தழல்புரையு(ம்) மேனிமிசைச் சாந்தமென நீறணிந்தாய்

கழல்பணிந்து தொழுதேன்என் கடுவினைகள் கடிந்தருளாய்

நிழல்மலிந்த பொழிலணிந்த நெய்த்தான(ம்) மேயவனே.


சுழல் மலிந்த கங்கைதனைச் சுடர்ச்சடையில் அடைத்தவனே - சுழல்கள் மிக்க கங்கையாற்றை ஒளிவீசும் சடையுள் அடைத்தவனே;

தழல் புரையும் மேனிமிசைச் சாந்தம் என நீறு அணிந்தாய் - தீப் போன்ற செம்மேனிமேல் சந்தனம் போல் திருநீற்றைப் பூசியவனே; (சாந்தம் - சந்தனம்);

கழல் பணிந்து தொழுதேன் என் கடுவினைகள் கடிந்து அருளாய் - உன் திருவடியை வழிபடும் என் கொடிய வினைகளை நீக்கி அருள்வாயாக; (கடிதல் - அழித்தல்);

நிழல் மலிந்த பொழில் அணிந்த நெய்த்தானம் மேயவனே - நிழல் மிக்க சோலை சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே;


2)

வேலையன்று கடைந்தக்கால் வெவ்விடமே பொங்கிவர

ஓலமென்று தேவரெலாம் ஓடிவந்து தொழுதேத்த

ஆலமுண்டாய் அடிதொழுதேன் அருவினையை அழித்தருளாய்

நீலவண்டார் சோலையணி நெய்த்தான(ம்) மேயவனே.


வேலை அன்று கடைந்தக்கால் வெவ்விடமே பொங்கிவர - (அமுது வேண்டி) முன்பு பாற்கடலைக் கடைந்தபொழுது கொடிய நஞ்சே பொங்கியெழக் கண்டு; (வேலை - கடல்); (கால் - பொழுது; இடம்);

"ஓலம்" என்று தேவர்-எலாம் ஓடிவந்து தொழுது ஏத்த ஆலம் உண்டாய் - "ஓலம்" என்று கூவி எல்லாத் தேவர்களும் உன்னைச் சரணடைந்து வழிபடவும் அந்த ஆலகால விஷத்தை உண்டவனே; (ஓலம் - அபயம் வேண்டும் குறிப்புமொழி);

அடி தொழுதேன் அருவினையை அழித்து அருளாய் - உன் திருவடியைத் தொழும் என் தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;

நீலவண்டு ஆர் சோலை அணி நெய்த்தானம் மேயவனே - கருவண்டுகள் ஒலிக்கும் பொழில் சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே; (ஆர்த்தல் - ஒலித்தல்);


3)

வடியிலங்கு மூவிலைவேல் மழுவேந்து(ம்) மன்னவனே

பொடியிலங்கு மார்பினனே போற்றியென்று பொன்னடியில்

கடியிலங்கு மலரிட்டேன் கடுவினையைக் கடிந்தருளாய்

நெடியதெங்கு மலிசோலை நெய்த்தான(ம்) மேயவனே.


"வடி இலங்கு மூவிலைவேல், மழு ஏந்தும் மன்னவனே - "கூர்மை திகழும் திரிசூலத்தையும் மழுவையும் கையில் ஏந்திய மன்னனே; (வடி - கூர்மை); (இலங்குதல் - திகழ்தல்);

பொடி இலங்கு மார்பினனே போற்றி" என்று - திருநீறு திகழும் மார்பை உடையவனே" என்று வாழ்த்தி; (பொடி - திருநீறு);

பொன்னடியில் கடி இலங்கு மலரிட்டேன் கடுவினையைக் கடிந்து அருளாய் - உன் பொன் போன்ற திருவடியில் வாசனை திகழும் பூக்களைத் தூவி வழிபடும் என் கொடிய வினையை அழித்து அருள்வாயாக; (கடி - வாசனை); (கடிதல் - அழித்தல்);

நெடிய தெங்கு மலி சோலை நெய்த்தானம் மேயவனே - உயர்ந்த தென்னைமரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே; (தெங்கு - தென்னைமரம்);


4)

ஓடுங்கள் ளார்மலரும் ஒண்மதியும் உச்சியின்மேல்

சூடுங்கண் ணுதலானே தொண்டரவர் தொழுதேத்தும்

வேடங்கள் உடையாய்என் வெவ்வினையைத் தீர்த்தருளாய்

நீடெங்கம் பொழில்சூழ்ந்த நெய்த்தான(ம்) மேயவனே.


ஓடும், கள் ஆர் மலரும், ஒண்-மதியும் உச்சியின்மேல் சூடும் கண்ணுதலானே - திருமுடிமேல் தலைமாலையையும், தேன் மிக்க பூக்களையும், ஒளிவீசும் சந்திரனையும் சூடுகின்ற நெற்றிக்கண்ணனே; (ஓடு - மண்டையோடு);

தொண்டர்அவர் தொழுது ஏத்தும் வேடங்கள் உடையாய் - பக்தர்கள் வழிபடும் திருக்கோலங்கள் பல உடையவனே; (வேடம் - திருக்கோலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.46.3 - "வேடம் பலவல்லான் ஆடும் வீரட்டானத்தே");

என் வெவ்வினையைத் தீர்த்தருளாய் - என் கொடிய வினையைத் தீர்த்து அருள்வாயாக;

நீள்-தெங்கம்பொழில் சூழ்ந்த நெய்த்தானம் மேயவனே - நீண்டு வளரும் தென்னைமரச்-சோலை சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே; (நீள்தல் - நீளுதல்); (தெங்கம் பொழில் - தென்னந்தோப்பு); (நீடெங்கம் பொழில் = நீள் + தெங்கம்பொழில்);


5)

சலமலையும் சடையானே தாள்பணிந்த சுரருய்ய

மலைசிலையா வளைத்தவுணர் மதில்மூன்றை எய்தவனே

மலரடியை வழிபட்டேன் வல்வினையை மாய்த்தருளாய்

நிலவுதொடு பொழில்சூழ்ந்த நெய்த்தான(ம்) மேயவனே.


சலம் அலையும் சடையானே - கங்கைநதி திரிகின்ற சடையை உடையவனே; (சலம் - ஜலம் - நீர்);

தாள் பணிந்த சுரர் உய்ய - உன் திருவடியைத் தொழுத தேவர்கள் உய்யும்படி; (சுரர் - தேவர்);

மலை சிலையா வளைத்து அவுணர் மதில் மூன்றை எய்தவனே - மேருமலையை வில்லாக வளைத்து அசுரர்களது முப்புரங்களை எய்தவனே; (சிலையா - சிலையாக - வில்லாக); (அவுணர் - அசுரர்); (மதில் - கோட்டை);

மலரடியை வழிபட்டேன் வல்வினையை மாய்த்து அருளாய் - உன் மலர்ப்பாதத்தை வழிபடும் என் வலிய வினையை அழித்து அருள்வாயாக;

நிலவு தொடு பொழில் சூழ்ந்த நெய்த்தானம் மேயவனே - சந்திரனைத் தொடுமாறு உயர்ந்த சோலை சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே;


6)

நல்லார்கள் நால்வர்க்குக் கல்லாற்கீழ் மறைவிரித்தாய்

எல்லார்க்கும் ஒருதலைவா இமையோர்க்கின் னமுதீந்த

அல்லாரும் கண்டாஎன் அருவினையை அழித்தருளாய்

நெல்லாரும் வயல்சூழ்ந்த நெய்த்தான(ம்) மேயவனே.


நல்லார்கள் நால்வர்க்குக் கல்லாற்கீழ் மறை விரித்தாய் - சனகாதி முனிவர்கள் நால்வருக்குக் கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்தவனே;

எல்லார்க்கும் ஒரு தலைவா - தேவதேவனே;

இமையோர்க்கு இன்னமுது ஈந்த அல் ஆரும் கண்டா - தேவர்களுக்கு இனிய அமுதை அளித்த நீலகண்டனே; (அல் - இருள்; கருமை); (ஆர்தல் - பொருந்துதல்);

என் அருவினையை அழித்தருளாய் - என் பழவினையைத் தீர்த்து அருள்வாயாக;

நெல் ஆரும் வயல் சூழ்ந்த நெய்த்தானம் மேயவனே - நெல் நிறைந்த வயல் சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே; (ஆர்தல் - நிறைதல்);


7)

பறையுடுக்கை ஒலிக்கநடம் பயில்கின்ற பரமேட்டீ

இறைவளையாள் இளமங்கை இடப்பாகம் மகிழ்ந்தவனே

சிறையளியார் கொன்றையினாய் தீவினையைத் தீர்த்தருளாய்

நிறைவுடையோர் மறையோது(ம்) நெய்த்தான(ம்) மேயவனே.


பறை உடுக்கை ஒலிக்க நடம் பயில்கின்ற பரமேட்டீ - பறை, உடுக்கை முதலிய வாத்தியங்கள் ஒலிக்கத் திருநடம் செய்யும் பரமனே; (பரமேட்டீ - பரமேஷ்டியே என்ற விளி);

இறை-வளையாள் இளமங்கை இடப்பாகம் மகிழ்ந்தவனே - முன்-கையில் வளை அணிந்தவளும் இளமங்கை என்ற திருநாமம் உடையவளுமான உமையை இடப்பாகத்தில் விரும்பியவனே; (இறை - முன்கை); (அப்பர் தேவாரம் - 4.89.2 - "ஏந்திள மங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே"); (* இளமங்கை - திருநெய்த்தானத்தில் இறைவி திருநாமம்; சமஸ்கிருதத்தில் பாலாம்பிகை);

சிறை-அளி ஆர் கொன்றையினாய் - சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றைமலரை அணிந்தவனே; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);

தீவினையைத் தீர்த்தருளாய் - என் பழவினையைத் தீர்த்து அருள்வாயாக;

நிறைவு உடையோர் மறை ஓதும் நெய்த்தானம் மேயவனே - குணத்திலும் மனத்திலும் நிறைவு உடையவர்கள் வேதங்களை ஓதுகின்ற திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே; (நிறைவு - முழுமை; திருப்தி);


8)

மையாரு(ம்) நிறத்தரக்கன் மலையெடுத்தான் தனைநசுக்கி

ஐயாவென் றழுதிறைஞ்ச அன்றொருவாள் ஈந்தவனே

கையாலுன் கழல்தொழுதேன் கடுவினைகள் கடிந்தருளாய்

நெய்யாடி மகிழ்வோனே நெய்த்தான(ம்) மேயவனே.


மை ஆரும் நிறத்து அரக்கன் மலை டுத்தான்-தனை நசுக்கி - கரிய நிறத்து அரக்கனும் கயிலையைப் பெயர்த்தவனுமான இராவணனை நசுக்கி; (மை - கருமை); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

"ஐயா" என்று அழுது இறைஞ்ன்று ஒரு வாள் ஈந்தவனே - பின்னர் அவன் "ஐயனே" என்று அழுது வணங்க, அவனுக்கு இரங்கி, அன்று ஒப்பற்ற சந்திரஹாஸம் என்ற வாளை அருளியவனே; (இறைஞ்சுதல் - வணங்குதல்);

கையால் உன் கழல் தொழுதேன் கடுவினைகள் கடிந்து அருளாய் - கைகளால் உன் திருவடியைத் தொழும் என் கொடிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

நெய் ஆடி மகிழ்வோனே - நெய்யபிஷேகத்தை விரும்பி ஏற்பவனே; (* நெய்யாடியப்பர் - திருநெய்த்தானத்தில் ஈசன் திருநாமம்);

நெய்த்தானம் மேயவனே - திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே;


9)

கார்வணனு(ம்) நான்முகனும் காணாது கழல்போற்ற

ஓர்சுடராய் நின்றவனே உத்தமனே நித்தியனே

சீர்பரவு தமிழுரைத்தேன் தீவினையைத் தீர்த்தருளாய்

நீர்வயல்சூழ்ந் தழகாரு(ம்) நெய்த்தான(ம்) மேயவனே.


கார்வணனும் நான்முகனும் காணாது கழல் போற்ற ஓர் சுடராய் நின்றவனே - கரிய திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிக் காணாமல் உன் திருவடியைத் துதிக்கும்படி ஓர் எல்லையற்ற ஒளித்தூணாகி உயர்ந்தவனே;

உத்தமனே நித்தியனே - மேலவர்க்கும் மேலானவனே; அழிவற்றவனே;

சீர் பரவு தமிழ் உரைத்தேன் தீவினையைத் தீர்த்து அருளாய் - உன் திருப்புகழைப் பாடும் தமிழைச் சொல்லும் என் தீவினையை அழித்து அருள்வாயாக; (சீர் - புகழ்); (பரவுதல் - பரந்திருத்தல்; பாடுதல்; புகழ்தல்);

நீர்-வயல் சூழ்ந்து அழகு ஆரும் நெய்த்தானம் மேயவனே - நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே;


10)

வீடுதரு நெறியறியா வீணருரை மதியேன்மின்

காடுதனில் கொள்ளிகளைக் கையேந்திக் கணஞ்சூழ

ஆடுபரன் அடியார்தம் அருவினையை அழிக்குமரன்

நீடுபொழில் புடைசூழ்ந்த நெய்த்தான(ம்) மேயவனே.


வீடு தரு நெறி அறியா வீணர் உரை மதியேன்மின் - முக்தியைத் தரும் மார்க்கத்தை அறியாத வீணர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (வீடு - முக்தி); (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

காடுதனில் கொள்ளிகளைக் கை ஏந்திக் கணம் சூழ ஆடு பரன் - சுடுகாட்டில் பூதகணங்கள் கையில் கொள்ளியை ஏந்திச் சூழக், கூத்து ஆடும் பரமன்;

அடியார்தம் அருவினையை அழிக்கும் அரன் - பக்தர்களது பழவினையை அழிக்கும் ஹரன்;

நீடு-பொழில் புடை சூழ்ந்த நெய்த்தானம் மேயவனே - நீண்ட சோலை சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமான்; (நீடுதல் - நீள்தல்); (- ஈற்றசை);


11)

மலைபெற்ற மகளுக்கு மணவாளன் கூரார்மூ

இலைபெற்ற சூலத்தன் எண்ணற்ற நாமத்தன்

கலைகற்ற பெரியார்கள் கைதொழுமுக் கண்ணப்பன்

நிலைபெற்ற புகழுடைய நெய்த்தான(ம்) மேயவனே.


மலை பெற்ற மகளுக்கு மணவாளன் - மலையான் மகளான உமைக்குக் கணவன்;

கூர் ஆர் மூ இலை பெற்ற சூலத்தன் - கூர்மை பொருந்திய மூன்று இலை போன்ற நுனிகளையுடைய சூலத்தை ஏந்தியவன்; (மூவிலை - மூ இலை - இலை போன்ற மூன்று முனைகள்);

எண்ணற்ற நாமத்தன் - அளவிலாத திருப்பெயர்கள் உடையவன்;

கலை கற்ற பெரியார்கள் கைதொழு முக்கண் அப்பன் - ஞானியர்கள் கைகளால் தொழுது வணங்கும் முக்கண்ணன், எம் தந்தை; (கலை - கல்வி; சாத்திரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்த");

நிலை பெற்ற புகழ் உடைய நெய்த்தானம் மேயவனே - அழியாப் புகழுடைய திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமான்; (- ஈற்றசை);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment