Sunday, April 20, 2025

T.201 - அம்பர் - அம்புதனைக் காமன்விட

2017-05-22

T.201 - அம்பர் (அம்பல்) - அம்புதனைக் காமன்விட

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்ததனத் தானதனத் .. தனதான)

(உம்பர்தருத் தேனுமணி - திருப்புகழ் - விநாயகர் துதி)


அம்புதனைக் காமன்விடச் .. சுழலாதே

.. அன்புமிகத் தாளிணையைத் .. தொழுவேனோ

நம்பியவர்க் காரருளைப் .. பொழிவோனே

.. நங்கையிடப் பாகமெனத் .. திகழ்வோனே

அம்பொழிலிற் பாடியளிக் .. குலமாரும்

.. அம்பர்நகர்த் தூயமதிச் .. சடையானே

உம்பர்களுக் காரமுதைத் .. தருவோனே

.. உந்திமிசைக் கோளரவப் .. பெருமானே.


பதம் பிரித்து:

அம்புதனைக் காமன் விடச் சுழலாதே,

.. அன்பு மிகத் தாளிணையைத் தொழுவேனோ?

நம்பியவர்க்கு ஆரருளைப் பொழிவோனே;

.. நங்கை இடப்பாகம் எனத் திகழ்வோனே;

அம்பொழிலிற் பாடி அளிக்- குலம் ஆரும்

.. அம்பர்நகர்த் தூய-மதிச் சடையானே;

உம்பர்களுக்கு ஆரமுதைத் தருவோனே;

.. உந்திமிசைக் கோளரவப் பெருமானே.


அம்புதனைக் காமன் விடச் சுழலாதே - மன்மதன் கணைகளை ஏவ, அதனால் மனம் கலங்காமல்; (சுழல்தல் - மனம் கலங்குதல்);

அன்பு மிகத் தாளிணையைத் தொழுவேனோ - பக்தியோடு இரு-திருவடிகளை வழிபடுவேனோ? (அப்படி வழிபட அருள்வாயாக);

நம்பியவர்க்கு ஆர்-அருளைப் பொழிவோனே - விரும்பித் தொழுவார்க்கு அரிய அருளைப் பொழிபவனே; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);

நங்கை இடப்-பாகம் எனத் திகழ்வோனே - உமையை இடப்பாகமாக உடையவனே;

அம்-பொழிலில் பாடி அளிக்-குலம் ஆரும் - அழகிய சோலையில் வண்டினங்கள் பாடிப் பொருந்துகின்ற; (அம் - அழகு); (அளி - வண்டு); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

அம்பர்-நகர்த் தூய மதிச் சடையானே - - அம்பரில் எழுந்தருளிய, வெண்பிறையைச் சடையில் அணிந்த பெருமானே; ("தூய" = "தூயனே" என்ற விளியாகவும் பொருள்கொள்ளலாம்); (சம்பந்தர் தேவாரம் - 3.69.4 - "சடைமேல் தூயமதி சூடி");

உம்பர்களுக்கு ஆர்-அமுதைத் தருவோனே - தேவர்களுக்கு அரிய அமுதத்தைத் தந்தவனே;

உந்திமிசைக் கோள்-அரப் பெருமானே - வயிற்றின்மேல் கொடிய பாம்பைக் கச்சாக அணிந்தவனே; (உந்தி - வயிறு); (கோள்-அரவம் - கொடிய பாம்பு; விஷப்பாம்பு); (அப்பர் தேவாரம் - 4.80.4 - "உந்தியின்மேல் அசைத்த கச்சின் அழகுகண்டால்"); (அப்பர் தேவாரம் - 6.31.7 - "புற்றரவக் கச்சார்த்த புனிதா என்றும்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment