Saturday, April 19, 2025

T.198 - வலிவலம் - இழிதரு செயலால்

2017-04-19

T.198 - வலிவலம் - இழிதரு செயலால்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனனா தனதன தனனா

தனதன தனனா .. தனதான)

(அரியய னறியா தவரெரி புரமூ - திருப்புகழ் - வடுகூர்)


இழிதரு செயலால் அறமறை மயலால்

.. .. இகழ்மொழி அதனால் .. அழியாமல்

.. இணையடி மறவா மனமது பெறவே

.. .. இனிதருள் புரியாய் .. எருதேறீ

எழிலுற மதிசேர் சடைமுடி அதன்மேல்

.. .. இளவர வணிவாய் .. மலைபோல

.. எதிர்மத கரியீர் உரிபுனை அழகா

.. .. இடுகிய இடைமா .. தொருகூறா

விழிதிகழ் நுதலாய் ஒளிதிகழ் மழுவா

.. .. விடமணி மிடறா .. திரிசூலா

.. விடையமர் கொடியாய் அரைமிசை அதளாய்

.. .. வெடிபடு துடியாய் .. எனவோதி

வழிபடும் அடியார் பழவினை அறவான்

.. .. மகிழ்நிலை உறவே .. அருள்வோனே

.. வரியளி ஒலியார் விரிபொழில் புடைசூழ்

.. .. வலிவல இமையோர் .. பெருமானே.


பதம் பிரித்து:

இழிதரு செயலால், அற(ம்) மறை மயலால்,

.. .. இகழ்-மொழி அதனால் .. அழியாமல்,

.. இணையடி மறவா மனமது பெறவே

.. .. இனிதருள் புரியாய், .. எருதேறீ;

"எழிலுற மதி சேர் சடைமுடி அதன்மேல்

.. .. இள-அரவு அணிவாய்; .. மலைபோல

.. எதிர்-மதகரி ஈர்-உரி புனை அழகா;

.. .. இடுகிய இடை-மாது ஒருகூறா;

விழி திகழ் நுதலாய்; ஒளி திகழ் மழுவா;

.. .. விடம் அணி மிடறா; .. திரிசூலா;

.. விடை அமர் கொடியாய்; அரைமிசை அதளாய்;

.. .. வெடிபடு துடியாய்" .. என ஓதி

வழிபடும் அடியார் பழவினை அற, வான்

.. .. மகிழ்-நிலை உறவே .. அருள்வோனே;

.. வரி-அளி ஒலி ஆர் விரி-பொழில் புடைசூழ்

.. .. வலிவல இமையோர் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

இழிதரு செயலால், அற(ம்) மறை மயலால், இகழ் மொழி அதனால் அழியாமல் - நான், இழிந்த செயல்களைச் செய்வதனாலும், தர்மத்தை மறைக்கின்ற அறியாமையாலும் ( / மதியை மிகவும் மறைக்கின்ற அறியாமையாலும்), (பெரியோர்களால்) வெறுக்கத்தக்க பேச்சைப் பேசுவதனாலும், இப்பிறவியை வீணாக்கி அழிந்துவிடாமல்; (அறமறை - 1. அறம் மறை; 2. அற மறை); (அறம் - தர்மம்); (அற – முழுதும்; மிகவும்); (இகழ்தல் - அவமதித்தல்; மறத்தல்); (மயல் - மயக்கம்; அறியாமை);

இணையடி மறவா மனம் அது பெறவே இனிது அருள்புரியாய் எருதேறீ - இடபவாகனனே, உன் இரு-திருவடிகளை என்றும் மறவாத மனத்தைப் பெறுமாறு இன்னருள் புரிவாயாக;

"எழில் உற மதி சேர் சடைமுடி அதன்மேல் இள அரவு அணிவாய் - "அழகுறத் திங்கள் சேர்கின்ற சடைமுடியின்மேல் இளம் பாம்பை அணிந்தவனே;

மலைபோல எதிர் மதகரி ஈர்உரி புனை அழகா - ஒரு மலை போல எதிர்த்துப் போர்செய்த மதயானையின் உரித்த ஈரத்-தோலைப் போர்த்த அழகனே; (ஈர் - ஈரம்; பசுமை); (ஈர்த்தல் - உரித்தல்); (உரி - தோல்);

இடுகிய இடை மாது ஒரு கூறா - நுண்ணிய இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவனே; (இடுகுதல் - சிறுகுதல்; சிறுத்தல்);

விழி திகழ் நுதலாய் - நெற்றிக்கண்ணனே; (நுதல் - நெற்றி);

ஒளி திகழ் மழுவா - பிரகாசிக்கின்ற மழுவாயுதத்தை ஏந்தியவனே;

விடம் அணி மிடறா (/ விட-மணி மிடறா) - நஞ்சை நீலமணியாகக் கண்டத்தில் அணிந்தவனே; (விடமணி - 1. விடம் அணி; 2. விட மணி); (மிடறு - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 2.21.5 – "விடநண்ணிய தூ மிடறா");

திரிசூலா - மூவிலைச்-சூலத்தை ஏந்தியவனே;

விடை அமர் கொடியாய் - இடபச்-சின்னம் பொறித்த கொடியை உடையவனே;

அரைமிசை அதளாய் - அரையின்மேல் புலித்தோலை அணிந்தவனே; (அதள் - தோல்);

வெடிபடு துடியாய்" என ஓதி - வெடி போல ஒலிக்கின்ற உடுக்கையை ஏந்தியவனே" என்று உன்னைத் துதித்து;

வழிபடும் அடியார் பழவினை அற, வான் மகிழ் நிலை உறவே அருள்வோனே - வணங்குகின்ற பக்தர்களது பழைய வினையெல்லாம் தீருமாறும், அவர்கள் சிவலோகத்தில் மகிழும் நிலையைப் பெறவும் அருள்கின்றவனே; (அறுதல் - இல்லாமற்போதல்); (வான் - இங்கே, சிவலோகம்);

வரி அளி ஒலி ஆர் விரி பொழில் புடை சூழ் வலிவல இமையோர் பெருமானே - வரிகளை உடைய வண்டுகளின் ஒலி நிறைந்த விரிந்த சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்தில் எழுந்தருளிய தேவர்கள் பெருமானே; (அளி - வண்டு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (இமையோர் - தேவர்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment