2017-04-26
P.391 - பழனம் - ஐந்தெழுத்துப் பதிகம்
(திருவையாறு அருகே உள்ள தலம்)
---------------------------------
(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தனன தானா, தனன தானா, தனதன தானானா - சந்தம்);
(12 பாடல்கள்)
(சுந்தரர் தேவாரம் - 7.7.1 - "மத்த யானை யேறி")
1)
குறைவு நீங்கி இன்ப வாழ்வு கூட நினைநெஞ்சே
மறைகள் அங்கம் ஓது நாவர் மாமணி கண்டத்தர்
பறவை ஆலும் சோலை சூழ்ந்த பழன நகர்மேய
இறைவர் வெள்ளை ஏற்றர் நாமம் என்ற எழுத்தஞ்சே.
குறைவு நீங்கி இன்ப வாழ்வு கூட நினை நெஞ்சே - மனமே, குறைகள் தீர்ந்து இன்பம் மிக்க வாழ்வு பெற நீ நினைவாயாக;
மறைகள் அங்கம் ஓது நாவர் - நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பாடி அருளியவர்;
மா மணி கண்டத்தர் - அழகிய நீலகண்டம் உடையவர்;
பறவை ஆலும் சோலை சூழ்ந்த பழன நகர் மேய இறைவர் - பறவைகள் மகிழ்ந்து ஒலிக்கின்ற பொழில் சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற கடவுள்; (ஆலுதல் - ஒலித்தல்; களித்தல்; ஆடுதல்; தங்குதல்);
வெள்ளை ஏற்றர் நாமம் என்ற எழுத்து அஞ்சு - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானாரின் திருநாமமான திருவைந்தெழுத்தை. (அப்பர் தேவாரம் - 6.47.2 - "மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்" - திருவைந்தெழுத்தை என் நாவிலிருந்து நீக்கேன்);
2)
எண்ணி றந்த பிறவி நீங்க எண்ணு மடநெஞ்சே
வெண்ணி றத்த ஏற்றர் நீற்றர் விரைகமழ் சோலைதனில்
பண்ணின் ஓசை மல்கு கின்ற பழன நகர்மேய
கண்ணி லங்கு நுதலர் நாமம் காக்கும் எழுத்தஞ்சே.
எண் இறந்த பிறவி நீங்க எண்ணு மட-நெஞ்சே - பேதைமனமே, எண்ணற்ற பிறவிகள் எல்லாம் நீங்கி முக்தி பெற நீ எண்ணுவாயாக;
வெண்ணிறத்த ஏற்றர், நீற்றர் - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவர்; வெண்-திருநீற்றைப் பூசியவர்;
விரை கமழ் சோலைதனில் பண்ணின் ஓசை மல்குகின்ற பழன நகர் மேய - மணம் கமழும் பொழில்களில் வண்டுகள் செய்யும் இசை மிகுகின்ற திருப்பழனத்தில் உறைகின்ற;
கண் இலங்கு நுதலர் நாமம் காக்கும் எழுத்து-அஞ்சே - நெற்றிக்கண்ணரான சிவபெருமானாரின் திருநாமமும் மந்திரமும் ஆன திருவைந்தெழுத்தை; (ஏ - ஈற்றசை);
3)
தொலைவி லாத இன்பம் மல்கச் சொல்லு மடநெஞ்சே
மலைவி லேந்தி மதில்கள் எய்த மைந்தர் மழுவாளர்
பலவு நாறு சோலை சூழ்ந்த பழன நகர்மேய
அலைகொ ளாற்றுச் சடையர் நாமம் ஆன எழுத்தஞ்சே.
தொலைவு இலாத இன்பம் மல்கச் சொல்லு மடநெஞ்சே - அழிவற்ற (/முடிவில்லாத) இன்பம் பெருகப், பேதைமனமே, சொல்வாயாக; (தொலைவு - அழிவு; முடிவு);
மலை-வில் ஏந்தி மதில்கள் எய்த மைந்தர் - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எய்த வீரர்; (மைந்தன் - வீரன்);
பலவு நாறு சோலை சூழ்ந்த பழனநகர் மேய - பலா மணம் கமழும் சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் எழுந்தருளிய; (பலவு - பலா);
அலைகொள் ஆற்றுச் சடையர் நாமம் ஆன எழுத்து-அஞ்சே - அலையுடைய கங்கையைச் சடையில் உடையவர் திருநாமமான திருவைந்தெழுத்தை;
4)
பசியும் நோயும் இன்றி வாழப் பரவு மடநெஞ்சே
கசியும் அன்பு மாணி வாழக் காலனைக் காய்காலர்
பசிய சோலை புடைய ணிந்த பழன நகர்மேய
நிசியில் ஆடும் நிமலர் நாமம் நிகரில் எழுத்தஞ்சே.
பசியும் நோயும் இன்றி வாழப் பரவு மடநெஞ்சே - பசி, நோய் இவையெல்லாம் இல்லாது இனிது வாழப், பேதைமனமே, போற்றுவாயாக; (பரவுதல் - சொல்லுதல்; புகழ்தல்; பாடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.41.1 - "மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலும் கண்புகார் பிணியறியார்");
கசியும் அன்பு மாணி வாழக் காலனைக் காய்-காலர் - அன்பால் உருகும் மார்க்கண்டேயர் உயிர்வாழும்பொருட்டுக் காலனை உதைத்த காலர்;
பசிய சோலை புடை அணிந்த பழனநகர் மேய - பசுமை திகழும் சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் எழுந்தருளிய;
நிசியில் ஆடும் நிமலர் நாமம் நிகர் இல் எழுத்து-அஞ்சே - நள்ளிருளில் கூத்தாடும் தூயரது திருநாமமான ஒப்பற்ற திருவைந்தெழுத்தை;
5)
உழலல் நீங்கி இன்பம் ஓங்க உன்னு மடநெஞ்சே
அழலை ஏந்தி ஆடும் ஐயர் ஆனை உரிபோர்த்தார்
பழ(ம்)ம லிந்த பொழில ணிந்த பழன நகர்மேய
அழகர் காதிற் குழையர் நாமம் ஆன எழுத்தஞ்சே.
உழலல் நீங்கி இன்பம் ஓங்க உன்னு மடநெஞ்சே - வருந்தி அலைதல் ஒழிந்து இன்பம் பெருகப், பேதைமனமே, எண்ணுவாயாக; (உழலல் - உழலுதல் - வருந்தி அலைதல்); (உன்னு - நினை);
அழலை ஏந்தி ஆடும் ஐயர் - தீயை ஏந்தி ஆடும் தலைவர்; (ஐயர் - தலைவர்);
ஆனை-உரி போர்த்தார் - யானைத்தோலைப் போர்த்தவர்;
பழம் மலிந்த பொழில் அணிந்த பழனநகர் மேய - பழங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் எழுந்தருளிய;
அழகர் காதில் குழையர் நாமம் ஆன எழுத்து-அஞ்சே - அழகரும் காதில் குழையை அணிந்தவருமான சிவபெருமானாரின் திருநாமமான திருவைந்தெழுத்தை;
6)
துன்பம் நீங்கி இன்பம் ஆரச் சொல்லு மடநெஞ்சே
அம்பெய் வேளை நீறு செய்தார் அமரர் பெருமானார்
பைம்பு னல்பாய் வயல்கள் சூழ்ந்த பழன நகர்மேய
நம்பர் நாக நாணை ஆர்த்தார் நாம எழுத்தஞ்சே.
துன்பம் நீங்கி இன்பம் ஆரச் சொல்லு மடநெஞ்சே - துன்பம் தீர்ந்து இன்பம் மிகுவதற்குப், பேதைமனமே, சொல்வாயாக; (ஆர்தல் - மிகுதல்; நிறைதல்);
அம்பு எய் வேளை நீறு-செய்தார் - மலரம்பை எய்த மன்மதனைச் சாம்பலாக்கியவர்;
அமரர் பெருமானார் - தேவர் தலைவர்;
பைம்புனல் பாய் வயல்கள் சூழ்ந்த பழனநகர் மேய - நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த திருப்பழனத்தில் எழுந்தருளிய;
நம்பர் நாக-நாணை ஆர்த்தார் நாம எழுத்து-அஞ்சே - விரும்பத்தக்கவரும் பாம்பை அரைநாணாகக் கட்டியவருமான சிவபெருமானாரின் திருநாமமான திருவைந்தெழுத்தை; (நம்பர் - விரும்பத்தக்கவர்; சிவன் திருநாமங்களுள் ஒன்று); (ஆர்த்தல் - கட்டுதல்);
7)
ஈடி லாத இன்பம் எய்த எண்ணு மடநெஞ்சே
வீடி னார்தம் வெந்த நீறு மிளிரும் மணிமார்பர்
பாடி வண்டு நாடு சோலைப் பழன நகர்மேய
ஆடி ஆறு சூடி நாமம் ஆன எழுத்தஞ்சே.
ஈடு இலாத இன்பம் எய்த எண்ணு மடநெஞ்சே - ஒப்பற்ற இன்பம் அடையப், பேதைமனமே, எண்ணுவாயாக;
வீடினார்தம் வெந்த நீறு மிளிரும் மணி-மார்பர் - இறந்தவர்களை எரித்த சாம்பலை அழகிய பவளம் போன்ற மார்பில் பூசியவர்; (மணி - அழகு; பவளம்);
பாடி வண்டு நாடு சோலைப் பழன நகர் மேய - வண்டுகள் பாடி அடைகின்ற சோலை திகழும் திருப்பழனத்தில் உறைகின்ற;
ஆடி - கூத்தர்;
ஆறு சூடி - கங்காதரர்;
நாமம் ஆன எழுத்தஞ்சே - அந்தச் சிவபெருமானாரின் திருநாமமான திருவைந்தெழுத்தை;
8)
செல்லல் நீங்கிச் செல்வம் ஓங்கத் தினமும் நினைநெஞ்சே
வல்ல ரக்கன் வாய்கள் பத்தும் வாழ்த்த நெரிசெய்தார்
பல்லில் ஓட்டிற் பலியை ஏற்பார் பழன நகர்மேய
நல்ல கண்டர் அண்டர் அண்டர் நாம எழுத்தஞ்சே.
செல்லல் நீங்கிச் செல்வம் ஓங்கத் தினமும் நினை நெஞ்சே - மனமே! துன்பம் தீர்ந்து செல்வம் பெருகத் தினமும் நினைவாயாக; (செல்லல் - துன்பம்);
வல்-அரக்கன் வாய்கள் பத்தும் வாழ்த்த நெரி-செய்தார் - வலிமை மிக்க இராவணனது பத்து வாய்களும் துதி பாடும்படி அவனை நசுக்கியவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.86.8 - "நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரிசெய்தார்");
பல்-இல் ஓட்டில் பலியை ஏற்பார் - பற்கள் இல்லாத மண்டையோட்டில் பிச்சையை ஏற்பவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.51.4 - "பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந்து");
பழனநகர் மேய - திருப்பழனத்தில் உறைகின்ற;
நல்ல கண்டர் - நல்ல நீலகண்டம் உடையவர்;
அண்டர் அண்டர் - தேவதேவர்;
நாம எழுத்து-அஞ்சே - அந்தச் சிவபெருமானாரின் திருநாமமான திருவைந்தெழுத்தை;
9)
ஏதம் நீங்கி இன்பம் எய்த எண்ணு மடநெஞ்சே
ஓத வண்ணன் பிரமன் நேடி உள்ளம் மிகவாடிப்
பாதம் ஏத்த நின்ற சோதி பழன நகர்மேய
நாதர் செய்ய பாதர் வேதர் நாம எழுத்தஞ்சே.
ஏதம் நீங்கி இன்பம் எய்த எண்ணு மட நெஞ்சே - பேதை-மனமே, குற்றங்கள் நீங்கி இன்பம் பெற நீ எண்ணுவாயாக;
ஓத-வண்ணன் பிரமன் நேடி உள்ளம் மிக வாடிப் பாதம் ஏத்த நின்ற சோதி - கடல்வண்ணனான திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி மிக நைந்து திருவடியைப் போற்றுமாறு உயர்ந்த ஜோதி-வடிவினர்;
பழனநகர் மேய நாதர் - திருப்பழனத்தில் உறைகின்ற தலைவர்;
செய்ய பாதர் - சிவந்த திருப்பாதங்களை உடையவர்;
வேதர் நாம எழுத்து-அஞ்சே - வேதங்களைப் பாடியருளியவரான சிவபெருமானாரின் திருநாமமான திருவைந்தெழுத்தை; (சம்பந்தர் தேவாரம் - 1.135.3 - "வேதர் வேதமெல்லாம் முறையால் விரித்தோத நின்ற ஒருவனார்");
10)
வரவி ருக்கும் வினைகள் மாய மருவு மடநெஞ்சே
கரவு நெஞ்சர் அறிய மாட்டாக் கண்ணுதல் எம்மானார்
பரவு சோலை விரவு கின்ற பழன நகர்மேய
அரவம் ஆர்த்த அரையர் நாமம் ஆன எழுத்தஞ்சே.
வர இருக்கும் வினைகள் மாய மருவு மட-நெஞ்சே - பேதை-மனமே, இனி (இப்பிறப்பில் எதிர்காலத்தில், மறுமையில்) வந்து துன்பம் தர உள்ள வினைகள் எல்லாம் அழிய, நீ தியானிப்பாயாக;
கரவு-நெஞ்சர் அறிய மாட்டாக் கண்ணுதல் எம்மானார் - வஞ்சநெஞ்சர்களால் அறிய ஒண்ணாதவர், நெற்றிக்கண்ணுடைய எம்பெருமானார்; (கரவு - வஞ்சம்); (அப்பர் தேவாரம் - 4.7.1 - "கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை");
பரவு சோலை விரவுகின்ற பழனநகர் மேய - பரந்திருக்கும் சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற; (பரவுதல் - பரந்திருத்தல்); (விரவுதல் - பொருந்துதல்);
அரவம் ஆர்த்த அரையர் நாமம் ஆன எழுத்து-அஞ்சே - பாம்பை அரையில் கட்டியவரான சிவபெருமானாரின் திருநாமமான திருவைந்தெழுத்தை; (ஆர்த்தல் - கட்டுதல்); (அப்பர் தேவாரம் - 4.66.5 - "படவர வரையர் போலும்");
11)
இன்னல் நீங்கி இன்பம் எய்த எண்ணு மடநெஞ்சே
பின்னு கின்ற சடையில் ஆற்றைப் பேணும் பெருமானார்
பன்ன கத்தின் ஆர மார்பர் பழன நகர்மேய
சென்னி மீது பிறையர் நாமம் சேம எழுத்தஞ்சே.
இன்னல் நீங்கி இன்பம் எய்த எண்ணு மட-நெஞ்சே - பேதை-மனமே, கஷ்டங்கள் நீங்கி இன்பம் பெற நீ எண்ணுவாயாக;
பின்னுகின்ற சடையில் ஆற்றைப் பேணும் பெருமானார் - முறுக்குக்கொண்ட சடையில் கங்கையை அடைத்த பெருமானார்;
பன்னகத்தின் ஆர மார்பர் - பாம்பை மார்பில் மாலையாகப் பூண்டவர்; (பன்னகம் - நாகப்பாம்பு); (ஆரம் - ஹாரம் - மாலை);
பழனநகர் மேய - திருப்பழனத்தில் உறைகின்ற;
சென்னிமீது பிறையர் நாமம் சேம எழுத்து-அஞ்சே - பிறைசூடிய சிவபெருமானாரின் திருநாமமும் காக்கும் மந்திரமுமான திருவைந்தெழுத்தை; (சேமம் - க்ஷேமம் - காவல்; நல்வாழ்வு);
12)
தீவல் வினைகள் தீர வேண்டில் சிந்தி மடநெஞ்சே
தேவ தேவர் திங்கள் நாகம் சேர்த்த சடையீசர்
பாவை பங்கர் பசிய வயல்சூழ் பழன நகர்மேய
சேவ தேறும் செல்வர் நாமம் சேம எழுத்தஞ்சே.
தீ-வல்-வினைகள் தீர வேண்டில் சிந்தி மடநெஞ்சே - தீய வலிய வினையெல்லாம் தீரவேண்டுமென்றால், பேதை-மனமே, எண்ணுவாயாக;
தேவதேவர் - தேவாதிதேவர்;
திங்கள் நாகம் சேர்த்த சடை ஈசர் - சந்திரனையும் பாம்பையும் சடையில் ஒன்றாகச் சேர்த்த ஈசனார்;
பாவை-பங்கர் - உமையொருபங்கர்;
பசிய வயல் சூழ் பழனநகர் மேய - பசிய வயல் சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற;
சேவது ஏறும் செல்வர் நாமம் சேம எழுத்து-அஞ்சே - இடப-வாகனம் உடைய செல்வரான சிவபெருமானாரின் திருநாமமும் காக்கும் மந்திரமுமான திருவைந்தெழுத்தை; (சேமம் - க்ஷேமம் - காவல்; நல்வாழ்வு);
பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:
அறுசீர்ச் சந்தவிருத்தம் - தனன தானா, தனன தானா, தனதன தானானா - சந்தம்;
"தனன" என்ற சீர்கள் "தான" என்றும் வரலாம்.
"தனதன" என்ற சீர் "தானன' / "தான" / "தனன" என்றெல்லாம் வரலாம்.
5-6 சீர்கள் இடையே வெண்டளை பயிலும். ஆகவே, அதன்படி, "தானானா" என்ற 6-ஆம் சீர், "தானதனா", "தனதானா" என்றெல்லாம் வரலாம்.
(சுந்தரர் தேவாரம் - 7.7.1 - "மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்")
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment