Monday, April 21, 2025

P.401 - ஆலம்பொழில் - (ஷட்பதி) - பெரிய அரவும்

2017-05-28

P.401 - ஆலம்பொழில் - (ஷட்பதி)

---------------------------------

(மா மா மா மா

மா மா மா மா

மா மா மா மா மா மாங்காய்)

(ஷட்பதி யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க)


1)

பெரிய அரவும் பிறையும் புனைவாய்

எரியும் மழுவும் ஏந்தும் இறையே

திரியும் எயில்கள் தீயில் வேவச் சிலையை வளைவித்தாய்

புரிசெஞ் சடையிற் புனலை உடையாய்

அரிவை பங்கா அல்லல் களையாய்

அரிய தமிழால் அடியைத் தொழுதேன் ஆலம் பொழிலானே.


பெரிய அரவும் பிறையும் புனைவாய் - பெரிய பாம்பையும் சந்திரனையும் அணிந்தவனே;

எரியும் மழுவும் ஏந்தும் இறையே - நெருப்பையும் மழுவையும் ஏந்திய இறைவனே;

திரியும் எயில்கள் தீயில் வேவச் சிலையை வளைவித்தாய் - எங்கும் திரிந்து துன்பம் செய்த முப்புரங்கள் தீயில் வெந்து அழிய மலையை/வில்லை வளைத்தவனே; (சிலை - மலை; வில்); (சம்பந்தர் தேவாரம் - 1.13.2 - "மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன்");

புரி-செஞ்சடையில் புனலை உடையாய் - முறுக்குக்கொண்ட சிவந்த சடையில் கங்கையை உடையவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

அரிவை பங்கா - உமைபங்கனே; (அரிவை - பெண்);

அல்லல் களையாய் - என் துன்பத்தைத் தீர்ப்பாயாக;

அரிய தமிழால் அடியைத் தொழுதேன் - அரிய தமிழான தேவாரம் திருவாசகம் முதலியன பாடி உன் திருவடியை வழிபட்டேன்;

ஆலம்பொழிலானே - திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமானே;


2)

தலைமேற் பிறையும் தண்ணார் நதியும்

இலையும் புனையும் எங்கள் பெருமான்

அலையும் எயில்கள் அவைமூன் றெரிய அன்றோர் கணைதொட்டாய்

மலையான் மகளை வாமம் மகிழ்வாய்

கலையார் கையாய் கவலை களையாய்

அலையார் பொன்னி அதன்தென் கரையில் ஆலம் பொழிலானே.


தலைமேல் பிறையும் தண்ர் நதியும் இலையும் புனையும் எங்கள் பெருமான் - சென்னிமேல் சந்திரனையும், குளிர்ச்சி மிக்க கங்கையையும், வில்வம் வன்னி முதலிய இலைகளையும், அணிந்த எங்கள் பெருமானே;

அலையும் எயில்கள் அவைமூன்று எரிய அன்று ஓர் கணைதொட்டாய் - எங்கும் அலைந்து திரிந்த முப்புரங்களும் எரிந்து அழிய முன்பு ஒரு கணையை எய்தவனே;

மலையான் மகளை வாமம் கிழ்வாய் - உமாதேவியை இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பியவனே;

கலை ஆர் கையாய் - மானைக் கையில் ஏந்தியவனே;

கவலை களையாய் - என் கவலைகளைத் தீர்ப்பாயாக;

அலை ஆர் பொன்னி அதன் தென்கரையில் ஆலம்பொழிலானே - அலை மிக்க காவிரியின் தென்கரையில் உள்ள திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமானே;


3)

தீர்த்தச் சடைமேல் சீறும் அரவைச்

சேர்த்த சிவனே செறிகான் அதனிற்

பார்த்த னோடு பண்டு பொருது படையைத் தருவேடா

தோத்தி ரஞ்செய்ம் மாணி உயிரைக்

காத்த பரமா கவலை களையாய்

ஆர்த்துப் புட்கள் அடையும் சோலை ஆலம் பொழிலானே.


தீர்த்தச்-சடைமேல் சீறும் அரவைச் சேர்த்த சிவனே - தூய கங்கை இருக்கும் சடையின்மேல் சீறுகின்ற நாகப்பாம்பையும் வைத்த சிவபெருமானே; (தீர்த்தம் - பரிசுத்தம்; புண்ணியநீர்த்துறை); (திருவாரூர் மும்மணிக்கோவை - 11.7.12 - "செந்தாமரை வண்ணன் தீர்த்தச் சடையன்");

செறி-கான் அதனில் பார்த்தனோடு பண்டு பொருது படையைத் தரு வேடா - அடர்ந்த காட்டில் முன்பு அருச்சுனனோடு போர்செய்து அவனுக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்த வேடனே;

தோத்திரம்-செய்ம் மாணி உயிரைக் காத்த பரமா - துதித்த மார்க்கண்டேயர் உயிரைக் காத்த பரமனே;

கவலை களையாய் - என் கவலைகளைத் தீர்ப்பாயாக;

ஆர்த்துப் புட்கள் அடையும் சோலை ஆலம்பொழிலானே - பறவைகள் ஒலித்து அடையும் சோலை சூழ்ந்த திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமானே; (ஆர்த்தல் - ஒலித்தல்); (புள் - பறவை);


4)

சுழலார் நதியைச் சூடும் சடையாய்

நிழலார் மழுவா நெற்றிக் கண்ணா

அழலால் அரண்மூன் றழிய அன்றோர் அம்பைத் தொடுவோனே

குழையார் காதா கூத்துப் பயிலும்

குழகா அடியேன் குறைகள் தீராய்

அழகார் கிளிகள் அமரும் சோலை ஆலம் பொழிலானே.


சுழல் ஆர் நதியைச் சூடும் சடையாய் - சுழல்கள் மிக்க கங்கையைச் சடையில் அணிந்தவனே;

நிழல் ஆர் மழுவா - ஒளி மிக்க மழுவை ஏந்தியவனே; (நிழல் - ஒளி);

நெற்றிக் கண்ணா - முக்கண்ணனே;

அழலால் அரண் மூன்று அழிய அன்று ஓர் அம்பைத் தொடுவோனே - தீயால் முப்புரங்களும் அழியும்படி முன்னம் ஒரு கணையை எய்தவனே;

குழை ஆர் காதா - காதில் குழையை அணிந்தவனே;

கூத்துப் பயிலும் குழகா - திருநடம் புரியும் அழகனே; (குழகன் - இளையோன்; அழகன்);

அடியேன் குறைகள் தீராய் - என் குறைகளைத் தீர்ப்பாயாக;

அழகு ஆர் கிளிகள் அமரும் சோலை ஆலம்பொழிலானே - அழகிய கிளிகள் விரும்பும் சோலை சூழ்ந்த திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமானே; (அமர்தல் - விரும்புதல்);


5)

அஞ்சித் தேவர் அடியைப் பரவ

நஞ்சை உண்ட நல்ல கண்டா

வஞ்சி அன்ன மருங்குல் மாதை வாமம் மகிழ்வோனே

குஞ்சி மீது கொக்கின் இறகாய்

தஞ்சம் தந்து தமியேற் கருளாய்

அஞ்சொற் கிளிகள் கொஞ்சு சோலை ஆலம் பொழிலானே.


அஞ்சித் தேவர் அடியைப் பரவ நஞ்சை உண்ட நல்ல கண்டா - அஞ்சி வந்த தேவர்கள் திருவடியை வழிபட, அவர்களுக்கு இரங்கி ஆலகால விஷத்தை உண்ட அழகிய நீலகண்டனே; (சம்பந்தர் தேவாரம் - 3.89.9 - "கரியநன் மிடறுடைக் கடவுளார்");

வஞ்சி அன்ன மருங்குல் மாதை வாமம் மகிழ்வோனே - கொடி போன்ற சிற்றிடை உடைய உமையை இடப்பக்கம் பாகமாக விரும்பியவனே; (வஞ்சி - ஒருவகைக் கொடி); (மருங்குல் - இடை); (வாமம் - இடப்பக்கம்);

குஞ்சி மீது கொக்கின் இறகாய் - தலையின்மேல் கொக்கிறகைச் சூடியவனே; (குஞ்சி - தலை; ஆண்களின் தலைமயிர்); (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்ததன் அடையாளமாகக் கொக்கிறகைச் சிவபெருமான் சூடினான்);

தஞ்சம் தந்து தமியேற்கு அருளாய் - துணையற்ற எனக்கு அடைக்கலம் அளித்து அருள்வாயாக;

அஞ்சொற்-கிளிகள் கொஞ்சு சோலை ஆலம்பொழிலானே - அழகிய மொழியைப் பேசும் கிளிகள் கொஞ்சி மகிழும் சோலை சூழ்ந்த திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமானே; (கொஞ்சுதல் - இன்பமாய்ப் பேசுதல்; ஒலித்தல்);


6)

காலன் மீது கழலை வீசிப்

பாலன் தன்னைப் பாலித் தவனே

சூல பாணீ தோளில் நீறு துதையும் பெருமானே

ஓலம் என்ற உம்பர்க் காத்த

கோல மிடறா குறைதீர்த் தருளாய்

ஆலின் புடைநல் லறங்கள் ஓதும் ஆலம் பொழிலானே.


காலன் மீது கழலை வீசிப் பாலன் தன்னைப் பாலித்தவனே - காலனை உதைத்து மார்க்கண்டேயரைக் காத்தவனே;

சூலபாணீ - சூலபாணியே;

தோளில் நீறு துதையும் பெருமானே - புஜங்களில் திருநீற்றைக் குழைத்துப் பூசியவனே;

ஓலம் என்ற உம்பர்க் காத்த கோல மிடறா - ஓலம் என்று கூவிய தேவர்களைக் காத்த அழகிய கண்டனே; (உம்பர்க் காத்த - தேவர்களைக் காத்த; - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

குறை தீர்த்து அருளாய் - என் குறைகளைத் தீர்த்து அருள்வாயாக;

ஆலின்புடை நல்லறங்கள் ஓதும் ஆலம்பொழிலானே - கல்லால-மரத்தின்கீழ் மறைப்பொருளை உபதேசித்தவனே, திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமானே;


7)

உடையா அதளே உடையாய் கொடிமேல்

விடையாய் விண்ணோர் வேலை தன்னைக்

கடைநாள் பொங்கு கரிய நஞ்சைக் கண்டத் தணிவோனே

படைபோல் தாக்கும் பழைய வினைகள்

தொடரா வண்ணம் தொலைவித் தருளாய்

அடையார் புரங்கள் அழிய எய்த ஆலம் பொழிலானே.


உடையா அதளே உடையாய் - உடையாகத் தோலையே உடையவனே; (உடையா - உடையாக); (அதள் - தோல்);

கொடிமேல் விடையாய் - இடபக்கொடி உடையவனே;

விண்ணோர் வேலை-தன்னைக் கடை நாள் பொங்கு கரிய நஞ்சைக் கண்டத்து அணிவோனே - தேவர்கள் கடலைக் கடைந்தபொழுது பொங்கிய கரிய விஷத்தை உண்டு கண்டத்தில் அணிந்தவனே; (வேலை - கடல்);

படைபோல் தாக்கும் பழைய வினைகள் தொடரா வண்ணம் தொலைவித்து அருளாய் - படை போல வந்து தாக்கும் பழவினைகள் எல்லாம் என்னைத் தொடராதபடி அவற்றை அழித்து அருள்வாயாக; (தொலைவித்தல் - அழித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.122.8 - "தொலைவிலாத அரக்கன் உரத்தைத் தொலைவித்து");

அடையார் புரங்கள் அழிய எய்த ஆலம்பொழிலானே - பகைவர்களது முப்புரங்களும் அழியும்படி கணை எய்த, திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமானே;


8)

குரையார் கடல்சூழ் இலங்கைக் கோனை

விரையார் பாத விரலால் அடர்த்தாய்

உரையால் புகழை ஓதி இறைஞ்ச ஒருவாள் பெயரீந்தாய்

திரையார் சடைமேல் திங்கள் புனையும்

அரையா வினைதீர்த் தடியேற் கருளாய்

அரையார் நாணா அரவை உடையாய் ஆலம் பொழிலானே.


குரை ஆர் கடல்சூழ் இலங்கைக் கோனை விரை ஆர் பாத விரலால் அடர்த்தாய் - ஒலி மிக்க கடல் சூழ்ந்த இலங்கைக்கு மன்னனான இராவணனை வாசத்திருவடியின் ஒரு விரலால் நசுக்கியவனே; (குரை - ஒலி); (ஆர்தல் - நிறைதல்; மிகுதல்);

உரையால் புகழை ஓதி இறைஞ்ச ஒரு வாள் பெயர் ஈந்தாய் - பின் அவன் தன் வாக்கால் உன் புகழைப் பாடி வழிபடக், கேட்டு இரங்கிச், சந்திரஹாஸம் என்ற வாளையும் இராவணன் என்ற பெயரையும் அவனுக்குக் கொடுத்தவனே;

திரை ஆர் சடைமேல் திங்கள் புனையும் அரையா - கங்கையை அணிந்த சடைமேல் சந்திரனை அணிந்த அரசனே; (திரை - அலை; நதி); (ஆர்தல் - அணிதல்); (அரையன் - அரசன்);

வினை தீர்த்து அடியேற்கு அருளாய் - என் வினைகளைத் தீர்த்து எனக்கு அருள்வாயாக;

அரை ஆர் நாணா அரவை உடையாய் - அரையில் கட்டிய அரைநாணாகப் பாம்பை உடையவனே; (ஆர்த்தல் - கட்டுதல்); (நாணா - நாணாக);

ஆலம்பொழிலானே - திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமானே;


9)

நறுமா மலர்போல் நயனன் வேதன்

குறுகா எரியே கூனற் பிறையாய்

சிறுமான் ஏந்து சிவனே என்பார் சிந்தை பிரியானே

மறுமை இம்மை மகிழும் வாழ்வைப்

பெறுமா றடியேற் கருளாய் பெருமான்

அறுகா லினங்கள் ஆர்க்கும் சோலை ஆலம் பொழிலானே.


"நறு-மா-மலர்போல் நயனன், வேதன் குறுகா எரியே - "மணம் கமழும் தாமரைமலர் போன்ற கண்களை உடைய திருமாலாலும் பிரமனாலும் அடைய ஒண்ணாத, எல்லையின்றி ஓங்கிய ஜோதியே; ("குறுகா" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைக்கலாம்); (குறுகுதல் - 1. அணுகுதல்; 2. குள்ளமாதல்; சிறுகுதல்);

கூனல்-பிறையாய் - வளைந்த பிறையை அணிந்தவனே; (கூனல் - வளைதல்);

சிறு மான் ஏந்து சிவனே" என்பார் சிந்தை பிரியானே - மான்கன்றை ஏந்திய சிவனே" என்றெல்லாம் போற்றி வழிபடும் பக்தர்களது நெஞ்சில் நீங்காமல் உறைபவனே;

மறுமை இம்மை மகிழும் வாழ்வைப் பெறுமாறு அடியேற்கு அருளாய் பெருமான் - பெருமானே, இம்மையிலும் மறுமையிலும் மகிழும் வாழ்வை நான் பெறும்படி எனக்கு அருள்வாயாக;

அறுகால்-இனங்கள் ஆர்க்கும் சோலை ஆலம்பொழிலானே - வண்டினங்கள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமானே; (அறுகால் - வண்டு);


10)

செல்லும் நெறியை அறியாச் சிதடர்

சொல்லை விடுமின் தொண்டு செய்ய

வல்ல அன்பர் மகிழு மாறு வரங்கள் தருநல்லான்

வில்லை ஏந்தி விசயற் கருள்வான்

பல்லில் ஓட்டிற் பலிதேர் பரமன்

அல்லில் முழவம் ஆர்க்க ஆடும் ஆலம் பொழிலானே.


செல்லும் நெறியை அறியாச் சிதடர் சொல்லை விடுமின் - செல்லத்தக்க மார்க்கத்தை அறியாத குருடர்கள் சொல்லும் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (சிதடன் - குருடன்; அறிவிலி);

தொண்டு செய்ய-வல்ல அன்பர் மகிழுமாறு வரங்கள் தரும் நல்லான் - திருவடிக்கு அன்போடு தொண்டு செய்யும் பக்தர்கள் இன்புறும்படி அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் தந்து அருளும் நல்லவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.13.7 - "கோழம்ப மேவிய நல்லானை ஏத்துமின்");

வில்லை ஏந்தி விசயற்கு அருள்வான் - வேடனாகி வில்லை ஏந்திச் சென்று அருச்சுனனுக்கு அருளியவன்; (விசயற்கு - விஜயனுக்கு); (வில்லை ஏந்தி - "வில்லை ஏந்தியவன்" என்று அர்ஜுனனுக்கு அடைமொழியாகவும் பொருள்கொள்ளல் ஆம்);

பல்-இல் ஓட்டில் பலி தேர் பரமன் - பல்லற்ற மண்டையோட்டைப் பாத்திரமாக ஏந்திப் பிச்சை ஏற்கும் பரமன்; ("பல இல்லங்களை அடைந்து மண்டையோட்டில் பிச்சயேற்கும் பரமன்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

அல்லில் முழவம் ஆர்க்க ஆடும் ஆலம்பொழிலானே - இருளில் முழவுகள் ஒலிக்கத் திருநடம் செய்கின்ற, திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமான்; (அல் - இரவு; இருள்);


11)

பொன்பி றங்கு சடையிற் புனலாய்

இன்ப வடிவே ஏழை பங்கா

துன்பக் கடலில் தோணி ஆகும் துணையே அருளென்றே

முன்பு நின்று முருகார் தமிழால்

என்பும் உருக இறைஞ்சி ஏத்தும்

அன்பர்க் கபயம் அளிக்கும் அண்ணல் ஆலம் பொழிலானே.


"பொன் பிறங்கு சடையில் புனலாய் - "பொன்-நிறம் உடைய சடையில் கங்கையை உடையவனே; (பிறங்குதல் - விளங்குதல்); (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.381 - "பொன் பிறங்கிய சடையரைப் போற்று தாண்டகங்கள்");

இன்ப-வடிவே - ஆனந்தத்தின் உருவே;

ஏழை-பங்கா - உமைபங்கனே;

துன்பக்-கடலில் தோணி ஆகும் துணையே அருள்" என்றே - துன்பக்கடலைக் கடக்க உதவும் மரக்கலம் ஆகும் நல்ல துணைவனே, அருள்வாயாக" என்று;

முன்பு நின்று முருகு ஆர் தமிழால் - திருமுன் நின்று மணமும் அழகும் நிறைந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடி; (முருகு - மணம்; அழகு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

என்பும் உருக இறைஞ்சி ஏத்தும் - எலும்பும் உருகும்படி பக்தியோடு வழிபடும்;

அன்பர்க்கு அபயம் அளிக்கும் அண்ணல் ஆலம்பொழிலானே - அடியவர்களுக்கு அபயம் அளிக்கும் தலைவன், திருவாலம்பொழிலில் உறையும் சிவபெருமான்;


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :

கன்னடத்தில் "ஷட்பதி" என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்புப் போல அமைந்தது;

  • ஆறு அடிகள்

  • எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.

  • 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. இவ்வடிகளில் சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிகள்தோறும் 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முற்பாதியில் உள்ள சீர்-அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
    (சீர்கள் அளவொத்து இருந்தால் போதும். உதாரணமாக: மாச்சீர் வரும் இடத்தில் எவ்வகை மாச்சீரும் வரலாம்; விளச்சீர் வரும் இடத்தில் எவ்வகை விளச்சீரும் வரலாம்)

  • 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முற்பாதியின் சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் எழுத்து. (நெடில், நெடில்+ஒற்று, குறில்+ஒற்று, குறில்).


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment