2017-05-04
P.393 - நாலூர்
---------------------------------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.46.2 - "மனமெனும் தோணி பற்றி")
(நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்; குடவாசல் அருகே உள்ள தலம்)
1)
எறும்பியூர்க் குன்றம் மேய ஈசனை நஞ்சு தங்கப்
பெறும்புகழ்க் கண்டத் தானைப் பேணினார் வினைகள் எல்லாம்
அறும்படி அருளும் கோனை அரிவையோர் பங்கி னானை
நறும்பொழில் சூழ்ந்த நாலூர் நாதனை ஏத்து நாவே.
எறும்பியூர்க் குன்றம் மேய ஈசனை - திருவெறும்பூர் மலைமேல் உறையும் ஈசனை;
நஞ்சு தங்கப் பெறும் புகழ்க்-கண்டத்தானைப் - விடம் நிலையாகத் தங்கிய புகழுடைய கண்டம் உடையவனை;
பேணினார் வினைகள் எல்லாம் அறும்படி அருளும் கோனை - போற்றும் பக்தர்களது வினைகளையெல்லாம் தீர அருளும் தலைவனை;
அரிவை ஓர் பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை;
நறும்பொழில் சூழ்ந்த நாலூர் நாதனை ஏத்து நாவே - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;
2)
குளிரிள மதியம் கொன்றை கூவிளம் சூடி னானை
அளிமனம் தளிய தாகும் அண்ணலை அலகி லாத
ஒளிதிகழ் உருவி னானை உமையொரு பங்கி னானை
நளிர்பொழில் சூழ்ந்த நாலூர் நாதனை ஏத்து நாவே.
குளிர்-இள-மதியம், கொன்றை, கூவிளம் சூடினானை - குளிர்ச்சி பொருந்திய இளம்- பிறையையும், கொன்றையையும், வில்வத்தையும் சூடியவனை;
அளி-மனம் தளிஅது ஆகும் அண்ணலை - பக்தியால் கனிந்த மனமே கோயிலாக மகிழும் பெருமானை; (அளிதல் - கனிதல்; குழைதல்; அன்போடு இருத்தல்); (தளி - கோயில்);
அலகு இலாத ஒளி திகழ் உருவினானை - அளவற்ற ஜோதி-வடிவினனை; (அலகு - அளவு);
உமை ஒரு பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை;
நளிர்-பொழில் சூழ்ந்த நாலூர் நாதனை ஏத்து நாவே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (நளிர்தல் - குளிர்தல்);
3)
பறைமுழ வார்க்க ஆடும் பரமனை அன்பர் தங்கள்
குறைகளைத் தீர்க்கும் கோனைக் குரைகடல் நஞ்சை உண்டு
கறையணி கண்டத் தானைக் காரிகை பங்கி னானை
நறைமலர்ப் பொழில்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே.
பறை முழவு ஆர்க்க ஆடும் பரமனை - பறைகளும் முழவுகளும் ஒலிக்க ஆடுகின்ற பரமனை;
அன்பர்-தங்கள் குறைகளைத் தீர்க்கும் கோனைக் - பக்தர்களது குறைகளைத் தீர்க்கும் தலைவனை;
குரைகடல் நஞ்சை உண்டு கறை அணி கண்டத்தானைக் - பெரிதும் ஒலிக்கின்ற பாற்கடலில் எழுந்த விடத்தை உண்டு கறையை ஏற்ற கண்டத்தை உடையவனை; (குரைத்தல் - ஆரவாரித்தல்);
காரிகை பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை;
நறை-மலர்ப் பொழில் சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே - வாசமலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (நறை - தேன்; வாசனை);
4)
குடமுழா மொந்தை கொட்டிக் கூளிகள் சூழ ஆடும்
கடவுளைத் தாவும் மானைக் கையினில் தாங்கி னானை
மடமயில் அன்ன சாயல் மாதொரு பங்கி னானை
நடவுசெய் வயல்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே.
குடமுழா மொந்தை கொட்டிக் கூளிகள் சூழ ஆடும் கடவுளைத் - குடமுழா மொந்தை முதலிய வாத்தியங்களை முழக்கிப் பூதங்கள் சூழக் கூத்து ஆடுகின்ற கடவுளை;
தாவும் மானைக் கையினில் தாங்கினானை - துள்ளும் மானைக் கையில் ஏந்தியவனை;
மட-மயில் அன்ன சாயல் மாது ஒரு பங்கினானை - அழகிய மயில் போன்ற சாயலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனை; (மடம் - அழகு);
நடவுசெய் வயல் சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே - நாற்று நடப்படுகின்ற வயல்கள் சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (நடவுசெய்தல் - நாற்று நடுதல்);
5)
பாற்கட லானுக் காழி பரிந்தருள் தேவை ஐயம்
ஏற்கவோர் தலைகை ஏந்தும் ஏந்தலை முடிமேற் கண்ணி
போற்பிறை சூடி னானைப் பொற்றொடி பங்கி னானை
நாற்புறம் வயல்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே.
பாற்கடலானுக்கு ஆழி பரிந்து அருள் தேவை - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலுக்குச் சக்கரத்தை அருள்புரிந்த கடவுளை; (ஆழி - சக்கரம்); (தே - தெய்வம்); (திருவாசகம் - திருத்தசாங்கம் - 8.19.1 - "வெண்மலரான் பாற்கடலான்");
ஐயம் ஏற்க ஓர் தலை கை ஏந்தும் ஏந்தலை - பிச்சை ஏற்கப் பிரமனின் மண்டையோட்டைக் கையில் ஏந்துகின்ற பெருமையுடையவனை; (ஐயம் - பிச்சை); (தலை - இங்கே மண்டையோடு); (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்);
முடிமேல் கண்ணி போல் பிறை சூடினானைப் - தலைமேல் கண்ணி என்ற மாலை போலச் சந்திரனை அணிந்தவனை; (கண்ணி - தலையில் சூடும் பூமாலை);
பொற்றொடி பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை; (பொற்றொடி - பொன்னால் ஆன தோள்வளை அணிந்தவள் - பெண்);
நாற்புறம் வயல் சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே - எல்லாப் பக்கங்களிலும் வயல்களால் சூழப்பெற்ற திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;
6)
ஆறிய மனத்து மாணி அஞ்சிட வந்த கூற்றைச்
சீறிய கழலி னானைச் செல்வனை இடபச் சின்னம்
ஏறிய கொடியி னானை ஏந்திழை பங்கி னானை
நாறிய பொழில்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே.
ஆறிய மனத்து மாணி அஞ்சிட வந்த கூற்றைச் சீறிய கழலினானைச் - ஒருமைப்பட்ட மனத்தை உடைய மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரை நெருங்கிய காலனைச் சீறி உதைத்த திருவடியினனை; (ஆறுதல் - அடங்குதல்); (சீறுதல் - கோபித்தல்; அழித்தல்);
செல்வனை - திருவின் உறைவிடமாக உள்ளவனை;
இடபச்-சின்னம் ஏறிய கொடியினானை - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனை;
ஏந்திழை பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை; (ஏந்திழை - பெண்);
நாறிய பொழில் சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (நாறுதல் - மணத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.126.11 - "நாறும் பொழிற்காழியர் ஞானசம்பந்தன்");
7)
ஏற்றனைக் கூனற் றிங்கள் ஏறிய சடையில் கங்கை
ஆற்றனை நாகம் ஆர்த்த அரையனைத் தோளின் மீது
நீற்றனை நிமலன் தன்னை நேரிழை பங்கி னானை
நாற்றமார் பொழில்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே.
ஏற்றனைக் - இடப வாகனனை; (ஏறு - எருது);
கூனல்-திங்கள் ஏறிய சடையில் கங்கை-ஆற்றனை - வளைந்த சந்திரனை அணிந்த சடையில் கங்கையை உடையவனை; (கூனல் - வளைவு);
நாகம் ஆர்த்த அரையனைத் - அரையில் நாகத்தை அரைநாணாகக் கட்டிய அரசனை; (அரையன் - அரசன்); (ஆர்த்தல் - கட்டுதல்);
தோளின் மீது நீற்றனை - புஜங்களில் திருநீற்றைப் பூசியவனை;
நிமலன்-தன்னை - தூயனை;
நேரிழை பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை; (நேரிழை - பெண்);
நாற்றம் ஆர் பொழில் சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே - மணம் மிக்க சோலை சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (நாற்றம் - மணம்); (ஆர்தல் - நிறைதல்);
8)
வலமிகு தோள்கள் உன்னி மாமலை பேர ரக்கன்
தலையொரு பத்த டர்க்கத் தாள்விரல் ஊன்றி னானைச்
சலமணி சடையி னானைத் தையலோர் பங்கி னானை
நலமலர்ப் பொழில்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே.
வலம் மிகு தோள்கள் உன்னி மா-மலை பேர்- அரக்கன் - வலிமை மிக்க புஜங்களை நினைந்து பெரிய கயிலைமலையைப் பேர்த்த அரக்கனான இராவணனுடைய; (வலமிகு = வலம் + மிகு; புணர்ச்சியில் ம் கெடும்); (வலம் - வலிமை); (உன்னுதல் - நினைதல்);
தலை ஒரு-பத்து அடர்க்கத் தாள்விரல் ஊன்றினானைச் - பத்துத்தலைகளையும் நசுக்கப் பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றியவனை; (அடர்த்தல் - நசுக்குதல்);
சலம் அணி சடையினானைத் - கங்கையைச் சடையில் அணிந்தவனை; (சலம் - ஜலம் - நீர்);
தையல் ஓர் பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை; (தையல் - பெண்);
நல மலர்ப் பொழில் சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே - நல்ல மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (நல - நல்ல; இடைக்குறை விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 2.87.9 - "பொழிலின் நலமலர் சிந்தவாச மணநாறு");
9)
முன்னயன் திருமால் நேட மூளெரி ஆயி னானைச்
சென்னியின் மீது கோலத் திங்களைக் கூவி ளத்தை
வன்னியைச் சூடி னானை வனிதையோர் பங்கி னானை
நன்னறும் பொழில்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே.
முன் அயன் திருமால் நேட மூள்-எரி ஆயினானைச் - முன்பு பிரமனும் விஷ்ணுவும் தேடும்படி மூண்டெழுந்த ஜோதி ஆனவனை;
சென்னியின் மீது கோலத்-திங்களைக், கூவிளத்தை, வன்னியைச் சூடினானை - திருமுடிமேல் அழகிய சந்திரனையும் வில்வத்தையும் வன்னி-இலையையும் அணிந்தவனை; (கூவிளம் - வில்வம்);
வனிதை ஓர் பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை; (வனிதை - பெண்);
நன்னறும் பொழில் சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே - நல்ல மணம் கமழும் சோலை சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (நன்னறும் - நல்ல மணம் உடைய);
10)
தேற்றமி லாத வார்த்தை செப்புவார் காணா தானைத்
தோற்றமும் கேடும் இல்லாத் தூயனை அன்பர் துன்பம்
மாற்றிடும் மாம ருந்தை மலைமகள் பங்கி னானை
நாற்றுயர் வயல்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே.
தேற்றம் இலாத வார்த்தை செப்புவார் காணாதானைத் - தெளிவு இல்லாத சொற்களைப் பேசித் திரிவார்களால் அறிய இயலாதவனை; (தேற்றம் - தெளிவு);
தோற்றமும் கேடும் இல்லாத் தூயனை - ஆதியும் அந்தமும் இல்லாத நிர்மலனை; (தோற்றம் - பிறப்பு; ஆதி); (கேடு - அழிவு);
அன்பர் துன்பம் மாற்றிடும் மா-மருந்தை - பக்தர்களின் துன்பத்தைத் தீர்க்கும் சிறந்த அமுதை; (மாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (மருந்து - ஔஷதம்; அமுதம்);
மலைமகள் பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை;
நாற்று உயர் வயல் சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே - நாற்றுகள் (நெற்பயிர்) உயர்ந்து வளர்கின்ற வயல்கள் சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;
11)
முல்லையுங் கணையாம் வேளை முனிந்தமுக் கண்ணி னானை
வல்லரண் மூன்றை எய்த மாமலை வில்லி னானை
அல்லினில் ஆடு வானை ஆயிழை பங்கி னானை
நல்லிசைப் பொழில்சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே.
முல்லையும் கணை ஆம் வேளை முனிந்த முக்கண்ணினானை - முல்லைமலரையும் அம்பாக உடைய மன்மதனை வெந்து சாம்பலாகும்படி சினந்து நெற்றிக்கண்ணால் பார்த்தவனை; (மன்மதனின் ஐந்து அம்புகள் ஆவன - முல்லை, அசோகு, குவளை, தாமரை, மா என்பன); (வேள் - மன்மதன்); (முனிதல் - கோபித்தல்);
வல்-அரண் மூன்றை எய்த மா-மலை வில்லினானை - வலிமை மிக்க மூன்று கோட்டைகளைப் பெரிய மேருமலை என்ற வில்லை ஏந்தி (ஒரு கணையால்) எய்தவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.57.7 - "மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர் வில்லி னானுறை வேற்காடு");
அல்லினில் ஆடுவானை - நள்ளிருளில் கூத்தாடுபவனை; (அல் - இருள்);
ஆயிழை பங்கினானை - உமையை ஒரு பங்கில் உடையவனை; (ஆயிழை - பெண்);
நல்லிசைப் பொழில் சூழ் நாலூர் நாதனை ஏத்து நாவே - (வண்டுகள் செய்யும்) நல்ல இசை நிறைந்த சோலை சூழ்ந்த திருநாலூரில் எழுந்தருளிய நாதனை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment