2017-05-30
P.403 - பறியலூர் - (ஷட்பதி)
---------------------------------
(மா விளம் மா விளம்
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம் மா விளங்காய் - என்ற அமைப்பு)
(ஷட்பதி யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க)
* வாய்பாடு கெடாத இடங்களில், புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;
1)
கசியும் நெஞ்சொடு கழலை வாழ்த்திடப்
பசியும் இன்னலும் பண்டை வினைகளும்
நசியு மாறருள் நல்கு சங்கரர் நாரி பங்கினரே
சசியு லாவிடு சடையர் சுடலையில்
நிசியி லாடுவர் நீறு பூசுவர்
பசிய வயலணி பறிய லூருறை பரசு பாணியரே.
கசியும் நெஞ்சொடு கழலை வாழ்த்திடப் - உள்ளம் உருகித் திருவடியை வழிபடும் பக்தர்களது;
பசியும் இன்னலும் பண்டை வினைகளும் நசியுமாறு அருள் நல்கு சங்கரர் - பசியும், துன்பங்களும், பழைய வினைகளும் அழியும்படி அருள்கின்ற சங்கரர்;
நாரி-பங்கினரே - உமைபங்கர்;
சசி உலாவிடு சடையர் - சடையின்மேல் திங்களை அணிந்தவர்; (சசி - சந்திரன்);
சுடலையில் நிசியில் ஆடுவர் - சுடுகாட்டில் நள்ளிரவில் கூத்தாடுபவர்;
நீறு பூசுவர் - திருநீற்றைப் பூசியவர்;
பசிய வயல் அணி பறியலூர் உறை பரசுபாணியரே - பசுமையான வயல்கள் சூழ்ந்த திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (பசிய - பசுமையான); (பரசு - மழு);
2)
வம்பு நாறிய மலர்கள் இட்டருள்
சம்பு வேஎனும் தன்மை யாளரை
உம்பர் ஏற்றிடும் ஒப்பில் அப்பனார் உமையோர் பங்கினரே
அம்பு தொடுமதன் ஆகம் மாய்த்தவர்
தும்பை வெண்பிறை சூடு சடையினர்
பைம்பொ ழில்திகழ் பறிய லூருறை பரசு பாணியரே.
வம்பு நாறிய மலர்கள் இட்டு "அருள் சம்புவே" எனும் தன்மையாளரை உம்பர் ஏற்றிடும் ஒப்பு இல் அப்பனார் - வாசமலர்களைத் தூவி, "சம்புவே, அருளாய்" என்று வணங்கும் பக்தர்களைச் சிவலோகத்திற்கு உயர்த்தும் ஒப்பற்ற தந்தையார்;
ஓர் புடை உமை மகிழ்ந்தவரே - திருமேனியில் ஒரு பக்கம் உமையைப் பாகமாக விரும்பியவர்;
அம்பு தொடு மதன் ஆகம் மாய்த்தவர் - மலர்க்கணை எய்த மன்மதனது உடலை அழித்தவர்; (மதன் - காமன்); (ஆகம் - உடல்);
தும்பை வெண்பிறை சூடு சடையினர் - தும்பைமலரையும் வெண்பிறையையும் சடையில் சூடியவர்; (அப்பர் தேவாரம் - 4.72.8 - "கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றை ஏடமர் சடையர்");
பைம்பொழில் திகழ் பறியலூர் உறை பரசுபாணியரே - பசிய சோலைகள் சூழ்ந்த திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (பைம்பொழில் + திகழ் = வாய்பாடு கருதி இங்கே, "பைம்பொழிற்றிகழ்" என்று றகர ஒற்று மிக்கு வந்தது; "பைம்பொழில் திகழ்" என்று தாளத்திற்கு ஏற்பப் பாடப்படும்);
3)
சாந்த நீற்றினர் தழலை மான்தனை
ஏந்து கையினர் ஏலம் நாறிய
கூந்த லாளொரு கூறு கந்தவர் கூற்று தைத்தவரே.
பாய்ந்த வானதி பாம்பு பால்மதி
சேர்ந்த வேணியர் செய்யர் அரையினிற்
பாந்தள் ஆர்த்தவர் பறிய லூருறை பரசு பாணியரே.
சாந்த-நீற்றினர் - சந்தனம் போலத் திருநீற்றைப் பூசியவர்;
தழலை மான்தனை ஏந்து கையினர் - தீயையும் மானையும் கையில் ஏந்தியவர்;
ஏலம் நாறிய கூந்தலாள் ஒரு கூறு உகந்தவர் - மயிர்ச்சாந்து அணிந்த கூந்தலை உடைய உமையை ஒரு கூறாக மகிழ்ந்தவர்;
கூற்று உதைத்தவரே - காலனை உதைத்தவர்; (ஏ - அசை);
பாய்ந்த வானதி பாம்பு பால்மதி சேர்ந்த வேணியர் - வானிலிருந்து பாய்ந்த கங்கையும் பாம்பும் பால் போன்ற வெண்திங்களும் திகழும் சடையை உடையவர்;
செய்யர் - செம்மேனியர்;
அரையினில் பாந்தள் ஆர்த்தவர் - அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டியவர்; (பாந்தள் - பாம்பு);
பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;
4)
கொன்றை கூவிளம் கொக்கின் இறகிவை
துன்று சடையினர் சுடலை நீற்றினர்
என்றும் உள்ளவர் எயில்கள் மூன்றினை எய்த வெஞ்சிலையார்
மன்றில் ஆடுவர் மாமன் வேள்வியை
அன்ற ழித்தவர் அழகர் மார்பினிற்
பன்றிக் கொம்பினர் பறிய லூருறை பரசு பாணியரே.
கொன்றை கூவிளம் கொக்கின்-இறகு இவை துன்று சடையினர் - கொன்றைமலர், வில்வம், கொக்கிறகு இவையெல்லாம் நெருங்கி இருக்கும் சடையை உடையவர்; (கொக்கின் இறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. குரண்டாசுரனை அழித்த அடையாளம்);
சுடலை நீற்றினர் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவர்;
என்றும் உள்ளவர் - அழிவற்றவர்;
எயில்கள் மூன்றினை எய்த வெஞ்-சிலையார் - முப்புரங்களை எய்த கொடிய வில்லை ஏந்தியவர்;
மன்றில் ஆடுவர் - அம்பலத்தில் ஆடுபவர்;
மாமன் வேள்வியை அன்று அழித்தவர் - மாமனாகிய தக்கன் செய்த வேள்வியை முன்பு அழித்தவர்; (* திருப்பறியலூர் - அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று; தக்கன் வேள்வியை அழித்த தலம்);
அழகர் - சுந்தரர்;
மார்பினில் பன்றிக்-கொம்பினர் - மார்பில் பன்றிக்கொம்பை அணிந்தவர்;
பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;
5)
மெலியும் மதிதனை வேணி அதன்மிசைப்
பொலிய வைத்தவர் போற்றும் அடியவர்
வலிய வினைகளை மாய்த்து வானிடை வாழ்வு தந்தருள்வார்
ஒலிசெய் கழலினர் ஆணும் அரிவையும்
அலியும் ஆனவர் அட்டு வாரிடு
பலியை ஏற்பவர் பறிய லூருறை பரசு பாணியரே.
மெலியும் மதிதனை வேணி அதன்மிசைப் பொலிய வைத்தவர் - தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரனைச் சடைமேல் ஒளிவீச வைத்தவர்; (வேணி - சடை);
போற்றும் அடியவர் வலிய வினைகளை மாய்த்து வானிடை வாழ்வு தந்தருள்வார் - துதிக்கும் பக்தர்களது வலிய வினைகளை அழித்து, அவர்களுக்குச் சிவலோக வாழ்வை அருள்பவர்;
ஒலிசெய் கழலினர் - ஒலிக்கின்ற கழலைத் திருவடியில் அணிந்தவர்;
ஆணும் அரிவையும் அலியும் ஆனவர் - ஆண், பெண், அலி, என்று எல்லாம் ஆனவர்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.18 - "பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்");
அட்டுவார் இடு பலியை ஏற்பவர் - பிச்சையிடுவோர் இடும் பிச்சையை ஏற்பவர்; (அட்டுதல் - இடுதல்);
பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;
6)
மூவ ரின்முதல் மூர்த்தி ஆயவர்
சேவ மர்ந்தவர் தேனி லாவிய
பூவ ணிந்தவர் பூண நூலது பொலியும் மார்பினரே
ஏவை எய்ம்மதன் எழிலு டம்பது
வேவ நோக்கிய விமலர் வார்குழற்
பாவை பங்கினர் பறிய லூருறை பரசு பாணியரே.
மூவரின் முதல் மூர்த்தி ஆயவர் - மும்மூர்த்திகளின் மேலாய முதல்வர்; (அப்பர் தேவாரம் - 6.65.9 - "முந்தைகாண் மூவரினும் முதல் ஆனான் காண்"); (சுந்தரர் தேவாரம் - 7.57.7 - "முந்தை யாகிய மூவரின் மிக்க மூர்த்தியை");
சே அமர்ந்தவர் - இடபவாகனர்; (சே - எருது);
தேன் நிலாவிய பூ அணிந்தவர் - தேன் நிறைந்த பூக்களைச் சூடியவர்;
பூண-நூல் அது பொலியும் மார்பினரே - மார்பில் பூணூல் அணிந்தவர்; (பூணநூல் - பூணூல்); (அப்பர் தேவாரம் - 4.64.1 - "பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்");
ஏவை எய்ம் மதன் எழில் உடம்பு அது வேவ நோக்கிய விமலர் - அம்பை எய்த மன்மதனது அழகிய உடம்பு வெந்து அழியும்படி நெற்றிக்கண்ணால் பார்த்த தூயவர்; (ஏ - அம்பு); (மதன் - காமன்);
வார்-குழல் பாவை பங்கினர் - நீண்ட கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;
பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;
7)
வரவு போக்கிலர் மறப்பி லாதடி
பரவு வாரவர் பாவம் மாய்ப்பவர்
குரவு வானதி கூவி ளம்புனை குஞ்சி மேற்பிறையார்
இரவில் நடமிடும் இறைவர் அரைமிசை
அரவை ஆர்த்தவர் அணிமி டற்றினிற்
பரவை நஞ்சினர் பறிய லூருறை பரசு பாணியரே.
வரவு போக்கு இலர் - பிறப்பும் இறப்பும் இல்லாதவர்; (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - "போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே");
மறப்பு இலாது அடி பரவுவார்அவர் பாவம் மாய்ப்பவர் - மறவாமல் திருவடியை என்றும் வழிபடும் அடியவர்களது பாவங்களை அழிப்பவர்;
குரவு வானதி கூவிளம் புனை குஞ்சிமேல் பிறையார் - குராமலர், கங்கை, வில்வம் இவற்றைப் புனைந்த திருமுடிமேல் பிறையையும் அணிந்தவர்; (வானதி - கங்கை); (கூவிளம் - வில்வம்);
இரவில் நடமிடும் இறைவர் - நள்ளிருளில் திருநடம் செய்பவர்;
அரைமிசை அரவை ஆர்த்தவர் - அரையில் பாம்பைக் கட்டியவர்;
அணி-மிடற்றினில் பரவை நஞ்சினர் - கடலில் தோன்றிய விஷத்தை அழகிய கண்டத்தில் வைத்தவர்; (பரவை - கடல்);
பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;
8)
மயலி னாற்பெரு வலியி னாலொரு
கயிலை வெற்பெடு கரிய அரக்கனின்
புயமைந் நான்கிற விரலை ஊன்றிய போதி னார்கழலார்
எயில்கள் மூன்றினை எய்த வில்லினர்
தயிர்நெய் ஆடிய தலைவர் பைங்கிளி
பயிலும் அம்பொழிற் பறிய லூருறை பரசு பாணியரே.
மயலினால், பெரு-வலியினால் ஒரு கயிலை வெற்பு எடு - ஆணவத்தாலும் தனக்கிருந்த பெரிய வலிமையினாலும் ஒப்பற்ற கயிலாய மலையைப் பெயர்த்துத் தூக்கிய;
கரிய அரக்கனின் புயம் ஐந்நான்கு இற விரலை ஊன்றிய போதின் ஆர் கழலார் - கரிய அரக்கனான இராவணனின் இருபது புஜங்களும் நசுங்கும்படி ஒரு விரலை ஊன்றிய பூப்போன்ற திருப்பாதம் உடையவர்; (போது - பூ); (ஆர்தல் - ஒத்தல்); (கழல் - கழல் அணிந்த திருவடி);
எயில்கள் மூன்றினை எய்த வில்லினர் - வில் ஏந்தி முப்புரங்களை எய்தவர்;
தயிர் நெய் ஆடிய தலைவர் - தயிர், நெய் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவர்;
பைங்கிளி பயிலும் அம்-பொழில் பறியலூர் உறை பரசுபாணியரே - பச்சைக்கிளிகள் தங்குகின்ற/ஒலிக்கின்ற அழகிய சோலை சூழ்ந்த திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (பயில்தல் - தங்குதல்; ஒலித்தல்);
9)
கறவை மேய்த்தவன் கழலை நண்ணிலன்
நறவ மலரினன் உச்சி நண்ணிலன்
அறவ னேஅருள் ஐய என்றிட அழல தானவரே
மறவி லாதடி வாழ்த்தும் அடியவர்
பிறவி நோய்க்கொரு பெரும ருந்தவர்
பறவை ஆர்பொழிற் பறிய லூருறை பரசு பாணியரே.
கறவை மேய்த்தவன் கழலை நண்ணிலன் - பசுக்களை மேய்த்த திருமாலால் திருவடியை அடைய ஒண்ணாதவர்; (கறவை - பாற் பசு); (நண்ணுதல் - நெருங்குதல்; கிட்டுதல்);
நறவ-மலரினன் உச்சி நண்ணிலன் - வாசத்-தாமரைமேல் உறையும் பிரமனால் உச்சியை அடைய ஒண்ணாதவர்; (நறவம் - தேன்; வாசனை)
"அறவனே அருள் ஐய" என்றிட அழல் அது ஆனவரே - அப்படி அவர் இருவரும் அடிமுடி தேடிக் காணாராய், "அறத்தின் வடிவே; தலைவனே; அருளாய்" என்று இறைஞ்சும்படி எல்லையற்ற ஜோதி ஆனவர்;
மறவு இலாது அடி வாழ்த்தும் அடியவர் பிறவி நோய்க்கு ஒரு பெரு-மருந்து அவர் - மறத்தல் இன்றித் திருவடியைத் தினமும் போற்றுகின்ற பக்தர்களது பிறவிப்பிணிக்கு ஒரு பெரிய மருந்து ஆனவர்; (மறவு - மறத்தல்); (அப்பர் தேவாரம் - 4.39.6 - "திருவையாறு அமர்ந்த தேனை மறவிலா நெஞ்சமே நன்மதி உனக்கு அடைந்தவாறே");
பறவை ஆர் பொழில் பறியலூர் உறை பரசுபாணியரே - பறவைகள் ஒலிக்கின்ற அழகிய சோலை சூழ்ந்த திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (ஆர்த்தல் - ஒலித்தல்);
10)
ஆயும் முறையறி யாத நெறியினர்
மாய மொழியுரை வாயர் சொலைவிடும்
தூய மலர்கொடு தொழுத வர்க்குயர் சுகம ளிப்பவரே
தேயும் மதிதனைத் திகழ வைத்தவர்
மாயும் நிலையிலர் வயலில் வாளைகள்
பாயும் அழகிய பறிய லூருறை பரசு பாணியரே.
ஆயும் முறை அறியாத நெறியினர் - ஆராய்வதற்கு அறியாத மார்க்கத்தினர்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின் தாயானவன்");
மாய-மொழி உரை வாயர் சொலை விடும் - வஞ்சமொழி பேசுகின்றவர்கள் பேச்சை மதிக்கவேண்டா; அவற்றை நீங்குங்கள்; (மாயம் - வஞ்சனை; பொய்); (சொலை - சொல்லை - இடைக்குறையாக வந்தது); (விடும் - விடுங்கள்);
தூய மலர்கொடு தொழுதவர்க்கு உயர் சுகம் அளிப்பவரே - தூய பூக்களால் வழிபடும் அன்பர்களுக்கு உயர்ந்த இன்பத்தைக் கொடுப்பவர்;
தேயும் மதிதனைத் திகழ வைத்தவர் - சாபத்தால் தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரனைத் திருமுடிமேல் விளங்கச் சூடியவர்;
மாயும் நிலை இலர் - என்றும் இறப்பு இல்லாதவர்;
வயலில் வாளைகள் பாயும் அழகிய பறியலூர் உறை பரசு பாணியரே - வயலில் வாளைமீன்கள் பாய்கின்ற நீர்வளம் மிக்க அழகிய திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (சுந்தரர் தேவாரம் - 7.57.9 - "வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்");
11)
சிவனெ னும்பெயர் சிந்தை செய்திடும்
குவல யத்தினர் கொடிய வல்வினை
அவலம் மாய்ப்பவர் அரவை நாணென அரையில் ஆர்த்தவரே
குவளைக் கண்ணியொர் கூறு கந்தவர்
தவள நீற்றினர் தழல்நி கர்த்தொளிர்
பவள மேனியர் பறிய லூருறை பரசு பாணியரே.
சிவன் எனும் பெயர் சிந்தை செய்திடும் குவலயத்தினர் கொடிய வல்வினை அவலம் மாய்ப்பவர் - சிவன் என்ற திருநாமத்தை ஜபம் செய்யும் மண்ணுலகத்தினரது கொடிய வலிய வினைகளையும் துன்பத்தையும் அழிப்பவர்; (குவலயம் - பூமி); (அவலம் - துன்பம்; வறுமை; கவலை);
அரவை நாண் என அரையில் ஆர்த்தவரே - பாம்பை அரைநாணாக அரையில் கட்டியவர்;
குவளைக்கண்ணி ஒர் கூறு உகந்தவர் - குவளைமலர் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பாகமாக விரும்பியவர்; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);
தவள-நீற்றினர் - வெள்ளைத் திருநீற்றைப் பூசியவர்; (தவளம் - வெண்மை);
தழல் நிகர்த்து ஒளிர் பவள-மேனியர் - தீப் போல ஒளிர்கின்றதும் பவளம் போன்ற செந்நிறம் உடையதுமான திருமேனியை உடையவர்;
பறியலூர் உறை பரசு பாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;
பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :
கன்னடத்தில் "ஷட்பதி" என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்புப் போல அமைந்தது;
ஆறு அடிகள்
எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.
1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. இவ்வடிகளில் சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிகள்தோறும் 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முற்பாதியில் உள்ள சீர்-அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
(சீர்கள் அளவொத்து இருந்தால் போதும். உதாரணமாக: மாச்சீர் வரும் இடத்தில் எவ்வகை மாச்சீரும் வரலாம்; விளச்சீர் வரும் இடத்தில் எவ்வகை விளச்சீரும் வரலாம்)3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முற்பாதியின் சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் எழுத்து. (நெடில், நெடில்+ஒற்று, குறில்+ஒற்று, குறில்).
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment