Saturday, April 19, 2025

P.392 - பாம்புரம் - கடலில் எழுந்த கடுவிடம்

2017-04-28

P.392 - பாம்புரம்

---------------------------------

(சந்தக் கலித்துறை - "தானன தான - தானன தான - தனதான" - சந்தம்;

தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடை யானைத் தீயதி லானை")


* (ம்) - புணர்ச்சியில் மகர் ஒற்றுக் கெடும் இடம்;


1)

கடலிலெ ழுந்த கடுவிடம் உண்டு கறையாரும்

மிடறுடை யானை வெண்பிறை ஒன்று மிளிர்கின்ற

படர்சடை யானைப் பாம்புர(ம்) மேய பகவானைத்

தொடைமலர் கொண்டு தொழுதெழ இல்லை துயர்தானே.


கடலில் எழுந்த கடு-விடம் உண்டு கறைரும் மிடறுடையானை - பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சை உண்டு கறையை அணிந்த கண்டத்தை உடையவனை; (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்);

வெண்பிறை ஒன்று மிளிர்கின்ற படர்-சடையானைப் - வெண்திங்கள் ஒளிவீசுகின்ற படர்ந்த சடையை உடையவனை;

பாம்புரம் மேய பகவானைத் - திருப்பாம்புரத்தில் எழுந்தருளிய கடவுளை; (பகவான் - கடவுள்; சிவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.4 - "நாகேச்சுர நகருள் பகவா என வல்வினை பற்றறுமே");

தொடை-மலர் கொண்டு தொழுதெழ இல்லை துயர்தானே - தொடுத்த பூக்களால் போற்றி வழிபட்டால் துன்பம் தீரும்; (தொடை - மாலை); (தொடைமலர் - மலர்த்தொடை); (தொடைமலர் கொண்டு - உம்மைத்தொகையாகத், "தொடையும் மலரும் கொண்டு" என்றும் பொருள்கொள்ளல் ஆம். அப்படிக்கொண்டால், தொடை - பாமாலை);


2)

வெண்டலை ஏந்திப் பலிதிரி வானை விடையானை

வண்டறை கூந்தல் மாதொரு பாகம் மகிழ்வானைப்

பண்டரண் எய்து பாம்புர(ம்) மேய பகவானைத்

தொண்டுகள் செய்து தொழுதெழ இல்லை துயர்தானே.


வெண்-தலை ஏந்திப் பலி திரிவானை - வெள்ளை மண்டையோட்டை ஏந்திப் பிச்சையேற்பவனை; (பலி - பிச்சை);

விடையானை - இடபவாகனனை;

வண்டு அறை கூந்தல் மாது ஒரு பாகம் மகிழ்வானைப் - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலை உடைய உமையை ஒரு பாகமாக விரும்பியவனை; (* வண்டறை கூந்தல் மாது - "வண்டார் குழலி" - இத்தலத்து இறைவி திருநாமம்);

பண்டு அரண் எய்து - முன்பு முப்புரங்களை எய்து;

பாம்புரம் மேய பகவானைத் - திருப்பாம்புரத்தில் எழுந்தருளிய கடவுளை;

தொண்டுகள் செய்து தொழுதெழ இல்லை துயர்தானே - திருத்தொண்டு செய்து வணங்கினால் துன்பம் தீரும்;


3)

உம்பர்கள் கோனை ஒண்மழு சூலம் உடையானை

சம்புவை ஆறு தண்மதி சேரும் சடையானைப்

பைம்பொழில் சூழ்ந்த பாம்புர(ம்) மேய பகவானை

வம்பலர் தூவி வாழ்த்திடும் அன்பர் மகிழ்வாரே.


உம்பர்கள் கோனை - தேவர் தலைவனை;

ஒண்-மழு சூலம் உடையானை - ஒளி திகழும் மழுவையும் சூலத்தையும் ஏந்தியவனை;

சம்புவை - சம்புவை; (சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன் திருநாமம்);

ஆறு தண்-மதி சேரும் சடையானைப் - கங்கையையும் குளிர்ந்த சந்திரனையும் சடையில் அணிந்தவனை;

பைம்பொழில் சூழ்ந்த பாம்புரம் மேய பகவானை - அழகிய சோலை சூழ்ந்த திருப்பாம்புரத்தில் எழுந்தருளிய கடவுளை;

வம்பு-அலர் தூவி வாழ்த்திடும் அன்பர் மகிழ்வாரே - வாசமலர் தூவி வழிபடும் பக்தர்கள் இன்பம் எய்துவார்கள்; (வம்பு - வாசனை); (அலர் - மலர்);


4)

புண்ணியர் நால்வர் போற்றிடும் ஆலின் புடையானை

கண்ணுத லானைக் கவினுறு சோலைக் கருவண்டு

பண்ணிசை செய்யும் பாம்புர(ம்) மேய பகவானை

எண்ணிய அன்பர் பண்ணிய பாவம் இலையாமே.


புண்ணியர் நால்வர் போற்றிடும் ஆலின் புடையானை - சனகாதியர்கள் போற்றுகின்ற கல்லாலநீழல் வீற்றிருந்தருளும் தட்சிணாமூர்த்தியை; (ஆல் - கல்லாலமரம்); (புடை - பக்கம்; இடம்);

கண்ணுதலானைக் - நெற்றிக்கண்ணனை; (நுதல் - நெற்றி);

கவின்-உறு சோலைக் கருவண்டு பண் இசை செய்யும் - அழகிய பொழிலில் கரிய வண்டுகள் பண்களை இசைக்கின்ற; (கவின் - அழகு);

பாம்புரம் மேய பகவானை - திருப்பாம்புரத்தில் எழுந்தருளிய கடவுளை;

எண்ணிய அன்பர் பண்ணிய பாவம் இலைமே - தியானிக்கும் பக்தர்களது பாவங்கள் அழியும்; (இலை - இல்லை);


5)

இனியுனை யன்றி இலைதுணை என்ற இமையோர்க்காத்

தனிமலை வில்லைத் தாங்கிய ரண்கள் தமையெய்த

பனிமலை யானைப் பாம்புர(ம்) மேய பகவானை

இனியனை ஏத்த இருவினை நீங்கல் எளிதாமே.


"இனி உனை அன்றி இலை துணை" என்ற இமையோர்க்காத் - "இனி உன்னைத் தவிர வேறு துணை இல்லை" என்று சரண்புகுந்த தேவர்களுக்காக; (இனி - இப்பொழுது; இனிமேல்); (இலை - இல்லை);

தனி மலை-வில்லைத் தாங்கி அரண்கள்-தமை எய்த - ஒப்பற்ற மேருவில்லை ஏந்தி முப்புரங்களை எய்த; (தனி - ஒப்பற்ற);

பனி-மலையானைப் - பனி சூழ்ந்த கயிலைமலை நாதனை;

பாம்புரம் மேய பகவானை - திருப்பாம்புரத்தில் எழுந்தருளிய கடவுளை;

இனியனை ஏத்த இருவினை நீங்கல் எளிது ஆமே - இனிமை பயப்பவனைத் துதித்தால் எளிதில் இருவினை நீக்கம் பெறலாம்;


6)

புரிசடை யானைப் பொடியணி வானைப் பொரவந்த

கரியுரி யானைக் கனல்மழு வானைக் கடல்நஞ்சுண்

பரிவுடை யானைப் பாம்புர(ம்) மேய பகவானை

விரிமலர் தூவி வேண்டிடும் அன்பர் வினைவீடே.


புரி-சடையானைப் - முறுக்கிய சடையினனை; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

பொடி அணிவானைப் - திருநீற்றைப் பூசியவனை;

பொர வந்த கரி-உரியானைக் - போர் செய்ய வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனை; (பொருதல் - போர்செய்தல்); (கரி - யானை); (உரி - தோல்);

கனல்-மழுவானைக் - பிரகாசிக்கின்ற மழுவை ஏந்தியவனை;

கடல்-நஞ்சு உண் பரிவு உடையானைப் - பாற்கடல் விடத்தை உண்ட கருணை உடையவனை;

பாம்புரம் மேய பகவானை - திருப்பாம்புரத்தில் எழுந்தருளிய கடவுளை;

விரி-மலர் தூவி வேண்டிடும் அன்பர் வினை வீடே - மலர்கின்ற பூக்களைத் தூவி இறைஞ்சும் பக்தர்களது வினை நீங்கும்; (வீடு - நீங்குதல்);


7)

மாய்தினம் என்று மறைமுனி அஞ்ச வருகூற்றைக்

காய்கழ லானைக் கமழ்சடை யானைக் கரவானைப்

பாய்விடை யானைப் பாம்புர(ம்) மேய பகவானை

ஆய்தமிழ் பாடி அடிதொழ அல்லல் அடையாவே.


மாய்-தினம் என்று மறை-முனி அஞ்ச வரு-கூற்றைக் காய்-கழலானைக் - இறக்கும் நாள் என்று (/ கொல்லும் நாள் என்று) மார்க்கண்டேயர் அஞ்சுமாறு வந்த காலனை உதைத்த கழல் அணிந்த திருவடியினனை; (மாய்தல் - இறத்தல்; மாய்த்தல் - கொல்லுதல்); (கூற்று - இயமன்); (காய்தல் - கோபித்தல்; அழித்தல்);

கமழ்-சடையானைக் - மணம் கமழும் சடையை உடையவனை;

கரவானைப் - வஞ்சமின்றி வரம் அருள்பவனை; (கரத்தல் - ஒளித்தல்; கொடாதிருத்தல்);

பாய்-விடையானைப் - பாய்ந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனை;

பாம்புரம் மேய பகவானை - திருப்பாம்புரத்தில் எழுந்தருளிய கடவுளை;

ஆய்-தமிழ் பாடி அடிதொழ அல்லல் அடையாவே - ஆய்ந்த நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வணங்கினால், துன்பங்கள் நெருங்கமாட்டா; (ஆய்தல் - அழகு அமைதல்; தெரிந்தெடுத்தல்) (பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.326 - "ஆய்ந்ததமிழ்ச் சொல்மலரால் சார்வுறு மாலைகள் சாத்தி");


8)

கல்பெயர் மூடன் கதறிட ஊன்றும் கழலானை

வெல்விடை யானை விமலனை வேத(ம்) மிகவேத்தும்

பல்பெய ரானைப் பாம்புர(ம்) மேய பகவானைச்

சொல்பிணை மாலை சூட்டிவ ணங்கச் சுகமாமே.


கல் பெயர் மூடன் கதறிட ஊன்றும் கழலானை - கயிலைமலையைப் பெயர்த்த மூடனான இராவணன் கதறி அழும்படி திருப்பாதவிரலை ஊன்றியவனை; (கல் - மலை);

வெல்-விடையானை - வெற்றியுடைய இடபவாகனனை;

விமலனை - தூயனை;

வேதம் மிக ஏத்தும் பல் பெயரானைப் - மறைகள் மிகவும் போற்றுகின்றவனைப், பல திருநாமங்கள் உடையவனை;

பாம்புரம் மேய பகவானைச் - திருப்பாம்புரத்தில் உறைகின்ற கடவுளை;

சொல் பிணை மாலை சூட்டி வணங்கச் சுகம் ஆமே - சொற்களைப் பிணைத்துத் தொடுத்த பாமாலைகளைச் சூட்டி வழிபடும் பக்தர்கள் இன்புறுவார்கள்;


9)

யாம்பரம் என்ற அரியய னார்கள் அறியானைக்

கூம்பிய நெஞ்சம் கோயில தாகும் குணத்தானைப்

பாம்பணி கோனைப் பாம்புர(ம்) மேய பகவானை

ஓம்பிடும் அன்பர் உலகினில் இன்பம் உறுவாரே.


"யாம் பரம்" என்ற அரி-யனார்கள் அறியானைக் - தாமே பரம்பொருள் என்று வாதிட்ட திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாதவனை;

கூம்பிய நெஞ்சம் கோயிலது ஆகும் குணத்தானைப் - பக்தியால் ஒருமுகப்பட்ட மனத்தைத் தன் கோயிலாக் கொண்டவனை; (கூம்புதல் - குவிதல்; மனம் ஒருங்கி நிற்றல்); (அப்பர் தேவாரம் - 6.5.4 - "கூம்பித் தொழுவார்தம் குற்றேவலைக் குறிக்கொண் டிருக்கும் குழகா போற்றி");

பாம்பு அணி கோனைப் - பாம்பை அணிந்த தலைவனை;

பாம்புரம் மேய பகவானைச் - திருப்பாம்புரத்தில் உறைகின்ற கடவுளை;

ஓம்பிடும் அன்பர் உலகினில் இன்பம் உறுவாரே - போற்றும் பக்தர்கள் உலகில் இன்பம் அடைவார்கள்;


10)

மெய்யறி யாத மிண்டர்கள் சொல்லில் விழவேண்டா

ஐயனை வேங்கை அதளணி கோனை அரைதன்னில்

பையர வார்த்துப் பாம்புர(ம்) மேய பகவானைச்

செய்யனை ஏத்தத் தீவினை தீர்ந்து திருவாமே.


மெய் அறியாத மிண்டர்கள் சொல்லில் விழவேண்டா - உண்மையை உணராத கல்நெஞ்சர்களின் பேச்சை மதிக்கவேண்டா; (மிண்டன் - கல்நெஞ்சன்);

ஐயனை, வேங்கை அதள் அணி கோனை - தலைவனைப், புலித்தோலை அணியும் அரசனை; (அதள் - தோல்);

அரைதன்னில் பையரவு ஆர்த்துப் - அரையில் நாகத்தை அரைநாணாகக் கட்டி; (பை - பாம்பின் படம்); (ஆர்த்தல் - கட்டுதல்);

பாம்புரம் மேய பகவானைச் - திருப்பாம்புரத்தில் உறைகின்ற கடவுளை;

செய்யனை ஏத்தத் தீவினை தீர்ந்து திரு ஆமே - செம்மேனியானைத் துதித்தால், பாவங்கள் தீர்ந்து நன்மை உண்டாகும்; (செய் - சிவப்பு);


11)

பிணமெரி காட்டிற் பெருநடம் ஆடும் பெருமானை

உணவிட வேண்டி ஓட்டினை ஏந்தி உழல்வானைப்

பணமணி வானைப் பாம்புர(ம்) மேய பகவானை

மணமலர் தூவி வழிபட என்றும் மகிழ்வாமே.


பிணம் எரி காட்டில் பெரு-நடம் ஆடும் பெருமானை - பிணங்கள் எரிகின்ற சுடுகாட்டில் பெரிய கூத்து ஆடும் பெருமானை;

உணவு இட வேண்டி ஓட்டினை ஏந்தி உழல்வானைப் - பிச்சை இட யாசித்து மண்டையோட்டை ஏந்தித் திரிபவனை;

பணம் அணிவானைப் - பாம்பை அணிபவனை; (பணம் - நாகப்பாம்பு);

பாம்புரம் மேய பகவானைச் - திருப்பாம்புரத்தில் உறைகின்ற கடவுளை;

மணமலர் தூவி வழிபட என்றும் மகிழ்வாமே - வாசமலர்களைத் தூவி வழிபாடு செய்தால் என்றும் இன்பமே வரும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment