2017-05-16
P.398 - மயிலாப்பூர்
---------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனதானா)
(தானாதன தானன தானன தானா - என்றும் நோக்கலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.31.1 - "விழுநீர் மழுவாட் படையண் ணல்விளங்கும்"); (சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடேகல னுண்பது மூரிடு பிச்சை")
1)
அயில்மூ விலைவேல் உடையான் அடையாதார்
எயில்மூன் றெரிசெய் சிலையான் எருதேறி
மயிலாய் உமையாள் துதிசெய் மயிலாப்பூர்ப்
புயலார் மிடறன் புகழைப் புகல்நாவே.
அயில் மூவிலைவேல் உடையான் - கூர்மை பொருந்திய திரிசூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை);
அடையாதார் எயில் மூன்று எரிசெய் சிலையான் - பகைவர்களது முப்புரத்தை எரித்த வில்லை ஏந்தியவன்; (அடையாதார் - பகைவர்); (எயில் - மதில்); (சிலை - வில்);
எருதேறி - இடபவாகனன்;
மயிலாய் உமையாள் துதிசெய் மயிலாப்பூர்ப் - மயில் உருவில் உமையம்மை ஈசனை வழிபட்ட மயிலாப்பூரில் உறைகின்ற; (* "மயிலாய் உமையாள் துதிசெய் மயிலாப்பூர்" - மயிலாப்பூர்த் தலபுராணச் செய்தி);
புயல் ஆர் மிடறன் புகழைப் புகல் நாவே - மேகம் போன்ற நிறம் திகழும் கண்டத்தை உடைய சிவபெருமான் புகழை, நாக்கே நீ சொல்வாயாக; (புயல் - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்); (புகல்தல் - சொல்லுதல்);
2)
உடையாய் அருளென் றழுதார்க் குயிர்தந்த
விடமார் மிடறன் புரிநூல் மிளிர்மார்பன்
மடமான் விழியாள் துதிசெய் மயிலாப்பூர்
நடமா டிறைவன் புகழே நவில்நாவே.
"உடையாய் அருள்" என்று அழுதார்க்கு உயிர் தந்த, விடம் ஆர் மிடறன் - "சுவாமீ! அருள்புரியாய்" என்று அழுத தேவர்கள் உயிர்பிழைக்கும்படி விடத்தை உண்டருளிய நீலகண்டன்; (ஆர்தல் - உண்தல்; பொருந்துதல்); (மிடறு - கண்டம்; மிடற்றன் என்பது மிடறன் என்று சந்தம் கருதி வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.72.9 - "மையார் மணிமிடறன்");
புரிநூல் மிளிர் மார்பன் - மார்பில் ஒளிதிகழும் பூணூல் அணிந்தவன்;
மடமான் விழியாள் துதிசெய் மயிலாப்பூர் - இளமான் போன்ற நோக்குடைய உமையம்மை ஈசனை வழிபட்ட மயிலாப்பூரில் உறைகின்ற;
நடம் ஆடு இறைவன் புகழே நவில் நாவே - கூத்து ஆடும் பெருமானது புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (நவில்தல் - சொல்லுதல்);
3)
துணைநீ அருளென் றடைவார் துயர்தீர்ப்பான்
கணமார் படையன் பனியார் கயிலாயன்
மணமார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்ப்
பணமார் அரையன் புகழே பகர்நாவே.
"துணை நீ அருள்" என்று அடைவார் துயர் தீர்ப்பான் - "நீயே துணை" என்று சரண்புகுந்த அடியவர்களது துயரைத் தீர்ப்பவன்;
கணம் ஆர் படையன் - பூதப்படையை உடையவன்;
பனி ஆர் கயிலாயன் - பனி நிறைந்த கயிலைமலைமேல் உறைபவன்;
மணம் ஆர் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்ப் - வாசக்குழலியான உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;
பணம் ஆர் அரையன் புகழே பகர் நாவே - பாம்பை அரையில் கட்டிய (/ மார்பில் அணிந்த) தலைவன் புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (பணம் - பாம்பு); (ஆர்த்தல் - கட்டுதல்; ஆர்தல் - அணிதல்); (அரையன் - தலைவன்); (பகர்தல் - சொல்லுதல்);
4)
தலையோர் கலனாப் பலிதேர் தழல்வண்ணன்
உலவான் பிறவான் மதமா உரிசெய்தான்
மலரார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்
உலராச் சடையான் புகழே உரைநாவே.
தலை ஓர் கலனாப் பலிதேர் தழல்வண்ணன் - பிரமன் மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாக ஏந்திப் பிச்சை ஏற்பவன், தீப் போன்ற செம்மேனியன்; (பலி - பிச்சை); (தழல் - தீ);
உலவான் பிறவான் - இறப்பும் பிறப்பும் இல்லாதவன்; (உலத்தல் - சாதல்; அழிதல்);
மதமா உரிசெய்தான் - மதயானையின் தோலை உரித்தவன்; (மதமா - யானை);
மலர் ஆர் குழலாள் துதிசெய் மயிலாப்பூர் - மலர் அணிந்த கூந்தலை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;
உலராச் சடையான் புகழே உரை நாவே - சடையில் என்றும் நீரை உடையவன் (கங்காதரன்) புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (உரைத்தல் - சொல்லுதல்);
5)
அருவாய் உருவாய் அடியார்க் கருள்செய்யும்
பெருமான் பிறவான் இறவான் பிணியில்லான்
மருவார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்
ஒருமா மிடறன் புகழே உரைநாவே.
அருவாய் உருவாய் அடியார்க்கு அருள்செய்யும் பெருமான் - அருவமாகிக் கண்ணுக்குத் தெரியாமல் நின்றும், உருக்கொண்டு தென்பட்டும், பக்தர்களுக்கு அருள்செய்யும் பெருமான்;
பிறவான் இறவான் பிணி இல்லான் - பிறப்பு, இறப்பு, பந்தம், நோய், இவையொன்றும் இல்லாதவன்;
மருவார்-குழலாள் துதிசெய் மயிலாப்பூர் - வாசம் பொருந்திய நீண்ட கூந்தலை உடைய உமையம்மை ஈசனை வழிபட்ட மயிலாப்பூரில் உறைகின்ற; (மருவார் - 1. மரு ஆர்; 2. மரு வார்); (மரு - வாசனை); (ஆர்தல் - பொருந்துதல்); (வார்தல் - நீள்தல்);
ஒரு மா-மிடறன் புகழே உரை நாவே - ஒப்பற்ற அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானது புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (ஒரு - ஒப்பற்ற); (மா - அழகு);
6)
தலையேந் திறைவன் சடையிற் சலமேற்றான்
அலையார் கடலின் கருநஞ் சணிகண்டன்
மலையான் மகளோர் புடையான் மயிலாப்பூர்
நிலையா கியவன் பெயரே நினைநெஞ்சே.
தலை ஏந்து இறைவன் - கபாலத்தை ஏந்துகின்ற இறைவன்; (தலை - மண்டையோடு); (* கபாலீஸ்வரன் - மயிலாப்பூரில் ஈசன் திருநாமம்);
சடையில் சலம் ஏற்றான் - சடையில் கங்கையை அணிந்தவன்; (சலம் - ஜலம் - கங்கை);
அலை ஆர் கடலின் கருநஞ்சு அணி கண்டன் - அலை மிகுந்த பாற்கடலில் எழுந்த கரிய விஷத்தைக் கண்டத்தில் அணிந்தவன்;
மலையான் மகள் ஓர் புடையான் - மலைமங்கையை ஒரு பக்கத்தில் (கூறாக) உடையவன்; (புடை - பக்கம்);
மயிலாப்பூர் நிலை ஆகியவன் பெயரே நினை நெஞ்சே - மயிலாப்பூரில் நீங்காமல் உறையும் அப்பெருமானது திருநாமத்தையே, என் நெஞ்சே, நீ நினைவாயாக;
7)
கனலும் கலைமான் மறியும் கரமேந்தி
சினவெள் விடையன் புரிநூல் திகழ்மார்பன்
வனமென் முலையாள் துதிசெய் மயிலாப்பூர்ப்
புனலார் சடையான் புகழே புகல்நாவே.
கனலும் கலைமான் மறியும் கரம் ஏந்தி - தீயையும் கலைமான்-கன்றையும் கையில் ஏந்தியவன்;
சின-வெள்-விடையன் - கோபிக்கின்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;
புரிநூல் திகழ் மார்பன் - மார்பில் பூணூல் திகழ்பவன்;
வன-மென்-முலையாள் துதிசெய் மயிலாப்பூர்ப் - அழகிய மென்மையான முலைகளை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;
புனல் ஆர் சடையான் புகழே புகல் நாவே - கங்கைச்சடையன் புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (புகல்தல் - சொல்லுதல்);
8)
எதிர்வார் இலனாய் அருவெற் பெறிவானை
அதிரார் கழலோர் விரல்வைத் தழவைத்தார்
மதிபோல் நுதலாள் துதிசெய் மயிலாப்பூர்
பதியா மகிழ்வார் புகழே பகர்நாவே.
எதிர்வார் இலனாய், அரு-வெற்பு எறிவானை - தன்னை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லாதவனாகி, அரிய கயிலைமலையை வீசி எறிய முயன்ற இராவணனை; (எதிர்தல் - எதிர்த்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.56.8 - "இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி அமைதரு வல்லரக்கன் அடர்த்தும்மலை அன்றெடுப்ப");
அதிர் ஆர் கழல் ஓர் விரல் வைத்து அழவைத்தார் - அதிரும் கழல் அணிந்த திருவடியின் விரல் ஒன்றை ஊன்றி அழச்செய்தவர்; (அதிர் - ஒலி; ஒலித்தல்); (அதிரார் - "மனம் நடுங்காதவர்" என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்); (சம்பந்தர் தேவாரம் - 3.42.4 - "அதிரார்பைங்க ணேறுடை ஆதிமூர்த்தி");
மதி போல் நுதலாள் துதிசெய் மயிலாப்பூர் - பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரே; (நுதல் - நெற்றி); (சம்பந்தர் தேவாரம் - 2.85.4 - "மதிநுதல் மங்கையோடு");
பதியா மகிழ்வார் புகழே பகர் நாவே - தாம் உறையும் தலமாக விரும்பிய சிவபெருமான் புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (பதி - இடம்; தலம்); (பகர்தல் - சொல்லுதல்);
9)
பதியார் எனு(ம்)மால் அயனார் பதமேத்த
எதிரே அளவில் சுடராய் எழுநாதன்
மதுவார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்
நதியார் சடையான் பெயரே நவில்நாவே.
"பதி யார்" எனும் மால் அயனார் பதம் ஏத்த - தம் இருவருள் யார் தலைவன் என்று வாதிட்ட விஷ்ணுவும் பிரமனும் தன் திருவடியைப் போற்றும்படி;
எதிரே அளவு-இல் சுடராய் எழு நாதன் - அவர்கள்முன் எல்லையற்ற ஜோதி வடிவில் உயர்ந்த தலைவன்;
மது வார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர் - தேன் சொரியும் மலர்களை அணிந்த நீண்ட கூந்தலை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற; (வார்தல் - ஒழுகுதல்; நீள்தல்);
நதி ஆர் சடையான் பெயரே நவில் நாவே - சடையில் கங்கையை உடைய சிவபெருமானது திருநாமத்தையே, நாக்கே நீ சொல்வாயாக;
10)
ஓரா தவமே புரிவார் ஒருநாளும்
தீரார் வினைநோய் தொலையாத் திருவேண்டில்
வாரார் முலையாள் துதிசெய் மயிலாப்பூர்
நீரார் சடையான் பெயரே நினைநெஞ்சே.
ஓராது அவமே புரிவார் ஒருநாளும் தீரார் வினைநோய் - (சிவபெருமானை வணங்க) எண்ணாமல், எந்நாளும் அவச்செயல்களே செய்தும் புன்மொழிகளே பேசியும் உழல்கின்றவர்களது வினைகள் தீரமாட்டா;
தொலையாத் திரு வேண்டில் - அழியாத செல்வத்தை அடைய நீ விரும்பினால்;
வார் ஆர் முலையாள் துதிசெய் மயிலாப்பூர் - கச்சு அணிந்த முலைகளை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;
நீர் ஆர் சடையான் பெயரே நினை நெஞ்சே - சடையில் கங்கையை உடைய சிவபெருமானது திருநாமத்தையே, நெஞ்சே, நீ எண்ணுவாயாக;
11)
குரையார் கழலால் நமனைக் குமைசெய்தாய்
திரையார் சடைமேற் பிறையைத் திகழ்வித்தாய்
வரையான் மகளோர் புடையாய் மயிலாப்பூர்
அரையா எனவல் வினைதீர்த் தருள்வானே.
"குரை ஆர் கழலால் நமனைக் குமைசெய்தாய் - "ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் காலனை உதைத்து அழித்தவனே;
திரை ஆர் சடைமேல் பிறையைத் திகழ்வித்தாய் - கங்கையை அணிந்த (/ கங்கை ஒலிக்கும்) சடைமேல் சந்திரனைத் திகழச்செய்தவனே; (திரை - நதி; அலை); (ஆர்தல் - அணிதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);
வரையான்-மகள் ஓர் புடையாய் - மலைமங்கையை ஒரு பக்கத்தில் பாகமாக உடையவனே; (வரை - மலை; வரையான் - இமவான்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.6 - "வரையான் மகள் காண மகிழ்ந்தவனே");
மயிலாப்பூர் அரையா" என, வல்வினை தீர்த்து அருள்வானே - மயிலாப்பூரில் உறைகின்ற அரசனே" என்று வாழ்த்தினால், அப்பெருமான் நம் வலிய வினைகளைத் தீர்த்து அருள்புரிவான்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment