Sunday, April 20, 2025

P.398 - மயிலாப்பூர் - அயில் மூவிலைவேல்

2017-05-16

P.398 - மயிலாப்பூர்

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனதானா)

(தானாதன தானன தானன தானா - என்றும் நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.31.1 - "விழுநீர் மழுவாட் படையண் ணல்விளங்கும்"); (சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடேகல னுண்பது மூரிடு பிச்சை")


1)

அயில்மூ விலைவேல் உடையான் அடையாதார்

எயில்மூன் றெரிசெய் சிலையான் எருதேறி

மயிலாய் உமையாள் துதிசெய் மயிலாப்பூர்ப்

புயலார் மிடறன் புகழைப் புகல்நாவே.


அயில் மூவிலைவேல் உடையான் - கூர்மை பொருந்திய திரிசூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை);

அடையாதார் எயில் மூன்று எரிசெய் சிலையான் - பகைவர்களது முப்புரத்தை எரித்த வில்லை ஏந்தியவன்; (அடையாதார் - பகைவர்); (எயில் - மதில்); (சிலை - வில்);

எருதேறி - இடபவாகனன்;

மயிலாய் உமையாள் துதிசெய் மயிலாப்பூர்ப் - மயில் உருவில் உமையம்மை ஈசனை வழிபட்ட மயிலாப்பூரில் உறைகின்ற; (* "மயிலாய் உமையாள் துதிசெய் மயிலாப்பூர்" - மயிலாப்பூர்த் தலபுராணச் செய்தி);

புயல் ஆர் மிடறன் புகழைப் புகல் நாவே - மேகம் போன்ற நிறம் திகழும் கண்டத்தை உடைய சிவபெருமான் புகழை, நாக்கே நீ சொல்வாயாக; (புயல் - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்); (புகல்தல் - சொல்லுதல்);


2)

உடையாய் அருளென் றழுதார்க் குயிர்தந்த

விடமார் மிடறன் புரிநூல் மிளிர்மார்பன்

மடமான் விழியாள் துதிசெய் மயிலாப்பூர்

நடமா டிறைவன் புகழே நவில்நாவே.


"உடையாய் அருள்" என்று அழுதார்க்கு உயிர் தந்த, விடம் ஆர் மிடறன் - "சுவாமீ! அருள்புரியாய்" என்று அழுத தேவர்கள் உயிர்பிழைக்கும்படி விடத்தை உண்டருளிய நீலகண்டன்; (ஆர்தல் - உண்தல்; பொருந்துதல்); (மிடறு - கண்டம்; மிடற்றன் என்பது மிடறன் என்று சந்தம் கருதி வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.72.9 - "மையார் மணிமிடறன்");

புரிநூல் மிளிர் மார்பன் - மார்பில் ஒளிதிகழும் பூணூல் அணிந்தவன்;

மடமான் விழியாள் துதிசெய் மயிலாப்பூர் - இளமான் போன்ற நோக்குடைய உமையம்மை ஈசனை வழிபட்ட மயிலாப்பூரில் உறைகின்ற;

நடம் ஆடு இறைவன் புகழே நவில் நாவே - கூத்து ஆடும் பெருமானது புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (நவில்தல் - சொல்லுதல்);


3)

துணைநீ அருளென் றடைவார் துயர்தீர்ப்பான்

கணமார் படையன் பனியார் கயிலாயன்

மணமார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்ப்

பணமார் அரையன் புகழே பகர்நாவே.


"துணை நீ அருள்" என்று அடைவார் துயர் தீர்ப்பான் - "நீயே துணை" என்று சரண்புகுந்த அடியவர்களது துயரைத் தீர்ப்பவன்;

கணம் ஆர் படையன் - பூதப்படையை உடையவன்;

பனி ஆர் கயிலாயன் - பனி நிறைந்த கயிலைமலைமேல் உறைபவன்;

மணம் ஆர் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்ப் - வாசக்குழலியான உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;

பணம் ஆர் அரையன் புகழே பகர் நாவே - பாம்பை அரையில் கட்டிய (/ மார்பில் அணிந்த) தலைவன் புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (பணம் - பாம்பு); (ஆர்த்தல் - கட்டுதல்; ஆர்தல் - அணிதல்); (அரையன் - தலைவன்); (பகர்தல் - சொல்லுதல்);


4)

தலையோர் கலனாப் பலிதேர் தழல்வண்ணன்

உலவான் பிறவான் மதமா உரிசெய்தான்

மலரார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்

உலராச் சடையான் புகழே உரைநாவே.


தலை ஓர் கலனாப் பலிதேர் தழல்வண்ணன் - பிரமன் மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாக ஏந்திப் பிச்சை ஏற்பவன், தீப் போன்ற செம்மேனியன்; (பலி - பிச்சை); (தழல் - தீ);

உலவான் பிறவான் - இறப்பும் பிறப்பும் இல்லாதவன்; (உலத்தல் - சாதல்; அழிதல்);

மதமா உரிசெய்தான் - மதயானையின் தோலை உரித்தவன்; (மதமா - யானை);

மலர் ஆர் குழலாள் துதிசெய் மயிலாப்பூர் - மலர் அணிந்த கூந்தலை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;

உலராச் சடையான் புகழே உரை நாவே - சடையில் என்றும் நீரை உடையவன் (கங்காதரன்) புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (உரைத்தல் - சொல்லுதல்);


5)

அருவாய் உருவாய் அடியார்க் கருள்செய்யும்

பெருமான் பிறவான் இறவான் பிணியில்லான்

மருவார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்

ஒருமா மிடறன் புகழே உரைநாவே.


அருவாய் உருவாய் அடியார்க்கு அருள்செய்யும் பெருமான் - அருவமாகிக் கண்ணுக்குத் தெரியாமல் நின்றும், உருக்கொண்டு தென்பட்டும், பக்தர்களுக்கு அருள்செய்யும் பெருமான்;

பிறவான் இறவான் பிணில்லான் - பிறப்பு, இறப்பு, பந்தம், நோய், இவையொன்றும் இல்லாதவன்;

மருவார்-குழலாள் துதிசெய் மயிலாப்பூர் - வாசம் பொருந்திய நீண்ட கூந்தலை உடைய உமையம்மை ஈசனை வழிபட்ட மயிலாப்பூரில் உறைகின்ற; (மருவார் - 1. மரு ஆர்; 2. மரு வார்); (மரு - வாசனை); (ஆர்தல் - பொருந்துதல்); (வார்தல் - நீள்தல்);

ஒரு மா-மிடறன் புகழே உரை நாவே - ஒப்பற்ற அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானது புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (ஒரு - ஒப்பற்ற); (மா - அழகு);


6)

தலையேந் திறைவன் சடையிற் சலமேற்றான்

அலையார் கடலின் கருநஞ் சணிகண்டன்

மலையான் மகளோர் புடையான் மயிலாப்பூர்

நிலையா கியவன் பெயரே நினைநெஞ்சே.


தலை ஏந்து இறைவன் - கபாலத்தை ஏந்துகின்ற இறைவன்; (தலை - மண்டையோடு); (* கபாலீஸ்வரன் - மயிலாப்பூரில் ஈசன் திருநாமம்);

சடையில் சலம் ஏற்றான் - சடையில் கங்கையை அணிந்தவன்; (சலம் - ஜலம் - கங்கை);

அலை ஆர் கடலின் கருநஞ்சு அணி கண்டன் - அலை மிகுந்த பாற்கடலில் எழுந்த கரிய விஷத்தைக் கண்டத்தில் அணிந்தவன்;

மலையான் மகள் ஓர் புடையான் - மலைமங்கையை ஒரு பக்கத்தில் (கூறாக) உடையவன்; (புடை - பக்கம்);

மயிலாப்பூர் நிலை ஆகியவன் பெயரே நினை நெஞ்சே - மயிலாப்பூரில் நீங்காமல் உறையும் அப்பெருமானது திருநாமத்தையே, என் நெஞ்சே, நீ நினைவாயாக;


7)

கனலும் கலைமான் மறியும் கரமேந்தி

சினவெள் விடையன் புரிநூல் திகழ்மார்பன்

வனமென் முலையாள் துதிசெய் மயிலாப்பூர்ப்

புனலார் சடையான் புகழே புகல்நாவே.


கனலும் கலைமான் மறியும் கரம் ஏந்தி - தீயையும் கலைமான்-கன்றையும் கையில் ஏந்தியவன்;

சின-வெள்-விடையன் - கோபிக்கின்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

புரிநூல் திகழ் மார்பன் - மார்பில் பூணூல் திகழ்பவன்;

வன-மென்-முலையாள் துதிசெய் மயிலாப்பூர்ப் - அழகிய மென்மையான முலைகளை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;

புனல் ஆர் சடையான் புகழே புகல் நாவே - கங்கைச்சடையன் புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (புகல்தல் - சொல்லுதல்);


8)

எதிர்வார் இலனாய் அருவெற் பெறிவானை

அதிரார் கழலோர் விரல்வைத் தழவைத்தார்

மதிபோல் நுதலாள் துதிசெய் மயிலாப்பூர்

பதியா மகிழ்வார் புகழே பகர்நாவே.


எதிர்வார் இலனாய், அரு-வெற்பு எறிவானை - தன்னை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லாதவனாகி, அரிய கயிலைமலையை வீசி எறிய முயன்ற இராவணனை; (எதிர்தல் - எதிர்த்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.56.8 - "இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி அமைதரு வல்லரக்கன் அடர்த்தும்மலை அன்றெடுப்ப");

அதிர் ஆர் கழல் ஓர் விரல் வைத்து அழவைத்தார் - அதிரும் கழல் அணிந்த திருவடியின் விரல் ஒன்றை ஊன்றி அழச்செய்தவர்; (அதிர் - ஒலி; ஒலித்தல்); (அதிரார் - "மனம் நடுங்காதவர்" என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்); (சம்பந்தர் தேவாரம் - 3.42.4 - "அதிரார்பைங்க ணேறுடை ஆதிமூர்த்தி");

மதி போல் நுதலாள் துதிசெய் மயிலாப்பூர் - பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரே; (நுதல் - நெற்றி); (சம்பந்தர் தேவாரம் - 2.85.4 - "மதிநுதல் மங்கையோடு");

பதியா மகிழ்வார் புகழே பகர் நாவே - தாம் உறையும் தலமாக விரும்பிய சிவபெருமான் புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (பதி - இடம்; தலம்); (பகர்தல் - சொல்லுதல்);


9)

பதியார் எனு(ம்)மால் அயனார் பதமேத்த

எதிரே அளவில் சுடராய் எழுநாதன்

மதுவார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்

நதியார் சடையான் பெயரே நவில்நாவே.


"பதி யார்" எனும் மால் அயனார் பதம் ஏத்த - தம் இருவருள் யார் தலைவன் என்று வாதிட்ட விஷ்ணுவும் பிரமனும் தன் திருவடியைப் போற்றும்படி;

எதிரே அளவு-இல் சுடராய் எழு நாதன் - அவர்கள்முன் எல்லையற்ற ஜோதி வடிவில் உயர்ந்த தலைவன்;

மது வார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர் - தேன் சொரியும் மலர்களை அணிந்த நீண்ட கூந்தலை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற; (வார்தல் - ஒழுகுதல்; நீள்தல்);

நதி ஆர் சடையான் பெயரே நவில் நாவே - சடையில் கங்கையை உடைய சிவபெருமானது திருநாமத்தையே, நாக்கே நீ சொல்வாயாக;


10)

ஓரா தவமே புரிவார் ஒருநாளும்

தீரார் வினைநோய் தொலையாத் திருவேண்டில்

வாரார் முலையாள் துதிசெய் மயிலாப்பூர்

நீரார் சடையான் பெயரே நினைநெஞ்சே.


ஓராது அவமே புரிவார் ஒருநாளும் தீரார் வினைநோய் - (சிவபெருமானை வணங்க) எண்ணாமல், எந்நாளும் அவச்செயல்களே செய்தும் புன்மொழிகளே பேசியும் உழல்கின்றவர்களது வினைகள் தீரமாட்டா;

தொலையாத் திரு வேண்டில் - அழியாத செல்வத்தை அடைய நீ விரும்பினால்;

வார் ஆர் முலையாள் துதிசெய் மயிலாப்பூர் - கச்சு அணிந்த முலைகளை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;

நீர் ஆர் சடையான் பெயரே நினை நெஞ்சே - சடையில் கங்கையை உடைய சிவபெருமானது திருநாமத்தையே, நெஞ்சே, நீ எண்ணுவாயாக;


11)

குரையார் கழலால் நமனைக் குமைசெய்தாய்

திரையார் சடைமேற் பிறையைத் திகழ்வித்தாய்

வரையான் மகளோர் புடையாய் மயிலாப்பூர்

அரையா எனவல் வினைதீர்த் தருள்வானே.


"குரை ஆர் கழலால் நமனைக் குமைசெய்தாய் - "ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் காலனை உதைத்து அழித்தவனே;

திரை ஆர் சடைமேல் பிறையைத் திகழ்வித்தாய் - கங்கையை அணிந்த (/ கங்கை ஒலிக்கும்) சடைமேல் சந்திரனைத் திகழச்செய்தவனே; (திரை - நதி; அலை); (ஆர்தல் - அணிதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

வரையான்-மகள் ஓர் புடையாய் - மலைமங்கையை ஒரு பக்கத்தில் பாகமாக உடையவனே; (வரை - மலை; வரையான் - இமவான்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.6 - "வரையான் மகள் காண மகிழ்ந்தவனே");

மயிலாப்பூர் அரையா" என, வல்வினை தீர்த்து அருள்வானே - மயிலாப்பூரில் உறைகின்ற அரசனே" என்று வாழ்த்தினால், அப்பெருமான் நம் வலிய வினைகளைத் தீர்த்து அருள்புரிவான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment