2017-06-10
N.047 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2017
----------------
(ஷட்பதி அமைப்பு -
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் விளம் விளம் விளம் விளங்காய்)
நறுமலர் கொய்யணி நங்கையர் இருவரை
மறுமுறை நோக்கவும் மண்மிசைப் பிறவியைப்
பெறுதவர் அழகிய பிறையணி ஈசனைப் பித்தனென் றுரைத்தவரே
தறுகணன் மறலிதன் தமர்நலி யாவணம்
அறுமுகன் அப்பனை அடிதொழும் என்றுநம்
சிறுமைகள் தீர்தமிழ் செப்பிய சுந்தரர் திருவடி ஏத்திடுவோம்.
நறுமலர் கொய் அணி நங்கையர் இருவரை மறுமுறை நோக்கவும் மண்மிசைப் பிறவியைப் பெறு தவர் - கயிலையில் வாசமலர்களைப் பறிக்கவந்த இரு-சேடியரைக் கண்டு ஒரு-க்ஷணம் ஆசைப்பட்டு, அதன் காரணமாக இப்பூமியின்மேல் பிறவியைப் பெற்றவர், தவம் உடையவர்; (தவர் - தவம் உடையவர்);
அழகிய பிறை அணி ஈசனைப் பித்தன் என்று உரைத்தவரே - அழகிய சந்திரனை அணியும் சிவபெருமானைப் "பித்தரோ நீர்" என்று மணப்பந்தலில் கேட்டவர்; பின்னர்ப், "பித்தா பிறைசூடீ" என்று பாடி வழிபட்டவர்;
தறுகணன் மறலிதன் தமர் நலியா-வணம் அறுமுகன் அப்பனை அடிதொழும் என்று - கொடிய கூற்றுவனது படர்களால் வருத்தமுறும் நிலையை அடையாமல் உய்வதற்கு, முருகனுக்குத் தந்தையான சிவபெருமானது திருவடியை வழிபடுங்கள் என்று; (தறுகணன் - தறுகண்ணன் - கொடியவன்); (திருப்புகழ் - பழநி - "தமரும் அமரும் .. .. தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே"); (சுந்தரர் தேவாரம் - 7.90.1 - "தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள்வான்");
நம் சிறுமைகள் தீர் தமிழ் செப்பிய சுந்தரர் திருவடி ஏத்திடுவோம் - நம் குற்றங்களைத் தீர்க்கும் செந்தமிழான தேவாரம் பாடியருளிய சுந்தரரது திருவடிகளைப் போற்றுவோம்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment