Wednesday, April 9, 2025

P.384 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - கூத்தினன் அரையினில்

2017-04-01

P.384 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை)

---------------------------------

(கலிவிருத்தம் - தானன தானன தானன தானன;

தானன என்பது தனதன என்றும் வரலாம்; பாடலின் ஈற்றுச் சீர் தானா / தனனா)

(விளம் விளம் விளம் விளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.120.1 - "பணிந்தவர் அருவினை")


1)

கூத்தினன் அரையினிற் கொல்புலித் தோலினன்

தீர்த்த(ம்)நன் மலர்கொடு திருவடி இணைதனை

வாழ்த்திய நற்றவ மாணிதன் இன்னுயிர்

காத்தவன் உறைவது கற்குடி மலையே.


கூத்தினன் - திருநடம் செய்பவன்;

அரையினில் கொல்-புலித் தோலினன் - அரையில் கொடிய புலியின் தோலை அணிந்தவன்;

தீர்த்தம் நன்மலர்கொடு திருவடி-இணைதனை வாழ்த்திய நற்றவ மாணிதன் இன்னுயிர் காத்தவன் - நீரும் பூவும் கொண்டு இரு-திருவடிகளை வழிபட்ட நல்ல தவம் பொருந்திய மார்க்கண்டேயரின் இனிய உயிரைக் காத்தவன்; (தீர்த்தநன்மலர் - தீர்த்தம் நன்மலர் - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);

உறைவது கற்குடி மலையே - அப்பெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்;


2)

எண்ணிய அமுதினை இமையவர்க் கருளிய

புண்ணியன் இளமதி பொலிதரு சடையினன்

பண்ணமர் தமிழ்கொடு மண்ணினர் பரவிடும்

கண்ணுதல் உறைவது கற்குடி மலையே.


எண்ணிய அமுதினை இமையவர்க்கு அருளிய புண்ணியன் - தேவர்கள் விரும்பிய அமுதத்தை அவர்களுக்கு அருளிய புண்ணியமூர்த்தி;

இளமதி பொலிதரு சடையினன் - இளம்பிறை பொலிகின்ற சடையை உடையவன்; (தருதல் - துணைவினை);

பண் அமர் தமிழ்கொடு மண்ணினர் பரவிடும் கண்ணுதல் - பண் பொருந்திய தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி உலகோர் போற்றுகின்ற நெற்றிக்கண்ணன்;

உறைவது கற்குடி மலையே - அப்பெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்;


3)

பண்ணியல் பாடல்கள் பாடிடும் அடியவர்

பண்ணிய பழவினை பற்றறுத் தருள்செயும்

புண்ணியன் எரிபுரை புரிசடை மேல்மதிக்

கண்ணியன் உறைவது கற்குடி மலையே.


பண் இயல் பாடல்கள் பாடிடும் அடியவர் - பண் பொருந்திய தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடுகின்ற அடியவர்கள்;

பண்ணிய பழவினை பற்றறுத்து அருள்செயும் புண்ணியன் - செய்த பழைய வினையை முற்றிலும் அழித்து அருள்கின்ற புண்ணியமூர்த்தி; (பற்றறுத்தல் - முற்றிலும் நீக்குதல் / வேரோடு களைதல் - என்று பொருள்படும்); (அப்பர் தேவாரம் - 6.31.9 - "பாசத்தைப் பற்றறுக்கலாகும் நெஞ்சே"); (திருவாசகம் - திருவம்மானை - 8.8.20 - "இப்-பாசத்தைப் பற்றற நாம் பற்றுவான்");

எரி புரை புரி-சடைமேல் மதிக் கண்ணியன் - தீப் போன்ற முறுக்கிய செஞ்சடையின்மேல் திங்களைக் கண்ணிமாலை போல அணிந்தவன்;

உறைவது கற்குடி மலையே - அப்பெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்;


4)

மறையுரை பொருளென மன்னிய பெருமையன்

பிறையணி சடையினன் பெண்ணொரு புடையினன்

நறைமலர்க் கொன்றையன் நலிசுரர் இடர்களை

கறைமிடற் றிறையிடம் கற்குடி மலையே.


மறை உரை பொருள் என மன்னிய பெருமையன் - வேதங்கள் கூறும் மெய்ப்பொருளாக நிலைபெற்று விளங்குபவன்;

பிறை அணி சடையினன் - சடையில் திங்களை அணிந்தவன்;

பெண் ஒரு புடையினன் - திருமேனியில் ஒரு பக்கத்தில் உமையை உடையவன்;

நறைமலர்க் கொன்றையன் - வாசக்-கொன்றைமலரை அணிந்தவன்;

நலி சுரர் இடர் களை கறைமிடற்று இறை இடம் கற்குடி மலையே - வருந்திய தேவர்களது துன்பத்தை நீக்கிய நீலகண்டம் உடைய இறைவன் உறையும் இடம் திருக்கற்குடிமலை ஆகும்;


5)

அண்டர்கள் அதிபதி அழகிய மலர்கொடு

தொண்டர்கள் துணையடி தொழவிடர் களைபவன்

வண்டறை கணைதொடு மதனுடல் பொடிபடக்

கண்டவன் உறைவது கற்குடி மலையே.


அண்டர்கள் அதிபதி - தேவர்கள் தலைவன்;

அழகிய மலர்கொடு தொண்டர்கள் துணையடி தொழ இடர் களைபவன் - அடியவர்கள் அழகிய பூக்களால் இரு-திருவடிகளை வழிபட, அவர்களுக்கு இரங்கி அவர்களது இடர்களைத் தீர்ப்பவன்;

வண்டு அறை கணை தொடு மதன் உடல் பொடிபடக் கண்டவன் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் வாசமலர்களைக் கணையாக ஏவும் மன்மதனின் உடல் சாம்பலாகும்படி அவனை நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;

உறைவது கற்குடி மலையே - அப்பெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்;


6)

புரந்தரன் அயனரி போற்றிசெய் இறையவன்

சிரந்திகழ் மாலையன் சினவிடை ஊர்தியன்

கரந்தனில் மழுவினன் கங்கையைச் சடையிடைக்

கரந்தவன் உறைவது கற்குடி மலையே.


புரந்தரன் அயன் அரி போற்றிசெய் இறையவன் - இந்திரன் பிரமன் திருமால் முதலாய தேவர்கள் எல்லாரும் வழிபாடுசெய்யும் இறைவன்;

சிரம் திகழ் மாலையன் - தலைமாலை (மண்டையோட்டு மாலை) அணிந்தவன்;

சின-விடை ஊர்தியன் - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவன்;

கரந்தனில் மழுவினன் - கையில் மழுவை ஏந்தியவன்;

கங்கையைச் சடையிடைக் கரந்தவன் - கங்கையைச் சடையில் ஒளித்தவன்;

உறைவது கற்குடி மலையே - அப்பெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்;


7)

நிழல்மழு வாளினன் நின்மலன் நீறணி

அழலன மேனியன் அழகிய நறுமலர்க்

குழலியொர் கூறினன் கூற்றினை உதைசெய்த

கழலினன் உறைவது கற்குடி மலையே.


நிழல்-மழுவாளினன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்; (நிழல் - ஒளி);

நின்மலன் - தூயவன்;

நீறு அணி அழல் அன மேனியன் - நீறு பூத்த நெருப்புப் போன்ற திருமேனி உடையவன்; (அன – அன்ன – போன்ற);

அழகிய நறுமலர்க்-குழலி ஒர் கூறினன் - அழகிய வாசமலர்க் கூந்தலை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கம்);

கூற்றினை உதைசெய்த கழலினன் - காலனை உதைத்த திருவடியினன்;

உறைவது கற்குடி மலையே - அப்பெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்;


8)

தருக்கிய தசமுகன் தன்முடி பத்தினை

நெருக்கிய விரலினன் நீள்சடை அதன்மிசை

எருக்கினன் இணையடி ஏத்திடும் அவர்வினை

கருக்கிறை உறைவது கற்குடி மலையே.


தருக்கிய தசமுகன்தன் முடி பத்தினை நெருக்கிய விரலினன் - ஆணவத்தோடு கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்-தலைகளையும் பாதவிரல் ஒன்றால் நசுக்கியவன்; (தருக்குதல் - கர்வம்கொள்ளுதல்); (நெருக்குதல் - நசுக்குதல்);

நீள்சடை அதன்மிசை எருக்கினன் - நீளும் சடையின்மேல் எருக்கமலரை அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.94.7 - "இறந்தார் என்பும் எருக்கும் சூடி");

இணையடி ஏத்திடும் அவர் வினை கருக்கு-இறை - இரு-திருவடிகளை வழிபடுவார்களது வினையையெல்லாம் எரித்தருளும் இறைவன்; (கருக்குதல் - எரித்தல்);

உறைவது கற்குடி மலையே - அப்பெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்;


9)

போதினன் அரியிவர் போற்றிட ஓங்கிய

சோதியன் மாதொரு பாதியன் பெயர்தனை

ஓதிய அடியவர்க் கொருதுணை குழையணி

காதினன் உறைவது கற்குடி மலையே.


போதினன் அரி இவர் போற்றிட ஓங்கிய சோதியன் - பூமேல் உறையும் பிரமனும் திருமாலும் வழிபடுமாறு வளர்ந்த தீப்பிழம்பு ஆனவன்; (போது - பூ);

மாது ஒரு பாதியன் - உமையைத் திருமேனியில் ஒரு பாதியாக உடையவன்;

பெயர்தனை ஓதிய அடியவர்க்கு ஒரு துணை - திருநாமத்தைச் சொல்லும் பக்தர்களுக்கு ஒப்பற்ற துணைவன்; (ஒரு - ஒப்பற்ற);

குழை அணி காதினன் உறைவது கற்குடி மலையே - காதில் குழையை அணிந்த சிவபெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்;


10)

பொய்யினைப் புகல்வது புரிதவம் என்றுழல்

கையருக் கரியவன் கருதிடும் அடியவர்

செய்வினை தீர்ப்பவன் சிறுமறி திகழ்திருக்

கையினன் உறைவது கற்குடி மலையே.


பொய்யினைப் புகல்வது புரி-தவம் என்று உழல் கையருக்கு அரியவன் - பொய் சொல்வதே விரும்பிச் செய்யும் தவம் என்று உழல்கின்ற கீழோர்களால் அறியியப்படாதவன்; அவர்களால் அடைய ஒண்ணாதவன்; (கையர் - கீழோர்); (புரிதல் - விரும்புதல்; செய்தல்);

கருதிடும் அடியவர் செய்-வினை தீர்ப்பவன் - விரும்பி வழிபடும் பக்தர்கள் செய்த வினைகளையெல்லாம் அழித்து அவர்களுக்கு அருள்பவன்;

சிறு-மறி திகழ் திருக்-கையினன் உறைவது கற்குடி மலையே - தன் திருக்கரத்தில் சிறிய மான்கன்றை ஏந்திய சிவபெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்;


11)

பச்சிலை பனிமலர் பதமலர் இடுமவர்

உச்சியன் தேரினில் ஓரடி இட்டதும்

அச்சிற நக்கெயில் அட்டவன் அரவரைக்

கச்சினன் உறைவது கற்குடி மலையே.


பச்சிலை பனி-மலர் பதமலர் இடும் அவர் உச்சியன் - பச்சை இலைகளையும் குளிர்ந்த பூக்களையும் திருவடித்-தாமரையில் தூவும் அடியவர்களின் தலைமேல் இருப்பவன்;

தேரினில் ஓர் அடி இட்டதும் அச்சு இற, நக்கு எயில் அட்டவன் - (தேவர்கள் செய்த) தேரில் ஏற ஓர் அடியை இட்டதும், அதன் அச்சு முரியக் கண்டு, சிரித்து முப்புரங்களையும் எரித்தவன்; (திருவாசகம் - 8.14.3 - "தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற");

அரவு அரைக்-கச்சினன் உறைவது கற்குடி மலையே - பாம்பை அரைக்கச்சாக அணிந்த சிவபெருமான் உறைவது திருக்கற்குடிமலை ஆகும்; (அர - அரவு - பாம்பு); (அரைக்கச்சு - இடைப்பட்டிகை); (அப்பர் தேவாரம் - 6.31.7 - "புற்றரவக் கச்சார்த்த புனிதா என்றும்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment