Monday, April 21, 2025

N.044 - திருஞான சம்பந்தர் துதி - கைதவர் வாதினில்

2017-06-03

N.044 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2017

----------------

(ஷட்பதி அமைப்பு -

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம் விளம் விளங்காய்)


கைதவர் வாதினிற் கழுவினில் ஏறிட

வைதிக நெறியது மண்மிசை மன்னிடச்

செய்திகழ் புகலியில் திருக்குளக் கரைதனில் திருமுலைப் பாலையுண்டார்

மைதிகழ் கண்டனை மலைமகள் பங்கனை

நெய்திகழ் சூலனை நீற்றனைச் சொன்மலர்

பெய்தமிழ் பாடிய பெருமக னார்கழல் பேணிவ ணங்கிடுவோம்.


கைதவர் வாதினில் கழுவினில் ஏறிட - வஞ்சனை செய்த சமணர்கள் வாதில் தோற்றுக் கழுவில் ஏறவும்;

வைதிக-நெறியது மண்மிசை மன்னிடச் - வேதநெறி உலகில் நிலைபெறவும்;

செய் திகழ் புகலியில் திருக்குளக்கரைதனில் திருமுலைப்பாலை உண்டார் - வயல் திகழும் சீகாழியில் கோயில்-குளக்கரையில் உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டவர்; (செய் - வயல்); (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);

மை திகழ் கண்டனை - நீலகண்டனை;

மலைமகள் பங்கனை - உமைபங்கனை;

நெய் திகழ் சூலனை - நெய் அணிந்த சூலப்படையை உடையவனை;

நீற்றனைச் சொல்மலர் பெய் தமிழ் பாடிய பெருமகனார் கழல் பேணி வணங்கிடுவோம் - திருநீற்றைப் பூசிய சிவபெருமானைத் தமிழ்ச்சொற்கள் என்ற மலர்களைத் தொடுத்த பாமாலைகள் பாடித் துதித்த திருஞான சம்பந்தரது திருவடிகளைப் போற்றி வணங்குவோம்; (பெய்தல் - பொழிதல்; கட்டுதல்; தூவுதல்); (பெருமகனார் - பெரியவர்; தலைவர்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment