Sunday, April 20, 2025

P.395 - குடந்தை (கும்பகோணம்) - அளிந்த நெஞ்சு கோயிலா

2017-05-11

P.395 - குடந்தை (கும்பகோணம்)

---------------------------------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தனான தான தானனா தனான தான தானனா)

(கும்பகோணம் - கும்பேஸ்வரர் கோயில்)

படிப்போர் வசதிக்காகச் சில இடங்களில் சந்தி பிரித்துத் தரப்பட்டுள்ளது. சந்தியோடு நோக்கினால் சந்தம்-கெடாமை புலப்படும்;

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

அளிந்த நெஞ்சு கோயிலா அமர்ந்த ஈசன் அஞ்சடைத்

தெளிந்த கங்கை ஏற்றவன் சிறந்த மாலை யாவரா

நெளிந்த மார்பில் நூலினான் நெருப்பை ஏந்து கையினான்

குளிர்ந்த பொன்னி பாய்ந்திடும் குடந்தை மேய கூத்தனே.


அளிந்த நெஞ்சு கோயிலா அமர்ந்த ஈசன் - கனிந்த மனமே கோயிலாக விரும்பி உறையும் ஈசன்; (அளிதல் - மனம் கனிதல்); (கோயிலா - கோயிலாக); (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்);

ஞ்சடைத் தெளிந்த கங்கை ஏற்றவன் - அழகிய சடையில் தூய கங்கையாற்றைத் தாங்கியவன்; (அம் - அழகு);

சிறந்த மாலையாரா நெளிந்த மார்பில் நூலினான் - நல்ல மாலை போலப் பாம்பு நெளியும் மார்பில் பூணூல் அணிந்தவன்; (மாலையா - மாலையாக);

நெருப்பை ஏந்து கையினான் - கையில் தீயை ஏந்தியவன்;

குளிர்ந்த பொன்னி பாய்ந்திடும் குடந்தை மேய கூத்தனே - குளிர்ந்த காவிரி பாயும் கும்பகோணத்தில் எழுந்தருளிய கூத்தன்; (பொன்னி - காவிரி); (குடந்தை - கும்பகோணம்);


2)

உளங்க னிந்து போற்றினார் உவக்க நல்கும் உத்தமன்

துளங்கு திங்கள் ஏறிவாழ் சுடர்ச்ச டைத்த யாபரன்

விளங்கு நீறு பூசினான் விரைந்து செல்லும் ஏற்றினான்

குளங்கள் ஆர்ந்த தொன்னகர் குடந்தை மேய கூத்தனே.


உளம் கனிந்து போற்றினார் உவக்க நல்கும் உத்தமன் - மனம் கனிந்து துதிக்கும் அன்பர்கள் மகிழுமாறு அருள்புரியும் உத்தமன்;

துளங்கு திங்கள் ஏறி வாழ் சுடர்ச்சடைத் தயாபரன் - திகழ்கின்ற சந்திரனை ஒளி பொருந்திய சடையில் வாழவைத்த பரம-கருணாமூர்த்தி; (துளங்குதல் - வருந்துதல்; கலங்குதல்; பிரகாசித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.44.1 - "துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்");

விளங்கு நீறு பூசினான் - ஒளிவீசும் திருநீற்றைப் பூசியவன்;

விரைந்து செல்லும் ஏற்றினான் - பாய்ந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவன்;

குளங்கள் ஆர்ந்த தொன்னகர் குடந்தை மேய கூத்தனே - அப்பெருமான், குளங்கள் நிறைந்த, பழமையான நகரமான கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன்;


3)

வணங்கி வாழும் அன்பினார் மனங்க ளிக்க நல்குவான்

அணங்கு பாகம் ஆயினான் அழிக்கு(ம்) நஞ்சு கண்டுவான்

கணங்கள் நாத காவெனக் களத்தில் இட்ட நல்லவன்

குணங்கள் எட்டு டைப்பிரான் குடந்தை மேய கூத்தனே.


வணங்கி வாழும் அன்பினார் மனம் களிக்க நல்குவான் - என்றும் வழிபடும் பக்தர்கள் மனம் மகிழ வரம் அருள்வான்;

அணங்கு பாகம் ஆயினான் - உமைபங்கன்;

அழிக்கும் நஞ்சு கண்டு வான், "கணங்கள் நாத! கா" எனக், களத்தில் இட்ட நல்லவன் - எல்லாவற்றையும் அழிக்கவல்ல ஆலகால விஷத்தைக் கண்டு தேவர்கள், "பூதகணங்களுக்கு நாதனே! காத்தருளாய்" என்று சரண்புகவும், அவர்களுக்கு இரங்கி அந்த விடத்தைக் கண்டத்தில் வைத்த நல்லவன்; (களம் - கண்டம்); (வான் - தேவருலகு - தேவர்); (வான்-கணங்கள் "நாத! கா" - என்று பிரித்தும் பொருள்கொள்ளல் ஆம்; வான்-கணங்கள் = தேவர் கூட்டங்கள்);

குணங்கள் எட்டுடைப் பிரான் - எண்குணத்தன்; (எண் குணங்களாவன. 1. தன்வயம். 2. தூய உடம்பு. 3. இயற்கையுணர்வு 4. முற்றுணர்வு, 5. இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்றல் 6. முடிவில் ஆற்றல், 7. பேரருள், 8. வரம்பில் இன்பம் - என்பன); (சேரமான்பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி - 11.6.53 - "இறைவனை எண்குணத் தீசனை");

குடந்தை மேய கூத்தனே - அப்பெருமான், கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன்;


4)

பராவு கின்ற பத்தரின் பயங்கள் நீக்கி வல்வினை

இராத வாறு தீர்த்துவான் இருக்க வைக்கும் எம்மிறை

அராவி ணைத்த வில்லினால் அரண்கள் எய்த சேவகன்

குராவ ணிந்த வேணியான் குடந்தை மேய கூத்தனே.


பராவுகின்ற பத்தரின் பயங்கள் நீக்கி, வல்வினை இராதவாறு தீர்த்து, வான் இருக்க வைக்கும் எம்றை - துதிக்கும் பக்தர்களுக்கு அபயம் அளித்து, வலிய வினையையெல்லாம் தீர்த்து, அவர்களைச் சிவலோகத்தில் வாழவைக்கும் எம் இறைவன்; (பராவுதல் - பரவுதல்; துதித்தல்); (வான் - சிவலோகம்);

அராணைத்த வில்லினால் அரண்கள் எய்த சேவகன் - பாம்பை நாணாகக் கட்டிய வில்லால் முப்புரங்களை எய்த வீரன்; (சேவகன் - வீரன்);

குராணிந்த வேணியான் - சடையில் குராமலரைச் சூடியவன்;

குடந்தை மேய கூத்தனே - அப்பெருமான், கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன்;


5)

பொலாவி னைப்பி ணிப்பறப் புகழ்ந்து பாடில் அவ்வினை

எலாமொ ழித்து வானகத் திருக்க வைக்கும் அங்கணன்

நிலாவி னோடு கோளரா நெருங்கி ஊர்ந்து நேயமாய்க்

குலாவு கின்ற சென்னியான் குடந்தை மேய கூத்தனே.


பொலா வினைப்-பிணிப்பு அறப் புகழ்ந்து பாடில் - பொல்லாத வினைகளின் பந்தம் நீங்கவேண்டி ஈசனைப் போற்றிப் பாடினால்;

அவ்வினை எலாம் ஒழித்து வானகத்து இருக்க வைக்கும் அங்கணன் - அந்த வினைகளையெல்லாம் தீர்த்து, அவ்வடியார்களைச் சிவலோகத்தில் நிலைத்திருக்க வைக்கும் அருளாளன்;

நிலாவினோடு கோள்-அரா நெருங்கி ஊர்ந்து நேயமாய்க் குலாவுகின்ற சென்னியான் - சந்திரனும் கொடிய பாம்பும் நெருங்கி ஒன்றாக வாழ்கின்ற திருமுடியை உடையவன்;

குடந்தை மேய கூத்தனே - அப்பெருமான், கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன்;


6)

பனித்த கண்ண ராய்க்கழல் பணிந்த வர்க்கு நற்றுணை

தனித்து நிற்கு(ம்) முக்கணன் தரங்க நஞ்சை உண்டவன்

செனித்த லோடு சாவிலான் திரிந்த முப்பு ரம்படக்

குனித்த வெற்பு வில்லினான் குடந்தை மேய கூத்தனே.


பனித்த கண்ணராய்க் கழல் பணிந்தவர்க்கு நற்றுணை - கண்கள் கசியப் பக்தியோடு திருவடியை வழிபடுவோர்க்கு நல்ல துணை; (கண்பனித்தல் - கண்ணிர் கசிதல்);

தனித்து நிற்கும் முக்கணன் - ஒப்பற்றவன், ஏகன், நெற்றிக்கண்ணன்;

தரங்க-நஞ்சை உண்டவன் - கடல்-விஷத்தை உண்டவன்; (தரங்கம் - அலை; கடல்);

செனித்தலோடு சாவு இலான் - பிறப்பும் இறப்பும் அற்றவன்; (செனித்தல் - பிறத்தல்);

திரிந்த முப்புரம் படக் குனித்த வெற்பு-வில்லினான் - எங்கும் பறந்து திரிந்த முப்புரங்களும் அழிய வளைத்த மேருவில்லை ஏந்தியவன்; (படுதல் - அழிதல்); (குனித்தல் - வளைத்தல்); (வெற்பு - மலை);

குடந்தை மேய கூத்தனே - அப்பெருமான், கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன்;


7)

மறத்த லின்றி வார்கழல் வணங்கு பத்தர் இப்புவிப்

பிறத்த லற்ற வாழ்வினைப் பெறப்ப ரிந்த ருள்பவன்

அறத்தை அன்று நால்வருக் குணர்த்தும் ஆல நீழலான்

குறத்தி கேள்வன் அத்தனெம் குடந்தை மேய கூத்தனே.


மறத்தல் இன்றி வார்-கழல் வணங்கு பத்தர் - மறவாமல் எந்நாளும் நீள்-கழல் அணிந்த திருவடியை வணங்கும் பக்தர்கள்; (வார்தல் - நீள்தல்);

இப்-புவிப் பிறத்தல் அற்ற வாழ்வினைப் பெறப் பரிந்து அருள்பவன் - மீண்டும் இம்மண்ணின்மேல் பிறவாதபடி சிவலோக வாழ்வினைப் பெறுவதற்கு இரங்கி அருள்கின்றவன்;

அறத்தை அன்று நால்வருக்கு உணர்த்தும் ஆல-நீழலான் - சனகாதியர் நால்வருக்கு மறைப்பொருளை விளக்கக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;

குறத்தி-கேள்வன் அத்தன் - வள்ளி-கணவனான முருகனுக்குத் தந்தை; (கேள்வன் - கணவன்); (அப்பர் தேவாரம் - 4.60.1 - "குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை");

எம் குடந்தை மேய கூத்தனே - கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தனாகிய எம்பெருமான்;


8)

இரக்க மிக்க எம்பிரான் இருந்த வெற்பெ டுத்தவல்

அரக்க னார ரற்றுமா றடர்த்து வாளும் ஈந்தவன்

சுரர்க்கு நன்ம ருந்தினைச் சுவைக்க நல்கி நீலமார்

குரைக்கும் ஓத நஞ்சுணும் குடந்தை மேய கூத்தனே.


இரக்கம் மிக்க எம்பிரான் இருந்த வெற்பு எடுத்த - கருணை மிகுந்த எம் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்த கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த;

வல்-ரக்கனார் அரற்றுமாறு அடர்த்து, வாளும் ஈந்தவன் - வலிய அரக்கனான இராவணன் அழும்படி அவனை நசுக்கிப், பின்னர் அவனுக்கு (நீண்ட ஆயுளும்) வாளும் கொடுத்தவன்; (அரக்கனார் - "ஆர்" விகுதி இழித்தற்பொருளில் வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 3.111.8 - "இரக்கமில் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான்");

சுரர்க்கு நன்-மருந்தினைச் சுவைக்க நல்கி - தேவர்களுக்கு நல்ல அமுதத்தை உண்ணத் தந்து; (சுரர் - தேவர்); (மருந்து - அமுதம்);

நீலம் ஆர் குரைக்கும் ஓத நஞ்சு உணும் - (தான்) ஒலிக்கின்ற கடலில் எழுந்த கருமை பொருந்திய விஷத்தை உண்ணும்; (குரைத்தல் - ஒலித்தல்); (ஓதம் - கடல்); (உணும் - உண்ணும்; இடைக்குறை விகாரம்);

குடந்தை மேய கூத்தனே - கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன்;


9)

அடித்த லத்தை அன்றுமால் அயன்ப ராவ நின்றவன்

கடித்த ஊனை வேடனார் கனிந்த ருத்த உண்டவன்

நடிக்க நள்ளி ராவையே நயந்த நாதன் ஓர்மடக்

கொடிக்கி டங்கொ டுத்தவன் குடந்தை மேய கூத்தனே.


அடித்தலத்தை அன்று மால் அயன் பராவ நின்றவன் - திருவடியை விஷ்ணுவும் நான்முகனும் போற்றும்படி முன்னம் எல்லையற்ற ஜோதியாகி ஓங்கி நின்றவன்; (பராவுதல் - பரவுதல்; புகழ்தல்; வணங்குதல்);

கடித்த ஊனை வேடனார் கனிந்து அருத்த உண்டவன் - கண்ணப்பர் கடித்துப் பதம் பார்த்துக் கொண்டுவந்த இறைச்சியை அன்போடு ஊட்ட உண்டவன்; (அருத்துதல் - உண்பித்தல்); (பெரியபுராணம் - கண்ணப்பநாயனார் புராணம் - 12.10.125 - "பல்லினால் அதுக்கி நாவிற் பழகிய இனிமை பார்த்துப் படைத்தஇவ் விறைச்சி சால அழகிது நாய னீரே அமுதுசெய் தருளும் என்றார்");

நடிக்க நள்ளிராவையே நயந்த நாதன் - நள்ளிருளில் திருநட்டம் செய்பவன்; (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - அடி-89 - "நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே");

ஓர் மடக்கொடிக்கு இடம் கொடுத்தவன் - இளங்கொடி போன்ற உமைக்கு இடப்பக்கத்தைத் தந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.68.8 - "மாதினுக்கு உடம்பிடம் கொடுத்தானை");

குடந்தை மேய கூத்தனே - கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன்;


10)

வடுக்கள் ஆர்ந்த வார்த்தையால் மயக்கு வாரை நீங்குமின்

தொடுத்த மாலை யால்தொழும் தொழும்பர் உம்பர் ஏற்றுவான்

எடுத்த பாதம் ஏத்துமாற் கிலங்கு சக்க ரந்தனைக்

கொடுத்த வள்ளல் எம்பிரான் குடந்தை மேய கூத்தனே.


வடுக்கள் ஆர்ந்த வார்த்தையால் மயக்குவாரை நீங்குமின் - குற்றம் நிறைந்த சொற்களைப் பேசி அறிவை மயக்குகின்றவர்களை விட்டு விலகுங்கள்; (வடு - குற்றம்; கேடு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

தொடுத்த மாலையால் தொழும் தொழும்பர் உம்பர் ஏற்றுவான் - தொடுத்த பூமாலை பாமாலைகளால் வழிபடும் அடியவர்களை வானுலகத்திற்கு உயர்த்துபவன்; (தொழும்பர் - அடியவர்); (உம்பர் - மேலிடம்; வானுலகம்);

எடுத்த பாதம் ஏத்து மாற்கு இலங்கு சக்கரம்-தனைக் கொடுத்த வள்ளல் எம்பிரான் - உயர்த்திய திருவடியை வணங்கிய விஷ்ணுவிற்கு ஒளி திகழும் சக்கராயுதத்தைத் தந்த வள்ளல் எம் பெருமான்; (திருமாலுக்குச் சக்கராயுதத்தைத் தந்ததைத் திருவீழிமிழலைத் தலவரலாற்றில் காண்க); (எடுத்த பாதம் - நடனத்தில் வளையத் தூக்கின நடராசர் தாள் - குஞ்சித-பாதம்); (இலங்குதல் - ஒளிவீசுதல்); (காரைக்கால் அம்மையார் - மூத்த திருப்பதிகம் - 11.2.4 - "வீசி எடுத்த பாதம்");

குடந்தை மேய கூத்தனே - கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன்;


11)

உமைக்கு நல்லன் உம்பரார் உரைத்த வாறு தூணியிற்

சுமக்கும் ஐந்து வாளியைத் தொடுத்த வேளை நீறுசெய்

இமைத்தல் அற்ற கண்ணினான் இரக்க மற்ற கூற்றினைக்

குமைக்க வல்ல தாளினான் குடந்தை மேய கூத்தனே.


உமைக்கு நல்லன் - உமைக்குக் கணவன்; (அப்பர் தேவாரம் - 5.43.4 - "உமைக்கு நல்லவன் தான் உறையும் பதி");

உம்பரார் உரைத்தவாறு தூணியில் சுமக்கும் ஐந்து வாளியைத் தொடுத்த வேளை நீறுசெய் - தேவர்கள் சொன்னபடி தன் அம்பறாத்தூணியில் தாங்கும் ஐந்து (மலர்)அம்புகளை எய்த மன்மதனைச் சாம்பலாக்கிய; (உம்பரார் - தேவர்கள்); (தூணி - அம்புக்கூடு; அம்பறாத்தூணி); (வாளி - அம்பு); (அப்பர் தேவாரம் - 4.65.4 - "சரம்பொலி தூணி ஈந்தார்");

இமைத்தல் அற்ற கண்ணினான் - இமையாத நெற்றிக்கண் உடையவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.47.4 - "இமையா முக்கணர்");

இரக்கம் அற்ற கூற்றினைக் குமைக்க-வல்ல தாளினான் - இரக்கமே இல்லாத காலனைப் பாதத்தால் உதைத்து அழித்தவன்; (குமைத்தல் - அழித்தல்; கொல்லுதல்);

குடந்தை மேய கூத்தனே - கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன்;


பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:

1. அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தனான தான தானனா தனான தான தானனா" என்ற சந்தம்.

சந்தக் கலிவிருத்தம் - "தனாதனா தனாதனா தனாதனா தனாதனா" என்ற சந்தம் என்றும் நோக்கலாம்.

2. இச்சந்தத்தை வடமொழியில் பஞ்சசாமரம் - panchachAmaram - என்பர். "லகு-குரு" என்ற அமைப்பு அடிதோறும் 8 முறை வரும். உதாரணம் - கணேச பஞ்சரத்னம் - "முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்".

3. சம்பந்தர் தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன் களுந்திவந்".


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment