Monday, April 21, 2025

P.402 - தேவூர் - (ஷட்பதி) - பூவால் போற்றி

2017-05-29

P.402 - தேவூர் - (ஷட்பதி)

---------------------------------

(மா மா

மா மா

மா மா மாங்காய்)

(ஷட்பதி யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க)


1)

பூவால் போற்றிக்

காவாய் என்றார்

சாவா திருக்க அருள்செய்தான்

மூவூர் சுட்டான்

ஆவூர் பெருமான்

தேவூர்ச் சிவனை நினைநெஞ்சே.


பூவால் போற்றிக் "காவாய்" என்றார் சாவாதிருக்க அருள்செய்தான் - பூக்கள் தூவி வழிபாடு செய்த மார்க்கண்டேயர் என்றும் உயிர்வாழ அருளியவன்;

மூ ஊர் சுட்டான் - முப்புரம் எரித்தவன்;

ஆ ஊர் பெருமான் - எருது ஏறும் பெருமான்; (ஊர்தல் - ஏறுதல்);

தேவூர்ச் சிவனை நெஞ்சே - தேவூரில் உறையும் சிவபெருமானை நெஞ்சே எண்ணு;


2)

பிறவான் என்றும்

இறவான் அமுதம்

பெறவான் போற்ற அருள்செய்தான்

மறையார் நாவன்

பிறையான் தேவூர்

உறைவான் கழலை நினைநெஞ்சே.


அமுதம் பெற வான் போற்ற அருள்செய்தான் - அமுது பெறவேண்டித் தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு அருளியவன்;

மறைர் நாவன் - வேதம் பாடியருளியவன்;

பிறையான் - சந்திரனைச் சூடியவன்;


3)

மதனைக் காய்ந்த

நுதலிற் கண்ணன்

சுதையைத் தேவர்க் கருள்செய்தான்

துதைவெண் ணீற்றன்

முதல்வன் புலியின்

அதளன் தேவூர் நினைநெஞ்சே.


மதன் - மன்மதன்;

நுதல் - நெற்றி;

சுதை - அமுதம்;

துதைதல் - படிதல்;

அதள் - தோல்;


4)

புரமூன் றவியச்

சரமொன் றெய்தான்

பிரமன் தலையிற் பலிதேர்வான்

அரையன் சடைமேல்

அரவன் தேவூர்

வரதன் கழலை நினைநெஞ்சே.


அவிதல் - அழிதல்;

சரம் - அம்பு;

பலி - பிச்சை;

அரையன் - அரசன்;

அரவன் - பாம்பை அணிந்தவன்;

வரதன் - வரம் அளிப்போன்;


5)

வேத நாவன்

பூதப் படையன்

மாதை வாமம் மகிழ்பெம்மான்

ஏதம் தீர்க்கும்

போதன் தேவூர்

நாதன் கழலை நினைநெஞ்சே.


வாமம் - இடப்பக்கம்;

ஏதம் - துன்பம்;

போதன் - ஞானவடிவினன்;


6)

மடமான் உமையை

இடமோர் பாகம்

உடையான் கரியின் உரிபோர்த்தான்

விடையான் சூலப்

படையான் தேவூர்ச்

சடையான் கழலை நினைநெஞ்சே.


மடமான் உமை - இளமான் போன்ற உமாதேவி;

கரி - யானை;

உரி - தோல்;


7)

ஒருமான் ஏந்தி

இருமா துடையான்

அருமா மறைசொல் திருநாவன்

கருமா மிடறன்

தருவான் தேவூர்ப்

பெருமான் கழலை நினைநெஞ்சே.


ஒரு மான் ஏந்தி - ஒரு மானைக் கையில் ஏந்தியவன்;

இரு-மாது உடையான் - உமாதேவி, கங்கை என்ற இரு-மங்கையர்களுக்குத் தலைவன்;

அரு-மா-மறை சொல் திருநாவன் - அரிய பெரிய வேதங்களைத் தன் திருவாயினால் ஓதியவன்;

கரு-மா-மிடறன் - அழகிய நீலகண்டம் உடையவன்;

தருவான் தேவூர்ப் பெருமான் கழலை நினை நெஞ்சே - வரதன், அழகிய தேவூரில் உறையும் சிவபெருமானது திருவடியை, நெஞ்சே, நீ நினைவாயாக; (தருவான் - 1. தருபவன்; 2. "தரு + வான்" என்றும் பிரித்துப் பொருள் கொள்ளல் ஆம்; தரு - கற்பகமரம்; வான் - பெருமை; அழகு);


8)

பத்துத் தலையன்

கத்த ஊன்றும்

அத்தன் இசைகேட் டருள்செய்தான்

நித்தல் ஏத்தும்

பத்தர் வினைதீர்

முத்தன் தேவூர் நினைநெஞ்சே.


பத்துத்-தலையன் - இராவணன்;

அத்தன் - தந்தை;

நித்தல் - தினமும்;

முத்தன் - இயல்பாகவே மும்மலங்கள் இல்லாதவன்;


9)

பன்றி அன்னம்

அன்று தேடிச்

சென்றும் காணாத் தழலானான்

மன்றில் ஆடி

கொன்றை சூடி

நின்ற தேவூர் நினைநெஞ்சே.


பன்றி அன்னம் அன்று தேடிச் சென்றும் காணாத் தழல் ஆனான் - பன்றியும் அன்னமும் ஆகித் தேடிய திருமால் பிரமன் இவர்களால் காண் ஒண்ணாத ஜோதி-வடிவினன்;

மன்றில் ஆடி - அம்பலத்தில் ஆடுபவன்;

கொன்றை சூடி - கொன்றைமலரைச் சூடியவன்;

நின்ற தேவூர் நினை நெஞ்சே - அப்பெருமான் உறையும் தேவூரை நெஞ்சே எண்ணு;


10)

மெய்யை அறியாக்

கையர் சொல்லும்

பொய்யை மதியார்க் கருள்செய்வான்

நெய்யும் ஆடும்

செய்யன் தேவூர்

ஐயன் கழலை நினைநெஞ்சே.


மெய்யை அறியாக் கையர் சொல்லும் பொய்யை மதியார்க்கு அருள்செய்வான் - மெய்ப்பொருளை அறியாத கீழோர் சொல்லும் பொய்களைப் பொருளாகக் கருதாது தன்னை வழிபடுபவர்களுக்கு அருள்பவன்; (கையர் - கீழோர்);

நெய்யும் ஆடும் செய்யன் - (பால், தயிர், நீர், முதலியனவற்றாலும்), நெய்யாலும் அபிஷேகம் செய்யப்பெறுபவன்; (நெய்யும் - உம் - எச்சவும்மை);

தேவூர் ஐயன் கழலை நினை நெஞ்சே - தேவூரில் உறையும் தலைவனது திருவடியை நெஞ்சே எண்ணு;


11)

கண்ணார் நுதலாய்

பெண்ணோர் பாகா

எண்ணார் எயில்கள் எரிசெய்தாய்

தெண்ணீர்த் தேவூர்

அண்ணா என்றால்

நண்ணா பண்டை வினைதானே.


"கண் ஆர் நுதலாய் - "நெற்றிக்கண்ணனே;

பெண் ஓர் பாகா - உமையை ஒரு பாகமாக உடையவனே;

எண்ணார் எயில்கள் எரிசெய்தாய் - பகைவர்களது முப்புரங்களை எரித்தவனே;

தெண்ணீர்த் தேவூர் அண்ணா" என்றால் - தெளிந்த நீர் மிக்க தேவூரில் உறையும் தலைவனே" என்று போற்றி வணங்கினால்;

நண்ணா பண்டை வினைதானே - பழைய வினைகள் அடையமாட்டா (= நம் பழவினை அழியும்);


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :

கன்னடத்தில் "ஷட்பதி" என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்புப் போல அமைந்தது;

  • ஆறு அடிகள்

  • எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.

  • 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. இவ்வடிகளில் சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிகள்தோறும் 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முற்பாதியில் உள்ள சீர்-அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
    (சீர்கள் அளவொத்து இருந்தால் போதும். உதாரணமாக: மாச்சீர் வரும் இடத்தில் எவ்வகை மாச்சீரும் வரலாம்; விளச்சீர் வரும் இடத்தில் எவ்வகை விளச்சீரும் வரலாம்)

  • 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முற்பாதியின் சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் எழுத்து. (நெடில், நெடில்+ஒற்று, குறில்+ஒற்று, குறில்).


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment