2017-05-29
P.402 - தேவூர் - (ஷட்பதி)
---------------------------------
(மா மா
மா மா
மா மா மாங்காய்)
(ஷட்பதி யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க)
1)
பூவால் போற்றிக்
காவாய் என்றார்
சாவா திருக்க அருள்செய்தான்
மூவூர் சுட்டான்
ஆவூர் பெருமான்
தேவூர்ச் சிவனை நினைநெஞ்சே.
பூவால் போற்றிக் "காவாய்" என்றார் சாவாதிருக்க அருள்செய்தான் - பூக்கள் தூவி வழிபாடு செய்த மார்க்கண்டேயர் என்றும் உயிர்வாழ அருளியவன்;
மூ ஊர் சுட்டான் - முப்புரம் எரித்தவன்;
ஆ ஊர் பெருமான் - எருது ஏறும் பெருமான்; (ஊர்தல் - ஏறுதல்);
தேவூர்ச் சிவனை நெஞ்சே - தேவூரில் உறையும் சிவபெருமானை நெஞ்சே எண்ணு;
2)
பிறவான் என்றும்
இறவான் அமுதம்
பெறவான் போற்ற அருள்செய்தான்
மறையார் நாவன்
பிறையான் தேவூர்
உறைவான் கழலை நினைநெஞ்சே.
அமுதம் பெற வான் போற்ற அருள்செய்தான் - அமுது பெறவேண்டித் தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு அருளியவன்;
மறை ஆர் நாவன் - வேதம் பாடியருளியவன்;
பிறையான் - சந்திரனைச் சூடியவன்;
3)
மதனைக் காய்ந்த
நுதலிற் கண்ணன்
சுதையைத் தேவர்க் கருள்செய்தான்
துதைவெண் ணீற்றன்
முதல்வன் புலியின்
அதளன் தேவூர் நினைநெஞ்சே.
மதன் - மன்மதன்;
நுதல் - நெற்றி;
சுதை - அமுதம்;
துதைதல் - படிதல்;
அதள் - தோல்;
4)
புரமூன் றவியச்
சரமொன் றெய்தான்
பிரமன் தலையிற் பலிதேர்வான்
அரையன் சடைமேல்
அரவன் தேவூர்
வரதன் கழலை நினைநெஞ்சே.
அவிதல் - அழிதல்;
சரம் - அம்பு;
பலி - பிச்சை;
அரையன் - அரசன்;
அரவன் - பாம்பை அணிந்தவன்;
வரதன் - வரம் அளிப்போன்;
5)
வேத நாவன்
பூதப் படையன்
மாதை வாமம் மகிழ்பெம்மான்
ஏதம் தீர்க்கும்
போதன் தேவூர்
நாதன் கழலை நினைநெஞ்சே.
வாமம் - இடப்பக்கம்;
ஏதம் - துன்பம்;
போதன் - ஞானவடிவினன்;
6)
மடமான் உமையை
இடமோர் பாகம்
உடையான் கரியின் உரிபோர்த்தான்
விடையான் சூலப்
படையான் தேவூர்ச்
சடையான் கழலை நினைநெஞ்சே.
மடமான் உமை - இளமான் போன்ற உமாதேவி;
கரி - யானை;
உரி - தோல்;
7)
ஒருமான் ஏந்தி
இருமா துடையான்
அருமா மறைசொல் திருநாவன்
கருமா மிடறன்
தருவான் தேவூர்ப்
பெருமான் கழலை நினைநெஞ்சே.
ஒரு மான் ஏந்தி - ஒரு மானைக் கையில் ஏந்தியவன்;
இரு-மாது உடையான் - உமாதேவி, கங்கை என்ற இரு-மங்கையர்களுக்குத் தலைவன்;
அரு-மா-மறை சொல் திருநாவன் - அரிய பெரிய வேதங்களைத் தன் திருவாயினால் ஓதியவன்;
கரு-மா-மிடறன் - அழகிய நீலகண்டம் உடையவன்;
தருவான் தேவூர்ப் பெருமான் கழலை நினை நெஞ்சே - வரதன், அழகிய தேவூரில் உறையும் சிவபெருமானது திருவடியை, நெஞ்சே, நீ நினைவாயாக; (தருவான் - 1. தருபவன்; 2. "தரு + வான்" என்றும் பிரித்துப் பொருள் கொள்ளல் ஆம்; தரு - கற்பகமரம்; வான் - பெருமை; அழகு);
8)
பத்துத் தலையன்
கத்த ஊன்றும்
அத்தன் இசைகேட் டருள்செய்தான்
நித்தல் ஏத்தும்
பத்தர் வினைதீர்
முத்தன் தேவூர் நினைநெஞ்சே.
பத்துத்-தலையன் - இராவணன்;
அத்தன் - தந்தை;
நித்தல் - தினமும்;
முத்தன் - இயல்பாகவே மும்மலங்கள் இல்லாதவன்;
9)
பன்றி அன்னம்
அன்று தேடிச்
சென்றும் காணாத் தழலானான்
மன்றில் ஆடி
கொன்றை சூடி
நின்ற தேவூர் நினைநெஞ்சே.
பன்றி அன்னம் அன்று தேடிச் சென்றும் காணாத் தழல் ஆனான் - பன்றியும் அன்னமும் ஆகித் தேடிய திருமால் பிரமன் இவர்களால் காண் ஒண்ணாத ஜோதி-வடிவினன்;
மன்றில் ஆடி - அம்பலத்தில் ஆடுபவன்;
கொன்றை சூடி - கொன்றைமலரைச் சூடியவன்;
நின்ற தேவூர் நினை நெஞ்சே - அப்பெருமான் உறையும் தேவூரை நெஞ்சே எண்ணு;
10)
மெய்யை அறியாக்
கையர் சொல்லும்
பொய்யை மதியார்க் கருள்செய்வான்
நெய்யும் ஆடும்
செய்யன் தேவூர்
ஐயன் கழலை நினைநெஞ்சே.
மெய்யை அறியாக் கையர் சொல்லும் பொய்யை மதியார்க்கு அருள்செய்வான் - மெய்ப்பொருளை அறியாத கீழோர் சொல்லும் பொய்களைப் பொருளாகக் கருதாது தன்னை வழிபடுபவர்களுக்கு அருள்பவன்; (கையர் - கீழோர்);
நெய்யும் ஆடும் செய்யன் - (பால், தயிர், நீர், முதலியனவற்றாலும்), நெய்யாலும் அபிஷேகம் செய்யப்பெறுபவன்; (நெய்யும் - உம் - எச்சவும்மை);
தேவூர் ஐயன் கழலை நினை நெஞ்சே - தேவூரில் உறையும் தலைவனது திருவடியை நெஞ்சே எண்ணு;
11)
கண்ணார் நுதலாய்
பெண்ணோர் பாகா
எண்ணார் எயில்கள் எரிசெய்தாய்
தெண்ணீர்த் தேவூர்
அண்ணா என்றால்
நண்ணா பண்டை வினைதானே.
"கண் ஆர் நுதலாய் - "நெற்றிக்கண்ணனே;
பெண் ஓர் பாகா - உமையை ஒரு பாகமாக உடையவனே;
எண்ணார் எயில்கள் எரிசெய்தாய் - பகைவர்களது முப்புரங்களை எரித்தவனே;
தெண்ணீர்த் தேவூர் அண்ணா" என்றால் - தெளிந்த நீர் மிக்க தேவூரில் உறையும் தலைவனே" என்று போற்றி வணங்கினால்;
நண்ணா பண்டை வினைதானே - பழைய வினைகள் அடையமாட்டா (= நம் பழவினை அழியும்);
பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :
கன்னடத்தில் "ஷட்பதி" என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்புப் போல அமைந்தது;
ஆறு அடிகள்
எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.
1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. இவ்வடிகளில் சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிகள்தோறும் 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முற்பாதியில் உள்ள சீர்-அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
(சீர்கள் அளவொத்து இருந்தால் போதும். உதாரணமாக: மாச்சீர் வரும் இடத்தில் எவ்வகை மாச்சீரும் வரலாம்; விளச்சீர் வரும் இடத்தில் எவ்வகை விளச்சீரும் வரலாம்)3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முற்பாதியின் சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் எழுத்து. (நெடில், நெடில்+ஒற்று, குறில்+ஒற்று, குறில்).
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment