Sunday, April 20, 2025

P.396 - புடைமருதூர் - பொருநையின் தென்கரை

2017-05-13

P.396 - புடைமருதூர்

---------------------------------

(திருமுக்கால் அமைப்பு)

(தானன தானன தானன தானன

தானன தானன தானா)

(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி")

* (திருப்புடைமருதூர் - தாமிரபரணி-நதிக்கரைத் தலம்)


1)

பொருநையின் தென்கரைப் புடைமரு தூருறை

கருமணி மிடறுடை யீரே

கருமணி மிடறுடை யீரும கழல்தொழத்

திருமலி நிலையது திடனே.


பொருநையின் தென்கரைப் புடைமருதூர் உறை, கரு-மணி மிடறுடையீரே - தாமிரபரணிநதியின் தென்கரையில் உள்ள திருப்புடைமருதூரில் உறைகின்ற, நீலமணிகண்டம் உடையவரே; (பொருநை - தாமிரபரணியாறு);

கரு-மணி மிடறுடையீர் உம கழல் தொழத், திரு மலி நிலையது திடனே - நீலமணிகண்டம் உடையவரே, உமது திருவடியை தொழுதால், (அவ்வன்பர்களுக்குத்) திரு மிகுகின்ற நிலை நிச்சயம்; (உம = உம்+= உம்முடைய; - ஆறாம்வேற்றுமை உருபு);


2)

புள்ளொலி பொழிலணி புடைமரு தூருறை

கள்ளுகு கொன்றையி னீரே

கள்ளுகு கொன்றையி னீரும கழலிணை

உள்ளிட இருவினை ஒழிவே.


புள்லி பொழில் அணி புடைமருதூர் உறை, கள்கு கொன்றையினீரே - பறவைகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருப்புடைமருதூரில் உறைகின்ற, தேன் சொரியும் கொன்றைமலரை அணிந்தவரே; (புள் - பறவை); (கள் - தேன்); (உகுத்தல் - சொரிதல்);

கள்கு கொன்றையினீர் உம கழலிணை உள்ளிட இருவினை ஒழிவே - தேன் சொரியும் கொன்றைமலரை அணிந்தவரே, உமது இரு-திருவடிகளைத் தியானித்தால் (/ மனத்தில் தரித்தால்), இருவினை தீரும்; (உம - உமது); (உள்ளுதல் - எண்ணுதல்); (உள் இடுதல் - மனத்தில் தரித்தல்);


3)

பொழிலிடைக் குயில்பயில் புடைமரு தூருறை

சுழிநதிச் சடைமுடி யீரே

சுழிநதிச் சடைமுடி யீருமைத் தொழுதெழ

அழிவது பழவினை அதுவே.


பொழிலிடைக் குயில் பயில் புடைமருதூர் உறை, சுழி-நதிச் சடை-முடியீரே - சோலையில் குயில்கள் ஒலிக்கின்ற திருப்புடைமருதூரில் உறைகின்ற, சுழிகள் மிக்க கங்கையைச் சடைமுடியில் உடையவரே; (பயில்தல் - ஒலித்தல்); (சுழி - நீர்ச்சுழல்);

சுழி-நதிச் சடை-முடியீர் உமைத் தொழுதெழ, அழிவது பழவினை அதுவே - சுழிகள் மிக்க கங்கையைச் சடைமுடியில் உடையவரே, உம்மைத் தொழுதால் பழவினை அழியும்;


4)

பொலிமலர்ப் பொழிலணி புடைமரு தூருறை

புலியுரி உடையுடை யீரே.

புலியுரி உடையுடை யீருமைப் போற்றிட

மலிவது நெஞ்சினில் மகிழ்வே.


பொலி-மலர்ப் பொழில் அணி புடைமருதூர் உறை, புலி-உரி உடை உடையீரே - அழகிய மலர்ச்சோலை சூழ்ந்த திருப்புடைமருதூரில் உறைகின்ற, புலித்தோலை உடையாக (/ புலித்தோலாடை) உடையவரே; (உரி - தோல்); (உடை - ஆடை); (சம்பந்தர் தேவாரம் - 1.19.3 - "வரியுறு புலியத ளுடையினன்");

புலியதன் அதள் அணிவீர் உமைப் போற்றிட, மலிவது நெஞ்சினில் மகிழ்வே - புலித்தோலாடை உடையவரே, உம்மைப் போற்றினால், மனத்தில் மகிழ்ச்சி நிறையும்;


5)

புனலிடைக் கயலுகள் புடைமரு தூருறை

கனலுமிழ் கண்ணுடை யீரே

கனலுமிழ் கண்ணுடை யீரும கழலிணை

நினைபவர் அடைவது நிறைவே.


புனலிடைக் கயல் உகள் புடைமருதூர் உறை, கனல் உமிழ் கண்டையீரே - நீரில் கயல்மீன்கள் பாயும் திருப்புடைமருதூரில் உறைகின்ற, தீ உமிழும் நெற்றிக்கண் உடையவரே;

கனல் உமிழ் கண்டையீர், ம கழலிணை நினைபவர் அடைவது நிறைவே - தீ உமிழும் நெற்றிக்கண் உடையவரே, உமது இரு-திருவடிகளைத் தியானிப்பவர் (குறைகள் நீங்கி) நிறைவு பெறுவர்; (நிறைவு - மகிழ்ச்சி; பூரணம்; திருப்தி);


6)

புரமெரி செய்தணி புடைமரு தூருறை

கரமொரு மானுடை யீரே

கரமொரு மானுடை யீரும கழலிணை

உரைசெய நல்லன உறுமே.


புரம் எரிசெய்து அணி புடைமருதூர் உறை, கரம் ஒரு மான் உடையீரே - முப்புரங்களை எரித்து, அழகிய திருப்புடைமருதூரில் உறைகின்ற, கையில் மானை ஏந்தியவரே; (அணி - அழகிய);

கரம் ஒரு மான் உடையீர் உம கழலிணை உரைசெய நல்லன உறுமே - கையில் மானை ஏந்தியவரே, உமது இரு-திருவடிகளைத் துதித்தால் நன்மை வந்தடையும்; (உரைசெய்தல் - புகழ்தல்; துதித்தல்);


7)

பொடியணிந் தழகிய புடைமரு தூருறை

துடியமர் கரமுடை யீரே

துடியமர் கரமுடை யீருமைத் தொழுதெழும்

அடியவர் அருவினை அறுமே.


பொடிணிந்து அழகிய புடைமருதூர் உறை, துடிமர் கரம் உடையீரே - திருநீற்றைப் பூசி, அழகிய திருப்புடைமருதூரில் உறைகின்ற, கையில் உடுக்கை ஏந்தியவரே; (பொடி - திருநீறு); (துடி - உடுக்கு);

துடி அமர் கரம் உடையீர் உமைத் தொழுதெழும் அடியவர் அருவினை அறுமே - கையில் உடுக்கை ஏந்தியவரே உம்மை வழிபடும் அடியார்களது அரிய வினையெல்லாம் அழியும்;


8)

புடையொரு பெண்ணுடன் புடைமரு தூருறை

அடலரக் கனைநெரித் தீரே

அடலரக் கனைநெரித் தீரும தடிதொழத்

தொடர்வினை தொலைவது துணிவே.


புடைரு பெண்ணுடன் புடைமருதூர் உறை, அடல்-ரக்கனை நெரித்தீரே - உமைபங்கராகித் திருப்புடைமருதூரில் உறைகின்ற, வலிய இராவணனை நசுக்கியவரே; (புடை - பக்கம்); (அடல் - வலிமை); (நெரித்தல் - நசுக்குதல்);

அடல்-ரக்கனை நெரித்தீர் உது அடிதொழத் தொடர்-வினை தொலைவது துணிவே - வலிய இராவணனை நசுக்கியவரே, உமது திருவடியைத் தொழுதால், தொடர்கின்ற வினையெல்லாம் அழிவது நிச்சயம்; (துணிவு - நிச்சயம்);


9)

பூவினன் அரிதொழப் புடைமரு தூருறை

ஆவினில் அஞ்சுகந் தீரே

ஆவினில் அஞ்சுகந் தீரும துயர்பெயர்

நாவினில் அணிவது நலமே.


பூவினன் அரி தொழப் புடைமருதூர் உறை, ஆவினில் அஞ்சுகந்தீரே - தாமரையில் உறையும் பிரமன், திருமால் இருவரும் (அடிமுடி தேடிக் காணாது) தொழத், திருப்புடைமருதூரில் உறைகின்ற, பஞ்சகவ்விய அபிஷேகம் விரும்பியவரே; (ஆவினில் அஞ்சு - பஞ்சகவ்வியம்);

ஆவினில் அஞ்சு உகந்தீர் உமது உயர்-பெயர் நாவினில் அணிவது நலமே - பஞ்சகவ்விய அபிஷேகம் விரும்பியவரே, உமது உயர்ந்த நாமத்தை நாவில் அணிவது நன்மையைத் தரும்;


10)

புகழ்பவர் மருவிடும் புடைமரு தூருறை

இகழ்பவர்க் கருளகி லீரே

இகழ்பவர்க் கருளகி லீருமை ஏத்திட

இகல்வினை இடரிலை இனியே.


புகழ்பவர் மருவிடும் புடைமருதூர் உறை, இகழ்பவர்க்கு அருளகிலீரே - புகழும் பக்தர்கள் பொருந்துகின்ற (/அடைகின்ற) திருப்புடைமருதூரில் உறைகின்ற, போற்றாதவர்களுக்கு அருளாதவரே; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்");

இகழ்பவர்க்கு அருளகிலீர் உமை ஏத்திட இகல்-வினை இடர் இலை இனியே - போற்றாதவர்களுக்கு அருளாதவரே, உம்மைத் துதித்தால் பகைக்கின்ற வினைத்துன்பம் இனி இல்லை; (இகல்தல் - மாறுபடுதல்; பகைத்தல்); (வினை இடர் - வினையும் துன்பமும் - என்று உம்மைத்தொகையாகவும் பொருள்கொள்ளல் ஆம்);


11)

பூமலி பொழிலணி புடைமரு தூரினில்

கோமதி யுடனுறை வீரே

கோமதி யுடனுறை வீருமைக் கும்பிட

மாமதி வரும்வினை மாய்வே.


பூ மலி பொழில் அணி புடைமருதூரினில் கோமதியுடன் உறைவீரே - மலர்கள் மிகுந்த சோலை திகழும் திருப்புடைமருதூரில் கோமதியுடன் உறைகின்றவரே; (* கோமதியம்பாள் - திருப்புடைமருதூரில் இறைவி திருநாமம்);

கோமதியுடன் உறைவீர் உமைக் கும்பிட மா-மதி வரும், வினை மாய்வே - கோமதியுடன் உறைகின்றவரே, உம்மை வணங்கினால் ஞானம் வரும், வினைகள் அழியும்; (மா மதி - நல்லறிவு); (மாய்வு - அழிவு);


பிற்குறிப்பு யாப்புக் குறிப்பு:

தானன தானன தானன தானன

தானன தானன தானா

இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவைஇவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறைஎன்று கருதலாம்முதலடியும் மூன்றாம் அடியும் அளவடிஇரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடிதானன என்ற சீர்கள் தனதன என்றும் வரலாம்தானன தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்தானா என்ற சீர்கள் தனனா என்றும் வரலாம்; 2-ஆம் அடி 3-ஆம் அடியில் மடங்கி (= திரும்பவும்வரும்;

உதாரணம் சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி";


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment