2017-05-13
P.396 - புடைமருதூர்
---------------------------------
(திருமுக்கால் அமைப்பு)
(தானன தானன தானன தானன
தானன தானன தானா)
(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி")
* (திருப்புடைமருதூர் - தாமிரபரணி-நதிக்கரைத் தலம்)
1)
பொருநையின் தென்கரைப் புடைமரு தூருறை
கருமணி மிடறுடை யீரே
கருமணி மிடறுடை யீரும கழல்தொழத்
திருமலி நிலையது திடனே.
பொருநையின் தென்கரைப் புடைமருதூர் உறை, கரு-மணி மிடறு உடையீரே - தாமிரபரணிநதியின் தென்கரையில் உள்ள திருப்புடைமருதூரில் உறைகின்ற, நீலமணிகண்டம் உடையவரே; (பொருநை - தாமிரபரணியாறு);
கரு-மணி மிடறு உடையீர் உம கழல் தொழத், திரு மலி நிலையது திடனே - நீலமணிகண்டம் உடையவரே, உமது திருவடியை தொழுதால், (அவ்வன்பர்களுக்குத்) திரு மிகுகின்ற நிலை நிச்சயம்; (உம = உம்+அ = உம்முடைய; அ - ஆறாம்வேற்றுமை உருபு);
2)
புள்ளொலி பொழிலணி புடைமரு தூருறை
கள்ளுகு கொன்றையி னீரே
கள்ளுகு கொன்றையி னீரும கழலிணை
உள்ளிட இருவினை ஒழிவே.
புள் ஒலி பொழில் அணி புடைமருதூர் உறை, கள் உகு கொன்றையினீரே - பறவைகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருப்புடைமருதூரில் உறைகின்ற, தேன் சொரியும் கொன்றைமலரை அணிந்தவரே; (புள் - பறவை); (கள் - தேன்); (உகுத்தல் - சொரிதல்);
கள் உகு கொன்றையினீர் உம கழலிணை உள்ளிட இருவினை ஒழிவே - தேன் சொரியும் கொன்றைமலரை அணிந்தவரே, உமது இரு-திருவடிகளைத் தியானித்தால் (/ மனத்தில் தரித்தால்), இருவினை தீரும்; (உம - உமது); (உள்ளுதல் - எண்ணுதல்); (உள் இடுதல் - மனத்தில் தரித்தல்);
3)
பொழிலிடைக் குயில்பயில் புடைமரு தூருறை
சுழிநதிச் சடைமுடி யீரே
சுழிநதிச் சடைமுடி யீருமைத் தொழுதெழ
அழிவது பழவினை அதுவே.
பொழிலிடைக் குயில் பயில் புடைமருதூர் உறை, சுழி-நதிச் சடை-முடியீரே - சோலையில் குயில்கள் ஒலிக்கின்ற திருப்புடைமருதூரில் உறைகின்ற, சுழிகள் மிக்க கங்கையைச் சடைமுடியில் உடையவரே; (பயில்தல் - ஒலித்தல்); (சுழி - நீர்ச்சுழல்);
சுழி-நதிச் சடை-முடியீர் உமைத் தொழுதெழ, அழிவது பழவினை அதுவே - சுழிகள் மிக்க கங்கையைச் சடைமுடியில் உடையவரே, உம்மைத் தொழுதால் பழவினை அழியும்;
4)
பொலிமலர்ப் பொழிலணி புடைமரு தூருறை
புலியுரி உடையுடை யீரே.
புலியுரி உடையுடை யீருமைப் போற்றிட
மலிவது நெஞ்சினில் மகிழ்வே.
பொலி-மலர்ப் பொழில் அணி புடைமருதூர் உறை, புலி-உரி உடை உடையீரே - அழகிய மலர்ச்சோலை சூழ்ந்த திருப்புடைமருதூரில் உறைகின்ற, புலித்தோலை உடையாக (/ புலித்தோலாடை) உடையவரே; (உரி - தோல்); (உடை - ஆடை); (சம்பந்தர் தேவாரம் - 1.19.3 - "வரியுறு புலியத ளுடையினன்");
புலியதன் அதள் அணிவீர் உமைப் போற்றிட, மலிவது நெஞ்சினில் மகிழ்வே - புலித்தோலாடை உடையவரே, உம்மைப் போற்றினால், மனத்தில் மகிழ்ச்சி நிறையும்;
5)
புனலிடைக் கயலுகள் புடைமரு தூருறை
கனலுமிழ் கண்ணுடை யீரே
கனலுமிழ் கண்ணுடை யீரும கழலிணை
நினைபவர் அடைவது நிறைவே.
புனலிடைக் கயல் உகள் புடைமருதூர் உறை, கனல் உமிழ் கண் உடையீரே - நீரில் கயல்மீன்கள் பாயும் திருப்புடைமருதூரில் உறைகின்ற, தீ உமிழும் நெற்றிக்கண் உடையவரே;
கனல் உமிழ் கண் உடையீர், உம கழலிணை நினைபவர் அடைவது நிறைவே - தீ உமிழும் நெற்றிக்கண் உடையவரே, உமது இரு-திருவடிகளைத் தியானிப்பவர் (குறைகள் நீங்கி) நிறைவு பெறுவர்; (நிறைவு - மகிழ்ச்சி; பூரணம்; திருப்தி);
6)
புரமெரி செய்தணி புடைமரு தூருறை
கரமொரு மானுடை யீரே
கரமொரு மானுடை யீரும கழலிணை
உரைசெய நல்லன உறுமே.
புரம் எரிசெய்து அணி புடைமருதூர் உறை, கரம் ஒரு மான் உடையீரே - முப்புரங்களை எரித்து, அழகிய திருப்புடைமருதூரில் உறைகின்ற, கையில் மானை ஏந்தியவரே; (அணி - அழகிய);
கரம் ஒரு மான் உடையீர் உம கழலிணை உரைசெய நல்லன உறுமே - கையில் மானை ஏந்தியவரே, உமது இரு-திருவடிகளைத் துதித்தால் நன்மை வந்தடையும்; (உரைசெய்தல் - புகழ்தல்; துதித்தல்);
7)
பொடியணிந் தழகிய புடைமரு தூருறை
துடியமர் கரமுடை யீரே
துடியமர் கரமுடை யீருமைத் தொழுதெழும்
அடியவர் அருவினை அறுமே.
பொடி அணிந்து அழகிய புடைமருதூர் உறை, துடி அமர் கரம் உடையீரே - திருநீற்றைப் பூசி, அழகிய திருப்புடைமருதூரில் உறைகின்ற, கையில் உடுக்கை ஏந்தியவரே; (பொடி - திருநீறு); (துடி - உடுக்கு);
துடி அமர் கரம் உடையீர் உமைத் தொழுதெழும் அடியவர் அருவினை அறுமே - கையில் உடுக்கை ஏந்தியவரே உம்மை வழிபடும் அடியார்களது அரிய வினையெல்லாம் அழியும்;
8)
புடையொரு பெண்ணுடன் புடைமரு தூருறை
அடலரக் கனைநெரித் தீரே
அடலரக் கனைநெரித் தீரும தடிதொழத்
தொடர்வினை தொலைவது துணிவே.
புடை ஒரு பெண்ணுடன் புடைமருதூர் உறை, அடல்-அரக்கனை நெரித்தீரே - உமைபங்கராகித் திருப்புடைமருதூரில் உறைகின்ற, வலிய இராவணனை நசுக்கியவரே; (புடை - பக்கம்); (அடல் - வலிமை); (நெரித்தல் - நசுக்குதல்);
அடல்-அரக்கனை நெரித்தீர் உமது அடிதொழத் தொடர்-வினை தொலைவது துணிவே - வலிய இராவணனை நசுக்கியவரே, உமது திருவடியைத் தொழுதால், தொடர்கின்ற வினையெல்லாம் அழிவது நிச்சயம்; (துணிவு - நிச்சயம்);
9)
பூவினன் அரிதொழப் புடைமரு தூருறை
ஆவினில் அஞ்சுகந் தீரே
ஆவினில் அஞ்சுகந் தீரும துயர்பெயர்
நாவினில் அணிவது நலமே.
பூவினன் அரி தொழப் புடைமருதூர் உறை, ஆவினில் அஞ்சு உகந்தீரே - தாமரையில் உறையும் பிரமன், திருமால் இருவரும் (அடிமுடி தேடிக் காணாது) தொழத், திருப்புடைமருதூரில் உறைகின்ற, பஞ்சகவ்விய அபிஷேகம் விரும்பியவரே; (ஆவினில் அஞ்சு - பஞ்சகவ்வியம்);
ஆவினில் அஞ்சு உகந்தீர் உமது உயர்-பெயர் நாவினில் அணிவது நலமே - பஞ்சகவ்விய அபிஷேகம் விரும்பியவரே, உமது உயர்ந்த நாமத்தை நாவில் அணிவது நன்மையைத் தரும்;
10)
புகழ்பவர் மருவிடும் புடைமரு தூருறை
இகழ்பவர்க் கருளகி லீரே
இகழ்பவர்க் கருளகி லீருமை ஏத்திட
இகல்வினை இடரிலை இனியே.
புகழ்பவர் மருவிடும் புடைமருதூர் உறை, இகழ்பவர்க்கு அருளகிலீரே - புகழும் பக்தர்கள் பொருந்துகின்ற (/அடைகின்ற) திருப்புடைமருதூரில் உறைகின்ற, போற்றாதவர்களுக்கு அருளாதவரே; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்");
இகழ்பவர்க்கு அருளகிலீர் உமை ஏத்திட இகல்-வினை இடர் இலை இனியே - போற்றாதவர்களுக்கு அருளாதவரே, உம்மைத் துதித்தால் பகைக்கின்ற வினைத்துன்பம் இனி இல்லை; (இகல்தல் - மாறுபடுதல்; பகைத்தல்); (வினை இடர் - வினையும் துன்பமும் - என்று உம்மைத்தொகையாகவும் பொருள்கொள்ளல் ஆம்);
11)
பூமலி பொழிலணி புடைமரு தூரினில்
கோமதி யுடனுறை வீரே
கோமதி யுடனுறை வீருமைக் கும்பிட
மாமதி வரும்வினை மாய்வே.
பூ மலி பொழில் அணி புடைமருதூரினில் கோமதியுடன் உறைவீரே - மலர்கள் மிகுந்த சோலை திகழும் திருப்புடைமருதூரில் கோமதியுடன் உறைகின்றவரே; (* கோமதியம்பாள் - திருப்புடைமருதூரில் இறைவி திருநாமம்);
கோமதியுடன் உறைவீர் உமைக் கும்பிட மா-மதி வரும், வினை மாய்வே - கோமதியுடன் உறைகின்றவரே, உம்மை வணங்கினால் ஞானம் வரும், வினைகள் அழியும்; (மா மதி - நல்லறிவு); (மாய்வு - அழிவு);
பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு:
தானன தானன தானன தானன
தானன தானன தானா
இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவை. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை" என்று கருதலாம். முதலடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி. தானன என்ற சீர்கள் தனதன என்றும் வரலாம்; தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்; தானா என்ற சீர்கள் தனனா என்றும் வரலாம்; 2-ஆம் அடி 3-ஆம் அடியில் மடங்கி (= திரும்பவும்) வரும்;
உதாரணம் - சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி";
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment