2017-05-26
P.400 - பொது - (ஷட்பதி)
---------------------------------
(விளம் விளம்
விளம் விளம்
விளம் விளம் விளங்காய்)
(ஷட்பதி யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க)
1)
சலந்தரன் தனைத்தடி
வலந்திகழ் சக்கரம்
சலந்துயில் மால்தொழத் தந்தவனே
நிலந்தழல் வளிவெளி
நலந்தரு நீரெனக்
கலந்தவன் கழலிணை நம்புகலே.
சலந்தரன்-தனைத் தடி வலம் திகழ் சக்கரம் சலம் துயில் மால் தொழத் தந்தவனே - ஜலந்தராசுரனை அழித்த வலிமையும் வெற்றியும் உடைய சக்கராயுதத்தைப், பாற்கடல்மேல் பள்ளிகொள்ளும் திருமாலுக்கு, அவன் வணங்கி வேண்டவும் தந்தவன்; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்); (வலம் - வலிமை; வெற்றி); (சலம் - ஜலம் - நீர்; இங்கே கடல்); (ஏ - அசை);
நிலம் தழல் வளி வெளி நலம் தரு நீர் எனக் கலந்தவன் - மண், நெருப்பு, காற்று, ஆகாயம், நன்மை தரும் நீர் என்ற ஐம்பூதங்களிலும் கலந்து நிற்பவன்;
கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன; (புகல் - துணை; பற்றுக்கோடு; சரண்);
2)
முன்னெயில் மூன்றெரி
புன்னகை பூத்தவன்
சென்னியின் மேற்பிறை சேர்த்தவனே
பின்னிய அரவினன்
வன்னியை ஏந்திய
மன்னவன் கழலிணை நம்புகலே.
முன் எயில் மூன்று எரி புன்னகை பூத்தவன் - முன்பு முப்புரங்களை எரித்த புன்முறுவல் செய்தவன்;
சென்னியின்மேல் பிறை சேர்த்தவனே - திருமுடிமேல் சந்திரனைச் சூடியவன்;
பின்னிய அரவினன் - திருமேனியில் பின்னுகின்ற பாம்புகளை அணிந்தவன்;
வன்னியை ஏந்திய மன்னவன் - கையில் தீயை ஏந்திய தலைவன்; (வன்னி - நெருப்பு);
கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;
3)
மலைமகள் பங்கினன்
சலசலத் தலைநதி
தலைமிசைத் தாங்கிய சங்கரனே
கலையொரு கையினன்
இலையையும் ஏற்றருள்
நிலையினன் கழலிணை நம்புகலே.
மலைமகள் பங்கினன் - உமைபங்கன்;
சலசலத்து அலை-நதி தலைமிசைத் தாங்கிய சங்கரனே - சலசலத்து அலைகின்ற (/அலைக்கின்ற) கங்கையைத் தலையின்மேல் தரித்த சங்கரன்;
கலை ஒரு கையினன் - ஒரு கையில் மானை ஏந்தியவன்;
இலையையும் ஏற்று அருள் நிலையினன் - பக்தர்கள் ஓர் இலையையே இட்டு வணங்கினாலும் அவர்களுக்கு இரங்கி அருளும் பண்பினன்; (நிலை - இயல்பு; தன்மை);
கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;
4)
மாமனின் வேள்வியில்
நாமகள் பகலவன்
சோமனைத் தூய்மைகள் செய்தவனே
காமனைக் காய்ந்தவன்
மாமறை ஓதிய
கோமகன் கழலிணை நம்புகலே.
மாமனின் வேள்வியில் நாமகள் பகலவன் சோமனைத் தூய்மைகள் செய்தவனே - மாமனான தக்கன் செய்த அவவேள்வியில் கலைமகள், சூரியன், சந்திரன், இவர்களையெல்லாம் தண்டித்து அருளியவன்; (திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.11 - "காமன் உடலுயிர் காலன்பல் காய்கதிரோன் நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையும் தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ");
காமனைக் காய்ந்தவன் - மன்மதனை எரித்தவன்;
மாமறை ஓதிய கோமகன் - வேதங்களைப் பாடியருளிய (/ வேதங்கள் துதிக்கும்) அரசன்;
கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;
5)
புரிசடைப் புண்ணியன்
திரிபுரம் மூன்றினில்
எரியெழ மேருவில் ஏந்துபிரான்
வரியதள் ஆடையன்
கரியுரி போர்த்திடு
பெரியவன் கழலிணை நம்புகலே.
புரிசடைப் புண்ணியன் - முறுக்குக்கொண்ட சடையை உடைய புண்ணியமூர்த்தி; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);
திரிபுரம் மூன்றினில் எரி எழ மேருவில் ஏந்து பிரான் - எங்கும் திரிந்த முப்புரங்களில் தீ எழும்படி மேருமலையை வில்லாக ஏந்திய தலைவன்;
வரி-அதள் ஆடையன் - வரிகளை உடைய புலித்தோலை ஆடையாக அணிந்தவன்; (அதள் - தோல்);
கரி-உரி போர்த்திடு பெரியவன் - யானைத்தோலைப் போர்வையாகப் போர்த்த பெருமான்;
கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;
6)
வெஞ்சினத் தோடெதிர்
குஞ்சரத் தீருரி
நெஞ்சினை மூடிய போர்வையினான்
அஞ்சிய வானவர்
உஞ்சிட மிடறினில்
நஞ்சணி அரனடி நம்புகலே.
வெஞ்சினத்தோடு எதிர் குஞ்சரத்து ஈர்-உரி நெஞ்சினை மூடிய போர்வையினான் - கடும்-கோபத்தோடு எதிர்த்துப் போர்செய்த யானையின் உரித்த ஈரத்தோலை மார்பை மூடும் போர்வையாக உடையவன்; (குஞ்சரம் - யானை); (நெஞ்சு - மார்பு);
அஞ்சிய வானவர் உஞ்சிட மிடறினில் நஞ்சு அணி அரன் அடி நம் புகலே - ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் உய்யும்படி கண்டத்தில் அவ்விஷத்தை அணிந்த ஹரனது திருவடி நம்மைக் காக்கும்; (உஞ்சிட - உய்ந்திட என்பதன் போலி/திரிபு); (சுந்தரர் தேவாரம் - 7.34.5 - "நெஞ்சில் நோயறுத்து உஞ்சு போவதற் கியாதும் ஐயுற வில்லையே");
7)
வெந்தவெண் பொடியினன்
சந்ததம் நினைபவர்
சிந்தையில் நின்றருள் செய்பெருமான்
சந்திர சேகரன்
செந்தமிழ்க் கம்பொனைத்
தந்தவன் கழலிணை நம்புகலே.
வெந்த வெண்-பொடியினன் - வெண்மையான சுட்ட திருநீற்றைப் பூசியவன்;
சந்ததம் நினைபவர் சிந்தையில் நின்று அருள்செய் பெருமான் - எப்போதும் தியானிக்கும் அடியார் நெஞ்சில் நீங்காமல் நின்று அருளும் பெருமான்;
சந்திரசேகரன் - மதிசூடி;
செந்தமிழ்க்கு அம்பொனைத் தந்தவன் - தேவாரப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, திருவீழிமிழலை (சம்பந்தருக்கும் அப்பருக்கும்), திருவாவடுதுறை (சம்பந்தருக்கு), திருப்புகலூர், திருமுதுகுன்றம், (சுந்தரருக்கு) முதலிய தலங்களிலெல்லாம் அடியார்க்குப் பொன்னை வழங்கியவன்; (சுந்தரர் தேவாரம் - 7.88.8 - "திருமிழலை இருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையாற் காசு நித்தல் நல்கினீர்");
கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;
8)
அற்பமெ னப்பெரு
வெற்பெடு தசமுகன்
மற்புயம் இருபதும் அடர்வுசெய்தார்
கற்பனைக் கரியவர்
பற்பல பெயருடை
அற்புதர் கழலிணை நம்புகலே.
அற்பம் எனப் பெரு-வெற்பு எடு தசமுகன் மற்புயம் இருபதும் அடர்வுசெய்தார் - "இந்த மலை எனக்கு அற்பம்" என்று எண்ணிப் பெரிய கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இராவணனின் வலிய புஜங்கள் இருபதையும் நசுக்கியவர்; (மல் - வலிமை); (அடர்வு - நெருக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.7.8 - "இலங்கை இராவணன் வெற்பெடுக்க எழில்விரல் ஊன்றி");
கற்பனைக்கு அரியவர் - அறிவுக்கு எட்டாதவர்; (கற்பனை - அறிவு); (பெரியபுராணம் - 12.1.2 - "கற்பனை கடந்த சோதி");
பற்பல பெயருடை அற்புதர் - எண்ணற்ற திருநாமங்களை உடைய அற்புதர்; (சுந்தரர் தேவாரம் - 7.20.3 - "ஆதியே அற்புதனே");
கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;
9)
அயனரி தொழுதெழ
வியனெரி ஆனவர்
கயலன கண்ணியொர் பங்குடையார்
புயல்நிற மிடறினர்
உயர்வளி ஆயிரம்
பெயரினர் கழலிணை நம்புகலே.
அயன் அரி தொழுது எழ வியன்-எரி ஆனவர் - பிரமனும் திருமாலும் வழிபடும்படி பெரிய ஜோதி ஆனவர்; (வியன் - பெரிய); (திருவாசகம் - அருட்பத்து- 8.29..4 - "வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்");
கயல் அன கண்ணி ஒர் பங்குடையார் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பங்காக உடையவர்; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);
புயல்-நிற மிடறினர் - மேகம் போன்ற கரிய கண்டம் உடையவர்; (புயல் - மேகம்);
உயர்வு அளி ஆயிரம் பெயரினர் - மேன்மைதரும் ஆயிரம் திருநாமங்களை உடையவர்;
கழலிணை நம் புகலே - அப்பெருமானாரின் கழல் அணிந்த திருவடிகள் நம்மைக் காப்பன;
10)
பொய்யவை தினமுரை
கையரை நீங்குமின்
மையணி மிடறுடை வார்சடையான்
தையலொர் கூறினன்
செய்யவன் நீறணி
மெய்யவன் கழலிணை நம்புகலே.
பொய்யவை தினம் உரை கையரை நீங்குமின் - தினமும் பொய்களையே சொல்லும் கீழோரை விட்டு விலகுங்கள்;
மை அணி மிடறுடை வார்-சடையான் - கரிய கண்டமும் நீண்ட சடையையும் உடையவன்; (மை - கருநிறம்; இருள்);
தையல் ஒர் கூறினன் - உமையை ஒரு கூறாக உடையவன்; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);
செய்யவன் - செம்மேனியான்;
நீறு அணி மெய்யவன் - திருநீற்றைப் பூசிய மெய்ப்பொருள் ஆனவன்;
கழலிணை நம் புகலே - அப்பெருமானது கழல் அணிந்த திருவடிகள் நம்மைக் காப்பன;
11)
பாலன தாருயிர்
பாலனம் செய்தவன்
காலனை அன்றுதை கண்ணுதலான்
வேலனைத் தந்தவன்
ஆலனை அயிலுறு
சூலனைத் தொழவறும் நம்வினையே.
பாலனது ஆர்-உயிர் பாலனம் செய்தவன் - மறைச்சிறுவரான மார்க்கண்டேயரின் அரிய உயிரைக் காத்தவனும்; (பாலனம் - காத்தல்; பாதுகாப்பு);
காலனை அன்று உதை கண்ணுதலான் - நமனை அன்று உதைத்த நெற்றிக்கண்ணனும்;
வேலனைத் தந்தவன் - முருகனுக்குத் தந்தையும் ஆன;
ஆலனை - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருப்பவனை (தட்சிணாமூர்த்தியை);
அயில் உறு சூலனைத் தொழ அறும் நம் வினையே - கூர்மை பொருந்திய சூலப்படையை உடைய சிவபெருமானை வழிபட்டால் நம் வினைகளெல்லாம் அழியும்; (அயில் - கூர்மை); (சம்பந்தர் தேவாரம் - 1.79.1 - "அயிலுறு படையினர் விடையினர்");
பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :
கன்னடத்தில் "ஷட்பதி" என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்புப் போல அமைந்தது;
ஆறு அடிகள்
எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.
1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. இவ்வடிகளில் சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிகள்தோறும் 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முற்பாதியில் உள்ள சீர்-அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
(சீர்கள் அளவொத்து இருந்தால் போதும். உதாரணமாக: மாச்சீர் வரும் இடத்தில் எவ்வகை மாச்சீரும் வரலாம்; விளச்சீர் வரும் இடத்தில் எவ்வகை விளச்சீரும் வரலாம்)3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முற்பாதியின் சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் எழுத்து. (நெடில், நெடில்+ஒற்று, குறில்+ஒற்று, குறில்).
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment