Monday, April 21, 2025

P.400 - பொது - (ஷட்பதி) - சலந்தரன் தனைத்தடி

2017-05-26

P.400 - பொது - (ஷட்பதி)

---------------------------------

(விளம் விளம்

விளம் விளம்

விளம் விளம் விளங்காய்)

(ஷட்பதி யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க)


1)

சலந்தரன் தனைத்தடி

வலந்திகழ் சக்கரம்

சலந்துயில் மால்தொழத் தந்தவனே

நிலந்தழல் வளிவெளி

நலந்தரு நீரெனக்

கலந்தவன் கழலிணை நம்புகலே.


சலந்தரன்-தனைத் தடி வலம் திகழ் சக்கரம் சலம் துயில் மால் தொழத் தந்தவனே - ஜலந்தராசுரனை அழித்த வலிமையும் வெற்றியும் உடைய சக்கராயுதத்தைப், பாற்கடல்மேல் பள்ளிகொள்ளும் திருமாலுக்கு, அவன் வணங்கி வேண்டவும் தந்தவன்; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்); (வலம் - வலிமை; வெற்றி); (சலம் - ஜலம் - நீர்; இங்கே கடல்); (- அசை);

நிலம் தழல் வளி வெளி நலம் தரு நீர் எனக் கலந்தவன் - மண், நெருப்பு, காற்று, ஆகாயம், நன்மை தரும் நீர் என்ற ஐம்பூதங்களிலும் கலந்து நிற்பவன்;

கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன; (புகல் - துணை; பற்றுக்கோடு; சரண்);


2)

முன்னெயில் மூன்றெரி

புன்னகை பூத்தவன்

சென்னியின் மேற்பிறை சேர்த்தவனே

பின்னிய அரவினன்

வன்னியை ஏந்திய

மன்னவன் கழலிணை நம்புகலே.


முன்யில் மூன்று எரி புன்னகை பூத்தவன் - முன்பு முப்புரங்களை எரித்த புன்முறுவல் செய்தவன்;

சென்னியின்மேல் பிறை சேர்த்தவனே - திருமுடிமேல் சந்திரனைச் சூடியவன்;

பின்னிய அரவினன் - திருமேனியில் பின்னுகின்ற பாம்புகளை அணிந்தவன்;

வன்னியை ஏந்திய மன்னவன் - கையில் தீயை ஏந்திய தலைவன்; (வன்னி - நெருப்பு);

கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;


3)

மலைமகள் பங்கினன்

சலசலத் தலைநதி

தலைமிசைத் தாங்கிய சங்கரனே

கலையொரு கையினன்

இலையையும் ஏற்றருள்

நிலையினன் கழலிணை நம்புகலே.


மலைமகள் பங்கினன் - உமைபங்கன்;

சலசலத்து அலை-நதி தலைமிசைத் தாங்கிய சங்கரனே - சலசலத்து அலைகின்ற (/அலைக்கின்ற) கங்கையைத் தலையின்மேல் தரித்த சங்கரன்;

கலைரு கையினன் - ஒரு கையில் மானை ஏந்தியவன்;

இலையையும் ஏற்று அருள் நிலையினன் - பக்தர்கள் ஓர் இலையையே இட்டு வணங்கினாலும் அவர்களுக்கு இரங்கி அருளும் பண்பினன்; (நிலை - இயல்பு; தன்மை);

கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;


4)

மாமனின் வேள்வியில்

நாமகள் பகலவன்

சோமனைத் தூய்மைகள் செய்தவனே

காமனைக் காய்ந்தவன்

மாமறை ஓதிய

கோமகன் கழலிணை நம்புகலே.


மாமனின் வேள்வியில் நாமகள் பகலவன் சோமனைத் தூய்மைகள் செய்தவனே - மாமனான தக்கன் செய்த அவவேள்வியில் கலைமகள், சூரியன், சந்திரன், இவர்களையெல்லாம் தண்டித்து அருளியவன்; (திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.11 - "காமன் உடலுயிர் காலன்பல் காய்கதிரோன் நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையும் தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ");

காமனைக் காய்ந்தவன் - மன்மதனை எரித்தவன்;

மாமறை ஓதிய கோமகன் - வேதங்களைப் பாடியருளிய (/ வேதங்கள் துதிக்கும்) அரசன்;

கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;


5)

புரிசடைப் புண்ணியன்

திரிபுரம் மூன்றினில்

எரியெழ மேருவில் ஏந்துபிரான்

வரியதள் ஆடையன்

கரியுரி போர்த்திடு

பெரியவன் கழலிணை நம்புகலே.


புரிசடைப் புண்ணியன் - முறுக்குக்கொண்ட சடையை உடைய புண்ணியமூர்த்தி; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);

திரிபுரம் மூன்றினில் எரி எழ மேருவில் ஏந்து பிரான் - எங்கும் திரிந்த முப்புரங்களில் தீ எழும்படி மேருமலையை வில்லாக ஏந்திய தலைவன்;

வரி-அதள் ஆடையன் - வரிகளை உடைய புலித்தோலை ஆடையாக அணிந்தவன்; (அதள் - தோல்);

கரி-உரி போர்த்திடு பெரியவன் - யானைத்தோலைப் போர்வையாகப் போர்த்த பெருமான்;

கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;


6)

வெஞ்சினத் தோடெதிர்

குஞ்சரத் தீருரி

நெஞ்சினை மூடிய போர்வையினான்

அஞ்சிய வானவர்

உஞ்சிட மிடறினில்

நஞ்சணி அரனடி நம்புகலே.


வெஞ்சினத்தோடு எதிர் குஞ்சரத்து ஈர்-உரி நெஞ்சினை மூடிய போர்வையினான் - கடும்-கோபத்தோடு எதிர்த்துப் போர்செய்த யானையின் உரித்த ஈரத்தோலை மார்பை மூடும் போர்வையாக உடையவன்; (குஞ்சரம் - யானை); (நெஞ்சு - மார்பு);

அஞ்சிய வானவர் உஞ்சிட மிடறினில் நஞ்சு அணி அரன் அடி நம் புகலே - ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் உய்யும்படி கண்டத்தில் அவ்விஷத்தை அணிந்த ஹரனது திருவடி நம்மைக் காக்கும்; (உஞ்சிட - உய்ந்திட என்பதன் போலி/திரிபு); (சுந்தரர் தேவாரம் - 7.34.5 - "நெஞ்சில் நோயறுத்து உஞ்சு போவதற் கியாதும் ஐயுற வில்லையே");


7)

வெந்தவெண் பொடியினன்

சந்ததம் நினைபவர்

சிந்தையில் நின்றருள் செய்பெருமான்

சந்திர சேகரன்

செந்தமிழ்க் கம்பொனைத்

தந்தவன் கழலிணை நம்புகலே.


வெந்த வெண்-பொடியினன் - வெண்மையான சுட்ட திருநீற்றைப் பூசியவன்;

சந்ததம் நினைபவர் சிந்தையில் நின்று அருள்செய் பெருமான் - எப்போதும் தியானிக்கும் அடியார் நெஞ்சில் நீங்காமல் நின்று அருளும் பெருமான்;

சந்திரசேகரன் - மதிசூடி;

செந்தமிழ்க்கு அம்பொனைத் தந்தவன் - தேவாரப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, திருவீழிமிழலை (சம்பந்தருக்கும் அப்பருக்கும்), திருவாவடுதுறை (சம்பந்தருக்கு), திருப்புகலூர், திருமுதுகுன்றம், (சுந்தரருக்கு) முதலிய தலங்களிலெல்லாம் அடியார்க்குப் பொன்னை வழங்கியவன்; (சுந்தரர் தேவாரம் - 7.88.8 - "திருமிழலை இருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையாற் காசு நித்தல் நல்கினீர்");

கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;


8)

அற்பமெ னப்பெரு

வெற்பெடு தசமுகன்

மற்புயம் இருபதும் அடர்வுசெய்தார்

கற்பனைக் கரியவர்

பற்பல பெயருடை

அற்புதர் கழலிணை நம்புகலே.


அற்பம் எனப் பெரு-வெற்பு டு தசமுகன் மற்புயம் இருபதும் அடர்வுசெய்தார் - "இந்த மலை எனக்கு அற்பம்" என்று எண்ணிப் பெரிய கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இராவணனின் வலிய புஜங்கள் இருபதையும் நசுக்கியவர்; (மல் - வலிமை); (அடர்வு - நெருக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.7.8 - "இலங்கை இராவணன் வெற்பெடுக்க எழில்விரல் ஊன்றி");

கற்பனைக்கு அரியவர் - அறிவுக்கு எட்டாதவர்; (கற்பனை - அறிவு); (பெரியபுராணம் - 12.1.2 - "கற்பனை கடந்த சோதி");

பற்பல பெயருடை அற்புதர் - எண்ணற்ற திருநாமங்களை உடைய அற்புதர்; (சுந்தரர் தேவாரம் - 7.20.3 - "ஆதியே அற்புதனே");

கழலிணை நம் புகலே - அச்-சிவபெருமானது கழல் அணிந்த இரு-திருவடிகள் நம்மைக் காப்பன;


9)

அயனரி தொழுதெழ

வியனெரி ஆனவர்

கயலன கண்ணியொர் பங்குடையார்

புயல்நிற மிடறினர்

உயர்வளி ஆயிரம்

பெயரினர் கழலிணை நம்புகலே.


அயன் அரி தொழுது எழ வியன்-எரி ஆனவர் - பிரமனும் திருமாலும் வழிபடும்படி பெரிய ஜோதி ஆனவர்; (வியன் - பெரிய); (திருவாசகம் - அருட்பத்து- 8.29..4 - "வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்");

கயல் அன கண்ணி ஒர் பங்குடையார் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பங்காக உடையவர்; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);

புயல்-நிற மிடறினர் - மேகம் போன்ற கரிய கண்டம் உடையவர்; (புயல் - மேகம்);

உயர்வு அளி ஆயிரம் பெயரினர் - மேன்மைதரும் ஆயிரம் திருநாமங்களை உடையவர்;

கழலிணை நம் புகலே - அப்பெருமானாரின் கழல் அணிந்த திருவடிகள் நம்மைக் காப்பன;


10)

பொய்யவை தினமுரை

கையரை நீங்குமின்

மையணி மிடறுடை வார்சடையான்

தையலொர் கூறினன்

செய்யவன் நீறணி

மெய்யவன் கழலிணை நம்புகலே.


பொய்யவை தினம் உரை கையரை நீங்குமின் - தினமும் பொய்களையே சொல்லும் கீழோரை விட்டு விலகுங்கள்;

மை அணி மிடறுடை வார்-சடையான் - கரிய கண்டமும் நீண்ட சடையையும் உடையவன்; (மை - கருநிறம்; இருள்);

தையல் ஒர் கூறினன் - உமையை ஒரு கூறாக உடையவன்; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);

செய்யவன் - செம்மேனியான்;

நீறு அணி மெய்யவன் - திருநீற்றைப் பூசிய மெய்ப்பொருள் ஆனவன்;

கழலிணை நம் புகலே - அப்பெருமானது கழல் அணிந்த திருவடிகள் நம்மைக் காப்பன;


11)

பாலன தாருயிர்

பாலனம் செய்தவன்

காலனை அன்றுதை கண்ணுதலான்

வேலனைத் தந்தவன்

ஆலனை அயிலுறு

சூலனைத் தொழவறும் நம்வினையே.


பாலனது ஆர்-உயிர் பாலனம் செய்தவன் - மறைச்சிறுவரான மார்க்கண்டேயரின் அரிய உயிரைக் காத்தவனும்; (பாலனம் - காத்தல்; பாதுகாப்பு);

காலனை அன்று உதை கண்ணுதலான் - நமனை அன்று உதைத்த நெற்றிக்கண்ணனும்;

வேலனைத் தந்தவன் - முருகனுக்குத் தந்தையும் ஆன;

ஆலனை - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருப்பவனை (தட்சிணாமூர்த்தியை);

அயில் உறு சூலனைத் தொழ அறும் நம் வினையே - கூர்மை பொருந்திய சூலப்படையை உடைய சிவபெருமானை வழிபட்டால் நம் வினைகளெல்லாம் அழியும்; (அயில் - கூர்மை); (சம்பந்தர் தேவாரம் - 1.79.1 - "அயிலுறு படையினர் விடையினர்");


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :

கன்னடத்தில் "ஷட்பதி" என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்புப் போல அமைந்தது;

  • ஆறு அடிகள்

  • எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.

  • 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. இவ்வடிகளில் சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிகள்தோறும் 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முற்பாதியில் உள்ள சீர்-அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
    (சீர்கள் அளவொத்து இருந்தால் போதும். உதாரணமாக: மாச்சீர் வரும் இடத்தில் எவ்வகை மாச்சீரும் வரலாம்; விளச்சீர் வரும் இடத்தில் எவ்வகை விளச்சீரும் வரலாம்)

  • 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முற்பாதியின் சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் எழுத்து. (நெடில், நெடில்+ஒற்று, குறில்+ஒற்று, குறில்).


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment