Wednesday, April 30, 2025

P.404 - கடவூர் - காத ஓடிவரு வன்னமன்

2017-06-17

P.404 - கடவூர்

---------------------------------

(சந்தக் கலித்துறை - தானதான தனதானன தானன தானா தனதானா;

அறுசீர்ச் சந்தவிருத்தம் என்றும் நோக்கலாம்;

சில பாடல்களில் முதற்சீர் "தனனதான" என்றும் வரலாம்);

(சம்பந்தர் தேவாரம் - 1.2.1 - "குறிகலந்தவிசை பாடலினான்நசை")

(சம்பந்தர் தேவாரம் - 1.2.3 - "பண்ணிலாவும் மறைபாடலினான்")


1)

காதஓடி வருவன்னமன் மாள்வுற அன்று கழலார்க்கப்

பாதம்வீசி அடியாருயிர் காத்தவர் பாம்பைப் புனைமார்பர்

மாதராளை ஒருபாலுடை மேனியர் மன்னும் இடமென்பர்

காதலாளர் கருதித்தொழு தேத்திட ஆரும் கடவூரே.


காத ஓடி வரு வன்-நமன் மாள்வுற அன்று கழல் ஆர்க்கப் பாதம் வீசி அடியார் உயிர் காத்தவர் - கொல்ல ஓடி வந்த கொடிய வலிய கூற்றுவனே மாளுமாறு அச்சமயத்தில் திருப்பாதத்தை வீசி மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவர்; (காதுதல் - கொல்தல்);

பாம்பைப் புனை மார்பர் - பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவர்;

மாதராளை ஒருபாலுடை மேனியர் மன்னும் இடம் என்பர் - உமையை ஒரு பக்கத்தில் உடைய திருமேனியர் உறையும் தலம் ஆவது;

காதலாளர் கருதித் தொழுது ஏத்திட ஆரும் கடவூரே - அன்பர்கள் விரும்பித் தொழுது போற்றிட நிறையும் திருக்கடவூர்;


2)

நடலையின்றி அடிவாழ்த்திய மாணியை நண்ணும் நமனாரே

படவுதைத்த அடிகள்பலி தேர்ந்துழல் பண்பர் பரமேட்டி

சுடலைநீறு துதைமார்பினில் நூலணி தூயர் இடமென்பர்

கடலெழுந்த முகிலேதொடு கோபுரம் ஆரும் கடவூரே.


நடலை இன்றி அடி வாழ்த்திய மாணியை நண்ணும் நமனாரே பட உதைத்த அடிகள் - வஞ்சம் இன்றித் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய காலனே அழியும்படி உதைத்த கடவுள்;

பலி தேர்ந்து உழல் பண்பர் பரமேட்டி - பிச்சையேற்று உழலும் பண்பினர், பரமர்;

சுடலை நீறு துதை மார்பினில் நூல் அணி தூயர் இடம் என்பர் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய மார்பில் பூணூல் அணிந்த தூயவர் உறையும் தலம் ஆவது;

கடல் எழுந்த முகிலே தொடு கோபுரம் ஆரும் கடவூரே - கடலில் தோன்றிய மேகமே தொடுமாறு உயர்ந்த கோபுரம் பொருந்திய திருக்கடவூர்.


3)

அரியஅன்பர் உயிருக்கரண் ஆனவர் ஆடல் புரிநாதர்

பெரியதேவர் கழலைப்பல வானவர் பேணப் புரமூன்றும்

எரியுமாறு மலையைச்சிலை ஆக்கிய ஈசர் இடமென்பர்

கரியமேகம் அணவும்படி நீள்பொழில் ஆரும் கடவூரே.


அரிய அன்பர் உயிருக்கு அரண் ஆனவர் - மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவர்; (பக்தர்களைக் காப்பவர்);

ஆடல் புரி நாதர் - கூத்தர்;

பெரிய-தேவர் கழலைப் பல வானவர் பேணப் - மகாதேவர் திருவடியைப் பல தேவர்களும் போற்ற அவர்களுக்கு இரங்கி;

புரம் மூன்றும் எரியுமாறு மலையைச் சிலை ஆக்கிய ஈசர் இடம் என்பர் - முப்புரங்களும் எரியும்படி மேருமலையை வில்லாக வளைத்த ஈசனார் உறையும் தலம் ஆவது;

கரிய மேகம் அணவும்படி நீள்-பொழில் ஆரும் கடவூரே - கரிய மேகம் தொட உயரும் சோலை திகழும் திருக்கடவூர். (அணவுதல் - அணுகுதல்);


4)

நலமிலங்கு மலராலடி வாழ்த்திய நம்பி உயிர்காத்தார்

சலமிலங்கு மதிசூடிய தாழ்சடை அண்ணல் தனியேற்றர்

வலமிலங்கு மழுவாளினர் மாதொரு பங்கர் மகிழூராம்

கலயர்முன்பு புகையால்தொழு தேத்திய சீரார் கடவூரே.


நலம் இலங்கு மலரால் அடி வாழ்த்திய நம்பி உயிர் காத்தார் - மார்க்கண்டேயரைக் காத்த வரலாறு;

சலம் இலங்கு மதி சூடிய தாழ்சடை அண்ணல் - கங்காதரர், சந்திரசேகரர், ஜடாதாரி;

தனி ஏற்றர் - ஒப்பற்ற இடப வாகனம் உடையவர்;

வலம் இலங்கு மழுவாளினர் - வலக்கையில் வெற்றியுடைய மழுவாயுதத்தை ஏந்தியவர்; (வலம் - வலப்பக்கம்; வெற்றி; வலிமை);

மாது ஒரு பங்கர் மகிழ் ஊர் ஆம் - உமைபங்கர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கலயர் முன்பு புகையால் தொழுது ஏத்திய சீர் ஆர் கடவூரே - குங்கிலியக்-கலய நாயனார் முன்பு தூபத்தால் வழிபாடு செய்த வளமும் புகழும் மிகுந்த திருக்கடவூர்;


5)

நறையிலங்கு மலர்போற்கழ லால்நமன் மாள உதைசெய்தார்

இறையிலங்கு வளையாளையி டத்தினில் ஏற்ற பெருமானார்

மறையிலங்கு திருநாவினர் மாமணி கண்டர் மகிழூராம்

கறையிலங்கு கடியார்பொழில் சூழ்கவின் ஆரும் கடவூரே.


நறை இலங்கு மலர்போல் கழலால் நமன் மாள உதைசெய்தார் - வாசமலர் போன்ற திருவடியால் கூற்றுவன் அழியுமாறு உதைத்தவர்; (நறை - தேன்; வாசனை);

இறை இலங்கு வளையாளை இடத்தினில் ஏற்ற பெருமானார் - முன்கையில் வளை அணிந்த உமையை இடப்பக்கத்தில் ஏற்ற பெருமான்; ( இறை - முன்-கை);

மறை இலங்கு திருநாவினர் - வேதம் ஓதியவர்;

மா-மணி-கண்டர் மகிழ் ஊர் ஆம் - அழகிய நீலகண்டர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கறைலங்கு கடிர் பொழில் சூழ் கவின் ஆரும் கடவூரே - அடர்ந்த, மணம் கமழும், சோலை சூழ்ந்த அழகிய திருக்கடவூர்; (கறை - இருள்); (கடி - வாசனை);


6)

தேனிலங்கு மலரால்தொழு தாருயிர் காத்த திருவாளர்

ஊனிலங்கு தலையிற்பலி ஏற்பவர் உம்பர்க் கொருநாதர்

வானிலங்கு மதியம்புனை செஞ்சடை மைந்தர் மகிழூராம்

கானிலங்கு பொழிலிற்கரு வண்டிசை பாடும் கடவூரே


தேன் இலங்கு மலரால் தொழுதார் உயிர் காத்த திருவாளர் - தேன் நிறைந்த பூக்களைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவர், திருவுடையவர்;

ஊன் இலங்கு தலையில் பலி ஏற்பவர் - புலால் நாறும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவர்;

உம்பர்க்கு ஒரு நாதர் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர்;

வான் இலங்கு மதியம் புனை செஞ்சடை மைந்தர் மகிழ் ஊர் ஆம் - வானத்தில் விளங்கும் சந்திரனைச் செஞ்சடையில் அணிந்த அழகர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கான் இலங்கு பொழிலில் கருவண்டு இசை பாடும் கடவூரே - மணம் கமழும் சோலையில் கரிய வண்டுகள் இசைபாடுகின்ற திருக்கடவூர். (கான் - வாசனை);


7)

காமனைக்கண் அழலால்சுட வல்லவர் காலிற் கழலார்த்தார்

நாம(ம்)நித்தம் நவில்மாணியை நண்ணிய கூற்றை உதைநம்பர்

மாமரத்தை இருகூறிடு வேலவன் அத்தர் மகிழூராம்

காமரத்தை வரிவண்டுகள் ஆர்த்தடை சோலைக் கடவூரே.


காமனைக் கண் அழலால் சுட வல்லவர் - மன்மதனை நெற்றிக்கண் நெருப்பால் சுட்டவர்;

காலில் கழல் ஆர்த்தார் - காலில் கழலை அணிந்தவர்;

நாமம் நித்தம் நவில் மாணியை நண்ணிய கூற்றை உதை நம்பர் - அப்பெருமானார் திருநாமத்தை எப்பொழுதும் சொல்லி வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய நமனை உதைத்தவர், நம்பன் என்ற திருநாமம் உடையவர்;

மாமரத்தை இரு-கூறிடு வேலவன் அத்தர் மகிழ் ஊர் ஆம் - சூரசம்ஹாரத்தின்போது, சூரபதுமன் மாமரத்தின் உருவில் நின்றபோது, அதனை வேல்விட்டு இரண்டாகப் பிளந்த முருகனுக்குத் தந்தையாரான ஈசர் விரும்பி உறையும் ஊர் ஆகும்; (சம்பந்தர் தேவாரம் - 1.96.4 - "அத்தர் அன்னியூர்ச் சித்தர்");

காமரத்தை வரிவண்டுகள் ஆர்த்து அடை சோலைக் கடவூரே - காமரம் (சீகாமரம்) என்ற பண்ணை வரியுடைய வண்டுகள் ஒலித்து அடைகின்ற சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


8)

புத்தியின்றி அருவெற்பெறி கோன்வலி பொன்றக் கழலூன்றிப்

பத்துவாய்கள் பலநாளிசை பாடுதல் கேட்டுப் படையீந்தார்

மத்தயானை அதனீருரி மூடிய மார்பர் மகிழூராம்

கைத்தலத்தில் அயிலேந்திய காலனை வீட்டும் கடவூரே.


புத்தியின்றி அருவெற்பு எறி கோன்-வலி பொன்றக் கழல் ஊன்றிப் - அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த இலங்கை மன்னனான இராவணனது வலிமை அழியும்படி திருவடியை ஊன்றி அவனை நசுக்கி;

பத்து வாய்கள் பலநாள் இசை பாடுதல் கேட்டுப் படை ஈந்தார் - பின் அவனது பத்துவாய்களும் பலகாலம் இசைபாடித் துதிக்கக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளைக் கொடுத்தவர்;

மத்தயானை அதன் ஈருரி மூடிய மார்பர் மகிழ் ஊர் ஆம் - மதயானையின் உரித்த தோலைப் போர்வையாகப் போர்த்தவர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கைத்தலத்தில் அயிலேந்திய காலனை வீட்டும் கடவூரே - கையில் சூலத்தை ஏந்திய காலனை அழித்த திருக்கடவூர்; (கைத்தலம் - கை); (அயில் - இங்கே, சூலம்); (வீட்டுதல் - அழித்தல்);


9)

நீலவண்ணன் நறுமாமலர் மேலினன் நேடித் தொழநின்றார்

ஏல(ம்)நாறு குழலாளையி டத்தினில் ஏற்ற இருள்கண்டர்

மேலர்மேலர் மலரம்பெறி வேளுடல் வேவ விழிசெய்தார்

காலகாலர் கருதும்பதி காமரு சோலைக் கடவூரே.


நீலவண்ணன் நறுமாமலர் மேலினன் நேடித் தொழ நின்றார் - கரிய மாலும் வாசத்-தாமரைமேல் உறையும் பிரமனும் தேடித் தொழும்படி ஜோதிவடிவில் நின்றவர்;

ஏலம் நாறு குழலாளை இடத்தினில் ஏற்ற இருள்கண்டர் - வாசக்குழலியான உமையை இடப்பாகம் ஏற்ற நீலகண்டர்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (நாறுதல் - மணம் கமழ்தல்);

மேலர் மேலர் - மேலானவர்க்கும் மேலானவர்; தேவதேவர்; (அப்பர் தேவாரம் - 6.55.7 - "மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி");

மலர்-அம்பு எறி வேள் உடல் வேவ விழிசெய்தார் - மலர்க்கணையை எய்த மன்மதனது உடம்பு சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவர்;

காலகாலர் கருதும் பதி காமரு சோலைக் கடவூரே - காலகாலரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


10)

வீதிநின்று பலபொய்யுரை பேசிடு வீணர் தமைநீங்கும்

பூதிபூசி அடியைப்புகழ் வார்துயர் போக்கும் பெருமானார்

மேதிஏறு நமனைக்குமை செய்தவர் வேலை விடமுண்டார்

காதிலங்கு குழையார்பதி காமரு சோலைக் கடவூரே.


வீதி நின்று பல பொய்யுரை பேசிடு வீணர்தமை நீங்கும் - தெருவில் நின்று பல பொய்களைப் பேசுகின்ற வீணர்களை விட்டு நீங்குங்கள்;

பூதி பூசி அடியைப் புகழ்வார் துயர் போக்கும் பெருமானார் - திருநீற்றைப் பூசித் திருவடியைத் துதிக்கும் பக்தர்களது துயரத்தைத் தீர்க்கும் பெருமானார்; (பூதி - திருநீறு);

மேதி ஏறு நமனைக் குமை செய்தவர் - எருமையை வாகனமாக உடைய கூற்றுவனை அழித்தவர்; (மேடி - எருமை); (குமை - அழிவு);

வேலை-விடம் உண்டார் - கடல்நஞ்சை உண்டவர்; (வேலை - கடல்);

காது இலங்கு குழையார் பதி காமரு சோலைக் கடவூரே - காதில் விளங்கும் குழையை அணிந்த சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


11)

பண்ணிலங்கு தமிழாற்பதம் ஏத்திடு பத்தர் பவ(ம்)மாய்ப்பார்

எண்ணிலெங்கும் வருவார்வட வாலமர் ஈசர் உமைநேசர்

தண்ணிலங்கு மதியார்சடை மேல்இள நாகம் தனைவைத்தார்

கண்ணிலங்கு நுதலார்பதி காமரு சோலைக் கடவூரே.


பண் இலங்கு தமிழால் பதம் ஏத்திடு பத்தர் பவம் மாய்ப்பார் - பண் பொருந்திய இசைத்தமிழான தேவாரத்தைப் பாடி வழிபடும் பக்தர்களது பிறவிப்பிணியைத் தீர்ப்பவர்;

எண்ணில் எங்கும் வருவார் - எங்கிருந்து பக்தர்கள் தியானித்தாலும் அங்கே வந்து அருள்பவர்; (சம்பந்தர் தேவாரம் - 2.40.6 - "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கேயென்று அருள்புரியும் எம்பெருமான்");

வடவால் அமர் ஈசர் - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி; (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");

உமைநேசர் - உமைக்குக் கணவர்;

தண் இலங்கு மதி ஆர் சடைமேல் இள-நாகம்தனை வைத்தார் - குளிர்ச்சி பொருந்திய சந்திரன் இருக்கும் சடையின்மேல் இளம்பாம்பையும் அணிந்தவர்;

கண் இலங்கு நுதலார் பதி காமரு சோலைக் கடவூரே - நெற்றிக்கண்ணரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, April 21, 2025

N.047 - சுந்தரர் துதி - நறுமலர் கொய்யணி

2017-06-10

N.047 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2017

----------------

(ஷட்பதி அமைப்பு -

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம் விளம் விளங்காய்)


நறுமலர் கொய்யணி நங்கையர் இருவரை

மறுமுறை நோக்கவும் மண்மிசைப் பிறவியைப்

பெறுதவர் அழகிய பிறையணி ஈசனைப் பித்தனென் றுரைத்தவரே

தறுகணன் மறலிதன் தமர்நலி யாவணம்

அறுமுகன் அப்பனை அடிதொழும் என்றுநம்

சிறுமைகள் தீர்தமிழ் செப்பிய சுந்தரர் திருவடி ஏத்திடுவோம்.


நறுமலர் கொய் அணி நங்கையர் இருவரை மறுமுறை நோக்கவும் மண்மிசைப் பிறவியைப் பெறு தவர் - கயிலையில் வாசமலர்களைப் பறிக்கவந்த இரு-சேடியரைக் கண்டு ஒரு-க்ஷணம் ஆசைப்பட்டு, அதன் காரணமாக இப்பூமியின்மேல் பிறவியைப் பெற்றவர், தவம் உடையவர்; (தவர் - தவம் உடையவர்);

அழகிய பிறை அணி ஈசனைப் பித்தன் என்று உரைத்தவரே - அழகிய சந்திரனை அணியும் சிவபெருமானைப் "பித்தரோ நீர்" என்று மணப்பந்தலில் கேட்டவர்; பின்னர்ப், "பித்தா பிறைசூடீ" என்று பாடி வழிபட்டவர்;

தறுகணன் மறலிதன் தமர் நலியா-வணம் அறுமுகன் அப்பனை அடிதொழும் என்று - கொடிய கூற்றுவனது படர்களால் வருத்தமுறும் நிலையை அடையாமல் உய்வதற்கு, முருகனுக்குத் தந்தையான சிவபெருமானது திருவடியை வழிபடுங்கள் என்று; (தறுகணன் - தறுகண்ணன் - கொடியவன்); (திருப்புகழ் - பழநி - "தமரும் அமரும் .. .. தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே"); (சுந்தரர் தேவாரம் - 7.90.1 - "தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள்வான்");

நம் சிறுமைகள் தீர் தமிழ் செப்பிய சுந்தரர் திருவடி ஏத்திடுவோம் - நம் குற்றங்களைத் தீர்க்கும் செந்தமிழான தேவாரம் பாடியருளிய சுந்தரரது திருவடிகளைப் போற்றுவோம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


N.046 - மாணிக்க வாசகர் துதி - சுட்ட நீறணி

2017-06-10

N.046 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2017

----------------

(ஷட்பதி அமைப்பு -

மா விளம் மா விளம்

மா விளம் மா விளம்

மா விளம் மா விளம் மா விளங்காய்)


சுட்ட நீறணி சொக்கன் மதுரையில்

பிட்டை உண்டருள் பித்தன் மலரடி

பட்ட உச்சியர் பரமன் மெச்சிய பாக்கள் பாடவலார்

கட்டு வல்வினைக் கயிற றுத்திடும்

மட்டு வார்திரு வாத வூரர்சொல்

இட்ட மாய்நிதம் எண்ணி அவர்கழல் இணையை ஏத்திடுவோம்.


சுட்ட நீறு அணி சொக்கன் - திருநீற்றைப் பூசிய அழகன்;

மதுரையில் பிட்டை உண்டு அருள் பித்தன் - வந்திக்குக் கூலியாளாக வந்து அவள் தந்த பிட்டைக் கூலியாகப் பெற்று உண்ட பேரருளாளன்; (பித்தன் - பேரன்பு உடையவன்);

மலரடி பட்ட உச்சியர் - அச்சிவபெருமானது மலர் போன்ற திருவடிகளைத் தம் தலைமீது சூட்டப்பெற்றவர்; (உச்சி - தலை);

பரமன் மெச்சிய பாக்கள் பாடவலார் - சிவபெருமான் விரும்பிக் கேட்ட பாடல்களைப் பாடியருளியவர்; (தில்லையில் ஒரு மறையவர் வடிவில் ஈசன் வந்து மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாட அதனைத் தன் கையால் எழுதிய வரலாற்றையும் காண்க);

கட்டு-வல்வினைக் கயிறு அறுத்திடும் மட்டு வார் திருவாதவூரர் சொல் - உயிர்களைக் கட்டியிருக்கும் வலிய வினை என்ற கயிற்றை அறுக்க வல்லதான, மாணிக்கவாசகர் அருளிய, தேன் சொரியும் திருவாசகம்; (மட்டு - தேன்); (வார்தல் - சொரிதல்; ஒழுகுதல்);

இட்டமாய் நிதம் எண்ணி - அந்தத் திருவாசகத்தைத் தினந்தோறும் பக்தியோடு எண்ணி;

அவர் கழல் இணையை ஏத்திடுவோம் - மாணிக்கவாசகர் திருவடியைப் போற்றுவோம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


N.045 - திருநாவுக்கரசர் துதி - கடலிடை ஆழ்த்த

2017-06-03

N.045 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2017

----------------

(ஷட்பதி அமைப்பு -

விளம் மா விளம் மா

விளம் மா விளம் மா

விளம் மா விளம் மா விளம் மாங்காய்)


கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும்

படகென ஆகப் பரிவொடு பதிகத்

தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவுள்ளார்

உடலது தேய்ந்தும் உடையவன் வெற்பை

அடையமு யன்ற திடமனத் தொண்டர்

மடலவிழ் மலரின் மணமிகு வாக்கின் மன்னவர் கழல்போற்றி.


கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும் படகு என ஆகப் - கடலில் ஆழ்த்துவதற்காகப் பிணித்த அந்தக் கல்லே படகு போல ஆகும்படி;

பரிவொடு பதிகத்தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவு உள்ளார் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானது திருநாமத்தைப் பக்தியோடு பதிகப் பாமாலையில் சொன்ன துணிவு உடையவர்; (பரிவு - அன்பு; பக்தி); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே");

உடல்அது தேய்ந்தும் உடையவன் வெற்பை அடைய முயன்ற திட-மனத் தொண்டர் - தமது உடல் தேய்ந்தாலும் ஈசன் உறையும் கயிலைமலையைச் சென்றடைய முயன்ற மன-உறுதி மிக்க தொண்டர் அவர்; (பெரியபுராணம் - "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்");

மடல் அவிழ் மலரின் மணம் மிகு வாக்கின்-மன்னவர் கழல் போற்றி - இதழ்கள் விரியும் பூவினும் மணம் மிக்கவான, திருநாவுக்கரசரது திருவடிகளுக்கு வணக்கம். (மடல் - பூவின் இதழ்); (வாக்கின் மன்னவர் - திருநாவுக்கரசர்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


N.044 - திருஞான சம்பந்தர் துதி - கைதவர் வாதினில்

2017-06-03

N.044 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2017

----------------

(ஷட்பதி அமைப்பு -

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம் விளம் விளங்காய்)


கைதவர் வாதினிற் கழுவினில் ஏறிட

வைதிக நெறியது மண்மிசை மன்னிடச்

செய்திகழ் புகலியில் திருக்குளக் கரைதனில் திருமுலைப் பாலையுண்டார்

மைதிகழ் கண்டனை மலைமகள் பங்கனை

நெய்திகழ் சூலனை நீற்றனைச் சொன்மலர்

பெய்தமிழ் பாடிய பெருமக னார்கழல் பேணிவ ணங்கிடுவோம்.


கைதவர் வாதினில் கழுவினில் ஏறிட - வஞ்சனை செய்த சமணர்கள் வாதில் தோற்றுக் கழுவில் ஏறவும்;

வைதிக-நெறியது மண்மிசை மன்னிடச் - வேதநெறி உலகில் நிலைபெறவும்;

செய் திகழ் புகலியில் திருக்குளக்கரைதனில் திருமுலைப்பாலை உண்டார் - வயல் திகழும் சீகாழியில் கோயில்-குளக்கரையில் உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டவர்; (செய் - வயல்); (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);

மை திகழ் கண்டனை - நீலகண்டனை;

மலைமகள் பங்கனை - உமைபங்கனை;

நெய் திகழ் சூலனை - நெய் அணிந்த சூலப்படையை உடையவனை;

நீற்றனைச் சொல்மலர் பெய் தமிழ் பாடிய பெருமகனார் கழல் பேணி வணங்கிடுவோம் - திருநீற்றைப் பூசிய சிவபெருமானைத் தமிழ்ச்சொற்கள் என்ற மலர்களைத் தொடுத்த பாமாலைகள் பாடித் துதித்த திருஞான சம்பந்தரது திருவடிகளைப் போற்றி வணங்குவோம்; (பெய்தல் - பொழிதல்; கட்டுதல்; தூவுதல்); (பெருமகனார் - பெரியவர்; தலைவர்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.403 - பறியலூர் - (ஷட்பதி) - கசியும் நெஞ்சொடு

2017-05-30

P.403 - பறியலூர் - (ஷட்பதி)

---------------------------------

(மா விளம் மா விளம்

மா விளம் மா விளம்

மா விளம் மா விளம் மா விளங்காய் - என்ற அமைப்பு)

(ஷட்பதி யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க)

* வாய்பாடு கெடாத இடங்களில், புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;


1)

கசியும் நெஞ்சொடு கழலை வாழ்த்திடப்

பசியும் இன்னலும் பண்டை வினைகளும்

நசியு மாறருள் நல்கு சங்கரர் நாரி பங்கினரே

சசியு லாவிடு சடையர் சுடலையில்

நிசியி லாடுவர் நீறு பூசுவர்

பசிய வயலணி பறிய லூருறை பரசு பாணியரே.


கசியும் நெஞ்சொடு கழலை வாழ்த்திடப் - உள்ளம் உருகித் திருவடியை வழிபடும் பக்தர்களது;

பசியும் இன்னலும் பண்டை வினைகளும் நசியுமாறு அருள் நல்கு சங்கரர் - பசியும், துன்பங்களும், பழைய வினைகளும் அழியும்படி அருள்கின்ற சங்கரர்;

நாரி-பங்கினரே - உமைபங்கர்;

சசி உலாவிடு சடையர் - சடையின்மேல் திங்களை அணிந்தவர்; (சசி - சந்திரன்);

சுடலையில் நிசியில் ஆடுவர் - சுடுகாட்டில் நள்ளிரவில் கூத்தாடுபவர்;

நீறு பூசுவர் - திருநீற்றைப் பூசியவர்;

பசிய வயல் அணி பறியலூர் உறை பரசுபாணியரே - பசுமையான வயல்கள் சூழ்ந்த திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (பசிய - பசுமையான); (பரசு - மழு);


2)

வம்பு நாறிய மலர்கள் இட்டருள்

சம்பு வேஎனும் தன்மை யாளரை

உம்பர் ஏற்றிடும் ஒப்பில் அப்பனார் உமையோர் பங்கினரே

அம்பு தொடுமதன் ஆகம் மாய்த்தவர்

தும்பை வெண்பிறை சூடு சடையினர்

பைம்பொ ழில்திகழ் பறிய லூருறை பரசு பாணியரே.


வம்பு நாறிய மலர்கள் இட்டு "அருள் சம்புவே" எனும் தன்மையாளரை உம்பர் ஏற்றிடும் ஒப்பு இல் அப்பனார் - வாசமலர்களைத் தூவி, "சம்புவே, அருளாய்" என்று வணங்கும் பக்தர்களைச் சிவலோகத்திற்கு உயர்த்தும் ஒப்பற்ற தந்தையார்;

ஓர் புடை உமை மகிழ்ந்தவரே - திருமேனியில் ஒரு பக்கம் உமையைப் பாகமாக விரும்பியவர்;

அம்பு தொடு மதன் ஆகம் மாய்த்தவர் - மலர்க்கணை எய்த மன்மதனது உடலை அழித்தவர்; (மதன் - காமன்); (ஆகம் - உடல்);

தும்பை வெண்பிறை சூடு சடையினர் - தும்பைமலரையும் வெண்பிறையையும் சடையில் சூடியவர்; (அப்பர் தேவாரம் - 4.72.8 - "கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றை ஏடமர் சடையர்");

பைம்பொழில் திகழ் பறியலூர் உறை பரசுபாணியரே - பசிய சோலைகள் சூழ்ந்த திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (பைம்பொழில் + திகழ் = வாய்பாடு கருதி இங்கே, "பைம்பொழிற்றிகழ்" என்று றகர ஒற்று மிக்கு வந்தது; "பைம்பொழில் திகழ்" என்று தாளத்திற்கு ஏற்பப் பாடப்படும்);


3)

சாந்த நீற்றினர் தழலை மான்தனை

ஏந்து கையினர் ஏலம் நாறிய

கூந்த லாளொரு கூறு கந்தவர் கூற்று தைத்தவரே.

பாய்ந்த வானதி பாம்பு பால்மதி

சேர்ந்த வேணியர் செய்யர் அரையினிற்

பாந்தள் ஆர்த்தவர் பறிய லூருறை பரசு பாணியரே.


சாந்த-நீற்றினர் - சந்தனம் போலத் திருநீற்றைப் பூசியவர்;

தழலை மான்தனை ஏந்து கையினர் - தீயையும் மானையும் கையில் ஏந்தியவர்;

ஏலம் நாறிய கூந்தலாள் ஒரு கூறு உகந்தவர் - மயிர்ச்சாந்து அணிந்த கூந்தலை உடைய உமையை ஒரு கூறாக மகிழ்ந்தவர்;

கூற்று உதைத்தவரே - காலனை உதைத்தவர்; (- அசை);

பாய்ந்த வானதி பாம்பு பால்மதி சேர்ந்த வேணியர் - வானிலிருந்து பாய்ந்த கங்கையும் பாம்பும் பால் போன்ற வெண்திங்களும் திகழும் சடையை உடையவர்;

செய்யர் - செம்மேனியர்;

அரையினில் பாந்தள் ஆர்த்தவர் - அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டியவர்; (பாந்தள் - பாம்பு);

பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;


4)

கொன்றை கூவிளம் கொக்கின் இறகிவை

துன்று சடையினர் சுடலை நீற்றினர்

என்றும் உள்ளவர் எயில்கள் மூன்றினை எய்த வெஞ்சிலையார்

மன்றில் ஆடுவர் மாமன் வேள்வியை

அன்ற ழித்தவர் அழகர் மார்பினிற்

பன்றிக் கொம்பினர் பறிய லூருறை பரசு பாணியரே.


கொன்றை கூவிளம் கொக்கின்-இறகு இவை துன்று சடையினர் - கொன்றைமலர், வில்வம், கொக்கிறகு இவையெல்லாம் நெருங்கி இருக்கும் சடையை உடையவர்; (கொக்கின் இறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

சுடலை நீற்றினர் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவர்;

என்றும் உள்ளவர் - அழிவற்றவர்;

எயில்கள் மூன்றினை எய்த வெஞ்-சிலையார் - முப்புரங்களை எய்த கொடிய வில்லை ஏந்தியவர்;

மன்றில் ஆடுவர் - அம்பலத்தில் ஆடுபவர்;

மாமன் வேள்வியை அன்று அழித்தவர் - மாமனாகிய தக்கன் செய்த வேள்வியை முன்பு அழித்தவர்; (* திருப்பறியலூர் - அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று; தக்கன் வேள்வியை அழித்த தலம்);

அழகர் - சுந்தரர்;

மார்பினில் பன்றிக்-கொம்பினர் - மார்பில் பன்றிக்கொம்பை அணிந்தவர்;

பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;


5)

மெலியும் மதிதனை வேணி அதன்மிசைப்

பொலிய வைத்தவர் போற்றும் அடியவர்

வலிய வினைகளை மாய்த்து வானிடை வாழ்வு தந்தருள்வார்

ஒலிசெய் கழலினர் ஆணும் அரிவையும்

அலியும் ஆனவர் அட்டு வாரிடு

பலியை ஏற்பவர் பறிய லூருறை பரசு பாணியரே.


மெலியும் மதிதனை வேணி அதன்மிசைப் பொலிய வைத்தவர் - தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரனைச் சடைமேல் ஒளிவீச வைத்தவர்; (வேணி - சடை);

போற்றும் அடியவர் வலிய வினைகளை மாய்த்து வானிடை வாழ்வு தந்தருள்வார் - துதிக்கும் பக்தர்களது வலிய வினைகளை அழித்து, அவர்களுக்குச் சிவலோக வாழ்வை அருள்பவர்;

ஒலிசெய் கழலினர் - ஒலிக்கின்ற கழலைத் திருவடியில் அணிந்தவர்;

ஆணும் அரிவையும் அலியும் ஆனவர் - ஆண், பெண், அலி, என்று எல்லாம் ஆனவர்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.18 - "பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்");

அட்டுவார் இடு பலியை ஏற்பவர் - பிச்சையிடுவோர் இடும் பிச்சையை ஏற்பவர்; (அட்டுதல் - இடுதல்);

பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;


6)

மூவ ரின்முதல் மூர்த்தி ஆயவர்

சேவ மர்ந்தவர் தேனி லாவிய

பூவ ணிந்தவர் பூண நூலது பொலியும் மார்பினரே

ஏவை எய்ம்மதன் எழிலு டம்பது

வேவ நோக்கிய விமலர் வார்குழற்

பாவை பங்கினர் பறிய லூருறை பரசு பாணியரே.


மூவரின் முதல் மூர்த்தி ஆயவர் - மும்மூர்த்திகளின் மேலாய முதல்வர்; (அப்பர் தேவாரம் - 6.65.9 - "முந்தைகாண் மூவரினும் முதல் ஆனான் காண்"); (சுந்தரர் தேவாரம் - 7.57.7 - "முந்தை யாகிய மூவரின் மிக்க மூர்த்தியை");

சே அமர்ந்தவர் - இடபவாகனர்; (சே - எருது);

தேன் நிலாவிய பூ அணிந்தவர் - தேன் நிறைந்த பூக்களைச் சூடியவர்;

பூண-நூல் அது பொலியும் மார்பினரே - மார்பில் பூணூல் அணிந்தவர்; (பூணநூல் - பூணூல்); (அப்பர் தேவாரம் - 4.64.1 - "பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்");

ஏவை எய்ம் மதன் எழில் உடம்பு அது வேவ நோக்கிய விமலர் - அம்பை எய்த மன்மதனது அழகிய உடம்பு வெந்து அழியும்படி நெற்றிக்கண்ணால் பார்த்த தூயவர்; (- அம்பு); (மதன் - காமன்);

வார்-குழல் பாவை பங்கினர் - நீண்ட கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;


7)

வரவு போக்கிலர் மறப்பி லாதடி

பரவு வாரவர் பாவம் மாய்ப்பவர்

குரவு வானதி கூவி ளம்புனை குஞ்சி மேற்பிறையார்

இரவில் நடமிடும் இறைவர் அரைமிசை

அரவை ஆர்த்தவர் அணிமி டற்றினிற்

பரவை நஞ்சினர் பறிய லூருறை பரசு பாணியரே.


வரவு போக்கு இலர் - பிறப்பும் இறப்பும் இல்லாதவர்; (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - "போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே");

மறப்பு இலாது அடி பரவுவார்அவர் பாவம் மாய்ப்பவர் - மறவாமல் திருவடியை என்றும் வழிபடும் அடியவர்களது பாவங்களை அழிப்பவர்;

குரவு வானதி கூவிளம் புனை குஞ்சிமேல் பிறையார் - குராமலர், கங்கை, வில்வம் இவற்றைப் புனைந்த திருமுடிமேல் பிறையையும் அணிந்தவர்; (வானதி - கங்கை); (கூவிளம் - வில்வம்);

இரவில் நடமிடும் இறைவர் - நள்ளிருளில் திருநடம் செய்பவர்;

அரைமிசை அரவை ஆர்த்தவர் - அரையில் பாம்பைக் கட்டியவர்;

அணி-மிடற்றினில் பரவை நஞ்சினர் - கடலில் தோன்றிய விஷத்தை அழகிய கண்டத்தில் வைத்தவர்; (பரவை - கடல்);

பறியலூர் உறை பரசுபாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;


8)

மயலி னாற்பெரு வலியி னாலொரு

கயிலை வெற்பெடு கரிய அரக்கனின்

புயமைந் நான்கிற விரலை ஊன்றிய போதி னார்கழலார்

எயில்கள் மூன்றினை எய்த வில்லினர்

தயிர்நெய் ஆடிய தலைவர் பைங்கிளி

பயிலும் அம்பொழிற் பறிய லூருறை பரசு பாணியரே.


மயலினால், பெரு-வலியினால் ஒரு கயிலை வெற்பு எடு - ஆணவத்தாலும் தனக்கிருந்த பெரிய வலிமையினாலும் ஒப்பற்ற கயிலாய மலையைப் பெயர்த்துத் தூக்கிய;

கரிய அரக்கனின் புயம் ஐந்நான்கு இற விரலை ஊன்றிய போதின் ஆர் கழலார் - கரிய அரக்கனான இராவணனின் இருபது புஜங்களும் நசுங்கும்படி ஒரு விரலை ஊன்றிய பூப்போன்ற திருப்பாதம் உடையவர்; (போது - பூ); (ஆர்தல் - ஒத்தல்); (கழல் - கழல் அணிந்த திருவடி);

எயில்கள் மூன்றினை எய்த வில்லினர் - வில் ஏந்தி முப்புரங்களை எய்தவர்;

தயிர் நெய் ஆடிய தலைவர் - தயிர், நெய் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவர்;

பைங்கிளி பயிலும் அம்-பொழில் பறியலூர் உறை பரசுபாணியரே - பச்சைக்கிளிகள் தங்குகின்ற/ஒலிக்கின்ற அழகிய சோலை சூழ்ந்த திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (பயில்தல் - தங்குதல்; ஒலித்தல்);


9)

கறவை மேய்த்தவன் கழலை நண்ணிலன்

நறவ மலரினன் உச்சி நண்ணிலன்

அறவ னேஅருள் ஐய என்றிட அழல தானவரே

மறவி லாதடி வாழ்த்தும் அடியவர்

பிறவி நோய்க்கொரு பெரும ருந்தவர்

பறவை ஆர்பொழிற் பறிய லூருறை பரசு பாணியரே.


கறவை மேய்த்தவன் கழலை நண்ணிலன் - பசுக்களை மேய்த்த திருமாலால் திருவடியை அடைய ஒண்ணாதவர்; (கறவை - பாற் பசு); (நண்ணுதல் - நெருங்குதல்; கிட்டுதல்);

நறவ-மலரினன் உச்சி நண்ணிலன் - வாசத்-தாமரைமேல் உறையும் பிரமனால் உச்சியை அடைய ஒண்ணாதவர்; (நறவம் - தேன்; வாசனை)

"அறவனே அருள் ஐய" என்றிட அழல் அது ஆனவரே - அப்படி அவர் இருவரும் அடிமுடி தேடிக் காணாராய், "அறத்தின் வடிவே; தலைவனே; அருளாய்" என்று இறைஞ்சும்படி எல்லையற்ற ஜோதி ஆனவர்;

மறவு இலாது அடி வாழ்த்தும் அடியவர் பிறவி நோய்க்கு ஒரு பெரு-மருந்து அவர் - மறத்தல் இன்றித் திருவடியைத் தினமும் போற்றுகின்ற பக்தர்களது பிறவிப்பிணிக்கு ஒரு பெரிய மருந்து ஆனவர்; (மறவு - மறத்தல்); (அப்பர் தேவாரம் - 4.39.6 - "திருவையாறு அமர்ந்த தேனை மறவிலா நெஞ்சமே நன்மதி உனக்கு அடைந்தவாறே");

பறவை ஆர் பொழில் பறியலூர் உறை பரசுபாணியரே - பறவைகள் ஒலிக்கின்ற அழகிய சோலை சூழ்ந்த திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (ஆர்த்தல் - ஒலித்தல்);


10)

ஆயும் முறையறி யாத நெறியினர்

மாய மொழியுரை வாயர் சொலைவிடும்

தூய மலர்கொடு தொழுத வர்க்குயர் சுகம ளிப்பவரே

தேயும் மதிதனைத் திகழ வைத்தவர்

மாயும் நிலையிலர் வயலில் வாளைகள்

பாயும் அழகிய பறிய லூருறை பரசு பாணியரே.


ஆயும் முறை அறியாத நெறியினர் - ஆராய்வதற்கு அறியாத மார்க்கத்தினர்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின் தாயானவன்");

மாய-மொழி உரை வாயர் சொலை விடும் - வஞ்சமொழி பேசுகின்றவர்கள் பேச்சை மதிக்கவேண்டா; அவற்றை நீங்குங்கள்; (மாயம் - வஞ்சனை; பொய்); (சொலை - சொல்லை - இடைக்குறையாக வந்தது); (விடும் - விடுங்கள்);

தூய மலர்கொடு தொழுதவர்க்கு உயர் சுகம் அளிப்பவரே - தூய பூக்களால் வழிபடும் அன்பர்களுக்கு உயர்ந்த இன்பத்தைக் கொடுப்பவர்;

தேயும் மதிதனைத் திகழ வைத்தவர் - சாபத்தால் தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரனைத் திருமுடிமேல் விளங்கச் சூடியவர்;

மாயும் நிலை இலர் - என்றும் இறப்பு இல்லாதவர்;

வயலில் வாளைகள் பாயும் அழகிய பறியலூர் உறை பரசு பாணியரே - வயலில் வாளைமீன்கள் பாய்கின்ற நீர்வளம் மிக்க அழகிய திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்; (சுந்தரர் தேவாரம் - 7.57.9 - "வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்");


11)

சிவனெ னும்பெயர் சிந்தை செய்திடும்

குவல யத்தினர் கொடிய வல்வினை

அவலம் மாய்ப்பவர் அரவை நாணென அரையில் ஆர்த்தவரே

குவளைக் கண்ணியொர் கூறு கந்தவர்

தவள நீற்றினர் தழல்நி கர்த்தொளிர்

பவள மேனியர் பறிய லூருறை பரசு பாணியரே.


சிவன் எனும் பெயர் சிந்தை செய்திடும் குவலயத்தினர் கொடிய வல்வினை அவலம் மாய்ப்பவர் - சிவன் என்ற திருநாமத்தை ஜபம் செய்யும் மண்ணுலகத்தினரது கொடிய வலிய வினைகளையும் துன்பத்தையும் அழிப்பவர்; (குவலயம் - பூமி); (அவலம் - துன்பம்; வறுமை; கவலை);

அரவை நாண் என அரையில் ஆர்த்தவரே - பாம்பை அரைநாணாக அரையில் கட்டியவர்;

குவளைக்கண்ணி ஒர் கூறு உகந்தவர் - குவளைமலர் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பாகமாக விரும்பியவர்; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);

தவள-நீற்றினர் - வெள்ளைத் திருநீற்றைப் பூசியவர்; (தவளம் - வெண்மை);

தழல் நிகர்த்து ஒளிர் பவள-மேனியர் - தீப் போல ஒளிர்கின்றதும் பவளம் போன்ற செந்நிறம் உடையதுமான திருமேனியை உடையவர்;

பறியலூர் உறை பரசு பாணியரே - திருப்பறியலூரில் உறைகின்ற, மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானார்;


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :

கன்னடத்தில் "ஷட்பதி" என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்புப் போல அமைந்தது;

  • ஆறு அடிகள்

  • எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.

  • 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. இவ்வடிகளில் சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிகள்தோறும் 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முற்பாதியில் உள்ள சீர்-அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
    (சீர்கள் அளவொத்து இருந்தால் போதும். உதாரணமாக: மாச்சீர் வரும் இடத்தில் எவ்வகை மாச்சீரும் வரலாம்; விளச்சீர் வரும் இடத்தில் எவ்வகை விளச்சீரும் வரலாம்)

  • 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முற்பாதியின் சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் எழுத்து. (நெடில், நெடில்+ஒற்று, குறில்+ஒற்று, குறில்).


வி. சுப்பிரமணியன்

----------- --------------