2017-06-17
P.404 - கடவூர்
---------------------------------
(சந்தக் கலித்துறை - தானதான தனதானன தானன தானா தனதானா;
அறுசீர்ச் சந்தவிருத்தம் என்றும் நோக்கலாம்;
சில பாடல்களில் முதற்சீர் "தனனதான" என்றும் வரலாம்);
(சம்பந்தர் தேவாரம் - 1.2.1 - "குறிகலந்தவிசை பாடலினான்நசை")
(சம்பந்தர் தேவாரம் - 1.2.3 - "பண்ணிலாவும் மறைபாடலினான்")
1)
காதஓடி வருவன்னமன் மாள்வுற அன்று கழலார்க்கப்
பாதம்வீசி அடியாருயிர் காத்தவர் பாம்பைப் புனைமார்பர்
மாதராளை ஒருபாலுடை மேனியர் மன்னும் இடமென்பர்
காதலாளர் கருதித்தொழு தேத்திட ஆரும் கடவூரே.
காத ஓடி வரு வன்-நமன் மாள்வுற அன்று கழல் ஆர்க்கப் பாதம் வீசி அடியார் உயிர் காத்தவர் - கொல்ல ஓடி வந்த கொடிய வலிய கூற்றுவனே மாளுமாறு அச்சமயத்தில் திருப்பாதத்தை வீசி மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவர்; (காதுதல் - கொல்தல்);
பாம்பைப் புனை மார்பர் - பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவர்;
மாதராளை ஒருபாலுடை மேனியர் மன்னும் இடம் என்பர் - உமையை ஒரு பக்கத்தில் உடைய திருமேனியர் உறையும் தலம் ஆவது;
காதலாளர் கருதித் தொழுது ஏத்திட ஆரும் கடவூரே - அன்பர்கள் விரும்பித் தொழுது போற்றிட நிறையும் திருக்கடவூர்;
2)
நடலையின்றி அடிவாழ்த்திய மாணியை நண்ணும் நமனாரே
படவுதைத்த அடிகள்பலி தேர்ந்துழல் பண்பர் பரமேட்டி
சுடலைநீறு துதைமார்பினில் நூலணி தூயர் இடமென்பர்
கடலெழுந்த முகிலேதொடு கோபுரம் ஆரும் கடவூரே.
நடலை இன்றி அடி வாழ்த்திய மாணியை நண்ணும் நமனாரே பட உதைத்த அடிகள் - வஞ்சம் இன்றித் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய காலனே அழியும்படி உதைத்த கடவுள்;
பலி தேர்ந்து உழல் பண்பர் பரமேட்டி - பிச்சையேற்று உழலும் பண்பினர், பரமர்;
சுடலை நீறு துதை மார்பினில் நூல் அணி தூயர் இடம் என்பர் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய மார்பில் பூணூல் அணிந்த தூயவர் உறையும் தலம் ஆவது;
கடல் எழுந்த முகிலே தொடு கோபுரம் ஆரும் கடவூரே - கடலில் தோன்றிய மேகமே தொடுமாறு உயர்ந்த கோபுரம் பொருந்திய திருக்கடவூர்.
3)
அரியஅன்பர் உயிருக்கரண் ஆனவர் ஆடல் புரிநாதர்
பெரியதேவர் கழலைப்பல வானவர் பேணப் புரமூன்றும்
எரியுமாறு மலையைச்சிலை ஆக்கிய ஈசர் இடமென்பர்
கரியமேகம் அணவும்படி நீள்பொழில் ஆரும் கடவூரே.
அரிய அன்பர் உயிருக்கு அரண் ஆனவர் - மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவர்; (பக்தர்களைக் காப்பவர்);
ஆடல் புரி நாதர் - கூத்தர்;
பெரிய-தேவர் கழலைப் பல வானவர் பேணப் - மகாதேவர் திருவடியைப் பல தேவர்களும் போற்ற அவர்களுக்கு இரங்கி;
புரம் மூன்றும் எரியுமாறு மலையைச் சிலை ஆக்கிய ஈசர் இடம் என்பர் - முப்புரங்களும் எரியும்படி மேருமலையை வில்லாக வளைத்த ஈசனார் உறையும் தலம் ஆவது;
கரிய மேகம் அணவும்படி நீள்-பொழில் ஆரும் கடவூரே - கரிய மேகம் தொட உயரும் சோலை திகழும் திருக்கடவூர். (அணவுதல் - அணுகுதல்);
4)
நலமிலங்கு மலராலடி வாழ்த்திய நம்பி உயிர்காத்தார்
சலமிலங்கு மதிசூடிய தாழ்சடை அண்ணல் தனியேற்றர்
வலமிலங்கு மழுவாளினர் மாதொரு பங்கர் மகிழூராம்
கலயர்முன்பு புகையால்தொழு தேத்திய சீரார் கடவூரே.
நலம் இலங்கு மலரால் அடி வாழ்த்திய நம்பி உயிர் காத்தார் - மார்க்கண்டேயரைக் காத்த வரலாறு;
சலம் இலங்கு மதி சூடிய தாழ்சடை அண்ணல் - கங்காதரர், சந்திரசேகரர், ஜடாதாரி;
தனி ஏற்றர் - ஒப்பற்ற இடப வாகனம் உடையவர்;
வலம் இலங்கு மழுவாளினர் - வலக்கையில் வெற்றியுடைய மழுவாயுதத்தை ஏந்தியவர்; (வலம் - வலப்பக்கம்; வெற்றி; வலிமை);
மாது ஒரு பங்கர் மகிழ் ஊர் ஆம் - உமைபங்கர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;
கலயர் முன்பு புகையால் தொழுது ஏத்திய சீர் ஆர் கடவூரே - குங்கிலியக்-கலய நாயனார் முன்பு தூபத்தால் வழிபாடு செய்த வளமும் புகழும் மிகுந்த திருக்கடவூர்;
5)
நறையிலங்கு மலர்போற்கழ லால்நமன் மாள உதைசெய்தார்
இறையிலங்கு வளையாளையி டத்தினில் ஏற்ற பெருமானார்
மறையிலங்கு திருநாவினர் மாமணி கண்டர் மகிழூராம்
கறையிலங்கு கடியார்பொழில் சூழ்கவின் ஆரும் கடவூரே.
நறை இலங்கு மலர்போல் கழலால் நமன் மாள உதைசெய்தார் - வாசமலர் போன்ற திருவடியால் கூற்றுவன் அழியுமாறு உதைத்தவர்; (நறை - தேன்; வாசனை);
இறை இலங்கு வளையாளை இடத்தினில் ஏற்ற பெருமானார் - முன்கையில் வளை அணிந்த உமையை இடப்பக்கத்தில் ஏற்ற பெருமான்; ( இறை - முன்-கை);
மறை இலங்கு திருநாவினர் - வேதம் ஓதியவர்;
மா-மணி-கண்டர் மகிழ் ஊர் ஆம் - அழகிய நீலகண்டர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;
கறை இலங்கு கடி ஆர் பொழில் சூழ் கவின் ஆரும் கடவூரே - அடர்ந்த, மணம் கமழும், சோலை சூழ்ந்த அழகிய திருக்கடவூர்; (கறை - இருள்); (கடி - வாசனை);
6)
தேனிலங்கு மலரால்தொழு தாருயிர் காத்த திருவாளர்
ஊனிலங்கு தலையிற்பலி ஏற்பவர் உம்பர்க் கொருநாதர்
வானிலங்கு மதியம்புனை செஞ்சடை மைந்தர் மகிழூராம்
கானிலங்கு பொழிலிற்கரு வண்டிசை பாடும் கடவூரே
தேன் இலங்கு மலரால் தொழுதார் உயிர் காத்த திருவாளர் - தேன் நிறைந்த பூக்களைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவர், திருவுடையவர்;
ஊன் இலங்கு தலையில் பலி ஏற்பவர் - புலால் நாறும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவர்;
உம்பர்க்கு ஒரு நாதர் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர்;
வான் இலங்கு மதியம் புனை செஞ்சடை மைந்தர் மகிழ் ஊர் ஆம் - வானத்தில் விளங்கும் சந்திரனைச் செஞ்சடையில் அணிந்த அழகர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;
கான் இலங்கு பொழிலில் கருவண்டு இசை பாடும் கடவூரே - மணம் கமழும் சோலையில் கரிய வண்டுகள் இசைபாடுகின்ற திருக்கடவூர். (கான் - வாசனை);
7)
காமனைக்கண் அழலால்சுட வல்லவர் காலிற் கழலார்த்தார்
நாம(ம்)நித்தம் நவில்மாணியை நண்ணிய கூற்றை உதைநம்பர்
மாமரத்தை இருகூறிடு வேலவன் அத்தர் மகிழூராம்
காமரத்தை வரிவண்டுகள் ஆர்த்தடை சோலைக் கடவூரே.
காமனைக் கண் அழலால் சுட வல்லவர் - மன்மதனை நெற்றிக்கண் நெருப்பால் சுட்டவர்;
காலில் கழல் ஆர்த்தார் - காலில் கழலை அணிந்தவர்;
நாமம் நித்தம் நவில் மாணியை நண்ணிய கூற்றை உதை நம்பர் - அப்பெருமானார் திருநாமத்தை எப்பொழுதும் சொல்லி வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய நமனை உதைத்தவர், நம்பன் என்ற திருநாமம் உடையவர்;
மாமரத்தை இரு-கூறிடு வேலவன் அத்தர் மகிழ் ஊர் ஆம் - சூரசம்ஹாரத்தின்போது, சூரபதுமன் மாமரத்தின் உருவில் நின்றபோது, அதனை வேல்விட்டு இரண்டாகப் பிளந்த முருகனுக்குத் தந்தையாரான ஈசர் விரும்பி உறையும் ஊர் ஆகும்; (சம்பந்தர் தேவாரம் - 1.96.4 - "அத்தர் அன்னியூர்ச் சித்தர்");
காமரத்தை வரிவண்டுகள் ஆர்த்து அடை சோலைக் கடவூரே - காமரம் (சீகாமரம்) என்ற பண்ணை வரியுடைய வண்டுகள் ஒலித்து அடைகின்ற சோலை சூழ்ந்த திருக்கடவூர்.
8)
புத்தியின்றி அருவெற்பெறி கோன்வலி பொன்றக் கழலூன்றிப்
பத்துவாய்கள் பலநாளிசை பாடுதல் கேட்டுப் படையீந்தார்
மத்தயானை அதனீருரி மூடிய மார்பர் மகிழூராம்
கைத்தலத்தில் அயிலேந்திய காலனை வீட்டும் கடவூரே.
புத்தியின்றி அருவெற்பு எறி கோன்-வலி பொன்றக் கழல் ஊன்றிப் - அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த இலங்கை மன்னனான இராவணனது வலிமை அழியும்படி திருவடியை ஊன்றி அவனை நசுக்கி;
பத்து வாய்கள் பலநாள் இசை பாடுதல் கேட்டுப் படை ஈந்தார் - பின் அவனது பத்துவாய்களும் பலகாலம் இசைபாடித் துதிக்கக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளைக் கொடுத்தவர்;
மத்தயானை அதன் ஈருரி மூடிய மார்பர் மகிழ் ஊர் ஆம் - மதயானையின் உரித்த தோலைப் போர்வையாகப் போர்த்தவர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;
கைத்தலத்தில் அயிலேந்திய காலனை வீட்டும் கடவூரே - கையில் சூலத்தை ஏந்திய காலனை அழித்த திருக்கடவூர்; (கைத்தலம் - கை); (அயில் - இங்கே, சூலம்); (வீட்டுதல் - அழித்தல்);
9)
நீலவண்ணன் நறுமாமலர் மேலினன் நேடித் தொழநின்றார்
ஏல(ம்)நாறு குழலாளையி டத்தினில் ஏற்ற இருள்கண்டர்
மேலர்மேலர் மலரம்பெறி வேளுடல் வேவ விழிசெய்தார்
காலகாலர் கருதும்பதி காமரு சோலைக் கடவூரே.
நீலவண்ணன் நறுமாமலர் மேலினன் நேடித் தொழ நின்றார் - கரிய மாலும் வாசத்-தாமரைமேல் உறையும் பிரமனும் தேடித் தொழும்படி ஜோதிவடிவில் நின்றவர்;
ஏலம் நாறு குழலாளை இடத்தினில் ஏற்ற இருள்கண்டர் - வாசக்குழலியான உமையை இடப்பாகம் ஏற்ற நீலகண்டர்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (நாறுதல் - மணம் கமழ்தல்);
மேலர் மேலர் - மேலானவர்க்கும் மேலானவர்; தேவதேவர்; (அப்பர் தேவாரம் - 6.55.7 - "மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி");
மலர்-அம்பு எறி வேள் உடல் வேவ விழிசெய்தார் - மலர்க்கணையை எய்த மன்மதனது உடம்பு சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவர்;
காலகாலர் கருதும் பதி காமரு சோலைக் கடவூரே - காலகாலரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.
10)
வீதிநின்று பலபொய்யுரை பேசிடு வீணர் தமைநீங்கும்
பூதிபூசி அடியைப்புகழ் வார்துயர் போக்கும் பெருமானார்
மேதிஏறு நமனைக்குமை செய்தவர் வேலை விடமுண்டார்
காதிலங்கு குழையார்பதி காமரு சோலைக் கடவூரே.
வீதி நின்று பல பொய்யுரை பேசிடு வீணர்தமை நீங்கும் - தெருவில் நின்று பல பொய்களைப் பேசுகின்ற வீணர்களை விட்டு நீங்குங்கள்;
பூதி பூசி அடியைப் புகழ்வார் துயர் போக்கும் பெருமானார் - திருநீற்றைப் பூசித் திருவடியைத் துதிக்கும் பக்தர்களது துயரத்தைத் தீர்க்கும் பெருமானார்; (பூதி - திருநீறு);
மேதி ஏறு நமனைக் குமை செய்தவர் - எருமையை வாகனமாக உடைய கூற்றுவனை அழித்தவர்; (மேடி - எருமை); (குமை - அழிவு);
வேலை-விடம் உண்டார் - கடல்நஞ்சை உண்டவர்; (வேலை - கடல்);
காது இலங்கு குழையார் பதி காமரு சோலைக் கடவூரே - காதில் விளங்கும் குழையை அணிந்த சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.
11)
பண்ணிலங்கு தமிழாற்பதம் ஏத்திடு பத்தர் பவ(ம்)மாய்ப்பார்
எண்ணிலெங்கும் வருவார்வட வாலமர் ஈசர் உமைநேசர்
தண்ணிலங்கு மதியார்சடை மேல்இள நாகம் தனைவைத்தார்
கண்ணிலங்கு நுதலார்பதி காமரு சோலைக் கடவூரே.
பண் இலங்கு தமிழால் பதம் ஏத்திடு பத்தர் பவம் மாய்ப்பார் - பண் பொருந்திய இசைத்தமிழான தேவாரத்தைப் பாடி வழிபடும் பக்தர்களது பிறவிப்பிணியைத் தீர்ப்பவர்;
எண்ணில் எங்கும் வருவார் - எங்கிருந்து பக்தர்கள் தியானித்தாலும் அங்கே வந்து அருள்பவர்; (சம்பந்தர் தேவாரம் - 2.40.6 - "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கேயென்று அருள்புரியும் எம்பெருமான்");
வடவால் அமர் ஈசர் - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி; (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");
உமைநேசர் - உமைக்குக் கணவர்;
தண் இலங்கு மதி ஆர் சடைமேல் இள-நாகம்தனை வைத்தார் - குளிர்ச்சி பொருந்திய சந்திரன் இருக்கும் சடையின்மேல் இளம்பாம்பையும் அணிந்தவர்;
கண் இலங்கு நுதலார் பதி காமரு சோலைக் கடவூரே - நெற்றிக்கண்ணரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------