Wednesday, November 22, 2017

03.05.017 – பொது - துயர்தரு பழவினை அதனாலே - (வண்ணம்)

03.05.017 – பொது - துயர்தரு பழவினை அதனாலே - (வண்ணம்)

2007-04-14

3.5.17) துயர்தரு பழவினை (பொது)

--------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன .. தனதான)

(நிறைமதி முகமெனு மொளியாலே - திருப்புகழ் - சுவாமிமலை)


துயர்தரு பழவினை .. அதனாலே

.. தொடரிடர் தனிலுழல் .. அடியேனும்

மயலறு விதமுன .. தடிபேணி

.. வழிபட இனிதருள் .. புரியாயே

கயிலையில் உறைகிற .. பிறைசூடீ

.. கனவிடை மிசைவரும் .. உமைகோனே

எயில்களை ஒருசிறு .. நகையாலே

.. எரிசெய வலசிவ .. பெருமானே.


துயர் தரு பழவினை அதனாலே தொடர் இடர்தனில் உழல் அடியேனும் - துயரைத் தரும் பழைய வினைகளால் இடைவிடாது தொடரும் துன்பத்தில் உழல்கின்ற நானும்;

மயல் அறு விதம் உனது அடி பேணி வழிபட இனிது அருள்புரியாயே - என் அறியாமை நீங்கும்படி உன் திருவடியைப் போற்றி வணங்குவதற்கு இன்னருள் செய்வாயாக; (மயல் - மயக்கம்; அறியாமை);

கயிலையில் உறைகிற பிறைசூடீ - கயிலைமலைமேல் உறைகின்ற சந்திரசேகரனே;

கன விடைமிசை வரும் உமைகோனே - பெரிய இடபத்தை வாகனமாக உடையவனே, உமாபதியே;

எயில்களை ஒரு சிறு நகையாலே எரிசெயவல சிவபெருமானே - முப்புரங்களைச் சிரித்து எரிக்கவல்ல சிவபெருமானே; (எயில் - கோட்டை); (எரிசெயவல - எரிசெய்ய வல்ல);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment