Saturday, November 11, 2017

03.04.064 - சிவன் - சாம்பல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-11-26

3.4.64 - சிவன் - சாம்பல் - சிலேடை

-------------------------------------------------------------

நெருப்புக்கண் உள்ளது நெற்றியிற் காண்போம் **

கருப்பை வெளிப்படுத்தும் கட்டை உருமாற

ஓம்புவார் சோதி ஒருபொருளாய் எஞ்சிடுமே

சாம்பல் மதிபுனை சம்பு .


சொற்பொருள்:

கண் - 1. ஏழாம் வேற்றுமை உருபு - இடம்; / 2. விழி;

கருப்பை - 1. கரிய நிறத்தை (இலக்கணக்குறிப்பு : எதுகைக்காகவும் சிலேடைக்காகவும் "கறுப்பு" என்ற சொல் "கருப்பு " என்று திரிந்தது); / 2. கருப்பப் பை (யோனி);

வெளிப்படுத்துதல் - 1. காட்டுதல்; / 1. வெளியே வரச்செய்தல்;

கட்டை - 1) மரக்கட்டை; / 2.. உடல்;

கட்டு - பந்தம்.

உருமாற - 1. உரு மாற; / 2. உரும் ஆற;

உரு - வடிவம்; / அச்சம்;

மாறுதல் - வேறுபடுதல்; இல்லாது போதல்;

உரும் - அச்சம்;

ஆறுதல் - தணிதல்; அடங்குதல்;

ஓம்புதல் - பேணுதல்;

சோதி - 1. நெருப்பு; / 2. ஒளி; சிவன்;

ஒருபொருள் - 1. ஒரு வஸ்து; / 2. ஒப்பற்ற பொருள்; கடவுள்;

எஞ்சுதல் - இறுதியில் மிஞ்சுவது;

சம்பு - சிவன் திருநாமங்களில் ஒன்று; சுகத்தைத் தருபவன் என்ற பொருள்;


சாம்பல்:

நெருப்புக்கண் உள்ளது - நெருப்பிடம் உள்ளது.

நெற்றியிற் காண்போம் - (மக்களது) நெற்றியிலும் காணலாம்.

கருப்பை வெளிப்படுத்தும் கட்டை உரு மாற ஓம்புவார் சோதி - கரிய கட்டையின் வடிவம் மாறிச் சாம்பல் ஆகிட நெருப்பைப் பேணுவார்கள். (-அல்லது- கரிய கட்டையானது வடிவம் இல்லாமல் போகும்படி நெருப்பைப் பேணுவார்கள்).

ஒரு பொருளாய் எஞ்சிடுமே - (அவ்வாறு எந்தக் கட்டையும் எரிந்த பின்) மிஞ்சுவது சாம்பல் என்ற ஒரு பொருளே.

சாம்பல் - சாம்பல்;


சிவன்:

நெருப்புக்கண் உள்ளது நெற்றியிற் காண்போம் - அவனது நெற்றியில் தீயை உமிழும் கண்ணைக் காணலாம். (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.36.4 - “நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே”);

கருப்பை வெளிப்படுத்தும் கட்டை உரும் மாற ஓம்புவார் - (தாயின்) கருப்பப் பையிலிருந்து வெளியே வருகிற இந்த உடல் அச்சம் (- தொடர்ந்து பிறவிகள் வரும் பயம்) - ஒழியப் (பக்தர்கள்) பேணுவார்கள்; (-- அல்லது -- "கருப்பை வெளிப்படுத்தும் கட்டை உருமாற" - இதனைக், "கருப்பப் பையிலிருந்து பிறக்க வைக்கும் வினைக்கட்டை இல்லாமல் செய்ய" என்றும் பொருள்கொள்ளல் ஆம்).

சோதி - ஒளிவடிவானவன்.

ஒரு பொருளாய் எஞ்சிடுமே - (எல்லாம் ஒடுங்கிய பின்னும்) எஞ்சுகிற ஒரு பொருள் அவன்.

சாம்பல் மதி புனை சம்பு - சாம்பலையும் (திருநீற்றையும்) சந்திரனையும் அணிபவனும் சம்பு என்ற திருநாமம் உடையவனுமான சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment