Wednesday, August 7, 2019

03.05.036 – பொது - நிதியை யேபெ ருக்க - (வண்ணம்)

03.05.036 – பொது - நிதியை யேபெ ருக்க - (வண்ணம்)

2007-04-24

3.5.36 - நிதியையே பெருக்க - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தான தத்த தனன தான தத்த

தனன தான தத்த .. தனதான)

(மகர கேத னத்தன் - திருப்புகழ் - சுவாமிமலை)


நிதியை யேபெ ருக்க .. மிகவும் ஆசை யுற்று

.. .. நிறைய நாள வத்தில் .. உழல்வேனை

.. நிமல நேய(ம்) மிக்க .. அடிய ரோடி ணைத்து

.. .. நினது தாள்து திக்க .. அருளாயே

மதிய ராவ லைக்கு(ம்) .. நதிகு ராவெ ருக்க

.. .. மலரும் வேணி வைத்த .. அருளாளா

.. வலிய தோர்வி டத்தை .. அமுத மாம டுத்த

.. .. மணிகொள் மாமி டற்றை .. உடையானே

மதியை மால ழிக்க .. மலையின் நேரி ருக்கும்

.. .. வலிய தோள்கள் தட்டி .. மதியாமல்

.. வசைக ளேயு ரைத்து .. வரையை வீச லுற்ற

.. .. மகிபன் நீடு கத்த .. ஒருபாத

நுதியி னால்நெ ரித்து .. நுனது சீர்மி குத்து

.. .. நுவல நாள ளித்த .. கயிலாயா

.. நுதலில் ஓர்க ணத்த .. இகலி யார்பு ரத்தை

.. .. நொடியில் வேவ வைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

நிதியையே பெருக்க .. மிகவும் ஆசை உற்று

.. .. நிறைய நாள் அவத்தில் .. உழல்வேனை,

.. நிமல நேயம் மிக்க .. அடியரோடு இணைத்து

.. .. நினது தாள் துதிக்க .. அருளாயே;

மதி அரா அலைக்கும் .. நதி குரா எருக்க

.. .. மலரும் வேணி வைத்த .. அருளாளா;

.. வலியதோர் விடத்தை .. அமுதமா மடுத்த

.. .. மணிகொள் மா மிடற்றை .. உடையானே;

மதியை மால் அழிக்க .. மலையின் நேர் இருக்கும்

.. .. வலிய தோள்கள் தட்டி, .. மதியாமல்

.. வசைகளே உரைத்து .. வரையை வீசலுற்ற

.. .. மகிபன் நீடு கத்த .. ஒரு பாத

நுதியினால் நெரித்து, .. நுனது சீர் மிகுத்து

.. .. நுவல, நாள் அளித்த .. கயிலாயா;

.. நுதலில் ஓர் கண் அத்த; .. இகலியார் புரத்தை

.. .. நொடியில் வேவ வைத்த .. பெருமானே.



நிதியையே பெருக்க மிகவும் ஆசையுற்று நிறைய நாள் அவத்தில் உழல்வேனை - பொருட்செல்வத்தையே பெருக்க மிகவும் ஆசைகொண்டு நெடுங்காலமாகப் பயனற்றவற்றையே செய்து உழல்கின்ற என்னை;

நிமல நேயம் மிக்க அடியரோடு இணைத்து நினது தாள் துதிக்க அருளாயே - தூய அன்பு மிக்க அடியவர்களோடு சேர்த்து உன்னுடைய திருவடியைத் துதிக்கும்படி அருள்வாயாக; (நிமலம் - தூய்மை); (நிமல - 1. தூய. 2. நிமலனே - தூயனே என்ற விளியாகவும் கொள்ளல் ஆம்);


மதிராலைக்கும் நதி குராருக் மலரும் வேணி வைத்த அருளாளா - திங்கள், பாம்பு, அலைக்கின்ற கங்கை, குரவமலர், எருக்கமலர் இவற்றையெல்லாம் சடையில் அணிந்த அருளாளனே; (வேணி - சடை);

வலியதோர் விடத்தை அமுதமா மடுத்த மணிகொள் மா மிடற்றை உடையானே - கொடிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டு மணி இலங்கும் அழகிய கண்டத்தை உடையவனே; (மடுத்தல் - உண்ணுதல்);


மதியை மால் அழிக்க மலையின் நேர் இருக்கும் வலிய தோள்கள் தட்டி மதியாமல் - தன் அறிவை ஆணவம் மறைக்கவும் மலைபோல் இருக்கும் வலிய புஜங்களைத் தட்டிச் சிறிதும் மதியாமல்;

வசைகளேரைத்து வரையை வீசலுற்ற மகிபன் நீடு கத்த - பலவாறு திட்டிக் கயிலைமலையைப் பேர்த்து எறிய முயன்ற இலங்கை மன்னனான இராவணன் பெரிதும் கத்தும்படி அவனை; (வரை - மலை); (மகிபன் - அரசன்);

ஒரு பாத நுதியினால் நெரித்து நுனது சீர் மிகுத்து நுவல நாள் அளித்த கயிலாயா - ஒரு திருப்பாதத்தின் நுனியால் நசுக்கிப் பின் அவன் உன் புகழை மிகவும் ஓத அவனுக்கு நீண்ட ஆயுளை வரமளித்த கயிலைமலையானே; (நுதி - நுனி); (நுனது - உனது); (நுவல்தல் - சொல்லுதல்);

நுதலில் ஓர் ண் அத்த - நெற்றியில் ஒரு கண்ணை உடைய தந்தையே; (நுதல் - நெற்றி); (அத்தன் - தந்தை);

இகலியார் புரத்தை நொடியில் வேவ வைத்த பெருமானே - பகைவர்களது முப்புரத்தை ஒரு நொடியளவில் சாம்பலாக்கிய பெருமானே; (இகலியார் - பகைவர்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment