2018-10-02
P.454 - நணா (பவானி)
---------------------------------
(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)
(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")
1)
நரைவிடை ஊர்தியை நயந்த நாதனை
இரவினில் நடமிடும் இறையைக் காவிரித்
திரைபொரு கரையினில் திருந ணாவுறை
அரையனைத் தொழுதெழ அல்லல் இல்லையே.
நரைவிடை ஊர்தியை நயந்த நாதனை - வெள்ளை இடபத்தை வாகனமாக விரும்பிய தலைவனை;
இரவினில் நடமிடும் இறையைக் - இருளில் கூத்தாடும் இறைவனை;
காவிரித் திரை பொரு கரையினில் திருநணா உறை - காவிரியின் அலை மோதுகின்ற கரையில் திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
அரையனைத் தொழுதெழ அல்லல் இல்லையே - அரசனான சிவபெருமானை வழிபட்டால் துன்பம் நீங்கும்;
2)
தண்புனற் கங்கையைச் சடையில் தாங்கியை
வெண்பிறை சூடிய வேந்தைக் காவிரித்
தெண்புனல் அடைதரு திருந ணாவுறை
கண்புனை நுதலனைக் கருத நன்மையே.
தண்புனல்-கங்கையைச் சடையில் தாங்கியை - குளிர்ந்த கங்கையாற்றைச் சடையில் தாங்கியவனை;
வெண்பிறை சூடிய வேந்தைக் - வெண்திங்களைச் சூடிய வேந்தனை;
காவிரித் தெண்-புனல் அடைதரு திருநணா உறை - காவிரியின் தெளிந்த நீர் அடைகின்ற திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
கண் புனை நுதலனைக் கருத நன்மையே - நெற்றிக்கண்ணனான சிவபெருமானை விரும்பி வழிபட்டால் நன்மை வந்து அடையும்;
3)
ஏனவெண் கொம்பணி ஏர்கொள் மார்பனைக்
கானகத் தாடிடும் கரிய கண்டனைத்
தேனறை பைம்பொழில் திருந ணாவுறை
வானவர் தலைவனை வாழ்த்த நன்மையே.
ஏன வெண் கொம்பு அணி ஏர்கொள் மார்பனைக் - பன்றிக்கொம்பை அணிந்த அழகிய திருமார்பினனை; (ஏனம் - பன்றி); (ஏர் - அழகு);
கானகத்து ஆடிடும் கரிய கண்டனைத் - சுடுகாட்டில் ஆடும் நீலகண்டனை;
தேன் அறை பைம்பொழில் திருநணா உறை - வண்டுகள் ஒலிக்கும் அழகிய சோலை சூழ்ந்த திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
வானவர் தலைவனை வாழ்த்த நன்மையே - தேவர்கள் தலைவனான சிவபெருமானை வழிபட்டால் நன்மை வந்து அடையும்;
4)
அன்றரு நஞ்சினை ஆர்ந்த கண்டனை
மன்றினில் ஆடியை மங்கை பங்கனைத்
தென்றலில் மணங்கமழ் திருந ணாவுறை
கொன்றையந் தாரனைக் குறுக நன்மையே.
அன்று அரு-நஞ்சினை ஆர்ந்த கண்டனை - முன்னர் அரிய விடத்தை உண்ட கண்டனை;
மன்றினில் ஆடியை - அம்பலத்தில் ஆடுபவனை;
மங்கை பங்கனைத் - உமைபங்கனை;
தென்றலில் மணம் கமழ் திருநணா உறை - தென்றலில் மணம் வீசும் திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
கொன்றையந் தாரனைக் குறுக நன்மையே - கொன்றைமாலை சூடிய சிவபெருமானைச் சரணடைந்தால் நன்மை வந்து அடையும்; (குறுகுதல் - அணுகுதல்);
5)
மறிமழு வேந்தியை வாச வாளிகள்
எறிமதன் தனையுடல் இலனென் றாக்கியைச்
செறிபொழில் சூழ்தரு திருந ணாவுறை
பொறிகிளர் அரவனைப் போற்ற நன்மையே.
மறி மழு ஏந்தியை - மான்கன்றையும், மழுவையும் ஏந்தியவனை;
வாச-வாளிகள் எறி மதன்தனை உடல் இலன் என்று ஆக்கியைச் - மணம் கமழும் அம்புகளை எய்த மன்மதனை அனங்கன் என்று ஆக்கியவனை; (வாளி - அம்பு);
செறி பொழில் சூழ்தரு திருநணா உறை - அடர்ந்த சோலை சூழ்ந்த திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
பொறி கிளர் அரவனைப் போற்ற நன்மையே - புள்ளிகள் திகழும் பாம்பை அணிந்த சிவபெருமானைப் போற்றினால் நன்மை வந்து அடையும்; (பொறி - புள்ளி); (அப்பர் தேவாரம் - 4.74.10 - "சடையிடைப் பொதியும் ஐவாய் அரவனை");
6)
நித்திய மூர்த்தியை நெற்றிக் கண்ணனை
முத்தலைச் சூலனை மொய்க்கும் வண்டினம்
தெத்தென எனவறை திருந ணாவுறை
அத்தனை அடிதொழ அல்லல் இல்லையே.
நித்திய மூர்த்தியை - அழிவற்ற கடவுளை;
நெற்றிக் கண்ணனை - முக்கண்ணனை;
முத்தலைச் சூலனை - திரிசூலத்தை ஏந்தியவனை;
மொய்க்கும் வண்டினம் தெத்தென என அறை திருநணா உறை - மொய்க்கின்ற வண்டுகள் தெத்தென என்று ஒலிக்கின்ற திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
அத்தனை அடிதொழ அல்லல் இல்லையே - தந்தையான சிவபெருமான் திருவடிகளை வழிபட்டால் துன்பம் தீரும்;
7)
வென்றிவெள் விடையனை வெய்ய காலனை
அன்றுதை செய்தருள் அரனைக் காவிரி
சென்றடி போற்றிடு திருந ணாவுறை
பொன்றிகழ் சடையனைப் போற்ற நன்மையே.
வென்றி வெள்-விடையனை - வெற்றியுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை; (வென்றி - வெற்றி);
வெய்ய காலனை அன்று உதைசெய்து அருள் அரனைக் - கொடிய கூற்றுவனை முன்பு உதைத்த ஹரனை; (வெய்ய - கொடிய);
காவிரி சென்று அடிபோற்றிடு திருநணா உறை - காவிரிநதி வந்து வணங்குகின்ற திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
பொன் திகழ் சடையனைப் போற்ற நன்மையே - பொற்சடை உடைய சிவபெருமானைப் போற்றினால் நன்மை வந்து அடையும்; (பொன்றிகழ் = பொன் திகழ்);
8)
திருமலை பேர்த்தவன் சென்னி பத்திறத்
திருவிரல் ஊன்றிய சிவனை நஞ்சணி
திருமிடற் றீசனைத் திருந ணாவுறை
திருவனைத் தொழுதெழச் சேரும் நன்மையே.
திருமலை பேர்த்தவன் சென்னி பத்து இறத் திருவிரல் ஊன்றிய சிவனை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்தலைகளும் இறும்படி ஒரு விரலை ஊன்றிய சிவனை;
நஞ்சு அணி திருமிடற்று ஈசனைத் - விஷத்தை அணிந்த திருநீலகண்டத்தை உடைய ஈசனை; (மிடறு - கண்டம்);
திருநணா உறை - திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
திருவனைத் தொழுதெழச் சேரும் நன்மையே - திருவின் வடிவினனான பெருமானை வழிபட்டால் நன்மை வந்தடையும்;
9)
செங்கணன் அயனிவர் தேடிக் காணொணாப்
பொங்கழல் உருவனைப் பூத நாதனைச்
செங்கயல் பாய்புனல் திருந ணாவுறை
சங்கர னைத்தொழச் சாரும் நன்மையே;
செங்கணன் அயன் இவர் தேடிக் காணொணாப் பொங்கு அழல் உருவனைப் - திருமால் பிரமன் இவர்களால் தேடி அறிய இயலாத தீப்-பிழம்பாகி ஓங்கி நின்றவனை;
பூத-நாதனைச் - பூதகணத் தலைவனை;
செங்கயல் பாய்-புனல் திருநணா உறை - செங்கயல்மீன்கள் பாயும் ஆறு பாயும் திருநணாவில் (பவானியில்) உறைகின்ற; (பாய்புனற்றிருநணா = பாய்-புனல்-திருநணா);
சங்கரனைத் தொழச் சாரும் நன்மையே - சங்கரனை வழிபட்டால் நன்மை வந்தடையும்;
10)
வஞ்சகர் வலையினில் மயங்கி டேன்மினீர்
அஞ்செழுத் தோதிய அன்பர்க் கன்பனைச்
செஞ்சுடர் வண்ணனைத் திருந ணாவுறை
நஞ்சணி கண்டனை நண்ண நன்மையே.
வஞ்சகர் வலையினில் மயங்கிடேன்மின் நீர் - வஞ்சகர்கள் விரிக்கும் வலையில் நீங்கள் மயங்கிவிடாதீர்கள்;
அஞ்செழுத்து ஓதிய அன்பர்க்கு அன்பனைச் - பஞ்சாட்சரத்தை ஓதி வணங்கும் அன்பர்களுக்கு அன்பு உடையவனை;
செஞ்சுடர் வண்ணனைத் - செந்தீப் போல் செம்மேனியனை;
திருநணா உறை - திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
நஞ்சு அணி கண்டனை நண்ண நன்மையே - நீலகண்டனை அடைந்து வழிபட்டால் நன்மை வந்தடையும்; (சம்பந்தர் தேவாரம் - 2.46.10 - "புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்");
11)
கொய்ம்மலர் இட்டுளம் குழையும் அன்பினர்
எம்மணி எம்மிறை என்னும் ஈசனைச்
செம்மணி வண்ணனைத் திருந ணாவுறை
நம்மணி கண்டனை நண்ண நன்மையே.
கொய்ம்-மலர் இட்டு உளம் குழையும் அன்பினர் - பறித்த மலர்களைத் தூவி வணங்கி உள்ளம் கசியும் பக்தர்கள்; (கொய்+மலர் = கொய்ம்மலர்; இங்கே புணர்ச்சியில் மெல்லின ஒற்று மிகும்);
"எம் மணி, எம் இறை" என்னும் ஈசனைச் - "எம் மணி, எம் இறைவன்" என்று போற்றும் ஈசனை;
செம்மணி வண்ணனைத் - செம்பவளம், மாணிக்கம் போன்ற செம்மேனியனை;
திருநணா உறை - திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;
நம் மணிகண்டனை நண்ண நன்மையே - நம் நீலகண்டனை அடைந்து வழிபட்டால் நன்மை வந்தடையும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment