Wednesday, September 10, 2025

P.452 - அவிநாசி - மறையோதும் அரும்பொருள்

2018-09-21

P.452 - அவிநாசி

-------------------------------

(வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")

* தேவாரத்தில் - புக்கொளியூர் அவிநாசி;

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

மறையோ துமரும் பொருளானாய்

பிறைவாழ் புரிசெஞ் சடையானே

அறையார் கழலாய் அவிநாசீ

இறைவா இடர்தீர்த் தருளாயே.


மறை ஓதும் அரும்பொருள் ஆனாய் - வேதங்கள் பாடுகின்ற அரிய பொருளே;

பிறை வாழ் புரி-செஞ்சடையானே - பிறை வாழ்கின்ற முறுக்கிய செஞ்சடையை உடையவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

அறை ஆர் கழலாய் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியினனே; (ஆர்த்தல் - ஒலித்தல்);

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

இறைவா, இடர் தீர்த்து அருளாயே - இறைவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


2)

புர(ம்)மூன் றெரியிற் புகுமாறு

வரையே சிலையா வளைவித்தாய்

அரவார் சடையாய் அவிநாசீ

அரனே இடர்தீர்த் தருளாயே.


புரம் மூன்று எரியில் புகுமாறு வரையே சிலையா வளைவித்தாய் - முப்புரங்களும் தீயில் புகுந்து அழியும்படி மலையையே வில்லாக வளைத்தவனே; (வரை - மலை); (சிலை - வில்);

அரவு ஆர் சடையாய் - சடையில் பாம்பை அணிந்தவனே; (ஆர்தல் - அணிதல்);

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

அரனே, இடர் தீர்த்து அருளாயே - ஹரனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


3)

கலைமான் மறியோர் கரமேந்தீ

தலைமா லையினாய் சடைதன்னில்

அலையார் நதியாய் அவிநாசீ

தலைவா தமியேற் கருளாயே.


கலைமான்-மறி ஓர் கரம் ஏந்தீ - கலைமான்-கன்றை ஒரு கையில் ஏந்தியவனே;

தலைமாலையினாய் - தலைமாலை (மண்டையோட்டுமாலை) அணிந்தவனே;

சடைதன்னில் அலை ஆர் நதியாய் - சடையில் அலை நிறைந்த (/அலை ஒலிக்கின்ற) கங்கையை அணிந்தவனே; (ஆர்தல் - நிறைதல்; ஆர்த்தல் - ஒலித்தல்);

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

தலைவா, தமியேற்கு அருளாயே - தலைவனே, கதியற்ற எனக்கு அருள்வாயாக;


4)

அணையார் அரணம் படவன்றோர்

கணைதொட் டவனே புனலுக்கோர்

அணையாம் சடையாய் அவிநாசீ

துணைவா துயர்தீர்த் தருளாயே.


அணையார் அரணம் பட அன்று ஓர் கணை தொட்டவனே - பகைவர்களது மூன்று கோட்டைகளும் அழியும்படி முன்பு ஒரு கணையை எய்தவனே; (அணையார் - பகைவர்); (படுதல் - அழிதல்);

புனலுக்கு ஓர் அணை ஆம் சடையாய் - கங்கைநீரைச் சடையில் தடுத்தவனே;

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

துணைவா, துயர் தீர்த்து அருளாயே - துணைவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


5)

மழவெள் விடையாய் மதன்நீறாய்

விழவன் றுநுதல் விழிசெய்தாய்

அழலன் னவனே அவிநாசீ

தொழுமென் துயர்தீர்த் தருளாயே.


மழ-வெள் விடையாய் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே;

மதன் நீறாய் விழ அன்று நுதல் விழிசெய்தாய் - மன்மதன் சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவனே;

அழல் அன்னவனே - தீப் போன்ற செம்மேனியனே;

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

தொழும் என் துயர் தீர்த்து அருளாயே - உன்னைத் தொழும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


6)

முனமால் அடிநான் மறையோதீ

வனமென் முலையாள் மணவாளா

அனலேந் தழகா அவிநாசீ

அனகா இடர்தீர்த் தருளாயே.


முனம் ஆல்அடி நான்மறை ஓதீ - முன்பு கல்லால-மரத்தின்கீழ் நால்வேதங்களை ஓதியவனே;

வன-மென்-முலையாள் மணவாளா - அழகிய மென்முலைகளையுடைய உமைக்குக் கணவனே; (வனம் - அழகு);

அனல் ஏந்து அழகா - கையில் நெருப்பை ஏந்திய அழகனே;

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

அனகா, இடர் தீர்த்து அருளாயே - மாசில்லாதவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (அனகன் - அநகன் - பாவங்கள் அற்றவன்; குற்றமற்றவன்); (अनघ a. 1 Sinless, innocent; -2 Free from blame, faultless, handsome;)


7)

கமழ்மா மலரிட் டவர்வாழக்

குமைகூற் றுவனைச் செறுகாலா

அமரர்க் கிறைவா அவிநாசீ

அமலா இடர்தீர்த் தருளாயே.


கமழ் மா மலர் இட்டவர் வாழக், குமை-கூற்றுவனைச் செறு-காலா - வாசமலர்களைத் தூவி வழிபாடு செய்தவரான மார்க்கண்டேயர் வாழுமாறு, கொல்லும் கூற்றுவனை அழித்த காலகாலனே; (குமைத்தல் - அழித்தல்); (செறுதல் - அழித்தல்);

அமரர்க்கு இறைவா - தேவர்கள் தலைவா;

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

அமலா, இடர் தீர்த்து அருளாயே - தூயனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


8)

எண்ணா தருவெற் பெறிமூடன்

புண்ணா கிடவோர் விரல்வைத்தாய்

வெண்ணீ றணிவாய் அவிநாசீ

அண்ணா இடர்தீர்த் தருளாயே.


எண்ணாது அருவெற்பு எறி மூடன் புண் ஆகிட ஓர் விரல் வைத்தாய் - சிறிதும் யோசனை செய்யாமல் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற அறிவற்ற இராவணன் மிகவும் புண்படுமாறு ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவனே;

வெண்ணீறு அணிவாய் - வெண்-திருநீற்றைப் பூசியவனே;

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

அண்ணா, இடர் தீர்த்து அருளாயே - தலைவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "அண்ணா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே?"); ("அண்ணால்" என்பது, "அண்ணா" என மருவிற்று);


9)

அடிமால் முடிநான் முகன்நேடும்

படிநீள் எரியே படநாகம்

முடிமேல் அணிவாய் அவிநாசீ

அடிகேள் இடர்தீர்த் தருளாயே.


அடி மால் முடி நான்முகன் நேடும்படி நீள் எரியே - திருமால் அடியையும் பிரமன் முடியையும் தேடும்படி எல்லையின்றி நீண்ட ஜோதியே; (நேடுதல் - தேடுதல்);

படநாகம் முடிமேல் அணிவாய் - படம் திகழும் நாகப்பாம்பைத் திருமுடிமேல் அணிந்தவனே;

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

அடிகேள், இடர் தீர்த்து அருளாயே - சுவாமீ, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (அடிகேள் - அடிகள் என்பதன் விளி; அடிகள் - சுவாமி); (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "அடிகேள் உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே?");


10)

மெய்யில் திருநீ றணியாத

பொய்யர்க் கிலனாம் புகழாளா

மையார் மிடறா அவிநாசீ

ஐயா இடர்தீர்த்ருளாயே.


மெய்யில் திருநீறு அணியாத பொய்யர்க்கு இலன் ஆம் புகழாளா - உடம்பில் திருநீற்றைப் பூசாத பொய்யர்களுக்கு அருள் இல்லாதவனே, புகழ் உடையவனே;

மை ஆர் மிடறா - நீலகண்டனே; (மை - கருநிறம்);

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

ஐயா, இடர் தீர்த்து அருளாயே - தலைவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


11)

பிணிநோய் நரையென் றுமிலாதாய்

மணியார் மிடறா மழுவாளா

அணிவான் மதியாய் அவிநாசீ

பணிவேன் இடர்தீர்த் தருளாயே.


பிணி நோய் நரை என்றும் இலாதாய் - பந்தம், நோய், மூப்பு இவையெல்லாம் எந்நாளும் இல்லாதவனே;

மணி ஆர் மிடறா - நீலகண்டனே;

மழுவாளா - மழுவாளை ஏந்தியவனே;

அணி வான்-மதியாய் - அழகிய இள-வெண்-திங்களை அணிந்தவனே; (அணி - அழகு); (வான்மதி - 1. வான் மதி (வானில் இருக்கும் சந்திரன்); 2. வால் மதி - வெண்திங்கள்); (வால் - இளமை; தூய்மை; வெண்மை);

அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;

பணிவேன் இடர் தீர்த்து அருளாயே - உன்னை வழிபடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment