Saturday, November 11, 2023

08.03.067 - நீரானை - பாரானை - மடக்கு

08.03 – மடக்கு

2016-01-27

08.03.067 - நீரானை - பாரானை - மடக்கு

-------------------------

நீரானை ஈருரி தாங்கு நிமலனை

நீரானை ஆட்டானைக் காவானை - நீரானைப்

பாரானை விண்ணெரிகால் ஆனானைச் சாராரைப்

பாரானை நாவேநீ பாடு.


பதம் பிரித்து:

நீர், ஆனை ஈர் உரி தாங்கு நிமலனை,

நீர் ஆனை ஆட்டு ஆனைக்காவானை, - நீரானைப்,

பாரானை, விண் எரி கால் ஆனானைச், சாராரைப்

பாரானை, நாவே நீ பாடு.


சொற்பொருள்:

நீர் - 1. கங்கை; 2. காவிரிப் புனல்; 3. புனல்;

ஆனை - யானை;

ஈர்த்தல் - உரித்தல்;

உரி - தோல்;

ஆட்டுதல் - அபிடேகித்தல்;

பார் - பிருதிவி என்னும் பூதம்;

எரி - நெருப்பு;

கால் - காற்று;

சார்தல் - புகலடைதல்;

பார்த்தல் - கடைக்கணித்தல் (To look at with compassion) - கடைக்கண்ணாற் பார்த்தல்;


நீர், ஆனை ஈர் உரி தாங்கு நிமலனை - கங்கையையும் யானையின் உரித்த தோலையும் தரித்த நின்மலனை;

நீர் ஆனை ஆட்டு ஆனைக்காவானை - யானை நீரால் அபிஷேகம் செய்த திருவானைக்கா ஈசனை;

நீரானைப் பாரானை விண் எரி கால் ஆனானைச் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்கள் ஆனவனை;

சாராரைப் பாரானை - தன்னைச் சரணடையாதவர்களை அருளோடு பாராதவனை ( = அவர்களுக்கு அருள் இல்லாதவனை);

நாவே நீ பாடு - என் நாவே, நீ பாடுவாயாக;


பிற்குறிப்புகள்:

1. அப்பர் தேவாரம் - 6.50.1 - "போரானை ஈருரிவைப் போர்வை யானை ... பாரானை .. நெடுவெளியாய்ப் பரந்து நின்ற நீரானைக் காற்றானைத் தீயா னானை";

2. அப்பர் தேவாரம் - 6.11.3 - "வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம் மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்" - தன்னை விரைந்து சரண்புக்கவர்களுக்குத் தான் அருளுவதில் வல்லவன். அப்பெருமான், தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன்;

3. அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்" - மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான், தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment