Saturday, November 11, 2023

08.03.066 - காட்டிடைப் - பார்த்தற்கு - மடக்கு

08.03 – மடக்கு

2016-01-26

08.03.066 - காட்டிடைப் - பார்த்தற்கு - மடக்கு

-------------------------

காட்டிடைப் பாரிடம் பாட்டிசைக்க ஆடியைமின்

காட்டிடைப் பாவை கணவனைக் - காட்டிடைப்

பார்த்தற் கருள்செய் பசுபதியை மாலயனால்

பார்த்தற் கரியானைப் பாடு.


பதம் பிரித்து:

காட்டிடைப் பாரிடம் பாட்டு இசைக்க ஆடியை, மின்

காட்டு-இடைப் பாவை கணவனைக், - காட்டிடைப்

பார்த்தற்கு அருள்செய் பசுபதியை, மால் அயனால்

பார்த்தற்கு அரியானைப் பாடு.


சொற்பொருள்:

காட்டிடை - 1. சுடுகாட்டில்; 2. மின் காட்டு இடை - மின்னல் போன்ற இடை; 3. காட்டில்;

இடை - 1. ஏழாம் வேற்றுமை உருபு; 2. மருங்குல் (waist);

பாரிடம் - பூதம்;

இசைத்தல் - பாடுதல்;

பார்த்தற்கு - 1. பார்த்தனுக்கு; 2. காண்பதற்கு; (பார்த்தல் - காணுதல்; அறிதல்);


காட்டிடைப் பாரிடம் பாட்டு இசைக்க ஆடியை - சுடுகாட்டில் பூதங்கள் பாடத் திருநடம் செய்பவனை; (அப்பர் தேவாரம் - 4.67.4 - "காட்டிடை அரங்கமாக ஆடிய கடவுளே");

மின் காட்டு இடைப் பாவை கணவனை - மின்னல் போன்ற இடை உடைய உமைக்குக் கணவனை; (அப்பர் தேவாரம் - 6.76.3 - "மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன்காண்" - "மின்னலைத் தன்னிடத்தே காட்டும்" என்பது சொற்பொருளாயினும், "காட்டும்" என்பது உவம உருபேயாம்);

காட்டிடைப் பார்த்தற்கு அருள்செய் பசுபதியை - காட்டில் அருச்சுனனுக்கு (பாசுபதாஸ்திரம்) அருளிய பசுபதியை;

மால் அயனால் பார்த்தற்கு அரியானைப் பாடு - விஷ்ணு பிரமன் இவர்களால் காண்பதற்கு அரியவனைப் பாடுவாயாக; (மனமே என்ற விளியை வருவித்துக்கொள்க);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment