Sunday, July 16, 2017

03.04.063 - சிவன் - வில் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-06-10

3.4.63 - சிவன் - வில் - சிலேடை

-------------------------------------------------------------

சிலையெனச் சொல்வர் சிலர்நாண் அரவம்

பலசெய்யும் திண்டோட் பவனியறி வோம்பேர்

உலகு படைஎன் றுரைக்கும் பெருமை

இலகும்வில் முக்கண் இறை.


சொற்பொருள்:

சிலை - 1. வில்; / 2. விக்கிரஹம்;

நாண் - 1. வில்லின் நாண்; / 2. கயிறு;

அரவம் - 1. ஒலி; / 2. பாம்பு;

திண்டோட் பவனி - திண் + தோள் + பவனி;

பவனி - உலா;

பேர் - 1. பெரிய; / 2. பெயர்;

உலகு - உலகம்; உலக மக்கள்;

படை - ஆயுதம்;

இலகுதல் - விளங்குதல்;

இறை - இறைவன்;


வில்:

சிலைனச் சொல்வர் சிலர் - வில்லுக்குச் சிலை என்ற சொல்லைச் சிலர் பயன்படுத்துவர்.

நாண் அரவம் பல செய்யும் - (வில், நாண் இவற்றின் வடிவம், பயன்படுத்திய பொருள்கள் போன்றவற்றை ஒட்டி) நாணைச் சுண்டினால் எழும் ஒலி பலவகைப்படும்.

திண்டோட்-பவனி அறிவோம் - (வீரர்களது) வலிமைமிக்க தோளில் அமர்ந்து பவனி வருவது நாம் அறிந்ததே.

பேர்உலகு படை என்று உரைக்கும் பெருமை இலகும் - இந்தப் பெரிய உலகத்து மக்கள் வில்லை ஆயுதம் என்று சொல்லும் பெருமையை உடையது;

வில் - வில்;


சிவன்:

சிலை எனச் சொல்வர் சிலர் - சிலர் (நாத்திகர்கள்) (தெய்வம் இல்லை, அது) வெறும் சிலை என்று சொல்வார்கள்.

நாண் அரவம் பல செய்யும் - சிவனுக்குப் பல பாம்புகள் கயிறு ஆவன. (அரைநாண், தலைமாலையைக் கோக்கும் கயிறு, முப்புரம் எரித்தபொழுது மேருமலையால் ஆன வில்லுக்கு நாண், முதலியன); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.107.7 - "பன்னக மாலை பணிகயிறா உடைதலை கோத்துழல் மேனியன்");

திண்டோட்-பவனி அறிவோம் - (உற்சவ மூர்த்தியாகப்) பக்தர்களது உரம் மிக்க தோளில் பவனி வருவான்.

பேர் உலகு படை என்று உரைக்கும் - உலகத்தவர் அவனது நாமத்தைக் காக்கும் ஆயுதமாக உச்சரிப்பர். (--அல்லது-- பிரமனைத் தோற்றுவித்து அவனை 'உலகங்களைப் படைப்பாயாக' என்று சொல்வான்). (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.81.8 - "படைக்கலமாக உன் நாமத்து எழுத்தஞ்சு என் நாவிற் கொண்டேன்");

பெருமை இலகும் முக்கண் இறை - இத்தைய பெருமை உடையவன் நெற்றிக்கண் உடைய கடவுளான சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment