Saturday, July 8, 2017

03.04.059 - சிவன் - வைத்தியர் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-06-02

3.4.59 - சிவன் - வைத்தியர் - சிலேடை

-------------------------------------------------------------

பித்தர் பிணிக்குப் பெருமருந்து நல்குவார்

சத்தியுட னாநட மாடமகிழ் கின்றவர்

வித்தகர் பற்று வியாதியெலாம் போக்குவார்

அத்தரொரு வைத்தியர் ஆங்கு.


சொற்பொருள்:

பித்தர் - 1. மனநோய் உள்ளவர்; / 2. சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று = பேரருளாளர்;

மருந்து - 1. ஔஷதம்; / 2. அமுதம்;

சத்தியுடனாநடமாட - 1. சத்தியுடன் நாம் நடமாட; / 2. சத்தி உடனா() நடம் ஆட;

நடமாடுதல் - 1. உலாவுதல்; / 2. கூத்தாடுதல்;

உடனாதல் - கூடிநிற்றல்;

மகிழ்தல் - 1. சந்தோஷப்படுதல்; / 2. விரும்புதல்;

வித்தகர் - 1. கல்வியிற் சிறந்தவர்; / 2. வல்லவர்;

பற்று வியாதி - 1. பற்றுகின்ற நோய் (infectious diseases); / 2. பாசமும் (உலகப் பற்று), நோய்களும்;

பற்று - பற்றுக்கோடு (Support) - ஆதாரம்; தஞ்சம்;

அத்தர் - தந்தையார்;

ஆங்கு - 1. உவம உருபு; 2. அசை;


இலக்கணக் குறிப்புகள்:

1. உடனா = உடனாக என்பது கடைக்குறையாக வந்தது;

2. ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் - "146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம் இரு-வழியிலும் கெடும்".


வைத்தியர்:

பித்தர் பிணிக்குப் பெருமருந்து நல்குவார் - மனநோய் உள்ளவர்களது நோய்க்குத் தக்க மருந்து அளிப்பவர்.

சத்தியுடன் நாம் நடமாட மகிழ்கின்றவர் - நாம் (முன்பு நோயாளிகளாக இருந்து, பிறகு அவருடைய மருத்துவத்தால் நலம்பெற்றுச்) சக்தியுடன் நடமாடக் கண்டு, (தமது திறமையின் வெற்றியை எண்ணி) மகிழ்வார்.

வித்தகர் - நிரம்பப் படித்தவர்.

பற்று வியாதியெலாம் போக்குவார் - பற்றுகின்ற ('infectious') வியாதிகளை எல்லாம் போக்குவார்.

ஒரு வைத்தியர் - ஒரு மருத்துவர்;


சிவன்:

பித்தர் - பித்தர் (பேரருளாளர்) என்ற திருநாமம் உடையவர்.

பிணிக்குப் பெருமருந்து நல்குவார் - பிறவிப் பிணி தீர அருளமுதத்தை வழங்குபவர். (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.60.4 - "நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்தும் ஆகுவர் மன்னு மாற்பேறரே");

சத்தி உடனா நடமாட மகிழ்கின்றவர் - பார்வதி சேர்ந்திருக்கத் திருக்கூத்தை விரும்பிச் செய்பவர்.

வித்தகர் - எல்லாம் வல்லவர்.

பற்று வியாதியெலாம் போக்குவார் - (பக்தர்களுக்குத்) தஞ்சம் (ஆக விளங்குபவர்). பக்தர்களது பற்றுகளையும் உடல்நோய்களையும் போக்குவார் ("வைத்தியநாதர்").

அத்தர் - எம் தந்தை ஆனவர்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment