Saturday, July 8, 2017

03.04.057 - சிவன் - வேலி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-29

3.4.57 - சிவன் - வேலி - சிலேடை

-------------------------------------------------------------

எல்லை எனநிற்கு முள்ளிருக்கும் காத்திடும்

நல்ல அரணாகி நம்மனோர் செல்லும்

வழிகாட்டும் ஏறுகொடி மன்னுமொரு வேலி

விழிகாட்டும் நெற்றியுடை வேந்து.


சொற்பொருள்:

எல்லை - வரம்பு;

நிற்குமுள்ளிருக்கும் - 1. நிற்கும் முள் இருக்கும் ; / 2. நிற்கும் உள் இருக்கும்;

உள் - உள்ளே; உள்ளம்;

அரண் - பாதுகாவல்; கோட்டை;

நம்மனோர் - எம்மனோர் - எம்மை ஒத்தவர்; நாங்கள்;

ஏறு - 1) ஏறுதல்; / 2. இடபம்;

கொடி - 1. படர்கின்ற தாவரம்; / 2. சின்னமாகப் பறக்கவிடுகின்ற கொடி;

மன்னுதல் - 1. மிகுதல்; 2. தங்குதல்; நிலைபெறுதல்;

வேந்து - அரசன்;


வேலி:

எல்லை என நிற்கும் - (ஓர் இடத்தைச் சுற்றி) எல்லையாக இருக்கும்.

முள் இருக்கும் - அதனில் முள் இருக்கும்.

காத்திடும் நல்ல அரண் ஆகி - நல்ல பாதுகாவலாகிக் காக்கும்.

நம்மனோர் செல்லும் வழி காட்டும் - நம் போன்றோர் செல்ல வழி இருக்கும்.

ஏறு கொடி மன்னும் - அதன்மேல் ஏறுகின்ற கொடிகள் படர்ந்திருக்கும்.

ஒரு வேலி - (வீடு முதலிய இடங்களைச் சுற்றி இருக்கும்) வேலி.


சிவன்:

எல்லை என நிற்கும் - (எல்லாவற்றுக்கும் - இப்பிரபஞ்சத்தின்) எல்லையாக இருப்பவன்.

உள் இருக்கும் - (அவ்வாறு இருந்தாலும்) உள்ளே இருப்பான். (இப்பிரபஞ்சத்தினுள்ளும், நம் மனத்திலும் இருப்பவன்).

காத்திடும் நல்ல அரண் ஆகி - (பக்தர்களுக்கு) நல்ல பாதுகாவல் ஆகிக் காப்பான்.

நம்மனோர் செல்லும் வழி காட்டும் - நாம் செல்லும் நெறியைக் காட்டுவான்.

ஏறு கொடி மன்னும் - (அவனது) கொடியில் இடபச் சின்னம் இருக்கும்.

விழி காட்டும் நெற்றியுடை வேந்து - நெற்றியில் கண் உடைய அரசனான சிவபெருமான். (சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும் ... விடைகாட்டும் கொடியானே").


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment