Saturday, November 28, 2015

02.43 – வீழிமிழலை - (திருமுக்கால்)

02.43வீழிமிழலை - (திருமுக்கால்)

2012-02-04
திருவீழிமிழலை
---------------------
(திருமுக்கால் அமைப்பில்)
(சம்பந்தர் தேவாரம் 3.97.1 - திடமலி மதிலணி)

1)
அரியொரு படைபெற அடிதொழ அடைபதி
விரிபொழில் மிழலையு ளீரே
விரிபொழில் மிழலையு ளீருமை மேவுவார்
அரிவினை அவையுடன் அறுமே.



அரி - ஹரி - திருமால்;
படை - ஆயுதம் - இங்கே சக்கரம்;
பதி - தலம்;
மேவுவார் - இடைவிடாது தியானிப்பவர்; (மேவுதல் - விரும்புதல்; ஓதுதல்; பொருந்துதல்);
அரித்தல் - வருத்துதல்; கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து தின்னுதல்;
அரிவினை - அரிக்கும் வினை;
உடன் - உடனே; அப்பொழுதே;



2)
மரைமலர் கொடுதிரு மால்தொழ அடைபதி
விரைகமழ் மிழலையு ளீரே
விரைகமழ் மிழலையு ளீருமை மேவுவார்
தரையினி வரலிலர் தாமே.



மரைமலர் - தாமரைமலர் (முதற்குறையாக வந்தது);
விரை - வாசனை;
விரைகமழ் மிழலை - மணம் கமழும் திருவீழிமிழலை; ('வாசமலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை' என்பதைச் சுட்டியது);
தரை இனி வரல் இலர் - இனிமேல் பூமியில் பிறவார்; (வரல் - வருதல்);



3)
பறிமலர் எனவிழி மாலிடப் படையருள்
வெறிகமழ் மிழலையு ளீரே
வெறிகமழ் மிழலையு ளீருமைக் குறியென
அறிபவர் அருவினை அறுமே.



பறிமலர் - பறித்த மலர்;
படை - ஆயுதம் - இங்கே சக்கரம்;
வெறி - வாசனை;
குறி - இலக்கு;
(அப்பர் தேவாரம் - 5.18.3
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்,
கூரிய குணத்தார் குறி நின்றவன்,
காரிகை உடையான் கடம்பந்துறைச்
சீர்இயல் பத்தர் சென்று அடைமின்களே.)



4)
கண்ணிடு மால்தொழத் தண்ணருள் செய்திடும்
விண்ணிழி மிழலையு ளீரே
விண்ணிழி மிழலையு ளீருமை எண்ணுவார்
பண்ணிய பழவினை படுமே.



தண் அருள் - குளிர்ந்த அருள்;
விண்ணிழி மிழலை உளீர் - திருமாலால் விண்ணுலகிலிருந்து கொண்டு வந்து நிறுவப்பெற்ற விமானத்தை உடைய வீழிமிழலையில் உள்ளவரே;
எண்ணுவார் - தியானிப்பவர்;
படுதல் - அழிதல்;



5)
அடியவர் பசியறப் படிநிதம் நல்கிய
வெடிகமழ் மிழலையு ளீரே
வெடிகமழ் மிழலையு ளீரும தடிதொழ
மிடியொடு செடிவினை விடுமே.



படி - படிக்காசு (நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் - Subsistence allowance for a day);
நிதம் - தினந்தோறும்;
வெடி - வாசனை;
மிடி - வறுமை; துன்பம்;
செடி - தீமை; பாவம் (Sin);
குறிப்பு : திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் படிக்காசு அருளியதைப் பெரியபுராணத்திற் காண்க.



6)
மான்விழி மாதொடு மால்விடை மேல்வரும்
வான்பொழில் மிழலையு ளீரே
வான்பொழில் மிழலையு ளீரும வார்கழல்
தேன்மல ரால்தொழல் தெளிவே.



மான்விழி மாது - மான் போன்ற நோக்கு உடைய உமையம்மை;
மால் விடை - பெரிய இடப வாகனம்;
வான்பொழில் - உயர்ந்த சோலை;
உம வார் கழல் - உம்முடைய நீண்ட திருவடி; (- ஆறன் உருபு);
தேன் மலர் - தேன் நிறைந்த மலர்;
தெளிவு - ஞானம்;



7)
நீரடை சடைமிசை நீள்மதி சூடிய
ஏருடை மிழலையு ளீரே
ஏருடை மிழலையு ளீருமை ஏத்துவார்
சீருடை வாழ்வுறல் திடனே.



ஏர் - அழகு;
சீர் - செல்வம்; நன்மை; புகழ்;
திடன் - திடம் - நிச்சயம்;


கங்கையை அடைத்த சடைமேல் நீண்ட பிறைச்சந்திரனை அணிந்து, அழகிய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே! அழகிய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் உம்மைத் துதிக்கும் பக்தர்கள் செல்வமும் புகழும் திகழும் வாழ்வு பெறுவது நிச்சயம்.



8)
வீம்பனை மெல்விரல் இட்டுநெ ரித்தருள்
மேம்படு மிழலையு ளீரே
மேம்படு மிழலையு ளீரும பூம்பதம்
ஓம்பிடு வார்க்குறும் உயர்வே.



வீம்பன் - கர்வம் உடையவன்; பிடிவாதக்காரன்; - இங்கே இராவணன்;
மேம்படுதல் - சிறத்தல்;
உம - உம் + (ஆறாம் வேற்றுமை உருபு) - உம்முடைய;
பூம்பதம் - பூப்போன்ற திருவடி;
ஓம்புதல் - போற்றுதல்;
உறுதல் - அடைதல்;



9)
வேதனும் மாயனும் மேலடி நேடிய
மேதகு மிழலையு ளீரே
மேதகு மிழலையு ளீருமைக் காதலாய்
ஓதடி யார்க்குறும் உயர்வே.



வேதன் - பிரமன்;
மாயன் - திருமால்;
மேல் அடி - முடியும் அடியும்
நேடுதல் - தேடுதல்;
மேதகுதல் - மேன்மையாதல்;
காதல் - அன்பு;
ஓதுதல் - துதித்தல்;



10)
பொக்கமு ரைத்துழல் புல்லர்கள் அடைகிலா
மிக்கநன் மிழலையு ளீரே
மிக்கநன் மிழலையு ளீருமை வேண்டுவார்
துக்கவி னைத்தொடர் தொலைவே



பொக்கம் - பொய்;
உழல்தல் - அலைதல்; நிலைகெடுதல்;
புல்லர் - அறிவீனர்; இழிந்தோர்;
அடைகிலா = அடையமாட்டாத;
மிக்க - உயர்ந்த (Excellent, superior);
துக்க வினைத்தொடர் - துக்கத்தை அளிக்கும் பழவினைகள்;
தொலைவு - அழிவு;



11)
பண்பயில் மொழியுடைப் பாவையைப் பங்கமர்
விண்பணி மிழலையு ளீரே
விண்பணி மிழலையு ளீருமை வேண்டிடும்
பண்புடை யாரிலர் பழியே.



பண் பயில் மொழியுடைப் பாவை - இனிய மொழி பேசும் பார்வதி;
விண் - விண்ணோர் - தேவர்கள்;
வேண்டுதல் - விரும்புதல்; பிரார்த்தித்தல்;
பண்பு - குணம்; இயல்பு; தன்மை;
பழி - குற்றம்; பாவம்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவை. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம்.
முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி.



திருமுக்கால் பாடல் அடிகளின் அமைப்பு:
தானன தானன தானன தானன
தானன தானன தானா
தானன தானன தானன தானன
தானன தானன தானா



தானன வரும் இடத்தில் தனதன வரலாம். அதேபோல் தானா வரும் இடத்தில் தனனா வரலாம்.
தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்.


இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).



2) சம்பந்தர் தேவாரம் - 3.98.3 -
"விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
வரைமிசை யுறைவதும் வலதே
வரைமிசை யுறைவதொர் வலதுடை யீருமை
உரைசெயு மவைமறை யொலியே."



3) திருவீழிமிழலை - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=523

----------- --------------

No comments:

Post a Comment