Thursday, November 26, 2015

02.35 – நீலக்குடி (திருநீலக்குடி)

02.35 – நீலக்குடி (திருநீலக்குடி)



2011-11-19
திருநீலக்குடி
-----------------
(கலிவிருத்தம் - 'மா மா மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு).
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - 'முந்தி நின்ற வினைகள் அவைபோக')



1)
தீயர் திரையுள் ஆழ்த்தும் சமயத்தில்
வாயில் நாமம் மறவா அடியார்க்குக்
காயம் பிணித்த கல்லைக் கலனாக்கும்
நேயம் உடையார் நீலக் குடியாரே.



திரை - கடல்;
காயம் - உடல்;
கலன் - படகு; நாவாய் (Boat);
(அப்பர் தேவாரம் - 5.72.7 -
கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேனன்றே.)



2)
தினைபோல் இன்பம் தேடித் திரியாமல்
முனைநாள் வினைகள் என்னும் முடிவில்லாக்
கனைமா கடலிற் கலனா வருநாமம்
நினைவார்க் கினியார் நீலக் குடியாரே.



முனைநாள் வினைகள் - முன்னம் செய்த தீவினைகள்;
கனை மா கடலில் - ஒலிக்கின்ற பெரிய கடலில் - வினைக்கடலில்; பவக்கடலில்;
கலனா வருநாமம் - கலனாக வரும் திருநாமத்தை; (கலன் - மரக்கலம்; நாவாய்; படகு);
நினைவார்க்கு இனியார் நீலக்குடியாரே - நினைக்கும் பக்தர்களுக்கு இனியவர் திருநீலக்குடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானார்;


தினைபோல் இன்பம் தேடித் திரியாமல் -
(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 3:
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.)



3)
ஒன்று பலவாய் உருவோ டருவானார்
என்றும் அழியா எந்தை திருநாமம்
நன்று நினையும் நல்லார்க் கரணாகி
நின்று காப்பார் நீலக் குடியாரே.



ஒன்று பலவாய் உருவோடு அரு ஆனார் - ஏகனும் அநேகனும் ஆகி, உருக்கொண்டும், உரு இன்றி அருவமாகவும் கியவர்;
என்றும் அழியா எந்தை - அழிவற்றவரான எம் தந்தை;
அரண் - காவல்; கோட்டை; கவசம்;
நல்லார்க்கு அரணாகி நின்று காப்பார் - நல்லடியார்களுக்குக் காக்கும் கவசமாக இருந்து காத்தருள்வார்;



4)
நதியார் சடையா நரைவெள் விடையேறீ
மதியார் முடியா மங்கை ஒருகூறா
பதியே என்று பணிவார்க் குலவாத
நிதியாய் வருவார் நீலக் குடியாரே.



ஆர்தல் - பொருந்துதல்;
நரை வெள் விடை - மிக வெண்மையான எருது;
பதி - தலைவன்;
உலத்தல் - குறைதல்; அழிதல்;


"கங்கைச் சடையானே! மிக வெண்மையான இடபத்தின்மேல் செல்பவனே! சந்திரனைத் தலைமேல் சூடியவனே! அர்த்தநாரீஸ்வரனே! தலைவா!" என்று போற்றித் தொழும் பக்தர்களுக்கு என்றும் குறையாத பெருஞ்செல்வமாக இருப்பார் திருநீலக்குடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானார்.



5)
ஏரார் சடையர் இளவெண் பிறைசூடி
காரார் கண்டர் கரியின் உரிதோலார்
கூரார் சூலர் குளிரும் பொழிலோடு
நீரார் வயல்சூழ் நீலக் குடியாரே.



ஏர் ஆர் சடையர் - அழகிய சடையை உடையவர்;
இள வெண் பிறை சூடி - பிறைச்சந்திரனை முடிமேல் சூடியவர்;
கார் ஆர் கண்டர் - நீலகண்டர்;
கரியின் உரி தோலார் - யானையின் உரித்த தோலைப் போர்த்தியவர்;
கூர் ஆர் சூலர் - கூர்மையான சூலப்படையினர்;



6)
வில்லால் அரணம் வேவக் கணையெய்தார்
நல்லார் நாமம் நாளும் நவின்றேத்தப்
பொல்லா வினைதீர் புனிதர் பொழிலோடு
நெல்லார் வயல்சூழ் நீலக் குடியாரே.



அரணம் - கோட்டை - முப்புரங்கள்;
நல்லார் - நன்மையே செய்பவராகிய சிவபெருமானார்;
(சம்பந்தர் தேவாரம் 3.49.5 - ".... நல்லார் நாமம் நமச்சிவாயவே.");
(அப்பர் தேவாரம் - 6.20.8 - "சொல்லானை .... நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.");
பொழிலோடு நெல் ஆர் வயல் சூழ் - சோலைகளும் நெல்வயல்களும் சூழ்ந்த;



7)
கழலார் காலர் கையில் மழுவாளர்
தழலார் கண்ணர் தண்ணார் மதிசூடி
சுழலார் சடையர் தொழுவார் துணையாவார்
நிழலார் சோலை நீலக் குடியாரே.



கழலை அணிந்த திருவடியினர்; கையில் மழுவாளை ஏந்தியவர்; தீ இருக்கும் நெற்றிக்கண்ணர்; குளிர்ந்த சந்திரனைச் சூடியவர்; கங்கையின் சுழல் இருக்கும் சடையினர்; வணங்கும் பக்தர்களுக்குத் துணை ஆவார்; நிழல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருநீலக்குடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானார்.



8)
அற்றை மலையை அசைத்தான் தலைபத்தை
ஒற்றை விரலை ஊன்றி நெரிசெய்தார்
மற்றி சைக்கு மகிழ்ந்து வரமீந்தார்
நெற்றிக் கண்ணர் நீலக் குடியாரே.



அற்றை - அன்று; முன்னொரு சமயத்தில்;
மலையை அசைத்தான் தலை பத்தை - கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணனுடைய பத்துத்தலைகளையும்;
ஒற்றை - ஒரு;
நெரிசெய்தார் - நசுக்கினார்;
மற்று இசைக்கு மகிழ்ந்து - பின் (Subsequently) அவன் பாடிய இசையைக் கேட்டு மகிழ்ந்து;



9)
தோடும் அணிவார் தூய மறைநாலும்
பாடும் நாவர் பைந்தா மரையானும்
ஆடும் அலைமேல் நாகத் தணையானும்
நேடும் சோதி நீலக் குடியாரே.



தோடும் அணிவார் - ஒரு காதில் குழையும் ஒரு காதில் தோடும் அணிபவர் - அர்த்தநாரீஸ்வரர்;
தூய மறைநாலும் பாடும் நாவர் - நால்வேதங்களையும் பாடி அருளியவர்;
பைந்தாமரையான் - பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகன்;
ஆடும் அலைமேல் நாகத்தணையான் - பாற்கடலில் பாம்பணையில் துயிலும் திருமால்;
நேடும் சோதி - தேடும் சோதி;



10)
வஞ்சர் சொல்லும் மயக்க மொழிதன்னை
நஞ்சென் றறிந்து சற்றும் நயவேன்மின்
தஞ்சம் புக்கார் வாழ எமன்மாள
நெஞ்சில் உதைத்தார் நீலக் குடியாரே.



பதம் பிரித்து:
வஞ்சர் சொல்லும் மயக்க மொழிதன்னை
நஞ்சு என்று அறிந்து சற்றும் நயவேன்மின்;
தஞ்சம் புக்கார் வாழ, எமன் மாள
நெஞ்சில் உதைத்தார் நீலக்குடியாரே.


மயக்கம் - அவித்தை (Spiritual ignorance); அறிவின் திரிபு (Mental delusion;);
நயத்தல் - விரும்புதல்;
நயவேன்மின் - விரும்பாதீர்;
தஞ்சம் புக்கார் வாழ - சரண்புகுந்த மார்க்கண்டேயர் இறவாமல் என்றும் வாழ;



11)
ஏறு கந்தார் எழிலார் உமையாளைக்
கூறு கந்தார் கோலச் சடையுள்ளோர்
ஆறு கந்தார் அகலம் அதன்மீது
நீறு கந்தார் நீலக் குடியாரே.



பதம் பிரித்து:
ஏறு உகந்தார்; எழில் ஆர் உமையாளைக்
கூறு உகந்தார்; கோலச் சடையுள் ஓர்
ஆறு உகந்தார்; அகலம் அதன்மீது
நீறு உகந்தார் நீலக்குடியாரே.


ஏறு - இடபம்;
உகத்தல் - விரும்புதல்;
கூறு - பாகம்;
கோலம் - அழகு;
அகலம் - மார்பு;
நீறு - திருநீறு;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு:
  • கலிவிருத்தம் - 'மா மா மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு
  • சம்பந்தரின் 1.27 பதிகத்தில் பொதுவாக 'மா தேமா புளிமா புளிமாங்காய்' என்ற அமைப்பு.
  • ஆனால், மேற்காணும் என் பாடல்களில் 2-ஆம் 3-ஆம் சீர்கள் அக்கட்டுப்பாடு இன்றி எவ்வகை மாச்சீரும் பெற்றுவருவன.
2) சம்பந்தர் தேவாரம் - 1.27.1 -
முந்தி நின்ற வினைகள் அவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிகள் அவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
3) திருநீலக்குடி - இத்தலம் கும்பகோணம் - காரைக்கால் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டரில் உள்ளது.
4) திருநீலக்குடி - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=393

-------------- --------------

No comments:

Post a Comment