Thursday, November 26, 2015

02.37 – சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)

02.37 – சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)



2011-12-08
திருச்சிராப்பள்ளி
-----------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)



1)
பாவ மாயின பாறப் பணிநெஞ்சே
நாவ லூரரின் நற்றமிழ்ப் பித்தினன்
மேவ லர்புரம் வேவக் கணைதொடு
சேவ கன்பதி தென்சிராப் பள்ளியே.



பாறுதல் - அழிதல்;
நாவலூரர் - சுந்தரமூர்த்திநாயனார்;
மேவலர் - பகைவர்;
தொடுதல் - செலுத்துதல் (To discharge, as an arrow or other missile);
கணைதொடுதல் - அம்பு எய்தல்;
சேவகன் - வீரன்;
தென் சிராப்பள்ளி - அழகிய திருச்சிராப்பள்ளி;
பாவம் ஆயின பாறப் பணி நெஞ்சே - பாவங்கள் அழிய வணங்கு மனமே;
நாவலூரரின் நற்றமிழ்ப் பித்தினன் - சுந்தரர் பாடிய நல்ல தமிழை விரும்புபவன்;
மேவலர் புரம் வேவக் கணைதொடு சேவகன் பதி தென் சிராப்பள்ளியே - .பகைவர்களது முப்புரங்களும் வெந்து அழிய அம்பினை எய்த வீரன் உறையும் தலமான அழகிய திருச்சிராப்பள்ளியை;



2)
வாவென் றந்தகன் வந்தழை யாமுனம்
காவென் றேத்திக் கடுகி அடைநெஞ்சே
ஓவென் றும்பர் இறைஞ்சநஞ் சுண்டருள்
தேவன் மேவிய தென்சிராப் பள்ளியே.



பதம் பிரித்து:
"வா" என்று அந்தகன் வந்து அழையாமுனம்,
"கா" என்று ஏத்திக் கடுகி அடை நெஞ்சே,
"" என்று உம்பர் இறைஞ்ச நஞ்சு உண்டு அருள்
தேவன் மேவிய தென் சிராப்பள்ளியே.


அந்தகன் - எமன்;
அழையாமுனம் - அழைப்பதன் முன்னமே;
கா - காத்தருள்வாய்;
கடுகுதல் - விரைதல்;
- ஓலம்;
உம்பர் - தேவர்கள்;



3)
நாட வல்லையேல் நன்மையே நெஞ்சமே
காட கத்திற் கனலிடை மாநடம்
ஆட வல்லவன் ஆல்நிழற் கீழமர்
சேடன் மேவிய தென்சிராப் பள்ளியே.



நாடுதல் - கிட்டுதல் (To reach, approach); நினைத்தல் (To think, consider);
வல்லுதல் - செய்யமாட்டுதல் (To be able; to be possible); (வல்லையேல் - உனக்கு இயலுமானால்);
காடகம் - சுடுகாடு;
ஆல்நிழற் கீழ் - கல்லால மரத்தின்கீழ்
சேடன் - மேன்மையுடையவன்;
நெஞ்சமே! சுடுகாட்டில் தீயிடை ஆடும் கூத்தன்; கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து அறம் உரைக்கும் தட்சிணாமூர்த்தி; அச்சிவபெருமான் உறையும் அழகிய திருச்சிராப்பள்ளியை நீ நினைந்தால் நன்மையே.


(11.5.19 - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய சேத்திரத்திருவெண்பா -
"உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்."
--- 'வல்லையே' என்னும் வினா, 'வல்லையாயின் நன்று' என்னும் குறிப்பினது.)



4)
தொலையும் சூழ்வினைத் துன்பம் பிறப்பிலா
நிலையும் கிட்டும் நினைமட நெஞ்சமே
அலையும் முப்புரம் அன்றெரி செய்ம்மலைச்
சிலையன் மேவிய தென்சிராப் பள்ளியே.



தொலையும் சூழ்வினைத் துன்பம் - நம்மைச் சூழ்கின்ற வினைத்துன்பம் அழியும்;
பிறப்பு இலா நிலையும் கிட்டும் - இனிப் பிறப்பு இல்லை என்ற நற்கதியும் பெறலாம்;
சிலை - வில்;
அலையும் முப்புரம் அன்று எரிசெய்ம் மலைச்சிலையன் - திரியும் முப்புரங்களை அன்று எரித்த மேருவில்லியாகிய சிவபிரான்;
இலக்கணக்குறிப்பு : செய் + மலைச்சிலையன் - செய்ம்மலைச்சிலையன்;
ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து :
94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும் . உதாரணம் :
மெய் + ஞானம் - மெய்ஞ்ஞானம்; செய் + நன்றி - செய்ந்நன்றி; கை + மாறு - கைம்மாறு;



5)
இன்னல் தீர்ந்திட எய்து மடநெஞ்சே
பொன்னி பொங்கிய போதொரு தாயென
முன்ன டைந்தவன் முக்கணன் மூப்பிலாத்
தென்னன் மேவிய தென்சிராப் பள்ளியே.



பொன்னி - காவிரி;
மூப்பு - முதுமை;
தென்னன் - அழகியவன் ; தென்னாடுடையவன் எனினும் அமையும்;


* தாயுமானவன் - இத்தலத்து ஈசன் திருநாமம்.



6)
ஆத்த மாகி அடைந்துய்ம் மடநெஞ்சே
பார்த்த னுக்குப் படையருள் செய்தவன்
மூத்த வன்முடி மேல்மதி ஏற்றருள்
தீர்த்தன் மேவிய தென்சிராப் பள்ளியே.



ஆத்தம் - ஆப்தம் - அன்பு;
படை - ஆயுதம் - இங்கே பாசுபதாஸ்திரம்;
தீர்த்தன் - பரிசுத்தன்;

7)
தொல்வி னைத்துயர் அல்கிச் சுகமதே
மல்க எண்ணிடில் செல்கவென் நெஞ்சமே
வல்வி டத்தை மறைத்த மிடற்றினன்
செல்வன் மேவிய தென்சிராப் பள்ளியே.



அல்குதல் - அழிதல்;
மல்குதல் - நிறைதல்;
மிடறு - கண்டம்; கழுத்து;
தென் - அழகிய; இனிய;
சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி;



8)
கட்டந் தீரக் கருதென் மடநெஞ்சே
சட்டென் றோடித் தடவெற் பிடக்குமத்
துட்டன் தானழ ஓர்விரல் இட்டருள்
சிட்டன் மேவிய தென்சிராப் பள்ளியே.



பதம் பிரித்து:
கட்டம் தீரக் கருது என் மடநெஞ்சே,
சட்டென்று ஓடித் தட வெற்பு இடக்கும் அத்
துட்டன்தான் அழ ஓர் விரல் இட்டு அருள்
சிட்டன் மேவிய தென் சிராப்பள்ளியே.


கட்டம் - கஷ்டம்;
தட வெற்பு - பெரிய மலை - கயிலைமலை;
துட்டன் - துஷ்டன் - இராவணன்;
சிட்டன் - சிரேஷ்டன் - உயர்ச்சியுடையோன்;



9)
காயம் காடடை காலம் அடையாமுன்
நேய மாகி நினைமட நெஞ்சமே
மாய னோடயன் நேடு வரையிலாத்
தீயன் மேவிய தென்சிராப் பள்ளியே.



காயம் - உடல்;
காடு - சுடுகாடு;
நேயம் - அன்பு;
மாயன் - திருமால்;
அயன் - பிரமன்;
நேடுதல் - தேடுதல்;
வரை - அளவு; எல்லை;
தீயன் - சோதியன்; (தீயன் எனில் தீயை ஏந்தியவன் என்றும் பிற இடங்களில் பொருள்படும். ஆனால் இப்பாடலில் ஒளித்தூணாக நின்ற பொருளே பொருந்தும்);
தீயன் என்ற பிரயோக உதாரணங்கள் சில :
திருநாவுக்கரசர் தேவாரம் - 6.66.1: "தாயவனை ..... வளரா நின்ற தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்..."
திருநாவுக்கரசர் தேவாரம் - 6.87.5: "தூயவன்காண் .... தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண் ..."
சம்பந்தர் தேவாரம் - 2.12.8: "தூயானைத் .... தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம் ...."



10)
பொய்யி லேபுரள் புல்லர் புகலிலார்
உய்ய ஒல்லை அடைமட நெஞ்சமே
ஐயம் ஏற்றுழல் ஐயன் பவளம்போல்
செய்யன் மேவிய தென்சிராப் பள்ளியே.



புல்லர் - இழிந்தோர்; அறிவீனர்;
புகல் - பற்றுக்கோடு (Support); சரண் (Refuge);
ஒல்லை - சீக்கிரம்;
ஐயம் - பிச்சை;
செய்யன் - செந்நிறத்தினன்;



11)
அனந்த கோடி பிறவிகள் அற்றிடத்
தினந்தி ருப்புகழ் செப்பித் தொழுநெஞ்சே
நினைந்த நேயரைக் காத்து நமன்தனைச்
சினந்த வன்பதி தென்சிராப் பள்ளியே.



அனந்தம் - அளவற்றது;
திருப்புகழ் - ஈசன் புகழ்;
நேயர் - பக்தர் - இங்கே மார்க்கண்டேயர்;
பதி - தலம்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
  • கலிவிருத்தம் - 4 அடிகள்; அடிக்கு 4 சீர்கள்;
  • முதற்சீர் மாச்சீர்; இரண்டாம் சீர் நேர்சையில் தொடங்கும்; 2-3-4 சீர்களிடையே வெண்டளை பயிலும். அடி நேரசையில் தொடங்கினால் அடிக்குப் 11 எழுத்துகள்; அடி நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் 12 எழுத்துகள்;
2) திருச்சிராப்பளி - தாயுமானவர் கோயில் - தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=313

-------------- ----------------

No comments:

Post a Comment