Thursday, June 7, 2018

03.06.006 - 03.06.010 - வேலை - எனவிருப்பாய் - மடக்கு

03.06 – மடக்கு

2007-05-16

3.6.6 - வேலை - எனவிருப்பாய் - மடக்கு

-------------------------------------------------

வேலை விடமுண்ட நீலகண்டன் மூவிலை

வேலை யுடையவன் தாள்தொழலே வேலை

யெனவிருப்பா யென்னெஞ்சே மார்க்கண்டர் காவா

யெனவிருப்பா யென்றானை யேத்து.


பதம் பிரித்து:

வேலை விடம் உண்ட நீலகண்டன், மூ இலை

வேலை உடையவன் தாள் தொழலே வேலை

என விருப்பாய், என் நெஞ்சே, மார்க்கண்டர் "காவாய்"

என "இருப்பாய்" என்றானை ஏத்து.


வேலை - 1. கடல்; 2. தொழில்;

மூ இலை வேல் - திரிசூலம்;

விருப்பு - விருப்பம்; அன்பு; (அப்பர் தேவாரம் - 5.34.6 - "இட்டமாய்த் தொழுவார்");

மார்க்கண்டர் - மார்க்கண்டேயர்;

காவாய் - காப்பாயாக;

இருத்தல் - நிலைபெறுதல்; சீவித்தல்;


என் மனமே! கடலில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட திருநீலகண்டன், திரிசூலம் உடையவன் திருவடியைத் தொழுவதே தொழில் என்று விருப்பத்தோடு, மார்க்கண்டேயர் "காப்பாற்று" என்று வேண்ட, "என்றும் நிலைத்து இருப்பாய்" என்று அருள்புரிந்தவனைத், துதிப்பாயாக!

---------------------

2007-05-22

3.6.7 - பெற்றிமை - பெற்றவனை - மடக்கு

-------------------------------------------------

பெற்றிமை யோர்நஞ்சைத் துற்றிக் கறைமிடற்றிற்

பெற்றிமை யோர்க்கமுதைத் தந்துவந்த பெற்றிமை

பெற்றவனை யென்பணியும் பித்தனை யெவ்வுலகும்

பெற்றவனை யென்றென்றும் பேணு!


பதம் பிரித்து:

பெற்றிமை ஓர்! நஞ்சைத் துற்றிக் கறை மிடற்றில்

பெற்று, இமையோர்க்கு அமுதைத் தந்து உவந்த பெற்றிமை

பெற்றவனை, என்பு அணியும் பித்தனை, எவ்வுலகும்

பெற்றவனை, என்றென்றும் பேணு!


பெற்றிமை - 1. பெருமை; 2. இயல்பு/தன்மை;

ஓர் - எண்ணு;

துற்றி - உண்டு; (துற்றுதல் - உண்ணுதல்);

பெற்றவன் - 1. உடையவன்; 2. ஈன்றவன்;

என்பு - எலும்பு;


(ஈசன்) பெருமையை எண்ணு! ஆலகால விஷத்தை உண்டு, கழுத்தில் கறையை ஏற்றுத், தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்து மகிழ்ந்த குணம் உடையவனை, எலும்பை ஆபரணமாக அணிகின்ற பேரருளாளனை, எல்லா உலகங்களையும் ஈன்றவனை, எப்பொழுதும் (மனமே) போற்றுவாயாக!

---------------

2007-05-22

3.6.8 - தலையோடு - கொள்பவனை - மடக்கு

-------------------------------------------------

தலையோடு கங்கையைத் தாங்கியையம் கொள்ளத்

தலையோடு செல்லுஞ் சரமாய்த் தலையோடு

கொள்பவனை மான்விழி மங்கையைக் கூறாகக்

கொள்பவனை என்னெஞ்சே கூறு!


பதம் பிரித்து:

தலை ஓடு கங்கையைத் தாங்கி, ஐயம் கொள்ளத்

தலையோடு செல்லும், சரமாய்த் தலையோடு

கொள் பவனை, மான் விழி மங்கையைக் கூறு ஆகக்

கொள்பவனை, என் நெஞ்சே கூறு!


தலை ஓடு கங்கையைத் தாங்கி - தலையில் ஓடுகின்ற கங்கையைத் தாங்கி;

ஐயம் கொள்ளத் தலையோடு செல்லும் - பிச்சை ஏற்பதற்குப் பிரமனது மண்டையோட்டை ஏந்திச் செல்கின்ற;

சரமாய்த் தலையோடு கொள் - மாலையாக மண்டையோடுகளை அணிகின்ற

பவனை - கடவுளை; சிவனை;

மான் விழி மங்கையைக் கூறு ஆகக் கொள்பவனை - மான் போன்ற மருண்ட பார்வையுடைய பார்வதியை உடலில் ஒரு கூறாக உடையவனை;

என் நெஞ்சே கூறு - என் மனமே, போற்றிக் கூறுவாயாக!

---------------

2007-05-23

3.6.9 - நாணாம் - வழுவாது - மடக்கு

-------------------------------------------------

நாணாம் புரமெரிநாள் வில்லுக்கு நாகமரை

நாணாம் பணிகின்ற நாதற்கு நாணாம்

வழுவாது போதொடு வாழ்த்த வருமே

வழுவாது போயின்ப வாழ்வு.


பதம் பிரித்து :

நாண் ஆம் புரம் எரி நாள் வில்லுக்கு நாகம் அரை

நாண்,நாம் பணிகின்ற நாதற்கு; நாள் நாம்

வழுவாது போதொடு வாழ்த்த, வருமே

வழு வாது போய் இன்ப வாழ்வு .


இலக்கணக் குறிப்புகள் :

1. "நாகம்" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைக்க;

2. ளகர ஈற்றுப் புணர்ச்சி விதி: (தனிக்குறிலை அடுத்து வாராத இடங்களில்): ள்+= ண என்று ஆகும்


நாண் ஆம் புரம் எரி நாள் வில்லுக்கு நாகம் - முப்புரங்களை எரித்த அன்று வில்லுக்கு நாண் ஆகியது நாகம்;

நாம் பணிகின்ற நாதற்கு நாகம் அரை நாண் - நாம் வணங்குகின்ற தலைவனுக்கு நாகம் அரைஞாண்;

நாள் நாம் வழுவாது போதொடு வாழ்த்த - (அப்பெருமானைத்) தினமும் நாம் மறவாமல் பூவோடு வாழ்த்தினால்;

வருமே வழு வாது போய் இன்ப வாழ்வு - (அவனுடைய அருளால் நம்) குற்றங்கள், வழக்குகள் எல்லாம் நீங்கி, இன்ப வாழ்வு வரும்.

---------------

2007-06-04

3.6.10 - நஞ்சிவன் - காலை - மடக்கு

-------------------------------------------------

நஞ்சிவன் கண்டத்தில் நல்லணி ஆகுமே

நஞ்சிவன் கண்ணெரிக்கும் வேள்மனமே நஞ்சிவன்

காலை வழிபடுமார்க் கண்டர்பால் காலன்போங்

காலை உதைத்தவன் காண்!


பதம் பிரித்து:

நம் சிவன் கண்டத்தில் நல் அணி ஆகுமே

நஞ்சு! இவன் கண் எரிக்கும் வேள்! மனமே! நஞ்சு, இவன்

காலை வழிபடும் மார்க்கண்டர்பால் காலன் போம்

காலை உதைத்தவன் காண்!


நஞ்சு - 1. விஷம்; / 2. (உள்ளம்) நைந்து; (அப்பர் தேவாரம் - 5.68.7 - "நஞ்ச நெஞ்சர்க் கருளு நள்ளாறரே" - நஞ்ச - நைந்த ; நைஞ்ச என்றாய் நஞ்ச என மருவியது);


நம் சிவன் கண்டத்தில் நல் அணி ஆகுமே நஞ்சு! - நம்பெருமான் மிடற்றில் ஆலகால விஷம் அழகிய ஆபரணம் ஆகும்;

இவன் கண் எரிக்கும் வேள் - இவனது கண் மன்மதனை எரிக்கும்; (வேள் - மன்மதன்);

மனமே! நஞ்சு, இவன் காலை வழிபடும் மார்க்கண்டர்பால் காலன் போம் காலை உதைத்தவன் காண்! - மனமே, உள்ளம் கசிந்து இப்பெருமானது திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரிடம் காலன் சென்றபொழுது காலனை உதைத்தவன்!

---------------


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment