Saturday, June 2, 2018

04.38 – நாலூர்


04.38நாலூர்



2013-12-30
நாலூர் ("இரண்டாம் பதாதி")
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. சிறப்புக் குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க.)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")



1)
சூலாரும் பிறவிதரும் தொல்வினையைத் தொலைத்தருள்வான்
பாலாரும் வெண்ணீற்றாய் படர்சடைமேல் தண்ணாற்றாய்
ஆலாரும் கண்டத்தாய் அம்மதியத் துண்டத்தாய்
நாலூரிற் பலாசவன நாதாவென் றடைவார்க்கே.



* பலாசவன நாதர் - நாலூரில் ஈசன் திருநாமம்;
சூல் - கருப்பம்; ஆர்தல் - பொருந்துதல்; ஒத்தல்; உண்ணுதல்;
ஆல் - விடம்; அம் - அழகு;
"பால் போல் வெள்ளிய திருநீறு பூசியவனே! படரும் சடைமேல் குளிர்ந்த ஆற்றை ஏற்றவனே; விடம் உண்ட கண்டத்தை உடையவனே! அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவனே! நாலூரில் எழுந்தருளியிருக்கும் பலாசவன நாதனே!" என்று போற்றி அடையும் அடியவர்களுக்குக், கருப்பத்திற் பொருந்தும் பிறவிகளை அளிக்கும் பழவினைகளை நீக்கிச் சிவபெருமான் அருள்புரிவான்.



2)
பிறவிபல நல்குவினை பிணியறுத்துப் புரந்தருள்வான்
மறைபுகலும் நாவினனே வற்றாத அருட்கடலே
பிறைவளரும் சடையுடையாய் பேதையொரு பங்குடையாய்
நறைமலரார் பொழில்நாலூர் நம்பாவென் றடைவார்க்கே.



பிறவி பல நல்கு வினை பிணி அறுத்துப் புரந்து அருள்வான் - பல பிறவிகளைக் கொடுக்கும் வினைகளையும் பிணிகளையும் தீர்த்துக் காத்தருள்வான்;
மறை - வேதம்; பேதை - பெண்; நறை - தேன்;
நம்பன் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; விரும்பத்தக்கவன்;



3)
நல்குரவும் உறுபிணியும் நணுகாத நிலைதருவான்
வெல்கொடியில் விடையுடையாய் வேலைவிட மிடறுடையாய்
மல்குமிளம் பிறையுடையாய் மார்க்கண்டர்க் கிறவாமை
நல்கிறையே நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.



நல்குரவு - வறுமை; உறுபிணி - பெரும்பிணி; பிறவிப்பிணி;
வேலை விடம் மிடறு உடையாய் - கடல் நஞ்சைக் கண்டத்தில் உடையவனே;
மல்கும் இளம் பிறை - வளரும் பிறை;
மார்க்கண்டர்க்கு இறவாமை நல்கு இறையே - மார்க்கண்டேயருக்குச் சிரஞ்சீவித் தன்மை அளித்த இறைவனே;



4)
உறுதுயர்தீர்த் தும்பருல குறைவாழ்வை இனிதருள்வான்
அறுசமயப் பொருளானாய் அந்தகனைச் சூலத்தாற்
செறுபரனே கூற்றுதைத்த சேவடியாய் வண்டறையும்
நறுமலரார் பொழில்நாலூர் நம்பாவென் றடைவார்க்கே.



உறுதுயர் - பெரும் துன்பம் - பிறவிப்பிணி;
உம்பர் உலகு உறை வாழ்வை - வானுலகத்தில் என்றும் நிலைத்திருக்கும் இன்ப வாழ்வை;
அந்தகனைச் சூலத்தால் செறுபரனே - அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தி அழித்தவனே; (செறுதல் - அழித்தல்); (பரன் - மேலானவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.9.3 - "நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற வெஞ்சின மூவிலைச் சூலத்தர்..." - கடுங்கோபம் கொண்டு அந்தகாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற மூவிலைச் சூலப்படையையுடையவர்);
வண்டு அறையும் நறுமலர் ஆர் பொழில் நாலூர் - வண்டுகள் ரீங்காரம் செய்யும், மணம் மிக்க மலர்கள் நிறைந்த சோலைகள் திகழும் நாலூர்;



5)
உம்பரார் போற்றுகின்ற உயர்நிலையை உகந்தருள்வான்
கொம்பனாள் ஒருகூறா கூரார்மூ விலைவேலா
கம்பமா கரியுரித்தாய் கருதார்முப் புரமெரித்தாய்
நம்பியே நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.



உம்பரார் - தேவர்கள்; கொம்பு அனாள் - பூங்கொம்பு போன்ற உமையம்மை;
கூர் ஆர் மூவிலை வேலா - கூர்மை பொருந்திய திரிசூலம் உடையவனே;
கம்ப மா கரி உரித்தாய் - அசையும் இயல்பு உடைய பெரிய ஆண்யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவனே;
கருதார் - பகைவர்;
நம்பி - ஆணிற் சிறந்தோன்; அது, சிலவிடத்துத், 'தலைவன்' என்னும் பொருளையும் தரும்; கடவுள்;



6)
போற்றிடுவர் பாரிலெங்கும் என்றநிலை புரந்தருள்வான்
ஏற்றுவிளக் கெரியேந்திக் கெதற்கென்றார் வெருவுறநீர்
ஊற்றிவிளக் கெரிக்கநமி நந்திபணி உகந்தவனே
நாற்றமலர்ப் பொழில்நாலூர் நம்பாவென் றடைவார்க்கே.



* நமிநந்தி அடிகள் நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.
பார் - உலகம்; புரத்தல் - மிகுதியாகக் கொடுத்தல்; அனுக்கிரகித்தல்;
"ஏற்றுவிளக்கு எரியேந்திக்கு எதற்கு" என்றார் வெருவுற - "கையில் தீயை ஏந்திய சிவனுக்கு மனிதர் ஏற்றும் விளக்கும் தேவையோ" என்று இகழ்ந்து பேசிய புறச்சமயிகள் எல்லாரும் அஞ்சிடும்படி;
நீர் ஊற்றி விளக்கு எரிக்க நமிநந்தி பணி உகந்தவனே - நமிநந்தி அடிகள் நாயனார் தொண்டினை மகிழ்ந்து ஏற்று, அவர் திருவாரூர்க் குளத்து நீரை ஊற்றி விளக்கு எரிக்கச்செய்தவனே;
நாற்ற மலர்ப் பொழில் - மணக்கும் மலர்கள் நிறைந்த சோலை;


(பெரிய புராணம் - நமிநந்தியடிகள் நாயனார் புராணம் - 12.27.10
கையில் விளங்கு கனலுடையார் தமக்கு விளக்கு மிகைகாணும்
நெய்யிங் கில்லை விளக்கெரிப்பீ ராகில் நீரை முகந்தெரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க் குரைத்தார் தெளியா தொருபொருளே
பொய்யும் மெய்யு மாம்என்னும் பொருள்மேல் கொள்ளும் புரைநெறியார். )



7)
பாரிலிம்மைப் புண்படுத்தும் பழவினையைத் தீர்த்தருள்வான்
ஊரிலெங்கும் உண்பலிதேர்ந் துழல்வானே அலைமோதும்
நீரிலங்கும் சடைமுடியாய் நெற்றியிலோர் கண்ணுடையாய்
நாரிபங்க நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.



பாரில் இம்மைப் புண்படுத்தும் - உலகில் இப்பிறப்பில் வருத்துகின்ற;
உண்பலி தேர்ந்து உழல்வானே - பிச்சை ஏற்றுத் திரிபவனே; (சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "பாடுவார் பசிதீர்ப்பாய் .... ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே ... குருகாவூர் வெள்ளடை நீயன்றே");
நாரிபங்க - உமைபங்கனே;



8)
புண்படுத்தும் பொல்லாத வினைபோக்கிப் புரந்தருள்வான்
மண்பணியும் மலையெடுத்தான் மணிமுடிபத் தடர்த்தவனே
பெண்புடையில் வைத்துகந்தாய் பிஞ்ஞகனே சுந்தரர்க்கு
நண்புடையாய் நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.



மண் - உலகத்தோர்;
மணிமுடி பத்து அடர்த்தவனே - மணிகள் பதித்த கிரீடம் அணிந்த இராவணனின் பத்துத் தலைகளையும் நசுக்கியவனே;
புடை - பக்கம்; பிஞ்ஞகன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; நண்பு - நட்பு ;



9)
பொல்லாத வினைதீர்த்துப் புகழாரும் நிலைதருவான்
வல்லானை மருப்பொசித்த மாலயனுக் கரியவனே
கல்லாலின் புடையமர்ந்து மறைப்பொருளைக் கற்பித்த
நல்லானே நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.



வல் ஆனை மருப்பு ஒசித்த மால் அயனுக்கு அரியவனே - வலிய யானையின் கொம்பை முறித்த திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே; (மருப்பு - தந்தம்; யானைக்கொம்பு ); (ஒசித்தல் - முறித்தல்);
(சம்பந்தர் தேவாரம் - 1.52.9 - "வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ் சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்...");
கல்லாலின் புடை - கல்லால மரத்தின்கீழ்; நல்லான் - நல்லவன்;



10)
வினைகளெனும் விலங்கறுத்து மிகுநன்மை புரிந்தருள்வான்
மனைவரைவந் திழித்துரைக்கும் வஞ்சகர்தம் சொல்துறந்து
புனைதிருநீ றணிந்தார்கட் கன்புடையாய் புனிதநதி
நனைசடையாய் நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.



மனை - இல்லம்; வீடு; இழித்தல் - நிந்தித்தல்;
புனை - அழகு; ஆபரணம்; அலங்காரம்;
புனிதநதி நனைசடையாய் - கங்கைப்புனலில் நனைகின்ற சடையை உடையவனே; (புனித = "புனிதனே" என்ற விளியாகவும் பொருள்கொள்ளல் ஆம்);



11)
விலங்கறுப்பான் சூலமுழை வெண்மழுவாள் ஏந்துமரன்
மலங்களிலா மாதேவா வார்சடைமேல் கூவிளமும்
இலங்கிளவெண் பிறையுமணி எம்பெருமான் ஏழைபங்கா
நலங்கிளரும் நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.



விலங்கு அறுப்பான் - தளைகளை அழிப்பான்;
சூலம் உழை வெண்மழுவாள் ஏந்தும் அரன் - கையில் சூலத்தையும் மானையும் ஒளிவீசும் மழுவையும் ஏந்தும் ஹரன்; (உழை - மான்);
மலங்கள் இலா மாதேவன் - நின்மலன்; மகாதேவன்;
வார்சடைமேல் கூவிளமும் இலங்கு இள வெண் பிறையும் அணி எம்பெருமான் - நீள்சடையின்மேல் வில்வத்தையும் ஒளி வீசும் இளம் பிறைச்சந்திரனையும் அணிந்த எம் பெருமானே;
ஏழைபங்கா - அர்த்தநாரீஸ்வரனே;
கிளர்தல் - மிகுதல்; விளங்குதல்; சிறத்தல்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
  • நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.
  • விசேஷக் குறிப்பு : இப்பதிகத்தில் ஒரு பாட்டின் முதல் அடியின் 2-ஆம் சீர் அடுத்த பாடலின் தொடக்கச் சீரோடு (அந்தாதி போலப்) பொருந்தி வருமாறு அமைந்தது. முதற்பாடல் - "சூலாரும் பிறவிதரும்". இரண்டாம் பாடல் - "பிறவிபல நல்குவினை". மூன்றாம் பாடல் - "நல்குரவும் உறுபிணியும்". இவ்வாறே பிற பாடல்களும். 11-ஆம் பாடல் - "விலங்கறுப்பான் சூலமுழை" என்று தொடங்கி முதற்பாடலின் முதற்சீரோடு மண்டலித்து வருகின்றது,.
  • இவ்வமைப்பை "இரண்டாம் பதாதி" என்று சொல்லலாம்! ("பதம் = இடம்" என்றும் பொருள் உள்ளது! पदम् padam - -5 A place, position, station; -15 A part, portion or division (as of a sentence) ); ஒரு பாடலின் இரண்டாம் பதத்தின் (சீரின்) ஆதியும் அடுத்த பாடலின் முதற்பதத்தின் (சீரின்) ஆதியும் இவ்வமைப்பில் பொருந்துவதால், ப்பெயர்.
2) நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்.
இத்தலம் கும்பகோணம் - குடவாசல் இடையே உள்ளது.
3) நாலூர் - பலாசவனநாதர் கோயில் - வரலாறு.காம் தளத்தில்: http://www.varalaaru.com/Default.asp?articleid=1076
----------- --------------

No comments:

Post a Comment