Saturday, December 24, 2016

03.04.032 - சிவன் - மேகம் - சிலேடை - 2

 03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-18

3.4.32 - சிவன் - மேகம் - சிலேடை - 2

-------------------------------------------------------------

எழும்போது காண இயலாது கீழே

விழும்போது தான்தெரியும் வேளை விழுமாறு

செய்வான் திருவினை வாரி வழங்குமழுக்

கையான் சிவன்மேகம் காண்.


சொற்பொருள்:

எழும்போது - மேலே உயரும் சமயத்தில்

போது - 1. பொழுது; / 2. மலர்;

வேள் - மன்மதன்;

வேளை - காலம்; பருவம்;

விழுமாறு - 1. விழும் ஆறு; / 2. விழும்படி;

வான் - மேகம்; பெருமை; நன்மை; வானுலகு;

வாரி - 1. கடல்; / 2. அள்ளி;

காண் - முன்னிலை அசை;


மேகம்:

எழும்போது காண இயலாது - (கடலிலிருந்து உற்பத்தியாகி நீராவியாக) மேலே எழும் சமயத்தில் நம்மால் காண இயலாது.

கீழே விழும்போதுதான் தெரியும் - மழையாகக் கீழே விழும் சமயத்தில்தான் பார்க்க முடியும்.

வேளை விழும் ஆறு செய் வான் - ஆறுகளை உருவாக்கும் மேகம் பருவத்தில் பெய்யும்.

வான் திருவினை வாரி வழங்கும் - (அந்த) மேலான செல்வத்தைக் கடல் வழங்கும். ("வான்" என்ற சொல்லை இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

மேகம் காண் - மேகம்;


சிவன்:

எழும்போது காண இயலாது - (விண்ணுற) உயர்ந்த சமயத்தில் (பிரமன் விஷ்ணுவால் அடிமுடி) காண இயலாது. பிரமன் அன்னமாகி வானில் உயர்ந்தாலும் காண இயலாது;

கீழே விழும் போது தான் தெரியும் - (ஈசன் திருமுடியிலிருந்து) கீழே விழுகின்ற (தாழம்பூ) மலர்தான் (பிரமனுக்குத்) தெரியும்;

வேளை விழுமாறு செய்வான் - (நெற்றிக்கண்ணால்) மன்மதனை (எரிந்து சாம்பலாகி) விழும்படி செய்தான்.

வான் திருவினை வாரி வழங்கும் - (அன்பர்களுக்கு) முக்திச் செல்வத்தை அள்ளிக் கொடுப்பான். (இலக்கணக் குறிப்பு - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று - படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்);

மழுக்-கையான் சிவன் காண் - மழுவைக் கையில் ஏந்தியவனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment