Saturday, December 24, 2016

03.04.027 - சிவன் - செருப்பு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-15

3.4.27 - சிவன் - செருப்பு - சிலேடை

------------------------------------------------------------

பலர்பாதம் பற்றுவதால் காப்பதால் காலை

அலங்கரிக்கக் காண்பதால் ஆக நலந்திகழத்

தையல்சேர் தன்மையால் நைவார்செப் பம்பெறலால்

செய்ய சடையன் செருப்பு.


சொற்பொருள்:

காலை - 1. பாதத்தை; / 2. காலை நேரம்;

ஆகம் - உடம்பு;

நலம் - நன்மை; அழகு;

திகழ்தல் - விளங்குதல்;

ஆகநலந்திகழ – 1. ஆகநலம் திகழத்; / 2. ஆகம் நலம் திகழ;

தையல் - 1. நூல் முதலியவற்றால் தைத்தல்; / 2. பெண்;

நைதல் - 1. நிலைகெடுதல் (நைந்துபோதல்); / 2. மனம் கனிதல்; உருகுதல்; (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்");

வார் - Strap of leather; தோல்வார்;

நைவார் - 1. நைந்த வார்; / 2. மனம் உருகுபவர்கள்;

செப்பம் - 1. சீர்திருத்துகை (repair); / 2. செவ்வை; செவ்விய வழி;

செய்ய – சிவந்த;


செருப்பு:

பலர் பாதம் பற்றுவதால் - பலரது பாதங்கள் அதனைப் பற்றும்.

காப்பதால் (காலை) - அது காலைப் பாதுகாக்கும். (இலக்கணக் குறிப்பு - "காலை" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

காலை அலங்கரிக்கக் காண்பதால் - (சிலர், தாம் அணியும் ஆடைகளுக்கு ஏற்ப விதவிதமான செருப்பைக்) காலுக்கு அலங்காரமாக அணிவார்கள்.

ஆகநலம் திகழத் தையல் சேர் தன்மையால் - அதன் வடிவம் நன்கு அமையத் தைத்தல் சேர்ந்திருக்கும்.

நை-வார் செப்பம் பெறலால் - வார் நைந்துவிட்டால் அந்த வாரைச் செப்பம் செய்வார்கள் (repair).

செருப்பு - செருப்பு.


சிவன்:

பலர் பாதம் பற்றுவதால் - பலரும் அவனது பாதத்தைப் பற்றுவார்கள்.

காப்பதால் - காப்பவன்.

காலை அலங்கரிக்கக் காண்பதால் - காலையில் (பூசை செய்து திருவுருவை) அலங்கரிப்பார்கள்.

ஆக(ம்) நலம் திகழத் தையல் சேர் தன்மையால் - திருமேனியில் அழகு திகழ உமை ஒரு பாகமாகச் சேர்ந்து இருப்பாள்; (இலக்கணக் குறிப்பு - புணர்ச்சி - "ஆகம் + நலம்" = "ஆகநலம்" என்று மகர ஒற்றுக் கெட்டுப் புணரும்);

நைவார் செப்பம் பெறலால் - மனம் உருகும் அடியார்கள் நன்னெறி பெறுவார்கள்; செவ்வை பெறுவார்கள்;

செய்ய சடையன் - சிவந்த சடையை உடைய சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment